மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரபல ஆரம்ப பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் நேற்று மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். மட்டக்களப்பு பூம்புகாரைச் சேர்ந்த சந்திஷ்குமார் வினுஷிகா (வயது 08) என்ற மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கோட்டைமுனை கனிஷ்ட பாடசாலையில் இம்மாணவி கல்வி பயின்று வந்தவராவார்.
நேற்றுக் காலை அம்மாணவியின் பாட்டனார் வழமை போல் அவரை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்து சென்றுவிட்டு வந்துள்ளார். பாடசாலைவிடும் வேளையில் அவரை அழைத்துச் செல்ல அவரது பாட்டனர் சென்ற போது, அம்மாணவி மர்மமான முறையில் காணாமல் போயுள்ளமை தெரிய வந்துள்ளது
இச்சம்பவத்தினால் அப்பாடசாலை மாணவர்களிடையே பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இம்மாணவியின் தந்தையான சதிஷ் குமார் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவரது வீட்டுக்கு வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.