அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இராணுவ இணையம் -நேற்றுப் பிற்பகலில் இருந்து மீண்டும் இயக்கம்.

army-crest.jpgபுலிகள் இயக்கத்தின் கணனி நிழல் வெளிப் பயங்கரவாதம் இராணுவ இணையத் தளத்தில் ஊடுருவியிருப்பதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளமான Army.lk இணையத்தை புலிகள் இயக்கத்தினரோ அல்லது அவர்களுக்குச் சார்பானவர்களோ சட்ட விரோதமாகத் துண்டித்துள்ளதுடன், சில கொடூரமான படங்களைப் பதிவேற்றம் செய்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். புலிகளின் இந்தப் புதிய வடிவத்திலான பயங்கரவாதக் குற்றச் செயலுக்கு எதிராக சர்வதேச சட்ட விதிகளுக்கு ஏற்ப வழக்குத் தொடர முடியுமென்றும் பிரிகேடியர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக இராணுவ இணையத் தளத்தைக் கூடுதலானோர் பார்வையிட்டு வருவதால், புலிகளுக்கும் அவர்களின் ஊது குழல்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புலிகளின் பயங்கரவாதத்திற்குப் பின்னால் உள்ள பல உண்மைகள் வெளிவந்ததுடன், அவர்களின் கொடூரச் செயல்களும் அம்பலத்துக்கு வந்தன. இதன் காரணமாக அவர்கள் நிழல்வெளிப் பயங்கரவாதத்தை மேற்கொண்டுள்ளார்களென்று தெரிவித்துள்ள பிரிகேடியர் நாணயக்கார, இராணுவ இணையத் தளத்தை வழமைபோன்று இயங்கச் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் இணையத்தின் ஆசிரியர் பீடம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய www. Army.lk இணையத்தளம் நேற்றுப் பிற்பகலில் இருந்து வழமைபோன்று இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மோதல் வலயத்திலிருந்து பொதுமக்களை வெளியேற்ற “முன்னுரிமை’ அவசியம் – நியூயோர்க்கில் ஹோம்ஸ்

john_holmes.jpgமோதல் வலயத்தில் தற்போதும் 50 ஆயிரம் பொதுமக்கள் அகப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும் சாத்தியமான அளவுக்கு அவர்களை வெளியே கொண்டுவருவது அவசியம் என்று ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான மோதல் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு அவர் மீண்டும் கோரிக்கை விடுத்திருக்கிறார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபின் நியூயோர்க் திரும்பியிருக்கும் ஜோன்ஹோம்ஸ் செய்தியாளர்கள் மத்தியில் புதன்கிழமை இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இடம்பெறும் மோதலால் இந்த மக்கள் பாரிய அபாயத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  ஷெல் வீச்சு, சூடுகளால் மாத்திரமல்லாமல் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளும் மிக மோசமான நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையிலிருந்து திரும்பியிருக்கும் ஹோம்ஸ் “ஏமாற்றம்’ என்று குறிப்பிட்டிருப்பதாக ஐ.நா.விலுள்ள இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்திருக்கிறது. அவர் பாதுகாப்புச்சபைக்கு அறிக்கையிட வேண்டுமென சபையின் பல உறுப்பினர்கள் கருதுவதாகவும் ஆனால், நேற்று வியாழக்கிழமை நிகழ்ச்சி நிரலில் சைபிரஸ் விவகாரமே உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை காலை இந்த விடயம் குறித்து பாதுகாப்புச் சபையில் அறிக்கையிடுவதற்கு சீனா எதிர்ப்பு காட்டியுள்ளதாக தகவலறிந்த உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது. ஆயினும், ஏனைய விடயங்களுடன் இலங்கை விவகாரம் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அறிக்கை சமர்பிக்கப்படும் இடம் குறித்து சீனா ஆட்சேபனை தெரிவித்திருப்பதாகவும் அதனால், ஐ.நா. தலைமையக அடித்தளத்தில் இலங்கை விடயம் குறித்து ஹோம்ஸ் அறிக்கை சமர்ப்பிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மக்கள் மிகவிரைவில் அதிஉச்ச நன்மைகளை அடைவர் – முசலியில் அமைச்சர் முரளிதரன்

flee0009.jpgபடையினரால் மீட்டெடுக்கப்பட்ட வடபகுதியும், அங்குள்ள மக்களும் வெகு விரைவில் உச்சக்கட்ட நன்மைகளை அடைவார்கள். இதற்கான சகல நடவடிக்கை களையும் அரசாங்கம் முன் னெடுத்துள்ளது என்று அரசியலமைப்பு விவகார தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.

இந்த நாட்டில் நிரந்தர சமாதானம் வெகுவிரைவில் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், கடந்த 25 வருடங்களாக தலைநகருடன் எந்த தொடர்புகளும் இல்லாமலிருந்த எமது மக்கள் மீட்டெடுக்கப்பட்டதன் மூலம் சிறந்த பலன்களை அடைவர் என்றும் அவர் தெரிவித்தார். வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் மன்னார், முசலி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சவேரியர்புரம் கிராமசேவைப் பிரிவில் 122 குடும்பங்களைச் சேர்ந்த 409 பேர் நேற்றுமுன்திம் மீளக்குடியமர்த்தப்பட்டனர். அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்க்குடியேற்ற அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேலும் தகவல் தருகையில்:-

பிரபாகரன் தனது சொந்த நலனுக்காகவும், தனது பாதுகாப்புக்காகவும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பொது மக்களை பணயமாக வைத்திருந்ததை அனைவரும் கண்டோம். எஞ்சியுள்ள மக்களையும் எமது படைவீரர்கள் வெகுவிரைவில் மீட்டெடுப்பார்கள். நீண்டகால கொடிய யுத்தத்திலிருந்து நாங்கள் தற்பொழுது மீண்டு வந்துள்ளோம்.

நிச்சயமாக யுத்தத்தினால் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியாது. எனவே யுத்தத்தை கைவிட்டு சிறந்த அரசியல் தீர்வு ஒன்றின் மூலம்எமது மக்களுக்கு தீர்வுகளையும், நன்மைகளையும் பெற்றுக்கொடுப்போம் என்று அன்று புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நானும் சிலரும் ஆலோசனைகளை முன்வைத்தோம். இதற்காக கடுமையாக முயற்சித்து பார்த்தோம். அன்று எமது கருத்தை மறுத்தார். ஒரு சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றையாவது பெற்றுக்கொடுக்க முயற்சித்தோம். ஆனால் அதனையும் பிரபாகரன் ஏற்றுக்கொள்ளவில்லை.  யுத்த வெறியிலேயே அவர் இருந்தார். ஆனால் இதனால் பாரிய அழிவையே சந்திக்க நேரிடும் என்று கூறிவிட்டு நானும் எனது சகாக்களும் வெளியேறினோம்.

பிரபாகரன் அன்று அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று வன்னி மக்களை கொடுமையிலிருந்து பாதுகாத்திருக்க முடியும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமது மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர். எனவேதான் கிளிநொச்சி நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். படையினரின் மனோ வலிமையை மேம்படுத்துவதுடன் அங்குள்ள வளங்களை பயன்படுத்தி எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பாக ஆராய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாக இருந்தது.

வாகரைக்கு இப்போது சென்று பார்த்தால் அங்கு யுத்தம் நடைபெற்றதற்குரிய எந்த தடையமும் இல்லை. ஜனாதிபதியினதும், பசில் ராஜபக்ஷ எம்.பி.யினதும் வழிகாட்டல்களில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதே நிலைமை வெகுவிரைவில் வடக்கிலும் ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு தென்மராட்சியில் தற்காலிக பாடசாலைகள்

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து தென்மராட்சி நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக தென்மராட்சியில் தற்காலிக பாடசாலைகள் அமைக்கப்படுகின்றன. யாழ். அரச அதிபர் மற்றும் தென்மராட்சிக் கல்வி வலய அதிகாரிகளின் ஏற்பாட்டிலேயே இந்தப் பாடசாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இப்பாடசாலைகளுக்கான ஆசிரிய வளம் ஓரளவு இருக்கின்ற போதிலும் தளபாடங்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் யாழ். மாவட்டத்திலுள்ள வலயக் கல்வி அலுவலகங்கள் தளபாடங்களை வழங்கி உதவ வேண்டுமெனவும் தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கைதடி சைவச் சிறுவர் இல்லம், கைதடி பல்கலைக்கழக மாணவர் விடுதி மற்றும் கைதடி பனைவள ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 600 வரையான மாணவர்களின் கல்விக்காக கைதடி அரச மருந்தகத்தில் ஒரு தற்காலிக பாடசாலை அமைக்கப்படுகிறது. மிருசுவில் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஏறக்குறைய 500 வரையான மாணவர்களின் கல்விக்காக இந்த நலன்புரி நிலையத்திற்கு அண்மையிலுள்ள தனியார் வீடொன்றிலும் தற்காலிக பாடசாலையொன்று அமைக்கப்படுகின்றது.

40 சடலங்களும் அடக்கம் செய்யப்படும்

வவுனியா பொது வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ள 40 சடலங்களையும் அரச செலவில் அடக்கம் செய்ய மாவட்ட நீதிவானின் அனுமதி பெறப்பட்டுள்ளது. பூந்தோட்டம் பொது மயானத்தில் சடலங்களை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை வைத்தியசாலை நிர்வாகமும் பொலிஸாரும் மேற்கொண்டுள்ளனர்.

அடையாளம் காணப்பட்டு உறவினர்களினால் எடுத்துச் செல்லப்படாததும் அடையாளம் காணப்படாததுமான சடலங்கள் சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்தன. இட நெருக்கடியும் சடலங்கள் பழுதடைந்து துர்நாற்றம் வீசுவதாலும் இவற்றை அரச செலவில் அடக்கம் செய்யத் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில், சடலங்கள் பொலித்தீன் பைகளில் போடப்பட்டு பொதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை மேற்பார்வையாளர் தெரிவித்தார்.

விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பிரிவு

swine-flue.jpgபன்றிக் காய்ச்சல் பரவியுள்ள நாடுகளிலிருந்து இலங்கை வரும் வெளிநாட்டு உள்நாட்டு பயணிகள் வருகை தொடர்பாக தீவிர கண்காணிப்புப் பிரிவொன்றின் ஊடாக தரவுகள் சேகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முகாமையாளர் எச். எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

விமான நிலையத்தின் பயணிகள் வருகை பகுதியில் இத்தீவிர கண்காணிப்புப் பிரிவு இயங்குவதாக குறிப்பிட்ட அவர் மெக்சிகோ, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், நியூசிலாந்து, கனடா, இஸ்ரேல், ஓஸ்ரியா போன்ற நாடுகளிலிருந்து பயணிகள் வரும்போது கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

பன்றிக்காய்ச்சல் பீடிக்கப்பட்ட ஒருவர் வருவாரேயானால் உடனடியாக அவரை பாதுகாப்பாக இதற்கென ஒதுக்கப்பட்ட ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பன்றிக்காய்ச்சல் தொடர்பாக விமான நிலைய ஊழியர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக விமான நிலைய முகாமையாளர் எச். எஸ். ஹெட்டயாராச்சி தெரிவித்தார்.

கதிர்காமம் வரும் யாத்திரிகர்களுக்கு டெங்கு நோய் குறித்து அறிவுறுத்தல்

தங்காலை பகுதியில் டெங்கு நோய் அதிகளவில் பரவிவருவதால் கதிர்காமம் வருகின்ற யாத்திரிகர்களுக்கு சுத்தத்தை பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாத்தறையில் 65 பேருக்கும், காலியில் ஆறு பேருக்கும் டெங்கு நோய் பிடித்துள்ளது.

ஜனவரி மாதம் முதல் இம்மாதம் வரையும் தென் மாகாணத்தில் 137 பேர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ஜே.பி. சேனரத் தெரிவித்தார்.

இதேவேளை, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பாடசாலைகளைச் சூழவுள்ள இடங்கள் துப்புரவு செய்யப்பட்டு வருகின்றன. மாணவர்களின் வகுப்பறைகளிலும் நுளம்புகளைக் கொல்லும் மருந்து வீசப்பட்டுவருகிறது.

உணவுக் கடைகளில் சுத்தத்தை பேணுமாறும் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளதுடன், அவற்றை கண்காணித்து வருகின்றனர். தென் மாகாணத்தில் டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

வருடாந்த உற்சவத்தை கைவிட நேர்ந்தது இன,மத நல்லிணக்கத்திற்கு குந்தகமான செயற்பாடு -அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்கம்

நாட்டின் இன,மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் செய்யும் செயற்பாடாகவே இறக்குவானை முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கைவிடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை வேதனையுடன் நோக்க வேண்டியுள்ளதாக அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் அதன் பொதுச்செயலாளர் த.மனோகரன் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

பௌர்ணமி தினம் பௌத்தர்களால் புனித தினமாகக் கொள்ளப்படுவதை போன்று ஆதி முதல் இந்துக்களும் அத்தினத்தை புனித நாளாக அனுஷ்டித்து வருகின்றனர்.

இவ்வாறிருக்கும் போது பல்லின பலமொழி, பலமதங்களைக் கொண்ட நாட்டில் இந்துக்களின் புனித தினமான பௌர்ணமி தினத்தில் சமய வழிபாடு செய்வதைத் தடுப்பதானது சமய உரிமையை தடுக்கும் செயலாகவே அமைகின்றது.

நாட்டு மக்களிடையே ஐக்கியமும் புரிந்துணர்வும் ஏற்பட வேண்டுமென்று பல தரப்பினராலும் குரல் கொடுக்கப்பட்டுவரும் இவ்வேளையில் இவ்வாறான இழிசெயல்கள் இனங்களுக்கிடையே பகைமை,வெறுப்பை ஏற்படுத்தும்.இச் செயல்கள் முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும்.பொறுப்பின்றி இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளித்தல் நாட்டில் இனத்துவேஷம் மேலும் தீவிரமடைவதை எந்த மகானாலும் தடுக்க முடியாது.

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள மடல்

Wanni_War_Bombed_Safe-Zone01.05.2009

மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ,
ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு – 03

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,

வன்னியில் எஞ்சியுள்ள இடம் பெயர்ந்தோரை காப்பாற்றுங்கள்

இலங்கை ஓர் தேசமாக தனது நாணயத்தைக் இழக்காது காப்பாற்றக் கூடிய வகையில் தங்களில் உடன் நடவடிக்கைக்காக நான் கவலையடையும் சில விடயங்களை முன்வைக்க விரும்புகிறேன். நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் தங்கள் நடவடிக்கைகளுக்கு எனது உயிருக்கு பெரும் அச்சுறுததல் இருந்தும் கூட எனது முழு ஒத்துழைப்பை தங்களுக்கு நல்கி தங்களை தப்பாக என்றும் நான் வழி நடத்தவில்லை. நான் ஆதாரமற்று கேள்விப்படுவனவற்றையோ, அல்லது பிறர் கூறும் அனைத்தையுமோ முற்று முழுதாக நம்புகிறவன் அல்ல.

இன்றும் வன்னியில் அகப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்துக்கு மேல் இருக்கின்றனர் என்று நம்பகமான செய்தி கிடைத்திருக்கின்ற போதும் நிச்சயமாக ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இருக்கின்றனர் என்பதை நான் நம்புகின்றேன். முன்பு ஒரு சந்தர்பத்தில் எனது எண்ணிக்கை சரியானதென நிரூபணமானதை தாங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். துரதிஷ்டவசமாக விமானத்தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் கடந்த மூன்று நாட்கள் தொடர்ந்து செல், ஆட்டிலறி தாக்குதல்கள் தொடர்கின்றன. அவற்றை உடன் நிறுத்தி அப்பாவி பொது மக்களை காப்பாற்றுங்கள்.

நான் சுட்டிக்காட்ட விரும்பும் ஒரு விடயம் யாதெனில் யுத்த நடவடிக்கைகள் பல இடம்பெயர்ந்தோரை கடும் பாதிப்புக்குள்ளாக்கும் அதேவேளையில் நலன்புரி நிலையங்களுக்கு தப்பி வந்துள்ளவர்களை பெரும் பயத்துக்கும் பீதிக்கும் உள்ளாக்குவதோடு அவர்களின் உறவுகள் பலர் இன்னும் வன்னியில் இருப்பதால் அவர்களுக்கு பெரும் பாதிப்புக்களையும் ஏற்படுத்தும். ஓவ்வொரு உயிரும் பெறுமதிமிக்கதால் அப்பாவி மக்களின் உயிர்களை என்ன விலை கொடுத்தேனும் பாதுகாக்க வேண்டிய பாரிய கடமை தங்களுக்குண்டு. நான் முன்பு தங்களுக்கு எழுதியது போல சில விடயங்கள் வெளியுலகுக்கு தெரியவரும் போது நம் நாடு சர்வதேச சமூகத்தால் பெரும் கண்டனத்துக்குள்ளாகும்.

வன்னியில் பெரும் உணவுத் தட்டுப்பாடு மக்கள் பட்டினியால் வாடுமளவுக்கு ஏற்பட்டுள்ளது. சித்திரை மாதம் 2ம் திகதி 1100 மெற்றிக் தொன் உணவு அங்கே அனுப்பப்பட்டதன் பின் 28ம், 29ம் திகதிகளில் தினம் 30 மெற்றிக் தொன் உணவே சென்றுள்ளது. இந்த இரு நாட்களிலும் அவர்களுக்கு தினம் கிடைத்துள்ள சீனி 1000 கிலோ கிறாம் மட்டுமே. ஆகவே தயது செய்து உடன் தேவைப்படும் உணவு, மருந்து வகைகளை அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இக் கடைசி நேரத்திலும் கூட நான் கூறும் ஆலோசனை தங்களுக்கு ஏற்புடையதாயின் அதை அமுல்ப்படுத்த முயற்சியுங்கள். எனது ஆலோசனை யாதெனில் அரசுக்கு ஏற்புடையதான ஓர் சர்வதேச அமைப்பை வன்னிக்கு அனுப்பி மக்களை விடுவிக்குமாறும், ஆயுதங்களுடன் சரணடைபவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுப்பதாகவும் கூறி அனுப்பி வையுங்கள். இதற்குத் தேவையான இருவார காலக்கெடுவும் கொடுக்கலாம். பொது மக்களை வெளியில் கொண்டுவர அத்தகையதோர் ஏற்பாடு செய்யத் தவறின் முடிவில் நாட்டின் நற்பெயரை நாசம் செய்யும் ஓர் பாரிய அனர்த்தம் தேசிய ரீதியில் ஏற்படவும் கூடும்

நன்றி

வீ. ஆனந்தசங்கரி
தலைவர் – த.வி.கூ

மோதல் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேறுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

sri-lanka-flags.jpgவிடுவிக் கப்படாத பகுதியில் எஞ்சியிருக்கும் மக்களை வெளியேறுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டு கோளடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வான் மார்க்கமாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. “புலிகளின் நடவடிக்கைகள் காரணமாக நீங்கள் தொடர்ச்சியான இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், நீங்கள் மனிதக் கேடயங்களாகவும் வைக்கப்பட்டுள்ளீர்கள். எனவே, உங்கள் பாதுகாப்புக்காக அங்கிருந்து வெளியேறி வாருங்கள்” என ஜனாதிபதி விடுத்தவேண்டுகோள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் வான் மார்க்கமாக வீசப்பட்டுள்ளன.