அத்துமீறி நுழையும் மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்வது ஏற்க முடியாது – பா உ அடைக்கலநாதன் !
அரசாங்கம் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு இதுவரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என்று செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாய செய்கையை முன்னெடுத்துள்ள விவசாயிகளின் நெல்லுக்கு உரிய நிர்ணய விலையை தீர்மானிக்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் செல்வம். மேலும் தமிழக மீனவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு பற்றியும் கருத்து தெரிவித்த அவர்> இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். ஆனால் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
முன்னதாக இலங்கை கடற்படை, “வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் தென்னிந்திய மீனவர்களின் செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் எமது நிலை மாறப்போவதில்லை, தமிழக மீனவர்கள் மீது திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தப்படவில்லை என அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதேவேளை நேற்று முன்தினமும் மன்னார் தெற்கு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களும் அவர்களது படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.