“பெப் 04 : தனிநாடுக்கான கரிநாள் பேரணி; பெப் 05 யாழ் நூலகத்தை எரித்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை” – கஜா – சிறிதரன் குழுவினரின் வித்தியாசமான கோரிக்கை !
பாராளுமன்ற விவகாரங்கள் உட்பட எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றையதினம் நடைபெற்றது.
பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக இணைந்து செயற்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த கூட்டத்தில் பா.உ க்களான சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டது சர்ச்சையாக மாறியுள்ளது.
பெப்ரவரி 04 ஆம் திகதியை கரிநாளாக கூறி தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அடக்குமுறைக்கு தனித்தேசம் தான் தீர்வு என்ற தோரணையில் பேரணி நடாத்தியிருந்தனர் பா.உக்களான் சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர். அடுத்த நாளே கறுப்பு ஜூலை கலவரங்கள், யாழ்ப்பாண நூலகத்தை எரித்தல் என தமிழர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாரம்பரிய வழி வந்த சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து செயற்பட மந்திராலோசனை நடாத்துகின்றனர் என சமூக வலைத்தளங்களில் காரசாரமாக விவாதங்கள் இடம்பெறுகின்றன.
இதேவேளை எதிர்வரும் உத்தேச உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் என்.பி.பி அரசை எதிர்கொள்ள இணைந்து போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் மும்முரமாக ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.