ஜனாதிபதியின் சீன விஜயம்: இலங்கைப் பொருளாதாரத்தை நிமிர்த்த தோள் கொடுக்கின்றது சீனா!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கு கிடைத்த பாரிய முதலீட்டை குறிக்கும் வகையில் இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் சீனாவின் சினோபெக் முன்னணி சர்வதேச பெற்றோலிய நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த 3.7 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் கீழ் ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 2 இலட்சம் கொள்ளளவுடைய எண்ணெய் தாங்கிகளை கொண்டுள்ளதுடன், அவற்றில் பெருமளவான தொகையை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சீனாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்த இந்த புதிய முதலீடு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதுடன், ஹம்பாந்தோட்டையின் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ் வாதாரத்தையும் பலப்படுத்தும். அத்துடன் முழு இலங்கை மக்களுக்கும் இதன் பலன் மிக விரைவில் கிடைக்கப்பெறும் என குறிப்பிடப்படுகிறது.
தேர்தல் பிரச்சார காலங்களில் திருகோணமலை எண்ணெய்குதங்கள் தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிவித்திருந்ததுடன் எமது நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் சூழலை உருவாக்குவோம் எனவும் குறிப்பிட்டிருந்தமை கவனிக்கத்தக்கது. இதேவேளை சீனாவின் முன்னணி நிறுவனங்களுடன் முதலீட்டு அமர்வு ஒன்றில் பேசியிருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலங்கையில் முதலீடு செய்ய சீனாவின் முன்னணி நிறுவனங்களை அழைத்துள்ளார்.