நேற்று உள்ளுராட்சி சபைகள் விசேட திருத்தச் சட்டம் தொடர்பான யோசனை கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக முன்வைக்கப்பட்ட போது எவ்வித தீர்மானமும் இன்றி எதிர்வரும் திங்கட்கிழமை வரை சபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசினால் கொண்டு வரப்பட்டவுள்ள உத்தேச திருத்தச் சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் முன் வைக்கப்படவிருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக சகல மாகாண சபைகளினதும் அங்கீகாரம் பெற வேண்டும் .இல்லையேல் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என ஏற்கனவே உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
நேற்று கிழக்கு மாகாண சபை முதல்வர் ஏ.எச்.எம். பாயிஸ் கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக இதனை முன் வைத்த போது உறுப்பினர்களிடையே இந்த திருத்தச் சட்டம் தொடர்பாக காரசாரமான வாக்குவாதங்களும் விவாதங்களும் சுமார் 6 மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்றது. எதிர்கட்சி உறுப்பினர்கள் இந்த சட்டத்தை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி உரையாற்றினர்.
ஆளும் கட்சியைப் பொறுத்த வரை ஒரு தரப்பு இதற்கு ஆதரவாகவும் இன்னுமொரு தரப்பு இதற்கு எதிராகவும் கருத்துக்களை முன்வைத்தனர். குறிப்பாக உத்தேச திருத்தச் சட்டம் மாகாண சபைகளுக்கரிய அதிகாரங்களை பறிக்கின்றது என்றும் .அதே போல சிறுபான்மை மக்களுக்கும் சிறிய கட்சிகளுக்கும் பாதிப்பாக அமையும் என்றும் இதற்கு எதிரான தரப்புகள் தமது கருத்துக்களை முன் வைத்தன. விவாதம் காரசாரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை வரை சபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.