இலங்கைத் தமிழ் அகதிகள்: லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து கடைசியில் உக்ரைன் போர்க்களத்தில்
அத்தானி குழுமம் முன்னைய இலங்கை அரசுக்கு லஞ்சம் கொடுத்ததா? அமெரிக்க FDC விசாரணை!
தலைப்புச் செய்திகள்:
1. அத்தானி குழுமம் இலங்கையில் லஞ்சம் கொடுத்ததா? அமெரிக்க நிறுவனம் ஆராய்கின்றது: இலங்கையில் கப்பல் இறங்குதுறையைக் கட்டுவதற்கு அத்தானி குழுமம் இலங்கை அரசுக்கு, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததா என்பது பற்றிய விசாரணைகளை அமெரிக்க நிறுவனமான யுஎஸ் இன்ரநஷனல் டெவலப்மன்ற் பினான்ஸ் கோப்பிரேசன் (US International Development Finance Cooperation) ஆரம்பித்துள்ளது.
2. வடக்கு மீனவர் பிரச்சினையும் இலங்கை – இந்திய உறவும்: மீனவர் எங்களுடைய பிரச்சினையை ஜனாதிபதி அனுரா தன்னுடைய இந்திய விஜயத்தின் போது பிரதமர் மோடியுடன் பேசி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் செயலாளரும், மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவச் சங்கத்தின் பிரதிநிதியுமான மொகமட் அஹாலம் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கோரிக்கை வைத்தார்.
3. மீனவர் பிரச்சினையில் யாழ் பல்கலைப் பேராசிரியர்: யாழ் பல்கலைக்கழகப் பொருளியல் பேரசிரியர் அகிலன் கதிர்காமர் வடமாகாண மீனவர்களின் பிரச்சினைகளில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கு ஆலோசகராகச் செயற்பட்டு வருகின்றார். இவருடைய ஈடுபாடு குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் இலங்கையினதும் தமிழ் மக்களினதும் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும் என தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
4. யாரோடு யார் இணைவது தமிழ் தேசியக் கட்சிகளுக்குள் குழப்பம்: ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய முன்னணி, தமிழரசுக் கட்சி ஆகியவை ஒன்றிணைய வேண்டும் என்ற அழுத்தத்திற்குள் யாரோடு யார் சேருவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.
5. உக்ரைன் போர்க்களத்தில் இலங்கைத் தமிழர்கள்: ஏஜன்சியில் பணம் கட்டி ஐரோப்பா புறப்பட்ட தமிழ் இளைஞர்கள்இ ரஸ்ய இராணுவ சிப்பாய்களாக உக்ரைன் போர்க் களத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அகதிகளாக தரைமார்க்கமாக ஐரோப்பா வருபவர்கள் உக்ரைன்இ ரஷ்யா ஊடாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கூடாக மேற்கு ஐரோப்பாவுக்கு வருவது கடந்த மூன்று தசாப்தங்களுக்கு அதிகமாக நடைபெற்று வருகின்றது. சுற்றுலா விசாவில் ஐரோப்பாவிற்கு அனுப்பிவைப்பதாக போலி வாக்குறுதியளித்த முகவர்கள்இ ரஸ்யாவிற்கு சுற்றுலா விசாவில் இளைஞர்களை வரவழைத்ததோடு விமானநிலையத்திலேயே வைத்து ரஸ்ய ஆமிக்கொமாண்டரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
விரிவான செய்திகள்:
1. அத்தானி குழுமம் இலங்கையில் லஞ்சம் கொடுத்ததா? அமெரிக்க நிறுவனம் ஆராய்கின்றது: இலங்கையில் கப்பல் இறங்குதுறையைக் கட்டுவதற்கு அத்தானி குழுமம் இலங்கை அரசுக்கு, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததா என்பது பற்றிய விசாரணைகளை அமெரிக்க நிறுவனமான யுஎஸ் இன்ரநஷனல் டெவலப்மன்ற் பினான்ஸ் கோப்பிரேசன் (US International Development Finance Cooperation) ஆரம்பித்துள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள் பலவற்றிடம் போலியான ஆவணங்களைத் தயாரித்து, மில்லியன் கணக்கில் கடன்பெற்று முதலீடுகளை மேற்கொள்ள அத்தானி நிறுவனம் முயற்சி எடுத்து வந்தது. இந்தியாவில் லஞ்சம் கொடுத்துப் பெறப்பட்ட சூரியக் கதிர் திட்டங்களுக்கான ஆவணங்களை வைத்துக் கொண்டே அத்தானி குழுமம் கடன்களைப் பெற்றது. கடன்களுக்கு விண்ணப்பித்தது. ஆனால் இவர்கள் உண்மையான சூரியக் கதிர் சக்தியைப் பயன்படுத்தும் திட்டங்களுக்குப் பதில் லஞ்சம்கொடுத்து இவ்வாறான திட்டங்கள் பற்றிய அனுமதியை சமர்ப்பித்தமை விசாரணைகளில் வெளிவந்தததையடுத்து கௌதம் அத்தானி அவருடைய மருமகள் சகார் உட்பட ஏழு பேருக்கு அமெரிக்க நீதிமன்று பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.
தற்போது கொழும்பில் உள்ள துறைமுகக் கட்டுமானப் பணிகளுக்கும் யுஎஸ் இன்ரநஸனல் டெவெலப்பமன்ற் கோப்பிரேசன் (US International Development Finance Cooperation) 550 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டொலர் கடன் வழங்க கொள்கையளவில் ஒத்துக்கொண்டிருந்தது. ஆனால் அது முழுமையான ஒப்பந்தத்திற்குச் செல்லவில்லை. தற்போது அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து அந்தத் திட்டத்திற்கான நிதியை வழங்குவதற்கு முன் இலங்கையிலும் அத்தானி குழுமம் லஞ்சம் பெற்றுத்தான் இக்கட்டுமானப் பொறுப்பை ஏற்றதா என்ற கேள்விக்கு விடைகான அமெரிக்க நிறுவனம் விசாரணைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.
அத்தானி குழுமத்தின் விமான நிலைய கட்டுமானத் திட்டத்தை கென்ய அரசு ஏற்கனவே இரத்துச் செய்துவிட்டது. கொழும்பு கப்பற் துறைமுகத் திட்டத்தை தற்போதைய அரசு இரத்துச் செய்தால் சர்வதேச அரங்கில் அது இந்தியாவுக்கும் மோடி அரசுக்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்தும். அத்தோடு அத்தானி குமுமம் மன்னாரில் காற்றாலை அமைக்கும் திட்டத்தையும் வைத்துள்ளது. அதற்கு சுழலியலாளர்கள் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் ஹருணி அமர சூரிய இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செய்தியில் தாங்கள் ஆட்சிக்கு வருமுன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றி மேற்பார்வை செய்தே அவற்றுக்கான அனுமதிகளை வழங்குவோம் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மன்னார் காற்றாலைத் திட்டம் குப்பையில் வீசப்படும் என்ற வாக்குறுதி தேசிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி அனுராவின் விடயத்தில் அத்தானி குழமம் பற்றிய அம்சமும் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என அவதானிகள் கருதுகின்றனர்.
தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை என அத்தானி குழுமம் தெரிவித்துள்ளது.
2. வடக்கு மீனவர் பிரச்சினையும் இலங்கை – இந்திய உறவும்: மீனவர் எங்களுடைய பிரச்சினையை ஜனாதிபதி அனுரா தன்னுடைய இந்திய விஜயத்தின் போது பிரதமர் மோடியுடன் பேசி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் செயலாளரும், மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவச் சங்கத்தின் பிரதிநிதியுமான மொகமட் அஹாலம் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கோரிக்கை வைத்தார்.
வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தினரினர் யாழ் வீரசிங்க மண்டபத்தில் கடற்தொழில் அமைச்சருடன் மேற்கொண்ட சந்திப்பிலேயே இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டது. இச்சந்திப்பில் வட மாகாண கடற்தொழிலாளர்; இணையத்தின் பேச்சாளர் அன்னராசா ஜந்து அம்சக் கோரிக்கையொன்றையும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கையளித்தார்.
இலங்கை – இந்திய உறவு பாதிக்கப்படாத வகையில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வந்து வடக்கு கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்போம் என்று அமைச்சர் சந்திரசேகர் மீனவர்களுக்கு உறுதியளித்தார். நேற்றைய தேசம்நெற் செய்திகளில் குறிப்பிட்டது போல் வடக்கு கிழக்கு பகுதிகளில் சர்வதேச நாடுகளின் ஈடுபாடு பற்றித் தெரிவித்த அமைச்சர் இலங்கையை எந்த நாட்டுக்கும் எதிராகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் நாங்கள் இந்தியாவினதும் சீனாவினதும் கடன்பொறிக்குள் சிக்கியிருக்கின்றோம் என்பதையும் சுட்டிக்காட்டினார். அமைச்சருடைய உறுதி மொழிகளை தாங்கள் நம்புவதாக கடற்தொழிலாளர் இணையத்தினர் அங்கு தெரிவித்தனர்.
3. மீனவர் பிரச்சினையில் யாழ் பல்கலைப் பேராசிரியர்: யாழ் பல்கலைக்கழகப் பொருளியல் பேரசிரியர் அகிலன் கதிர்காமர் வடமாகாண மீனவர்களின் பிரச்சினைகளில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கு ஆலோசகராகச் செயற்பட்டு வருகின்றார். இவருடைய ஈடுபாடு குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் இலங்கையினதும் தமிழ் மக்களினதும் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும் என தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவருடைய பாத்திரத்தை மீனவர்கள் வரவேற்றுள்ளனர். அகிலன் கதிர்காமர் நீண்ட காலமாக சிறிலங்கா டெமொகிரசி போர்ரம் என்ற அமைப்பை மேற்கு நாடுகளில் செயற்படுத்தி வந்தவர். அமெரிக்காவில் கல்விகற்று அங்குள்ள வங்கிகளில் பணியாற்றிய இவர் அமெரிக்க, நோர்வே இராஜதந்திரிகளுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றியவர். தற்போது இலங்கைக் கரையோரப் பிரதேசங்களை இந்தியா ஆக்கிரமிப்பு செய்வது பற்றிய பிரச்சினைகளில் அகிலன் கதிரகாமரின் ஈடுபாடு யாருடைய நலனின் அடிப்படையில் அமையும் என்ற கேள்வி தமிழ் அரசியல் அவதானிகள் மத்தியில் எழுந்துள்ளது. அமெரிக்க நலன்சார்ந்து இலங்கைக்கும் – இந்தியாவுக்கும் இடையே முறுகல் நிலையைத் தோற்றுவிப்பதாக இது அமையக் கூடாது எனவும் அவ்அவதானிகள் தெரிவிக்கின்றனர். தற்போது இலங்கையின் வடக்கு கிழக்கு சர்வதேச ஆடுகளமாக மாறியிருப்பதால் யார் யாருடைய நலன்களை உள்ளொன்று வைத்துச் செயற்படுகின்றனர் என்பது முக்கியமானதாக உள்ளது.
4. யாரோடு யார் இணைவது தமிழ் தேசியக் கட்சிகளுக்குள் குழப்பம்: ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய முன்னணி, தமிழரசுக் கட்சி ஆகியவை ஒன்றிணைய வேண்டும் என்ற அழுத்தத்திற்குள் யாரோடு யார் சேருவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.
சங்கு, ஜனநாயகக் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரே பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் நான் தோற்றுப் போனவர்களோடு சேருவதா, வென்றவர்களோடு சேருவதா இல்லையேல் இப்படியே தனிக்கட்டையாக நிற்பதா என்று புலம்பியுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தின் அடிப்படையில் வாருங்கள் பேசுவோம் என யூலி சங்கை ஏற்றிக்கொண்டு குடா நாட்டுக்குள் மட்டும் சைக்கிளோடும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அறிவித்திருக்கிறார். தமிழரசுக் கட்சியில் நின்று வெற்றி பெற்றாலும் வீட்டுக்குள்ளேயே நிம்மதியாய் படுக்க வழியில்லாமல் எல்லோரையும் அணைத்துக் கொண்டு வீட்டுத் திண்ணையில் படுப்போம் வாருங்கள் என்று பா உ எஸ் சிறிதரன் அழைப்பு விடுகிறார். கிளிச்சுக்கொண்டு போனவை இப்ப என்னவாம் என்ற தோரணையில் பாராளுமன்றத்தில் தன்னுடைய சீட்டும் கிளிந்த பின்னும் எம் ஏ சுமந்திரன் வீட்டில் கோலோச்சிக்கொண்டிருக்கிறார். அனுரா அலையில் மிஞ்சினதுகள் வெள்ளம் கொண்டு போகாதோ என மக்கள் பரிகசிக்கின்றனர்.
5. உக்ரைன் போர்க்களத்தில் இலங்கைத் தமிழர்கள்: ஏஜன்சியில் பணம் கட்டி ஐரோப்பா புறப்பட்ட தமிழ் இளைஞர்கள், ரஸ்ய இராணுவ சிப்பாய்களாக உக்ரைன் போர்க் களத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அகதிகளாக தரைமார்க்கமாக ஐரோப்பா வருபவர்கள் உக்ரைன், ரஷ்யா ஊடாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கூடாக மேற்கு ஐரோப்பாவுக்கு வருவது கடந்த மூன்று தசாப்தங்களுக்கு அதிகமாக நடைபெற்று வருகின்றது. சுற்றுலா விசாவில் ஐரோப்பாவிற்கு அனுப்பிவைப்பதாக போலி வாக்குறுதியளித்த முகவர்கள், ரஸ்யாவிற்கு சுற்றுலா விசாவில் இளைஞர்களை வரவழைத்ததோடு விமானநிலையத்திலேயே வைத்து ரஸ்ய ஆமிக்கொமாண்டரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதேபோல 2022 ஆம் ஆண்டு ஒரு பெண் அடங்கலாக 7 பேர் கொண்ட இலங்கையைச் சேர்ந்த குழுவினர் ஏஜன்சி மூலம் வெளிநாடு வர முற்பட்ட போது உக்ரைனில் வைத்து ரஸ்ய இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு பிடிபட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் யுத்த முனையில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதோடு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார்கள். பின்னர் உக்கிரைன் இராணுவத்தால் அவர்கள் மீட்கப்பட்டனர்.
சுற்றுலா விசாவில் மேற்கு ஐரோப்பாவிற்குச் செல்ல முற்பட்ட இளைஞர்கள் ரஸ்யவின் இராணுவ பயிற்றிச் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 14 நாட்கள் இராணுவபயிற்சி முடிவடைந்ததும் உடனடியாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டு உக்கரைன் ரஸ்யப் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் ஆமி அடையாள அட்டை ஒன்று பயணத்திற்கு தேவைப்படுவதால் தான் பயிற்சி என்று கூறப்பட்டு ரஸ்ய மொழியில் எழுதப்பட்ட ஆவணத்தில் கையொப்பம் பெறப்பட்டுள்ளது. உடன்படிக்கையின்படி ஒரு வருட காலத்திற்கு அவர்கள் இராணுவத்தில் பணியாற்ற கடமைப்பட்டுள்ளதாக முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
ரஸ்ய உக்கிரைன் எல்லையில் நிற்கும் இளைஞர்களின் தொலைபேசித் தொடர்புசாதனங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு அவர்கள் உறவினருடன் தொடர்பு கொள்வதையும் தடுத்துள்ளனர்.
இலங்கையிலில் இருக்கும் உறவினர்கள் இது தொடர்பில் முகவர்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் மிரட்டப்படுவதோடு இப்பயணத்திற்கென பேசப்பட்ட பணத்தையும் முழுமையாக பெற்றுக் கொண்டு ஏமாற்றி வருகிறார்கள். இந்த விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க தலையீடு செய்து தங்களது பிள்ளைகளை மீட்டுத்தர வேண்டும் என பிள்ளைகளின் தாய்மார் கண்ணீரோடு கோரிக்கை வைக்கின்றனர்.
இலங்கையில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் உக்ரைன் இஸ்ரேல் யுத்தத்தில் கூலிப்படைகளாக இணைந்துகொண்டதும் அவரில் ஒருவர் உக்ரைனில் பிடிபட்ட காணொலியையும் தேசம்நெற் வெளியிட்டுஇருந்தது. இந்த இராணுவ வீரர்களுடைய பெற்றோரும் அரசு தங்களது பிள்ளைகளை மீட்டுத்தர வேண்டும் என்று கோரியுள்ளனர்.
அகதிகளாக நாட்டை விட்டு வெளியேற முற்பபடும் இலங்கையின் வடக்கு கிழக்கைச் சேர்ந்த இளைஞ்ர்களில் கணிசமானவர்கள் மரணத்தை தழுவுகின்றனர். இன்னும் அதிகமானவர்கள் அறியப்படாத நாடுகளில் ஒதுங்கி அவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. லட்சங்கள், கோடிகள் கொடுத்து அவர்களுடைய எதிர்காலம் சீரழிக்கப்படுகின்றது. டியுகோ கார்ஸியா (Dego Carcia) , இந்தோனேசியா, பர்மா, ரஷ்யா, உக்ரைன் மற்றும் ஆபிரக்க நாடுகளிலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மாட்டுப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் பல நாடுகளின் சிறைகளிலும் உள்ளனர். வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் மனித உரிமை அமைப்புகள் இவர்கள் தொடர்பில் தகவல்களைத் திரட்டி அவர்களது எதிர்காலத்திற்கு ஒரு நம்பிக்கையை வழங்க வேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது மேற்கு நாடுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளுடாக வருவதற்கான வாய்ப்பு உள்ள போது இளைஞர்கள் இவ்வாறான சோம்பேறித்தனமான சட்ட விரோத முயற்சிகளில் ஈடுபடக்கூடாது என சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கடுமையான வார்த்தைகளில் தெரிவித்தார்.
@L. A VITHUSAJINY 2024 AL Ready to be read.