மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் இரண்டு இலட்சம் வீடுகளை நிர்மாணிக்க கால்நடை அபிவிருத்தி கிராமிய சமுதாய அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார். இதன் ஆரம்ப நடவடிக்கையாக 300 வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதி விரைவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை 20,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மலையகப் பெருந் தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை காலமும் தோட்டத் தொழிலாளர் ஒருவருக்கு வீடமைப்பிற்காக இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவே வழங்கப்பட்டு வந்தது. இனி வரும் காலங்களில் 4 இலட்சத்து நாற்பதினாயிரம் ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.