தங்காலை பகுதியில் டெங்கு நோய் அதிகளவில் பரவிவருவதால் கதிர்காமம் வருகின்ற யாத்திரிகர்களுக்கு சுத்தத்தை பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாத்தறையில் 65 பேருக்கும், காலியில் ஆறு பேருக்கும் டெங்கு நோய் பிடித்துள்ளது.
ஜனவரி மாதம் முதல் இம்மாதம் வரையும் தென் மாகாணத்தில் 137 பேர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ஜே.பி. சேனரத் தெரிவித்தார்.
இதேவேளை, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பாடசாலைகளைச் சூழவுள்ள இடங்கள் துப்புரவு செய்யப்பட்டு வருகின்றன. மாணவர்களின் வகுப்பறைகளிலும் நுளம்புகளைக் கொல்லும் மருந்து வீசப்பட்டுவருகிறது.
உணவுக் கடைகளில் சுத்தத்தை பேணுமாறும் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளதுடன், அவற்றை கண்காணித்து வருகின்றனர். தென் மாகாணத்தில் டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.