மலையகம்

மலையகம்

தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தால் 40 கோடி ரூபா நட்டம் : அமைச்சர் ஜயரட்ன

pluckers.jpgதோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் வாரம் 40 கோடி ரூபா நட்டம் ஏற்படும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.  500 ரூபா சம்பள உயர்வு கோரி தோட்டத் தொழிலாளர்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 7ஆம் திகதி முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் சுமுகமாக அமைய வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். இரு தரப்பினருக்கும் இடையிலான போராட்டம் நீடித்தால் அரசாங்கம் தலையீடு செய்ய நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காவிட்டால் போராட்டம் முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஒத்துழையாமைப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு : அமைச்சர் ஆறுமுகன்

pluckers.jpgதோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி ஒத்துழையாமைப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது :

“கடந்த முறை மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் இவ்வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகிவிட்டது. இதன் பிறகு தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம்.  இதன் போது தோட்டத்தொழிலாளர்களுக்கு 12.5 வீத சம்பள உயர்வை வழங்குவதற்கே முன்வந்தனர். இந்தச் சம்மேளனத்துடன் ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதாக இல்லை.

இதனைத்தொடர்ந்து கூட்டு ஒப்பந்தத் தொழிற்சங்கங்களின் தீர்மானத்தின்படி தோட்டத் தொழிலாளர்கள் தமது சம்பளத்தினை வலியுறுத்தி தோட்ட நிர்வாகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத வகையில் ஒத்துழையாமைப் போராட்டத்தினை கடந்த முதலாம் திகதி முதல் ஆரம்பித்துள்ளனர். அதாவது வேலை நிறுத்தம், மெதுவாக வேலை செய்தல் போன்ற போராட்டங்களைத் தவிர்த்து இந்த ஒத்துழையாமைப் போராட்டத்தினை தொழிலாளர்கள் ஆரம்பித்துள்ளனர். காரணம்: வேலை நிறுத்தப் போராட்டம் செய்தால் தொழிலாளர்கள் தமது சம்பளத்தினை இழக்க நேரிடும்.

இதனைக் கருத்திற்கொண்டு தான் இந்த ஒத்துழையாமைப் போராட்டத்தினைத் தொழிலாளர்கள் ஒற்றுமையாக முன்னெடுத்து வருகின்றனர். கடந்த முறை சம்பள உயர்வை வலியுறுத்தித் தொழிலாளர்கள் ஒத்துழையாமைப் போராட்டத்தினை மேற்கொண்ட போது, சில சக்திகள் அதனை, வேலை நிறுத்தப் போராட்டமாக மாற்றியது. இதனால் தோட்டத் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிப்படைய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இவ்வாறான சக்திகள் தமது சுய விளம்பரத்துக்காக இந்த ஒத்துழையாமைப் போராட்டத்தினைத் திசை திருப்புவதற்கு எத்தனிக்கலாம். தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டு தமது கோரிக்கையை வென்றெடுக்க வேண்டும்.இதற்காக இ.தொ.கா.முழுமூச்சாக செயற்படும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மலையகத்தில் கடும் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0000rain.jpgமலைய கத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் அடைமழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. இதன் காரணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியிலேயே தோட்டங்களில் தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நீரோந்தும் பகுதிகளில் அடைமழை பெய்து வருவதால் காசல்ரீ, மவுசாகலை,கெனியன் போன்ற நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகின்றது.

அதேவேளை, தொடர்ச்சியான அடைமழையினால் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயப் பயிர்ச் செய்கையும் பாதிப்படைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தொழிலாளர் ஒத்துழையாமை போராட்டம் வெற்றியளித்துள்ளது என்கிறது இ.தொ.கா

pluckers.jpgசம்பள உயர்வினை வலியுறுத்தி பெருந் தோட்டத் தொழிலாளர்கள் நேற்று ஆரம்பித்துள்ள ஒத்துழையாமைப் போராட்டம் அனைத்துத் தோட்டங்களிலும் வெற்றிகரமாக நடைபெற்றதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்தது.

மத்திய, ஊவா, மாகாணங்களில் மட்டுமன்றி தென்மாகாணத்தின் பல பகுதிகளிலும் தேயிலை, இறப்பர் தோட்டத் தொழி லாளர்களும் இவ்வொத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டதாக இ.தொ.கா. வின் நிர்வாகப் பொறுப்பாளர் சந்திரன் தெரிவித்தார்.

இதனால், பெரும்பா லான தோட்டங்களிலிருந்து தேயிலை விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படுவது தடைப்பட்டதாகவும் தேயிலைத் தூள் ஏற்ற வந்த லொறிகள் தொழிற்சாலைகளுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந் ததாகவும் இதனால் அனைத்துத் தோட்டங்களினதும் பல்வேறு செயற்பாடுகள் தடைப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் 500 ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் வரை தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழையாமைப் போராட்டம் தொடருமெனவும் பெருந்தோட்ட தொழிற்சங்க முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

தோட்டத் தொழிலாளர்க ளின் சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை கடந்த 31 ஆம் திகதி இடம் பெற்ற தெனினும் தொழிற் சங்கங் களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு மிடையில் இடம் பெற்ற இப்பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது.

மீண்டும் எதிர்வரும் 7 ஆம் திகதி பேச்சுவார்த்தை க்கு வருமாறு முதலாளி மார் சம்மேளனம் தொழிற் சங்கக் கூட்டுக் கமிட்டிக்கு அழைப்பு விடுத்துள்ளது. 7 ஆம் திகதி 500 ரூபா சம்பள உயர்வு வழங்குவது என்ற தீர்மானத்துடனேயே முதலாளிமார் சம்மேளனம் பேச்சுக்கு வரவேண்டும் என இ.தொ. கா. தெரிவித்தது.

தோட்ட தொழிலாளர்கள் இன்று முதல் ஒத்துழையாமைப் போராட்டம்

pluckers.jpgமலையகத் தின் அனைத்துத் தோட்டங்களிலும் தொழிலாளர்கள் இன்று இரண்டாம் திகதி முதல் ஒத்துழையாமை போராட்டத்தை ஆரம்பிக்கின்றனர். தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை 500 ரூபாவால் அதிகரிப்பதற்கு முதலாளிமார் சம்மேளனம் மறுத்துவிட்டதையடுத்து, தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.

கொட்டகலையில் நேற்று சங்கங்கள் ஒன்றுகூடி இந்தத் தொழிற்சங்கப் போராட்டம் நடத்துவது பற்றித் தீர்மானித்ததாகப் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை, தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது தொடர்பாக மீண்டும் எதிர்வரும் 7 ஆந் திகதி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு முதலாளிமார் சம்மேளனம், தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. எவ்வாறெனினும், 500 ரூபா சம்பள உயர்வு என்ற அடிப்படையிலும், ஏப்ரல் மாதத்திலிருந்து அதிகரிக்கப்படும் தொகையை தீபாவளி மாதச் சம்பளத்துடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரென தொழிற்சங்கங்கள் அறிவித்து விட்டதாக பிரதி அமைச்சர் சிவலிங்கம் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் (31) கொட்டகலையில் நடை பெற்றது. இதில் நாளொன்றுக்கு 500 ரூபா வழங்க வேண்டும் எனச் சங்கங்கள் கோரின. ஆனால் முதலாளிமார் சம்மேளனம், அவ்வாறு வழங்க முடியாதென்றும் 12.5% அதிகரிக்க முடியுமென்றும் கூறிவிட்டது. இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

கடந்த மார்ச் 31 ஆம் திகதியுடன் கலாவாதியான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுபிக்க இதற்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையும் இணக்கமின்றி முறிந்தது. மீண்டும் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் முதலாளிமார் சம்மேளனம் சம்பள அதிகரிப்பை நிராகரித்து விட்டது. இதனையடுத்து தொழிற்சங்கங்கள் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து நேற்று கொட்டகலையில் கூடி ஆராய்ந்து முடிவெடுத்துள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டி ஆகிய சங்கங்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றன.

இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தோட்டத் தொழிலாளர்கள் மனநிறைவுடன் பணியாற்றுவதற்கு அவர்களுக்கு திருப்திகரமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென தோட்டத் தொழிற் சங்கக் கூட்டுக் கமிட்டியின் தலைவர் எஸ். இராமநாதன் தெரிவித்தார். தமது அமைப்பில் உள்ள தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி இம்முறை போராட்டத்தை இறுக்கமாக மேற்கொள்ளப் போவதாக இராமநாதன் கூறினார்.

தொழிலாளர்களுக்கு தற்போது 200 ரூபா அடிப்படைச் சம்பளமாகவும், தேயிலை விலைக்கு 20 ரூபாவும், 75% வேலைக்குச் சென்றால் 70 ரூபாவும் வழங்கப்படுகின்றது. இதனையடுத்து மொத்தமாக 500 வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பான நடவடிக்கைகளுக்கு மலையக மக்கள் முன்னணி இதய சுத்தியுடன் இணைந்து செயல்படுவதற்கும் போராட்டங்களில் பங்கெடுப்பதற்கும் பின் நிற்காது.

கட்டாயமாக இன்றைய வாழ்க்கையை ஓரளவாவது சமாளிப்பதற்கு 600 ரூபா நாட்சம்பளமாக வழங்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாகவே இருக்கின்றோம் என்று மலையக மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினரும் வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்ப பயிற்சி பிரதி அமைச்சருமான பெ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“மலையக மக்கள் முன்னணி சமூக நலனில் அக்கறையுடனேயே செயற்பட்டு வருகின்றது. முதலாளிமார் சம்மேளனம் மலையகத் தொழிலாளர்களின் விடயத்தில் எப்போதும் மாற்றான் தாய் மனப்பான்மையுடனேயே நடந்து கொள்வது வேதனைக் குரிய விடயமாகும்.

கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் கடந்த காலத்தில் நடந்து கொண்ட முறையிலிருந்து விடுபட்டு சமூக நலனில் அக்கறை காட்டும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சி இவ்விடயத்தில் ஒதுங்கி இருக்கக் கூடாது. அதே போல மற்றைய கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களும் நடைமுறைப் பற்றாக்குறைகள், வாழ்க்கைச் செலவு உயர்ச்சி, வேலை குறைப்பு என்பவைகள் தொடர்பாக உறுதியான முடிவு எடுக்க வேண்டும்” எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதலாளிமாருடனான பேச்சு தோல்வி; தொழிற்சங்க போராட்டத்திற்கு முஸ்தீபு

sri-lanka-tea.jpgதோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கக் கோரி முதலாளிமார் சம்மேளனத்துடன் நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை யடுத்து தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராகி வருவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

தோட்ட முகாமைத்துவ முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தோட்டத் தொழிலாளர் சார்பான கூட்டு கமிட்டிகளுக்கு மிடையிலான சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது குறித்த பேச்சுவார் த்தை நேற்று கொட்டகலை காங்கிரஸ் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது.  இதன் போது தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 500 ரூபா வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இப்பேச்சுவார்த்தையில் தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தோட்ட தொழிற்சங்க கூட்டு கமிட்டி ஆகியன கலந்து கொண்டன.

இருபத்திரண்டு தனியார் கம்பனிகளை உள்ளடக்கிய முதலாளிமார் சம்மேளனம், தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தில் 12 சதவீத அதிகரிப்பை மாத்திரமே முன்னெடுக்க முடியும் என்று தமது கொள்கையில் உறுதியாக இருந்துள்ளது. இரு தரப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை காணப்படவே நேற்றைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஒருவார கால அவகாசத்தினை தருமாறு முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த வேண்டுகோளை கூட்டு கமிட்டி நிராகரித்துள்ளதுடன் அடுத்த கட்ட நடவடிக்கையாக தொழிற் சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க விருப்பதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பிரதி அமைச்சருமான மு. சிவலிங்கம் கூறினார்.

தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக கொட்டகலை தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று காலை 11 மணிக்கு விசேட ஆலோசனைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இதில் மாவட்டத் தலைவர்கள், தலைவிகள், உத்தியோகத்தர்கள், பெண் இணைப்பாளர்கள், மாவட்ட சம்மேளன உத்தியோகத்தர்கள் மற்றும் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்வார்களெனவும் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.

16 வயதுக்கு குறைந்த மலையகத்தவர்களை பணிக்கமர்த்துவதை தடுக்க கடும் நடவடிக்கை

00000court.jpgமலைய கத்தில் உள்ள 16 வயதுக்குக் குறைந்தவர்களைப் பணியாட்களாக அமர்த்துவதைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென நீதி, சட்ட மறு சீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

இது தொடர்பாக, நடைமுறையில் உள்ள சட்டங்களை இறுக்கமாக அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.

அதேநேரம், மலையகத்திலிருந்து வந்து கொழும்பில் பணிப்பெண்களாகப் பணியாற்றுவோரின் பாதுகாப்பையும், மனித உரிமையையும் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் மேற்கொள்வதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையில் 16 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களைத் தொழிலில் அமர்த்தக் கூடாதென சட்டம் உள்ளது. ஆனால், மலையகத்துச் சிறார்களைச் சிலர் கொழும்பில் வீட்டு வேலைக்குக் கூட்டிச் செல்வது தொடர்ந்து வருகிறது. இவ்வாறானவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி கூறினார்.

இதேவேளை, முதலாளிமார் சம்மேளனத்துடனான கூட்டு ஒப்பந்தத்தில் தோட்டத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளும் உள்ளடக்கப்பட வேண்டுமென்று பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கொட்டகலையில் நடைபெற்ற கூட்டமொன்றிலும் அமைச்சர் வலியுறுத்தினார்.

சங்கத்தின் உதவிச் செயலாளர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தொடர்ந்து பேசிய பிரதி அமைச்சர், ஐக்கியப்பட்டு குரல் கொடுக்க வேண்டிய வியடங்களை தனிப்பட்ட அரசியல் லாபம் கருதி குரல் கொடுக்க முயற்சித்தால் எமது உரிமைக்குரல் நசுக்கப்படும். மலையக மக் களின் நலனுக்காக சேவை செய்கின்றோம் என்கின்றவர்கள் ஐக்கியப்பட்டு குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

கூட்டு ஒப்பந்தத்தில் மக்களின் உணர்வுகள் உள்ளடக்கப்படல் வேண்டும். திருத்தங்கள் செய்யப்பட்டவைகளாக எல்லோரினாலும் அங்கீகரிக்கப்பட்டதாக அது இருக்க வேண்டும்.

இரகசியங்கள் இருக்கக் கூடாது. மக்களின் நலனுக்கு காலத்திற்கு ஏற்ற விதமாக ஒப்பந்தங்கள் அமைய வேண்டும் என்று குறிப்பிட்டதுடன்,

வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்லும் எமது மக்களின் பாதுகாப்புக்கும் அவர்களின் மனித உரிமைக்குமான சட்டதிட்டங்களை நாம் உருவாக்க முயற்சி செய்வோம். அடிப்படை சட்ட சம்பந்தமான செயலமர்வுகளை விரைவில் மலையகமெங்கும் எமது அமைச்சின் ஊடாக செய்ய தீர்மானித்துள்ளேன் என்றார். இக்கூட்டத்தில் அமைப்பாளர் டி. மாதவன் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் வீ. பாலேந்திரன் மற்றும் பலரும் உரையாற்றினர்.

20 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்

தலவாக்கலை, பெல்கிரேபியா தோட்டக் குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 20 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. இந்தச் சம்பவத்தில் அந்த வீடுகளிலிருந்த சகல பொருட்களும் எரிந்து

நாசமாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சேதங்கள் தொடர்பான மதிப்பீடு மற்றும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் திடீரென தீ பிடித்துள்ளதாகவும் லிந்துல பொலிஸாரும், நகர சபை தீயணைப்பு பிரிவினரும் இணைந்து பல நேரத்திற்கு பின்னர் தீயை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளி லிருந்து தெரிய வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தீக்கிரையான வீடுகளில் நேற்று நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களும் இருந்துள்ளனர்.

இந்திய வம்சாவளி இலங்கை பிரஜைகளின் பிரச்சினை – கொழும்பில் 22இல் உயர்மட்ட மாநாடு

sri-lanka-tea.jpgஇந்திய வம்சாவளி இலங்கைப் பிரஜைகளின் கல்வி நிலை மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறுகின்றது. இதனை வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளி பிரஜைகளின் சர்வதேச அமைப்பான ‘கோபியோ’ ஏற்பாடு செய்துள்ளது.

ஐந்து அமர்வுகளாக நடைபெறும் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வு எம். மாணிக்கவாசகம் தலைமையில் நடைபெறும். இவ் ஆரம்ப நிகழ்வில் ‘கருத்தரங்கின் குறிக்கோளும் அடிப்படை வசதிகளும்’ எனும் தலைப்பில் கோபியோவின் சர்வதேசத் தலைவர் பி. பி. தேவராஜ் உரையாற்றுவார். முதலாவது அமர்வு குமார் நடேசன் தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழக கல்வித்துறைத் தலைவர் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் ‘அறிவுப் பொருளாதார வளர்ச்சிக்கு கல்வியின் முக்கியத்துவம்’ எனும் தலைப்பில் உரையாற்றுவார்.

இரண்டாவது அமர்வு தெ. ஈஸ்வரன் தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வில் பெருந் தோட்டப் பகுதிகளில் இந்திய வம்சாவழி இலங்கை பிரஜைகளின் தற்போதைய கல்வி நிலை குறித்து மத்திய மாகாண கல்வி அமைச்சு அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை மத்திய மாகாண அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் சமர்ப்பிப்பார். அத்துடன் என். வாமதேவன் ‘பெருந்தோட்ட சமூகத்திற்கு கல்வியுடன் கூடிய தேசிய சமூக அபிவிருத்தித் திட்டமும் நடவடிக்கை யும்’ எனும் தலைப்பில் உரையாற்றுவார்.

ராஜு சிவராமன் தலைமையில் நடைபெறும் மூன்றாவது அமர்வில் கல்விப் பிரச்சினைகள் குறித்து ஆழமாக குழுநிலையில் ஆராயப்படும். அத்துடன் ‘முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலைக் கல்வி’ எனும் தலைப்பில் சி. நவரட்ண உரையாற்றுவார். ரி. தனராஜ் ‘கல்வியாளர்களுக்கான முகாமைத்துவ தொழில்சார் அபிவிருத்தி’ எனும் தலைப்பில் உரையாற்றுவார். பேராசிரியர் எம். எஸ். மூக்கையா தலைமையில் பேராசிரியர் எம். சின்னத்தம்பி, டாக்டர். ஏ. எஸ். சந்ரபோஸ் ஆகியோர் கலந்துகொள்ளும் ‘மூன்றாம் நிலைக் கல்வி’ தொடர்பான குழுநிலைக் கலந்துரையாடலும் இடம்பெறும்.

நான்காவது அமர்வு டாக்டர். எஸ். செளலா தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வில் தொழில்நுட்ப தொழிற்பயிற்சி அமைச்சர் பி. இராதாகிருஷ்ணன் ‘தொழில் மற்றும் தொழில்நுட்ப பயிற்சித் துறையிலுள்ள வசதி வாய்ப்புக்கள்’ எனும் தலைப்பில் உரையாற்றுவார்.

ஐந்தாவது அமர்வு எம். முத்துசாமி தலைமையில் இடம்பெறும். இந்நிகழ்வில் இந்திய தூதரகத்தின் முதலாவது செயலாளர் ஆர். ஸ்ரீவஸ்தவா கலந்துகொண்டு உரையாற்றுவார். அத்துடன் ஏ.கே. சுப்பையா மற்றும் ஆர். விஜயலிங்கம் ஆகியோர் கலந்துகொள்ளும் கருத்தாடலும் இடம்பெறும்.

தொழிற் சங்கங்கள் அசமந்தம் அடுத்த வாரம் கூடி ஆராய முடிவு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அது இன்னமும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது.

இது தொடர்பாக அடுத்த வாரமளவில் தொழிற்சங்கங்கள் கூடி ஆராயுவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடனான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து அதில் கைச்சாத்திடும் சங்கங்கள் சம்மேளனத்துடன் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. அதன்போது தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை ஐநூறு ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென சங்கங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.

எனினும், இதனை நிராகரித்த முதலாளிமார் சம்மேளனம், நாளொன்றுக்கு 200 ரூபாவை வழங்க முடியுமெனத் தெரிவித்துவிட்டது. இது குறித்து தொழிற் சங்கங்கள் மீண்டும் அடுத்த வாரம் கூடி ஆராய்ந்து சம்மேளனத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென்று காங்கிரஸ் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், சங்கங்கள் ஊவா மாகாண சபைத் தேர்தலில் மூழ்கிவிட்டன. தற்போது தேர்தல் முடிவடைந்த நிலையில் மீண்டும் கூட்டு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கப்போவதாக பிரதியமைச்சர் சிவலிங்கம் தெரிவித்தார்.

முதலாளிமார் சம்மேளனத்துடனான கூட்டு ஒப்பந்தத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக்கமிட்டி ஆகிய அமைப்புகள் கைச்சாத்திட்டு வருகின்றன.

இந்தச் சங்கங்கள் அடுத்த வாரம் கூடி ஆராய்ந்து மீண்டும் பேச்சுவார்த்தையை உயிர்ப்பிக்கவுள்ளதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.