அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

யுத்தத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்துகிறது தேசிய சுதந்திர முன்னணி

wimal.jpgவிடுதலைப் புலிகளை நீண்டகாலத்துக்கு ஓரம்கட்டிவைத்திராமல் தனது மனிதாபிமான நடவடிக்கைகளை இராணுவம் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்று ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. இந்தத் தருணத்தில் நடவடிக்கைகளை எடுக்காமல் விடுவது படையினருக்கு அதிக இழப்புகளை ஏற்படுத்திவிடுமெனவும் ஏனெனில் பொதுமக்கள் மத்தியில் பதுங்கியிருந்து புலிகள் தாக்குதல்களை நடத்தும் சாத்தியம் இருப்பதாகவும் தேசிய சுதந்திரமுன்னணித் தலைவர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மோதல்களுக்கிடையில் பொதுமக்கள் சிக்கி விடுவார்கள் என்பதற்காக அவர்களை பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை இராணுவம் நிறுத்திவிடக்கூடாது. யாருக்காவது பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் இந்த யுத்த சூழ்நிலையில் அது தவிர்க்கமுடியாமல் செலுத்தப்படும் விலையென கருதப்படவேண்டும்.புலிகளை அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து வெளியேற்றுவதற்கான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இதுவே தருணமாகும். இப்போது அவர்கள் 50 சதுரகிலோ மீற்றர் பரப்புக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது பொதுமக்களின் இறப்புகளை தவிர்ப்பதற்காக தியாகங்களை செய்யும் நிர்ப்பந்தத்திற்குள் படையினர் தள்ளப்பட்டுள்ளனர். இந்த யுத்தம் விரைவில் முடித்துவைக்கப்படவேண்டும் என்று ஆங்கிலப்பத்திரிகையொன்றுக்கு விமல்வீரவன்ச கூறியுள்ளார்.

நடவடிக்கைகளுக்கு காலம் எடுப்பதால் சர்வதேச சக்திகள் தலையிட்டு புலிகளுக்கு புதிய மூச்சை அளிக்க வழிசமைப்பதாக அமைந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசும் புலிகளும் தற்காலிக மோதல்நிறுத்தத்துக்கு செல்லவேண்டுமென ஐ.நா.வும் அமெரிக்காவும் கோரிக்கை விடுத்திருப்பதை விமர்சித்திருக்கும் தேசிய சுதந்திர முன்னணி அத்தகைய நடவடிக்கை புலிகள் தம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள இடமளிப்பதாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது.

தமது பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளிவர புலிகள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். அதனால் யுத்த நிறுத்தம் இந்தத் தருணத்தில் நோக்கத்தை நிறைவேற்றாது என்றும் வீரவன்ச கூறியுள்ளார். அகப்பட்டுள்ள பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்பாகவும் இந்தியா விடுத்திருக்கும் கோரிக்கை தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்திருக்கும் விமல்வீரவன்ச அந்த மாதிரியான நடவடிக்கைகளுக்கான தேவை இல்லை என்று கூறியுள்ளார்.

அந்தமாதிரியான பொறிமுறைக்கான தேவை ஏற்படவில்லை. ஒரேதடை புலிகள்தான். அவர்களை தாம் அழிக்கவேண்டும் என்று வீரவன்ச தெரிவித்துள்ளார்

பல்கலை இரு வாரத்துக்கு பூட்டு; மரணத்தின் பின் உறவுகள் இணைவு

eastern-university.jpgமட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவி செல்வி நிரூபா தனபாலசிங்கம் (வயது 23) சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதையடுத்து பல்கலைக்கழகத்தின் கலை கலாசாரபீடம் இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என பதிவாளர் கி. போகீந்திரன் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இந்த தற்கொலை நடைபெற்றுள்ளதால் விடுதியில் தங்கும் ஏனைய மாணவிகள், தொடர்ந்தும் தமது விடுதியில் தங்கியிருக்கவோ கல்வி நடவடிக்கைகளை தொடரவோ மன நிலை இடமளிக்கவில்லை என்றும் தற்காலிகமாக சுமார் இரண்டு வாரத்துக்கு விடுமுறை தருமாறும் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.

முல்லைத்தீவை பிறப்பிடமாக கொண்ட மாணவி தனது உறவினர்களுடன் நீண்ட நாட்களாக தொடர்பு இல்லாமல் இருந்ததாகவும் இதனால் விரக்தியடைந்ததாலேயே தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துள்ளார். தன்னைப் போல் மற்றுமொரு யுவதியும் இதே விரக்தி நிலையில் இருப்பதால் அவரை காப்பாற்றுமாறும் இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 12.00 மணியளவில் இறந்த யுவதியின் சடலம் அவரது சகோதரர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சடலத்தின் பிரேத பரிசோதனை, மரண விசாரணைகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில் சுமார் 100 மாணவர்களும் சடலத்துடன் இணைந்து வவுனியாவுக்கு சென்றுள்ளனர். இவர்களுடன் மரணமான யுவதி பெயர் குறிப்பிட்டிருந்த மற்றைய யுவதியையும் வவுனியாவிலுள்ள உறவினர்களின் வீட்டுக்குச் சென்று வருமாறும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக மகளிர் விடுதியிலுள்ள ஏனைய யுவதிகள் அனைவரும் நேற்று முன்தினம் மட்டு. நகரிலுள்ள மன்றேசா இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு நேற்று சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

“சர்வதேச அழுத்தம் அரசுக்கு இல்லை ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டுக்கு நன்றி’

l-yaappa-abayawardana.jpgஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 32 நாடுகள் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு செல்லவேண்டுமென தெரிவித்ததையிட்டு நன்றி தெரிவிப்பதாக ஊடகஅமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன தெரிவித்ததுடன், வெளிநாடுகள் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக சில பத்திரிகைகள் தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லையெனக் கூறினார். தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்; ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் அரசாங்கம் இடம்பெயர்ந்து வருவோரை நல்ல முறையில் பராமரித்து மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெயர்ந்து வருவோருக்கான சகல வசதிகளுடன் கூடிய முகாமை சில தினங்களுக்கு முன்பு அங்குசென்று பார்வையிட்டதன் பின்பே அரசாங்கம் எவ்வாறு மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து அறிந்த பின்னரே அவர் இவ்வாறுதெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மனிதாபிமான நடவடிக்கையின் நிமிர்த்தம் யுத்தத்தை முன்னெடுக்கும் அதேநேரம், பொதுமக்கள் இதில் பாதிக்காத வகையில் அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றது. இடம்பெயர்ந்து வரும் குடும்பங்களுக்கு வீடுகளை வழங்க அரசு தேவையான நடவடிக்கையெடுத்து வருகின்றது.

இதேவேளை, விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து பேச்சுக்குச் செல்லவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 32 நாடுகள் தெரிவித்துள்ளன. அரசாங்கம் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கும்மட்டும் அவர்களுடன் பேச்சுக்கு இடமில்லையென தெரிவித்துள்ளநிலையில், அவர்கள் இவ்வாறு தெரிவித்ததையிட்டு எமது நன்றிகள்.

சில பத்திரிகைகள் அரசாங்கத்திற்கு வெளிநாடுகள் மற்றும் அமைப்புகள் அழுத்தம் கொடுப்பதாக தெரிவித்துள்ளன. உண்மையில் எவரும் அரசுக்கு எந்தவொரு அழுத்தத்தையும் கொடுக்கவில்லையெனத் தெரிவித்தார்

பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுவோருக்கு தங்கு தடையின்றி நஷ்டஈடு வழங்கப்படும் – அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

risard.jpgஅரசாங்கம் பயங்கரவாத பிரச்சினைக்கு முகம்கொடுத்து அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையிலும் பயங்கரவாதம் காரணமாக பாதிக்கப்படும் மக்களுக்குரிய நஷ்ட ஈடுகளை எவ்வித தங்குதடையுமின்றி வழங்கி வருவதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத பிரச்சினை காரணமாக 1990 ஆம் ஆண்டிற்கு பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈடு வழங்கும் நிகழ்வு புதன்கிழமை மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் இடம்பெற்றது.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டுக்கொடுப்பனவுகளை வழங்கினார். பயங்கரவாத பிரச்சினை காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் 58 பேருக்கும் சொத்துகளை இழந்த 20 பேருக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டது. மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்குமாக மூன்று மில்லியன் ரூபாவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சொத்துகளை இழந்த அரச ஊழியர்களுக்காக இரண்டு மில்லியன் ரூபாவும் மொத்தமாக வழங்கப்பட்டது.

இங்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் உரையாற்றுகையில்; கடந்த காலங்களில் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட அதிகமான நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலை எந்த அமைச்சிலும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் எவ்வித தாமதமுமின்றி கிடைக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாக இருக்கின்றார்.

ஜனாதிபதியினதும் அவரது ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவினதும் ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் எனக்கு அதிகமாக கிடைத்து வருகின்றது. இதன்காரணமாக பாதிக்கப்படுபவர்கள் உடனுக்குடன் தமது நஷ்ட ஈடுகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

பேதங்கள் இல்லாத இலங்கையை உருவாக்க இணைந்து செயற்படுவோம் – பசில் ராஜபக்ஷ

ameerali.jpgவடக்குத் தெற்கு என்றோ கிழக்கு மேற்கு என்றோ சிங்களவர், முஸ்லிம்கள், தமிழர் என்றோ பேதங்கள் இல்லாமல் வாழக்கூடிய ஒரு இலங்கையை உருவாக்குவதற்கு அனைவரும் இணைந்து செயற்படுவோம் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தலைமையில் அண்மையில் வாழைச்சேனையில் இடம்பெற்ற மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்; எமது நாட்டின் பிரதான வளங்களில் ஒன்றாக கடல் வளத்தை எமது ஜனாதிபதி அடையாளங் காட்டியுள்ளார். நமது நாடு சகல வளங்களையும் கொண்டது. நமது நாட்டைச் சுற்றிவர கடல்வளம் உள்ளது. அதனை சரிவரப் பயன்படுத்திக் கொள்வதற்காகவே இவ்வாறான மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்து வருகிறோம்.

நீண்டகாலமாக பயங்கரவாத பிரச்சினைகளால் பயிர் செய்யப்படாத காணிகளில் இன்று கிழக்கில் விவசாயம் செய்யப்படுகிறது. கிழக்கில் மக்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். இந்த வாய்ப்பு விரைவில் வடபகுதி மக்களுக்கும் கிடைக்கும். இந்த சுதந்திரத்தை மீண்டும் நமக்கு வழங்குவதற்காக தமது, இன்று உயிரைத் தியாகம் செய்த படையினரை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அவர்களால் தான் இன்று வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது.

அடுத்தபடியாக உங்களது பிரதேச அமைச்சர் அமீர் அலியின் முயற்சியை நான் குறிப்பிட்டாக வேண்டும். வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்துக்கு எத்தனை கற்கள் கொண்டு கட்டப்படவுள்ளதோ அத்தனை கற்களையும் விட அதிகமான முறை என்னிடம் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தைப் பற்றிப் பேசியுள்ளார். பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதில் அவரது முயற்சி பாராட்டத்தக்கது. நமது முயற்சிகளுக்குத் தடையாக சர்வதேச வலைப்பின்னல்களில் அகப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களது வழியில் சென்றுவிட வேண்டாம் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்

ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர்கள் மூவரையும் தெரிவு செய்து எமது கரங்களை பலப்படுத்துங்கள் – மனோ எம்.பி.

election_ballot_.jpgஐக்கிய தேசியக் கூட்டணியில் போட்டியிடும் எமது பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன், தேசிய அமைப்பாளர் பிரபா கணேசன், கொழும்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.ராஜேந்திரன் ஆகிய எமது மூன்று வேட்பாளர்களையும் வெற்றி பெறச்செய்வதன் மூலம் மேல் மாகாணத்தில் எமது கட்சியினதும், தலைநகர தமிழ் மக்களினதும் சக்தியை முழு நாட்டிற்கும் நாம் வெளிப்படுத்த வேண்டும். மலையகத்திலே நாம் முதன் முறையாகப் பெற்றுள்ள வெற்றி தலைநகரிலே பலமடங்காக எதிரொலிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசன் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் மனோ எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தலைநகரத்திலே தமிழ் மக்கள் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் உள்ளாகி தவிக்கும் வேளையில் எமது மக்களுக்காகக் குரல் கொடுத்து போராடுவது எமது கட்சியே. அன்று முதல் இன்றுவரை அணிமாறாமல் கொள்கை வழி நின்று தலைநகர தமிழ் மக்களுக்கு காவலர்களாகப் பணியாற்றுவது எமது கட்சியே. அச்சுறுத்தல்களுக்கும் பதவிகளுக்கும் தலைவணங்காது நிமிர்ந்து நிற்பது எமது கட்சியே. எமது இந்த நேர்மையான செயற்பாடு தலைநகரிற்கு வெளியே மலையகத்திலும் வட, கிழக்கிலும் எதிரொலிக்கின்றது.

இந்நிலையில் தலைநகர தமிழ் வாக்காளர்கள் கொழும்பு மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் எமது மூன்று வேட்பாளர்களுக்கும் பெருவாரியாக வாக்களித்து அவர்களை வெற்றி பெறச்செய்து எனது கரங்களைப் பலப்படுத்தவேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கொழும்பு மாவட்டத்திலே வாக்காளராகப் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு தமிழ் வாக்காளரும் தேர்தல் தினத்தன்று கட்டாயமாக வாக்களிக்கவேண்டும். வாக்களிக்கும் ஒவ்வொரு தமிழ் வாக்காளரும் எமது கூட்டணி சின்னமான யானை சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும். யானைச் சின்னத்திற்கு வாக்களிக்கும் ஒவ்வொரு தமிழ் வாக்காளரும் தமது மூன்று விருப்பு வாக்குகளையும் எமது மூன்று வேட்பாளர்களுக்கும் வழங்க வேண்டும். இதன் மூலமே தலைநகரத்திலே வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் மக்கள் இந்த நெருக்கடியான காலகட்டத்திலே தலைநிமிர்ந்து வாழக்கூடிய சூழலை எமது கட்சியால் உருவாக்க முடியும்.

கொழும்பிலே வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள், வட, கிழக்கை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்கள் மற்றும் கொழும்பை பிறப்பிடமாக கொண்ட தமிழ் மக்கள், தமிழை தமது தாய்மொழியாகப் பேசிவரும் மலையாள, தெலுங்கு வம்சாவளி மக்கள் ஆகிய அனைவரும் ஒன்று சேர்ந்து வாக்களிக்க வேண்டும். நாம் பெறப்போகும் வெற்றி தலைநகர வரலாற்றிலே பாரிய சாதனையாக அமைய வேண்டும். இதுவே கொழும்பு மாவட்டத்தில் நாம் இதுவரையில் செய்துவந்துள்ள பணிகளுக்கும், நாம் எடுத்துள்ள நிலைப்பாடுகளுக்கும் தமிழ் மக்கள் தரக்கூடிய விருதாகும். எமது வேட்பாளர்களின் வெற்றி எனது வெற்றியாகும். எனது வெற்றி ஒட்டுமொத்த தலைநகர தமிழர்களின் வெற்றியாகும்

வடக்கில் மோதல் முடிவுக்கு வருவதையிட்டு பிரான்ஸின் வெளிநாட்டமைச்சர் மகிழ்ச்சி – வெளிவிவகார அமைச்சு அறிக்கை

_dr-bernard-kouchner.jpgஇலங்கை யின் வடக்குப் பகுதியில் மோதல்கள் முடிவுக்கு வருவதையிட்டு, பிரான்ஸின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி பேர்னாட் குச்னர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறார். இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோகித போகொல்லாகமவுடன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே இதனைத் தெரிவித்ததாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையின் வடக்குப் பகுதியில் மோதல்கள் முடிவுக்கு வருவதையிட்டு பிரான்ஸின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேர்னாட் குச்னர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்ததுடன், பிரான்ஸினால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான உதவிகள் பற்றியும் விசாரித்தார். அத்துடன், யுத்தம் இடம்பெறும் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தொடர்பில் தனது கரிசனையையும் வெளிப்படுத்தினார்.

இதன் போது அமைச்சர் ரோகித போகொல்லாகம புலிகள் தமது கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும் பகுதியிலுள்ள மக்களை எவ்வாறு இடமாற்றிச் சென்று மனித கேடயங்களாக பயன்படுத்துகின்றனர் என்பது தொடர்பில் விளக்கமளித்தார். அத்துடன், மருத்துவ உதவி உட்பட மனிதாபிமான சேவையை செய்வதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவி பற்றியும் தெரிவித்தார். மேலும் , அரசாங்கத்தால் கைப்பற்றப்படாத பகுதிகளிலுள்ள அரசாங்க முகவர் நிலையங்களின் செயற்பாட்டை புலிகள் தடைசெய்திருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பிரெஞ்சு செஞ்சிலுவைச் சங்கத்தால் வழங்கப்படக் கூடிய சேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடினர். இவ்வுதவிகள் பயனுள்ளதாக இருக்குமென அமைச்சர் ரோகித போகொல்லாகம கருத்துத் தெரிவித்தார். பிரான்ஸினால் வழங்கப்படும் சலுகைகள் பற்றித் தொடர்ந்து கலந்துரையாடுவது தொடர்பில் இரு அமைச்சர்களும் இணங்கியுள்ளனர். மேலும், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு முன்னர் அமைச்சர் போகொல்லாகமவால் விடுக்கப்பட்ட அழைப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பாக புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடவுள்ளதாகவும் குச்னர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

முகர்ஜிக்கு எதிராக கருப்புக் கொடி: செருப்பு, துடைப்பங்களை ஏந்தி ஊர்வலம் – வைகோ கைது!

26-vaiko.jpgஇன்று தூத்துக்குடி வந்த மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்ட ஊர்வலமாக சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார். கருப்புக் கொடி மற்றும் செருப்பு, துடைப்பங்களை ஏந்தி ஊர்வலம் சென்ற நூற்றுக்கணக்கான மதிமுக தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆகியவை இணைந்து தூத்துக்குடியில் 1000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அன்ல் மின் நிலையத்தை அமைக்கின்றன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி, எட்டயபுரம் ரோட்டில் உள்ள சங்கரப்பேரி விலக்கு அருகே இன்று நடக்கிறது. இதில் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் பங்கேற்க பிரணாப் முகர்ஜி தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடி சென்றார்.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போக்கை மத்திய அரசு கடைப்பிடிப்பதாகவும், அதில் பிரணாப் முகர்ஜியின் பங்கு அதிகம் என்றும் தமிழகத்தில் இலங்கைத் தமிழர் ஆதரவு அமைப்புகள் குறைகூறி வருகின்றன.

ராஜாஜி பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடத்தி பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக்கொடி காட்ட வைகோ இன்று தூத்துக்குடி வந்தார். வைகோ தலைமையில் மதிமுகவினர் மற்றும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் பிரணாப்புக்கு எதிராக கறுப்புக் கொடி, செருப்பு மற்றும் துடைங்களை ஏந்தியபடி நூற்றுக்கணக்கில் ஊர்வலமாக சென்றனர். இதையடுத்து வைகோ, விருதுநகர் மதிமுக எம்.எல்.ஏ, வரதராஜன், சிவகாசி மதிமுக எம்.எல்.ஏ ஞானதாஸ் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் (குண்டர் சட்டம்). 1வருடத்திற்கு வெளியே வர முடியாத நிலை

seeman.jpgஇயக் குனரும், இலங்கைத் தமிழர் போராட்ட ஆதரவாளருமான திரைப்பட இயக்குனர் சீமானை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (குண்டர் சட்டம்) கைது செய்ய தமிழக அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது.

ஈழத் தமிழருக்கு ஆதரவாக புதுச்சேரியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில் மாணவர்களை வாழ்த்திப் பேசிய இயக்குனர் சீமான் மீது, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிதாக காங்கிரஸ் கட்சியினர் கூறிய புகாரின் அடிப்படையில் புதுச்சேரி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இதைத் தொடர்ந்து அவரை புதுச்சேரி போலீசார் தேடி வந்தனர். போலீசார் தேடிக்கொண்டிருக்கும் போதே, சீமான் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடந்த ஈழத் தமிழர் ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக போலீசார் அறிக்கை சமர்ப்பித்தனர். இந் நிலையில் சீமான் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக வக்கீல்கள் நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இங்கும் இந்திய அரசுக்கு எதிராக அவர் பேசியதாக குறிப்பு அனுப்பப்பட்டது. அந்த நேரத்தில்தான் அவரைக் கைது செய்வதற்கு புதுச்சேரி போலீசார் வந்தனர். ஆனால் அதற்குள் சீமான் தனது பேச்சை முடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டார் சீமான்.

இதையடுத்து புதுச்சேரி போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அச்சமயம் தானே நேரில் வந்து ஆஜராவதாக சீமான் அறிவித்தார். அதன்படி நெல்லை காவல்துறை ஆணையர் முன்பு சீமான் நேரில் சரணடைந்தார்.

நெல்லை கமிஷனர் மஞ்சுநாதா, சீமானை புதுச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சீமானை புதுச்சேரி நீதிமன்றத் தீர்ப்பின் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந் நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதாகக் கூறி சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

க்ரைம் நம்பர் 308/2009,  இந்திய தண்டனை சட்டம் 505, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 13(1), (B), 13(2) ஆகிய சட்டப்பிரிவுகளில் காவல்துறை சீமான் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில் இன்று, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்படும் தமிழக அரசின் உத்தரவை புதுச்சேரி சிறையில் இருக்கும் சீமானிடம் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் நாகராஜன் வழங்கினார். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமான் சிறையில் அடைக்கப்படுவதால் அவர் 1வருடத்திற்கு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஈடுபடும் எண்ணத்தில் இருந்தார் சீமான். இந்த நிலையில் அவர் மீது தேசிய பாதுகாப்பு  சட்டம் பாய்ந்துள்ளது.

புதுக்குடியிருப்பில் புலிகளின் அதிநவீன தகவல் தொழில் நுட்ப நிலையம் கண்டுப்பிடிப்பு

setli.jpgமுல்லைத் தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியிலில் தேடுதல் நடவடிக்கைகளிலீடுபட்டிருந்த இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிநவீன  உயர் தொழில் நுட்பங்கள் கொண்ட சற்றலைட் தகவல் தொழில்நுட்ப  தொலைத்தொடர்பு  நிலையமொன்றைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது புதுக்குடியிருப்பு மேற்கு பகுதியை நோக்கி முன்நகர்வில் ஈடுப்பட்டுள்ள 58ஆவது படையணி புலிகளின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து முன்னேறிச் சென்றவேளை புலிகள் இவற்றை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம்  தெரிவித்துள்ளது.

இங்கு கணனிகள், கணனிகளுக்குத் தேவையான உபகரணங்கள், தொலைபேசிகள் போன்றவும் காணப்பட்டதாகவும் சற்றலைட் மூலம் சர்வதேச நாடுகளுடன் தொடர்பு கொள்ளக் கூடியதாக இந்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டிருந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம்  தெரிவித்துள்ளது.