அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இடம்பெயர்ந்தோர் குறித்து இன்று சபையில் விவாதம்

26parliament.jpgவடக்கில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்கள் தொடர்பாக இன்று  புதன்கிழமை பாராளுமன்றத்தில் விவாதமொன்று நடைபெறவுள்ளது. வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களின் நிலைமை தொடர்பான இந்த விவாதமானது சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாகவே நடைபெறவுள்ளது.

ஜே.வி.பி.யினால் இதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், இன்று புதன்கிழமை நண்பகல் 12.30 மணி தொடக்கம் மாலை 4.30 பணி வரையான 4 மணி நேரத்துக்கு இந்த விவாதம் நடைபெறவுள்ளது.

சிறுபான்மை என்ற பேச்சுக்கே இனி நாட்டில் இடமில்லை – ஜனாதிபதி

mahinda-rajapa.jpgநாட்டில் இனி சிறுபான்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. நாம் வார்த்தையில் மட்டுமன்றி செயலிலும் அதனை நிரூபித்துள்ளோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் ஒதுக்கி விட்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நம் அனைவருக்குமான இத்தாய் நாட்டைப் பாதுகாப்பதிலும் கட்டியெழுப்புவதிலும் நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மொனராகலை பெல வத்தையில் நேற்று மாவட்ட தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டமையை சகல சமயங்களும் உணரத்தொடங்கியுள்ள காலமிது. இனி இந்த நாட்டில் சிறுபான்மை என்று ஒன்றில்லை. அதனை நாம் வார்த்தையில் மட்டுமன்றி செயலிலும் உறுதிப்படுத்தியுள்ளோம். இலங்கையில் தமிழும் சிங்களமும் அரச மொழியாக இருந்த போதிலும் தமிழ் மக்கள் தமது மொழியில் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியாமலிருந்ததாலேயே பல பிரச்சினைகள் உக்கிரமடைந்தன.

இப்பிரச்சினைக்குத் தீர்வாக நாம் 2500 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்தோம். அவர்களில் 500 பேருக்கு நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன. அரச சேவையில் தமிழும் சிங்களமும் தெரிந்தவர்களுக்கு 25,000 ரூபாவை சம்பளமாக வழங்குகிறோம். இத்தகைய நடவடிக்கைகள் மூலமே பிரச்சினைகள் தீரும்.

மலையக மக்கள் இன்று கல்வியில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் அவர்கள் இது விடயத்தில் அக்கறையில்லாமல் இருந்ததற்குக் காரணம் ஆசிரியர் பற்றாக்குறையும் அரசபணிகளில் நிலவிய வசதியின்மையுமே. இதனைக் கருத்திற் கொண்டு நாம் 3,679 ஆசிரியர்களை நியமித்தோம், அத்துடன் அப்பகுதியில் கல்வித் துறையை மேம்படுத்த பாரிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்தோம். ஆசிரியர்களை அப்பகுதியிலிருந்தே தேர்ந்தெடுத்தமை இதில் குறிப்பிடக் கூடியதொரு விடயம். அதனால் பெருந்தோட்டப் பகுதியில் பாரிய மாற்றமொன்று தற்போது ஏற்பட்டுள்ளது. இது நாம் மலையக மக்களுக்காகச் செய்த சேவையாகும்.

இன்று எல்லைக் கிராமங்கள் இல்லை. பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை. அன்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட அதே அபிவிருத்தி இன்று கிராமப்புறங்களில் முன்னெடுக்கப்படுகிறது. தமிழ், சிங்களம், முஸ்லிம் என எந்த பாகுபாடுமில்லாமல் சகலருக்கும் அரசாங்கம் சலுகைகளைப் பெற்றுக் கொடுக்கின்றது. தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் ஒதுக்கி வைத்து விட்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. மலையகப் பகுதிகளைப் பொறுத்த வரை வெள்ளைக்காரர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்ட லயன் காம்பிராக்களிலிருந்து அம்மக்களை விடுவித்து அவர்களுக்கு வீடுகளை வழங்குவதே எமது திட்டம். இத்திட்டத்தின் மூலம் தற்போது 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் லயன் காம்பிரா சூழல் மாற்றம் பெற்று கிராமங்கள் உருவெடுக்கும்.

யாழ்ப்பாணத்திலிருந்து பயங்கரவாதிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்கள் புத்தளத்தில் வாழ்கின்றனர். மூதூரிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களை நாம் 45 மணித்தியாலத்தில் மீளக்குடியமர்த்தி வாக்குறுதியை நிறைவேற்றினோம். முழு உலகிலிருந்தும் அழுத்தம் வந்த போதும் நாம் பயங்கரவாதத்தை ஒழித்து மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினோம். சிறுபான்மை என்பதை வரலாற்றில் மட்டுமன்றி அனைத்திலிருந்தும் அகற்றுவது அவசியம். இன்று எமது அரசாங்கத்தில் பல தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் எம்மை நம்புகின்றனர். அரசாங்கத்தின் செயற்பாடுகளை நம்புகின்றனர். இந்த அரசு சகல மக்களுக்குமான நம்பிக்கையான அரசு என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

நாம் தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் எந்த இனம், நிலம், பிரதேசம் பேதமும் காட்டுவதில்லை. இந்த நாட்டைப் பாதுகாக்கவும் கட்டியெழுப்பவும் அனைவருக்கும் பொறுப்பு உண்டு.

இது நாம் பிறந்த நாடு. நம் அனைவரதும் தாய் நாடு. இந்த நாட்டை சகலரும் அன்பு செய்ய வேண்டும். இதை பாதுகாக்க சகலரதும் ஒத்துழைப்பு மிகவும்அவசியமானது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றுபடுவோமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தபாலில் அனுப்பப்படும் தந்திச் செய்திகள்

தம்புள்ள அஞ்சல் அலுவலகத்தில் பொது மக்களால் கையளிக்கப்படும் தந்திச் செய்திகள் யாவும் சாதாரண தபாலிலேயே அனுப்பப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக மாத்தளை மாவட்ட தபால் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவிக்கையில்;

அஞ்சல் அலுவலக தந்திச் சேவகர்களாகக் கடமையிலீடுபடுத்தப்பட்டிருந்தவர்கள் வேறு அலுவல்களில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாலும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசி பாவனை பிரதேசத்தில் அதிகரித்திருப்பதாலும் தந்திச் சேவைகள் நட்டத்தில் இயங்குவதால் இத்தகைய தாமதம் ஏற்படுவதாகத் தெரிவித்தார்.

தந்திச் செய்திகள் தபாலில் அனுப்பப்படுவதால் கிராமப்புற மக்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். சீரான தந்திச் சேவையைப் பெற்றுத் தருமாறும் மக்கள் உரியவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்

“ஏ9′ வீதியிலுள்ள கோயில்களைத் திறக்க அனுமதிக்குமாறு கோரிக்கை

ஏ9 வீதியிலுள்ள இந்து ஆலயங்களை மீண்டும் திறந்து நாளாந்த பூஜைகளை நடத்த அனுமதி வழங்குமாறு சர்வதேச இந்து மதபீடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.  இந்து மத பீடத்தின் செயலாளர் ஆர்.பாபு சர்மா இது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

நீண்டகாலமாக மூடப்பட்டிருக்கும் ஏ9 வீதியில் அமைந்துள்ள இந்து ஆலயங்களை மீண்டும் திறந்து நாளாந்தம் ஒருவேளை பூஜையையாவது நடத்த அனுமதி வழங்க வேண்டும். இந்தப் பூஜையை நடத்துவதற்கான ஏற்பாட்டை எமது மதபீடம் மேற்கொள்ளும்.

முறிகண்டிப் பிள்ளையார் கோவில் உட்பட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள இந்து ஆலயங்களை மீண்டும் திறந்து பூஜை, வழிபாடுகளை நடத்த அனுமதிக்குமாறு வேண்டுகிறோம். வவுனியா முகாம்களிலுள்ள இந்து குருமாரை பூஜைகளில் ஈடுபடுத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து தருமாறும் அந்தக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னித் தளபதியாக மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன

kamal.jpgவன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இந்த புதிய நியமனத்தை வழங்கியுள்ளார். வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கடந்த திங்கட்கிழமை விஜயம் செய்த மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவை பிரிகேடியர் சுதந்த ரணசிங்க வரவேற்றார்.

அங்கு நடைபெற்ற சமய நிகழ்வுகளில் கலந்துகொண்ட மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தமது அலுவலகத்திற்கு சென்று புதிய தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் போது முதல் ஆவணத்திலும் கையொப்பமிட்டார்.

இராணுவத்தின் 53வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய கமல் குணரட்ன வன்னி மனிதாபிமான நடவடிக்கைகளின் போது கள முனையிலிருந்து சிறந்த சேவைகளை வழங்கிவந்தார்.

நந்திக் கடல் களப்பு வரை முன்னேறிச் சென்று கள நடவடிக்கைகளுக்குப் பாரிய ஒத்துழைப்புகளையும் வழங்கியுள்ளார்

பிரிட்டனில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கையர் போலி கடவுச்சீட்டுகளுடன் கைது

பிரிட்டனில் இலங்கையைச் சேர்ந்தவர் ஒருவர் போலிக் கடவுச்சீட்டுகள், அடையாள அட்டைகளுடனும் கைது செய்யப்பட்டுள்ளார்.  சிவபாலன் துரை என்ற இலங்கையர் பார்க் றோயல் பகுதியிலுள்ள நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் போலியான பிரெஞ்சு கடவுச்சீட்டு, 2 போலி தேசிய காப்புறுதி அட்டைகள், 2 பிரிட்டிஷ் கடவுச்சீட்டுகள், சாரதி அனுமதிப் பத்திரம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகலிடம் மறுக்கப்பட்ட சிவபாலன் துரையுடன் மற்றொரு புகலிடம் மறுக்கப்பட்டவரான சக்திவேல் சஞ்ஜீவன் என்பவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கண்ணாடி தயாரிப்பு பணியாளர்கள் இருவருடன் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை இருவரும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றம் 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. மற்றைய இருவருக்கும் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வேலை வழங்கிய சுப்பர் ரவ்கீறெட் கிளாஸ் நிறுவனம் 40,000 ஸ்ரேர்லிங் பவுண்ஸ் வரையிலான அபராதத்தை இப்போது எதிர்நோக்கியுள்ளது.

இலங்கைக்கு 2.5 பில்லியன் டாலர்கள் உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்

050709imf_.jpgஇலங்கைக்கு 2.5 பில்லியன் டாலர்கள் நிதியுதவி வழங்குவது தொடர்பில் அதிகாரிகள் மட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் முகாமைத்துவ இயக்குனரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த உதவி 20 மாதங்களுக்கான ஆயத்தநிலை ஏற்பாடாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜூலை 24 ஆம் திகதி நடக்கவுள்ள நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் இந்த பொருளாதார உதவித்திட்டம் குறித்து ஆராயும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ள சர்வதேச நாணய நிதியம், அந்த திட்டத்தை நிறைவேற்று சபை அங்கீகரிக்கும் பட்சத்தில், அதன் மூலம் இலங்கை உடனடியாக 313 மில்லியன் டாலர்களை பெறக்கூடியதாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.

இராணுவத்திலிருந்து தப்பியோடியோர் அலுவலகங்களில் தேடப்படுகின்றனர்

இராணுவத்திலிருந்து தப்பியோடி தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் கடமையாற்றும் படையினரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இராணுவத்திலிருந்து தப்பியோடி தற்போது தனியார் அலுவலகங்களில் கடமையாற்றுவோரில் 150 பேரது விபரங்களைப் பெறும் நோக்கில் நாரஹேன்பிட்டி பொலிஸார் கொழும்பு மேலதிக நீதிவான் ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

மேற்படி 150 பேரதும் முகவரி மற்றும் விபரங்களை வழங்குமாறு தொழில் ஆணையாளருக்கு உத்தரவிடக்கோரியே பொலிஸார் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இராணுவத்திலிருந்து தப்பியோடிவர்களில் ஆயிரக்கணக்கானோர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தனியார் நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.

தொழில் திணைக்களம் ஊடாக இவ்வாறானவர்களைக் கண்டுபிடிக்கும் நோக்கிலேயே முதல் 150 பேரது விபரங்களைத் தொழில் திணைக்களத்திடமிருந்து பெறுவதற்காக நாரஹேன்பிட்டி பொலிஸார் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளனர்.

சூரிய கிரகணம் இன்று

sun.jpgசூரிய கிரகணத்தையோ, சூரியனையோ வெற்றுக் கண் களால் பார்ப்பதால் கண் பார்வை முழுமையாகவோ, பகுதியாகவோ பாதிக்கப்படும் என்று கொழும்பு பல் கலைக்கழகத்தின் பெளதீகவியல் துறை சிரேஷ்ட விரிவு ரையாளரும், நவீன தொழில்நுட்பத்திற்கான ஆதர் சி கிளார்க் நிலைய ஆலோசகருமான கலாநிதி சந்தன ஜய ரட்ன நேற்றுத் தெரிவித்தார்.

இன்று (22ம் திகதி) சூரிய கிரகணமாகும். இதனை இந்தியா, நேபாளம், பங்களாதேசம், பூட்டான், மியன்மார், சீனா உட்பட்ட சில நாடுகளில் முழுமையாக பார்க்க முடியுமென்றாலும் இலங்கையில் பகுதியாகவே தென்படும். அத்தோடு கிழக்காசியா, இந்தோனேசியா மற்றும் பசுபிக் கரையோர நாடுகளிலும் இதனை பகுதியாகவே பார்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் காலை 6.03 மணி முதல் தென்படும் இச்சூரிய கிரகணத்தை சில நிமிடங்கள் வித்தியாசத்தில் வெவ்வேறு நகரங்களில் காட்சியளிக்கும் என்றும் அவர் கூறினார்.

கொழும்பு நகரில் காலை 6.03 மணிக்கு தென்படத் தொடங்கும் இச்சூரிய கிரகணம் காலை 7.12 வரை இருக்கும். காலை 6.21 மணியளவில் உச்சமாக தென்படும் இச்சமயம் சூரியனின் 40 சதவீதத்தை சந்திரன் மறைப்பதால் இருட்டு நிலை ஏற்படுகின்றது. இச்சூரிய கிரகணத்தை நாட்டின் ஏனைய நகரங்களில் சில நிமிடங்கள் வித்தியாசத்தில் பார்க்க முடியும்.

உதாரணத்திற்குச் சொல்லுவதாயின் யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களுக்கு காலை 5.58 மணி முதல் காலை 7.15 மணி வரை தென்படும். காலியில் காலை 6.03 மணி முதல் காலை 7.11 மணி வரை பார்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இச்சூரிய கிரகணத்தை உயர்வான இடங்களிலிருந்தோ, மலை உச்சியிலிருந்தோ தெளிவாகப் பார்க்க முடியும்.

இங்கிலாந்தின் அழகுராணியாக முதல் தடவையாக கறுப்பின அழகி

miss_england-2009.jpgஇங்கிலாந்தின் முதலாவது கறுப்பு இன அழகுராணியாக ரேசல் கிறிஸ்ரி (20 வயது) திங்கட்கிழமை இரவு மகுடம் சூட்டிக் கொண்டுள்ளார். இவர் முன்னாள் ஒலிம்பிக் குறுந்தூர ஓட்ட சாம்பியன் லின்போர்ட் கிறிஸ்ரியின் மைத்துனி ஆவார். மேற்கு லண்டனிலுள்ள கென்ஸிங்டன் எனும் இடத்தைச் சேர்ந்த ரேசல் கிறிஸ்ரி 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிச் சுற்றொன்றில் பிரித்தானியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை கார் விபத்து ஒன்றுக்கு ஆளாகிய ரேசல், சிராய்ப்பு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஓர் இரவை மருத்துவ மனையில் கழித்தார். இந்நிலையில் தைரியத்துடன் அழகுராணிப் போட்டியில் கலந்து வெற்றி பெற்றுள்ள ரேசல் விபரிக்கையில், “”நான் வாழ்வில் எதைத் தெரிவு செய்தாலும், அதில் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதே எனது இலட்சியமாகும்” எனத் தெரிவித்தார்.

மத்திய லண்டனில் மெற்றோபோல் ஹில்டன் ஹோட்டலில் மேற்படி அழகுராணிப் போட்டி நடைபெற்ற போது இந்தப் போட்டியானது பாலியல் ரீதியான காட்சிப்படுத்தலாக உள்ளது என கண்டனம் தெரிவித்து ஹோட்டலுக்கு வெளியே ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

“ஒவ்வொரு பெண்ணும் ஒரு ராணிதான்’, “அழகு என்பது தோலில் இல்லை’ போன்ற சுலோகங்களைக் கொண்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்