வலம்புரியில் அடித்தவரும் ஆடிவாங்கியவரும் கட்டி அணைத்தனர்: சாட்சிக்காரனிடம் செல்லாமல் சண்டைக்காரனிடம் பேசி முடித்த பா உ அர்ச்சுனா !
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா இராமநாதனிடமும் சட்டத்தரணி கௌசல்யா நரேனிடமும் வலம்புரி ஹோட்டல் உணவகத்தில் வம்பிழுத்து அடி வாங்கிய நபர் பொலிஸ் நிலையத்தில் பிரச்சினையை சுமூகமாக முடித்தார். இதனை எம்பி அர்ச்சனா தனது உத்தியோகபூர்வ யுரீயூப் சனலினூடாக அறிவித்துள்ளார்.
எம்பி அர்ச்சுனாவின் பொறுமையை சீண்டி அவரிடம் அடி வாங்கிய இளைஞர் இந்த விடயம் தொடர்பாக தான் கொடுத்த பொலிஸ் முறைப்பாட்டை மீளப்பெற்றுக் கொண்டு தன்னுடைய செயலுக்கு மனம் வருந்தினார் என்றும் அர்ச்சுனா குறிப்பிட்டார்.
அதேசமயம் அர்ச்சுனா தான் உயிரை காக்கும் வைத்தியராக இருந்து கொண்டு தற்காப்புக்காகவும் ஒரு பெண்ணின் மானத்திற்காகவும் தாக்குதலில் ஈடுபட வேண்டிய சூழ்நிலைக்கு தான் தள்ளப்பட்டதற்கு தான் வருந்துவதாகவும் குறிப்பிட்டார்.
வலம்புரி உணவு விடுதிச் சம்பவத்தில் தன்னிடம் அடி வாங்கியவர் ஒரு சாதாரண சாரதி எனவும். ஜேர்மனியில் இருந்து விடுமுறையில் வந்திருந்த புலம்பெயர் தமிழரான இரத்தினம் ஶ்ரீஹரனிடம் சம்பந்தப்பட்ட இளைஞன் சாரதியாக பணியாற்றுகிறார் என குறிப்பிட்ட அர்ச்சுனா, நடந்த விவகாரத்திற்கு முழுமையான பொறுப்பையும் இரத்தினம் ஶ்ரீஹரனே எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். புலம்பெயர் தமிழரான இரத்தினம் ஶ்ரீஹரன் வழக்கு நடவடிக்கைகளிலிருந்து தப்ப முடியாது எனவும் இவ்விடயம் அறிவிக்கப்பட வேண்டிய இடங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஒருவழியாக பரஸ்பரம் பொலிஸ் முறைப்பாடுகள் வாபஸ் பெறப்பட்டு பிரச்சினை தீர்ந்தது. பா உ அர்ச்சுனாவுக்கு இன்னுமொரு வழக்கு வராமல் தவிர்த்துக்கொண்டுள்ளார்.