தையிட்டி விகாரையை இடித்தழிப்போம் – கஜா குழுவினருடன் கைகோர்த்தார் பா.உ சிறிதரன் !
தையிட்டி விகாரை இடித்தழிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். சட்டத்தின் அடிப்படையில் தான் முப்பது வருடங்களுக்கு மேலதிகமாக தம்புள்ளையில் இருந்த காளி கோயில் இடித்தழிக்கப்பட்டது என கூறுகிறார்கள். தற்போதைய ஜனாதிபதி அநுர சட்டம் அனைவருக்கும் சமமானது என கூறி வருகிறார். சட்டத்தின் அடிப்படையில் தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும் எனவும் பா உ சிறிதரன் கூறியுள்ளார்.
பா.உ கஜேந்திரகுமார் உள்ளிட்ட அவருடைய சைக்கிள் கட்சியினர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் தமது அரசியலை உறுதி செய்ய மீள தையிட்டி விகாரையை கையிலெடுத்துள்ளனர் என குற்றச்சாட்டினை முன்வைக்கும் தேசம் ஜெயபாலன் தையிட்டி விகாரையை இடிக்க வேண்டும் என தமிழ்தேசிய தலைவர்கள் கூறுவது மீள ஓர் இனவாத தீயை கொழுந்து விட்டு எரிய வைத்து அதன் மூலம் அரசியல் இலாபம் ஈட்ட முனையும் செயல் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அண்மைய தேசம் திரை நேர்காணலில் கலந்து கொண்டிருந்த மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோருக்கு மக்களின் பொருளாதார பிரச்சினைகள் கண்ணுக்கு தெரியாத நிலையில் தையிட்டி உள்ளிட்ட அரசியல் செய்யக்கூடிய பிரச்சினைகளில் தான் அதிக கவனம் செல்கிறது எனவும் இந்த குறுந்தேசியவாதிகள் எதிர்வரும் காலங்களிலும் மக்களால் நிராகரிக்கப்படுவர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான பின்னணியிலேயே தனிக்கட்டையாக பாராளுமன்றத்தில் உள்ள பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தையிட்டி விகாரையை இடிக்க வேண்டும் என்ற கருத்துடன் கைகோர்த்திருக்கிறார் பா.உ சிறிதரன். ஏற்கனவே தமிழ் இளைஞர்கள் பலரை தேசியம் என்ற பெயரில் உசுப்பேற்றி வரும் பா.உ சிறிதரன் தையிட்டி விகாரையை வைத்து தனது அடுத்த கட்ட நகர்வை ஆரம்பித்திருக்கிறார்.
இதேவேளை விகாரை அமைக்கப்பட்டு முழுமையடையும் வரை அமைதியாக இருந்துவிட்டு விகாரை முழுமையடைந்ததும் அதனை இடித்தழிக்க வேண்டும் என தமிழ்தேசிய தலைவர்கள் கூறி மீள ஓர் வன்முறை கலாச்சாரத்தை ஆரம்பித்து வைக்கின்றனர் என இணக்க அரசியலை விரும்பும் தரப்பினர் கருத்து வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.