தையிட்டி விகாரை: காணியை இழந்தவர்களோடும் விகாராதபதிகளோடும் ஆளுநர் பேச்சுவார்த்தை ! விரைவில் தீர்வு – இழப்பீடு !

தையிட்டி விகாரை: காணியை இழந்தவர்களோடும் விகாராதபதிகளோடும் ஆளுநர் பேச்சுவார்த்தை ! விரைவில் தீர்வு – இழப்பீடு !

 

யாழ். தையிட்டியில் தற்போது திஸ்ஸவிகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், காணியின் உரிமையாளர்களுடன் சந்திப்பு நடத்தியதாக ஆளுநரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது விகாரை அமைந்துள்ள காணி தனியாருக்குச் சொந்தமானது என்பதற்குரிய ஆவணங்களை அவர்கள் சமர்ப்பித்திருந்ததுடன் விகாரைக்குரிய காணி பிறிதொரு இடத்தில் அமைந்துள்ளது என்பதையும் தெரியப்படுத்தினர்.

விகாரை தற்போது அமைந்துள்ள காணிக்கு மேலதிகமாகவும் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த காணி உரிமையாளர்கள் அந்தக் காணியை விடுவித்துத் தருவதுடன், விகாரைக்குச் சொந்தமான அயலிலுள்ள காணியையும் மாற்றீடாக தமக்கு வழங்கவேண்டும் எனக் கோரியிருந்தனர்.

காணி உரிமையாளர்களது கோரிக்கைக்கு அமைவாக இது தொடர்பில் விகாராதிபதியுடனும், நயினாதீவு விகாரையின் விகாராதிபதியுடனும் ஆளுநர் பேச்சு நடத்திவருகின்றார். அத்துடன் இந்த இணக்கப்பாடு யோசனை தொடர்பில் புத்தசாசன அமைச்சின் கவனத்துக்கும் கொண்டு செல்வதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தையிட்டி விவகாரம் பாரிய பேசுபொருளாக மாறியிருந்தது. பா.உ இராமநாதன் அர்ச்சுனா குறித்த கூட்டத்தில், முழுமைப்படுத்தப்பட்ட விகாரையை இடிப்பது முட்டாள்தனமானது எனவும் தையிட்டி விகாரை விவகாரம் சைக்கிள் கட்சியினரின் அரசியலுக்காக பயன்படுகிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஜனாதிபதி அனுரவும் யாழில், மக்களுக்குச் சொந்தமான காணிகள் மக்களுக்கானது, வட மாகாணத்தில் நிலவும் நிலப்பிரச்சனைகள் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், காணிகளை அதன் உரிமையாளர்களிடம் திருப்பித் தரும் செயல்முறையை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *