இலங்கையின் முல்லைத்தீவு பிரதேசத்தில் நடந்துவரும் உக்கிர மோதல்கள் காரணமாக பொதுமக்களின் உயிர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்தும் அங்கு நிலவும் மோசமான மனிதாபிமான அவலம் குறித்தும் கவலை தெரிவித்து அமெரிக்க நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மோதல் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பாக வெளிவரும் பொருட்டு இலங்கை இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கான அகதி முகாம்களில் சர்வதேச தரத்தில் மனிதாபிமான சூழல் நிலவுவதையும், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் இலங்கைக்கு வருவதற்கு விசா வழங்கப்படுவதையும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் இலங்கைக்குள் நுழைவதையும், அகதி முகாம்களுக்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவதையும் இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது