A 32 புனரமைப்பு பணி 18ல் ஆரம்பம் – ஒப்பந்தங்கள் நேற்று பரிமாற்றம்

sri-lankan-road.jpgமன்னார் –  பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் ஏ-32 பிரதான வீதியை புனரமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தப் புனரமைப்பு பணிகளில் ஈடுபடவுள்ள 12 உள்நாட்டு ஒப்பந்தக் காரர்களுக்கான ஆவணங்கள் வீதி அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ரி. பி. ஏக்கநாயக்கவினால் நேற்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

பத்தரமுல்லை, செத்சிரிபாயவிலுள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் பிரதியமைச்சர் டபிள்யூ. பீ. ஏக்கநாயக்க, அமைச்சின் செயலாளர் எஸ். அமரசேகர மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் ரஞ்சித் பிரேமசிறி ஆகியோர் கலந்து கொண்டனர். முதற்கட்டமாக 48 கிலோ மீற்றர் நீளமான வீதியே புனரமைக்கப்படவுள்ளது.

இதற்கென சுமார் 1800 மில்லியன் ரூபாய் நிதி தற்போதைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களின் பங்களிப்புடன் இந்தப் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்திருந்தார்.

இதற்கமைவாகவே அமைச்சரவை அங்கீ காரம் பெறப்பட்ட 12 ஒப்பந்த நிறுவனங்களுக்கு இந்தப் புனரமைப்பு நடவடிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் ரீ. பி. ஏக்கநாயக்க தெரிவித்தார். சகல ஒப்பந்தக் காரர்களுக்கும் சமமாக வழங்க வேண்டும் என்ற நோக்குடனும் அவர்களது பணிகளின் முன்னேற்றங்களை கண்காணிக்கும் வகையிலும் ஒவ்வொரு ஒப்பந்தக் காரர்களுக்கும் முதற்கட்டத்தில் தலா 4 கிலோ மீற்றர் தூரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முழுமையான கண்காணிப்பின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. புனரமைப்பின் போது 6.2 மீற்றர் பரப்புக்கு இந்த வீதிகள் புனரமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்தப் பணிகள் உள்நாட்டு நிதிகளை பயன்படுத்தியே முன்னெடுக்கப் படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *