“மழைபெய்தாலும் அனுரா தான் குற்றவாளி – தென்னம் பாளை விடாவிட்டாலும் அனுர தான் குற்றவாளி” விசித்திரமான டிசைனில் இலங்கை அரசியல்!
அரிசி மற்றும் தேங்காய் விலை அதிகரிப்பை மேற்கோள் காட்டி ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் புறக்கணிக்கப்பட்ட தரப்பினர் அனுர குமார அரசின் மீது தமது காழ்ப்புணர்ச்சியை கொட்டித்தீர்க்க ஆரம்பித்துள்ளனர்.
இதுவேளை, நாட்டில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தொடரும் என தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. உரிய பருவத்தில் மழையின்மை மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு என்பன தென்னை உற்பத்தி குறைவதற்கு வழிவகுத்துள்ளதாகவும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் தேங்காய் உற்பத்தியில் சடுதியான வீழ்ச்சி காணப்படுவதாகவும் அதன் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இது தொடர்பான மாற்று திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்வதற்கான அறிவுறுத்தல்களை அரசு தேங்காய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இதேவேளை அரசி தொடர்பான விலை அதிகரித்தமையாலும் மக்கள் பாதிக்கப்படுவதாக பல ஊடகங்கள் மேற்கோள் காட்டிய நிலையில், வர்த்தக,வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரிசி வியாபாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் அவசர சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு விலைகளின் உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. ஒரு கிலோ நாட்டு அரிசியை ரூ. 225 மொத்த விலைக்கும் ரூ. 230 சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். இது தொடர்பில் அடுத்த பத்து நாட்களுக்குள் அவதானமாகச் செயற்படுமாறும், இதற்கு முரணாக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார தட்டுப்பாடு கடந்த கால அரசுகளின் பொருளாதார திட்டமிடல் இல்லாத சூழலின் விளைவுகளேயாகும். தேர்தலில் தோல்வியடைந்த குழுவினர் தேசிய மக்கள் சக்தி அரசின் மீது இந்த பொருளாதார நெருக்கடியை போட்டுவிட்டு கடந்து விடப்பார்க்கிறார்கள் என தேசம் நெட் நேர்காணலில் சட்டத்தரணி நிஸ்தார் மொகம்மட் தெரிவித்தார். குறித்த நேர்காணலில் கலந்து கொண்ட இன்னுமொரு அரசியல் ஆய்வாளரான மாவடி சிறீதரன் எதற்கெடுத்தாலும் அனுர அரசை குறை சொல்வதில் தான் பலருடைய கவனமும் இருக்கிறது. இவர்களுக்கு மழை பெய்தாலும் அனுரதான் காரணம். வெள்ளம் வந்தாலும் அனுர குமார தான் காரணம். நீண்ட கால திட்டமிடல்களுடன் ஆட்சியமைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வேலை செய்வதற்கு போதுமான கால அவகாசத்தை வழங்காமல் கடந்த கால அரசுகளின் தவறுகளுக்கும் தேசிய மக்கள் சக்தி மீது காழ்ப்புணர்ச்சியை காட்டுவது ஆரோக்கியமான விடயம் இல்லை என மாவடி சிறீதரன் குறிப்பிட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.