தமிழ் தேசியக் கட்சிகளின் இருத்தலுக்கான அச்சுறுத்தலாக மாறியுள்ள உள்ளுராட்சி தேர்தல் !

தமிழ் தேசியக் கட்சிகளின் இருத்தலுக்கான அச்சுறுத்தலாக மாறியுள்ள உள்ளுராட்சி தேர்தல் !

வரும் உள்ளுராட்சித் தேர்தல் தமிழ் தேசியக் கட்சிகளின் வேர்களையே பிடுங்கிவிடுமா ? என்ற அச்சத்தில் தமிழ் தேசியம் தனது இருத்தலுக்கான அச்சுறுத்தலை உணர ஆரம்பித்துள்ளது. மக்களோடு அந்நியப்பட்டுள்ள தமிழ் தேசியக் கட்சிகளுக்கு தாங்கள் மக்கள் மத்தியிலிருந்து எவ்வளவு தூரம் அந்நியப்பட்டுள்ளனர் என்பதைக் கூட அறிந்து கொள்ள முடியவில்லை.

தங்களுடைய பலத்தையும் பலவீனத்தையும் அறிந்துகொள்ளாத தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் ஆட்சிமாற்றம் நிகழும் தங்களுக்கொரு எதிர்காலம் அமையும் என்று முட்டாள்தனமாக நம்பி மிக மோசமான முடிவைச் சந்தித்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலில் இருந்து எதனையும் கற்றுக்கொள்ளாத தமிழ் தேசியம் அவர்களின் பிணங்களில் ஒட்டுண்ணிகளாக வளர்ந்தது. கடந்த 15 வருடங்களாக புலித்தோலைப் போர்த்துக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு முந்திய மிதவாதத் தமிழ் தேசிய அரசியல் தலைவர்கள் எவ்வாறு குறும்தமிழ் தேசியவாத அரசியல் பேசினார்களோ அதேபோல் இன்றைய அரசியல் தலைவர்களும் அதனையே பேசினார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் அன்றைக்கு எதற்காக அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களைச் சுட்டுக்கொன்றார்களோ அதனையே தான் அல்லது அதற்கும் மேல் மோசமான அரசியலையே தமிழீழ விடுதலைப் புலிகளினதும் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் பெயரிலும் இன்றைய தமிழ் தேசிய அரசியல்வாதிகள் செய்கின்றனர். இன்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் அன்றைய சிந்தனையோடு இருந்திருந்தால் பா உறுப்பினர்கள் பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும்.

தமிழ் மக்களை வாயால் வடைசுட்டு தொடர்ந்தும் ஏமாற்றலாம் என்ற கருதும் வலதுசாரி குறும் தமிழ் தேசியவாதம் கடந்த காலத்திலிருந்து எதனையும் கற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு தமிழ் மக்களின் அபிலாசைகள் என்ன என்பதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழ் மக்கள் கிளிநொச்சியில் விவசாய இரசாயணங்கள் கலந்த தண்ணீரை குடிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் மலசலம் கலந்த கிணற்றுத் தண்ணீரைக் குடிக்கின்றனர். அவர்களுக்கு குழாய்நீர் வழங்க நிதி; ஒதுக்கப்பட்டது. பா உ சிறிதரனுக்கு வாக்களித்தவர்களுக்கு சுத்தமான குடிநீர் கூட இல்லை. ஆனால் பா உ சிறிதரனுக்கு யாழ் நகரில் ஒரு வீடு கொழும்பில் ஒரு வீடு வாங்கியுள்ளார். தமிழ் மக்கள் வலதுசாரி குறும் தமிழ் தேசியவாதிகளின் ஏமாற்று வித்தைகளை நன்கு படித்துவிட்டார்கள்.

2024 ஜனாதிபதித் தேர்தலின் போது தாங்கள் கைகாட்டுபவர்களுக்கு மக்கள் வாக்களிப்பர் என்று கனவு கண்டனர். அதற்குப் பின் நடந்த பொதுத் தேர்தலின் போது கூட தாங்கள் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்பதைக் கூட அவர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. 10 ஆசனங்கள் தருவார்கள் தாங்கள் தான் தமிழ் பெரும் தேசியக் கட்சி என்று கற்பனைக் கோட்டையில் மிதந்தனர்.

இவர்கள் மீதான நம்பிக்கையீனம் தேசிய மக்கள் சக்தியின் பெரும் முதலீடானது. தேர்தலுக்கு முன்பிருந்தே தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தியது. தமிழ் தேசியம் அவழ்த்துவிட்ட வலதுவாரி குறும் தேசியவாத கருத்துகளுக்கு மக்கள் செவிசாயக்கவில்லை. அவர்களின் பாரம்பரிய ஊடகங்களையும், சமூக ஊடகங்களையும் தமிழ் மக்கள் நிராகரித்தனர். தேசம்நெற் எதிர்வு கூறியது போல் தேசிய மக்கள் சக்தி இறுதிப் பெரும்பான்மையைப் பெற்றதுடன் வடக்கு கிழக்கில் ஏழுஆசனங்களைப் பெற்றது. தற்போது தேசிய மக்கள் சக்தி வடக்கு கிழக்கின் பட்டி தொட்டி எங்கும் தன்னுடைய கிளைகளைப் பரப்பியுள்ளது.

ஒன்பது கட்சிக் கூட்டணி ஆரம்பத்திலேயே சில்லு சகதிக்குள் சிக்குண்ட நிலையில் நின்ற இடத்திலேயே சில்லுச் சுற்றுகின்றது. அதனைத் தூக்கிவிடக் கூடியவர்கள் யாரும் இல்லை. மக்களால் நிராகரிக்கப்பட்ட, தோற்கடிக்கப்பட்ட, முகவரியற்ற ஆய்வாளர் வி சிவலிங்கத்தின் மொழியில் சொன்னால் உதிரிகள் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த ஒன்பது கட்சிக் கூட்டமைப்பில் தனித்துவமும் வாங்கு வங்கியும் உள்ள ஒரே கட்சி சமத்துவக் கட்சி. ஒற்றுமைக்காக அழைக்கும் போது தனித்து நிற்கமுடியாததால் வேறு வழியில்லாமல் இணைந்துள்ளனர். ஏனைய எட்டுக் கட்சிகளின் பாவ மூட்டைகள் கடந்த அரசியல் காலத்தில் செய்த ஊழல் மோசடிகளால் நிறைந்துள்ளது. இதனைத் தனித் தனியாக எழுதினால் அதற்கு தனிக்கட்டுரை எழுத வேண்டும். அதனால் ஏற்கனவே சங்கு களவாடப்பட்டு விட்டது, லைக்கா சுபாஸ்கரன் சங்கூதுகின்றார் என்றெல்லாம் பல விமர்சனங்கள் உண்டு. இந்த நிலையில் கொள்கையற்ற உதிரிகள் தேர்தல் வெற்றிக்காக மட்டும் உள்ளுராட்சித் தேர்தலில் ஊதுகின்ற சங்கிங்கு மக்கள் காதுகொடுப்பார்களா?

போகின்ற போக்கி உள்ளுராட்சித் தேர்தல் வலதுசாரி குறும்தேசியவாதிகளாகிப் போன தமிழ் தேசியவாதிகளுக்கு ஊதப்படும் கடைச்சிச் சங்காக அமையப் போகின்றது. தேசிய மக்கள் சக்தி தென்பகுதியில் உள்ளுராட்சி சபைகளை வென்றெடுப்பதைக் காட்டிலும் வடக்கில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மக்கள் மத்தியில் அதிக பிரசன்னத்தைக் கொண்டிராத தமிழ் தேசியவாதம் ஊடகங்களிலும் சமூக வலைத் தளங்களிலும் அதீத பிரசன்னத்தை கொண்டிருக்கின்றது. அதனால் ஒரு மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி தமிழ் ஊடகப் பரப்பிலும் சமூக வலைத்தளத்திலும் குறிப்பிடத்தக்க பிரசன்னத்தை கொண்டிருக்கவில்லை.தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களிலும் சமூகவலைத் தளங்களிலும் இருந்து தூரமாகவே உள்ளனர். அவர்ளை மக்கள் அணுகக் கூடிய அளவுக்கு ஊடகங்களால் அணுக முடியாத நிலையொன்றுள்ளது. துரதிஸ்டவசமாக தற்போது பாரம்பரிய ஊடகங்களும் சமூகவலைத் தளங்களும் சொல்லிக் கேட்கும் நிலையில் தமிழ் மக்கள் இல்லை. அதனால் உள்ளுராட்சி சபையில் தேசிய மக்கள் சக்தி அலை வாக்குகளை அள்ளிச் செல்லவே வாய்ப்புள்ளது.

ஆனால் அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். நீண்டகாலத்தில் தேசிய மக்கள் சக்தி மக்கள் மட்டுமல்ல ஊடகங்களும் அணுகவும் கேள்வி கேட்கவும் வழிகளைத் திறந்து வைத்திருக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பிராந்திய ஊடகங்களும் அணுகும் வழிகளைக் கொண்டிருக்க வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *