நாட்டின் இன,மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் செய்யும் செயற்பாடாகவே இறக்குவானை முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கைவிடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை வேதனையுடன் நோக்க வேண்டியுள்ளதாக அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் அதன் பொதுச்செயலாளர் த.மனோகரன் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
பௌர்ணமி தினம் பௌத்தர்களால் புனித தினமாகக் கொள்ளப்படுவதை போன்று ஆதி முதல் இந்துக்களும் அத்தினத்தை புனித நாளாக அனுஷ்டித்து வருகின்றனர்.
இவ்வாறிருக்கும் போது பல்லின பலமொழி, பலமதங்களைக் கொண்ட நாட்டில் இந்துக்களின் புனித தினமான பௌர்ணமி தினத்தில் சமய வழிபாடு செய்வதைத் தடுப்பதானது சமய உரிமையை தடுக்கும் செயலாகவே அமைகின்றது.
நாட்டு மக்களிடையே ஐக்கியமும் புரிந்துணர்வும் ஏற்பட வேண்டுமென்று பல தரப்பினராலும் குரல் கொடுக்கப்பட்டுவரும் இவ்வேளையில் இவ்வாறான இழிசெயல்கள் இனங்களுக்கிடையே பகைமை,வெறுப்பை ஏற்படுத்தும்.இச் செயல்கள் முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும்.பொறுப்பின்றி இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளித்தல் நாட்டில் இனத்துவேஷம் மேலும் தீவிரமடைவதை எந்த மகானாலும் தடுக்க முடியாது.