அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

கைது செய்யப்பட்டிருந்த 21 இந்திய மீனவர்கள் இலங்கையினால் விடுவிப்பு – இந்தியன் எக்ஸ்பிரஸ்

_fisherman.jpgசர்வதேச சட்டவிதிகளை மீறி இலங்கையின் கடற்பரப்புக்குள் பிரவேசித்தமைக்காக கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் இலங்கை அரசினால் நேற்று அந்நாட்டின் கரையோரப் பாதுகாப்புப் படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த இந்த 21 இந்திய மீனவர்களும் கடந்த 04ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கை அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட இந்த மீனவர்கள் நேற்று மாலை இந்தியாவின் மண்டபம் பகுதியிலுள்ள கரையோரப் பாதுகாப்பு நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கை அரசாங்கம் இவர்களைக் கடந்த வாரமே விடுவிக்கத் திட்டமிடப்பட்டிருந்தபோதும் கடும் கடல் கொந்தளிப்பின் காரணமாக இந்நடவடிக்கை தாமதமானதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறைமை, ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு எதிராக எவர் செயற்பட்டாலும் அவர்கள் தேசத்துரோகிகள்- பாராளுமன்றத்தில் பிரதமர்

pmsrilaka.jpgநாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயற்படுபவர்கள் எந்த தராதரத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தேசத் துரோகிகளாகவே கருதப்படுபவர்களென்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் சட்டத்தரணிகள் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 10 ஆம் திகதி வெளியாகியிருந்த செய்தி தொடர்பாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோசப் மைக்கல் பெரேரா பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே பிரதமர் விக்கிரமநாயக்க மேற்கண்வாறு கூறினார்.

ஜோசப் மைக்கல் பெரேரா தமது கேள்வியில்; பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவினால் சண்டேலீடர் பத்திரிகை மற்றும் அதன் மறைந்த ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க மீது தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில், பத்திரிகை சார்பாக ஆஜராண சட்டத்தரணிகள் நால்வரும் கறுப்பு அங்கி அணியும் தேசத் துரோகிகலென அவர்களது பெயர் குறிப்பிட்டு மேற்குறித்த தினத்தில் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நீதிமன்ற சுயாதீனம், சட்ட ஆதிக்கம் மற்றும் வழக்கொன்றில் சட்டத்தரணியொருவர் ஆஜராக இருக்கும் உரிமை போன்றன முழுமையாக மீறப்பட்டுள்ளன. இது சட்டத்தரணிகளுக்கு மட்டுமல்லாது மறைமுகமாக நீதிமன்றத்துக்கு விடுவிக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தலாகும் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்து பிரதமர் பேசுகையில்;  பாதுகாப்பு அமைச்சின் உத்தயோகபூர்வ இணையத்தளமானது ஒரு இலத்திரினியல் ஊடகமே. அதுவும் ஊடகத் துறையின் ஒரு அங்கமே. இதற்கும் ஊடகச் சுகந்திரம், உரிமை, பொறுப்பு என்பன இருக்கிறது. இவை அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கப்பட்டவையாகும். பிரஜைகளின் / பொதுமக்களின் அடிப்படை பொறுப்பு என்பனவற்றினூடாக வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புகளை பாதுகாக்க வேண்டியதும் சகலரினதும் கடமையாகும்.

இந்த பொறுப்புகளை பாதுகாக்கும் போது சாதாரண பிரஜையாக இருந்தாலும் சரி அல்லது சட்டத்தரணி, டாக்டர், வர்த்தகர் என எந்த தரத்திலானவர்களாக இருந்தாலும் சரி அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அடிப்படை பொறுப்புகளை பாதுகாக்கவும் கடைபிடிக்கவும் கடமைப்பட்டுள்ளவர்களாகவே இருக்கின்றனர். மேற்படி அடிப்படை பொறுப்புகள் அரசியலமைப்பின் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு என்பனவற்றின் ஊடாக உரித்தாக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், சட்டத்தரணி ஒருவர் தொடர்பாக நோக்கும் போது மேற்குறிப்பிடப்பட்ட அடிப்படை பொறுப்புகளுக்கு மேலதிகமாக அரசியலமைப்பின் ஊடாகவும், உயர் நீதிமன்ற சட்டங்கள் மூலமாகவும் அடிப்படை பொறுப்புகள், கடமைகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருகிறது. ஒருவர் சட்டத்தரணியாக பதவியேற்கும் போது செய்யப்படும் சத்தியப்பிரமாணத்தின் ஊடாகவும் இது குறிப்பிடப்படுகிறது. எனவே, அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு என்பனவற்றையும் பாதுகாக்க வேண்டியது சகல பிரஜைகளினதும் பொறுப்பாகும். அதை புறக்கணித்து செயற்படுபவர்கள் எந்த தரத்திலானவர்களாக இருப்பினும் அவர்கள் தேசத் துரோகிகளாகவே கருதப்படுவார்கள். இதன் பிரகாரம், பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் வெளியான விடயத்தில் தவறில்லை என்று தெரிவித்தார்.

தெற்கு அதிவேகப் பாதை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை

mahinda-rajapa.jpgதெற்கு அதிவேகப் பாதைகளின் நிர்மாணப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். அலரி மாளிகையில் நடைபெற்ற வீதி அபிவிருத்தி அமைச்சின் நடவடிக்கைகள் பற்றிய மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த அதிவேகப் பாதையில் உரிய நியமங்களுக்கு குறைந்த வகையில் அமைக்கப்பட்டுள்ள பாலங்களுக்குப் பதிலாக புதிய பாலங்களை நிர்மாணிப்பது குறித்து இக்கூட்டத்தில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, நிர்மாணப் பணிகளில் பல்வேறு கட்டட நிறுவனங்கள் ஈடுபட்டபோதும் அமைச்சு மட்டத்தில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.  நாட்டிலுள்ள வீதிகளைப் பராமரிப்பதற்கு அரசாங்கம் வருடாந்தம் பெருமளவு நிதியைச் செலவிடுகிறது. கிராமப்புற வீதி அபிவிருத்தியின்போது பொதுமக்களின் பங்களிப்புக்களைப் பெறுவதன்மூலம் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும்.

கடந்த காலங்களில் அபிவிருத்திப் பணிகளுக்கு அச்சுறுத்தலாக இனங்காணப்பட்ட இடங்களுக்கு வடக்கின் வசந்தம் மற்றும் கிழக்கின் உதயம் வேலைத் திட்டங்களின் கீழ் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்காக இவ்வருடம் ஆகக்கூடிய நிதியாக 77,128 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க,  பிரதி அமைச்சர் டபிள்யூ.பீ. ஏக்கநாயக்க மற்றும் அமைச்சின் செயலாளர் அட்மிரல் வசந்த கரண்ணகொட ஆகியோருடன் தெற்கு அதிவேகப் பாதை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவுள்ள ஒப்பந்தக்காரர்கள் மற்றும் நிர்மாண கம்பனிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு 883 மில் ரூபா

nimal_siripala_de_silva.jpgஅக்கரைப் பற்று தள வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக 883 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் போஷாக்குத் தறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். அதன்படி குறிப்பிட்ட வைத்தியசாலையின் வார்ட்கள் தொகுதி,  விசாரணைக் கூடம் மற்றும் மருந்தகம் போன்றவற்றை அமைக்க 8 கோடியே 83 இலட்சத்து 88 ஆயிரத்து 996 ரூபா வழங்கப்பட உள்ளது.

தேசிய விவசாய வாரம் ஒக்டோபர் 11ஆம் திகதி ஆரம்பம்

images-padi.jpgதேசிய விவசாய வாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை பொலன்நறுவையில் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, தேசிய ஏர் பூட்டும் விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி வவுனியா, நெடுங்குளம் வயல்வெளியில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வுகள் தொடர்பாகக் கலந்துரையாடும் கூட்டமொன்று விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அண்மையில் வவுனியாவிலுள்ள விவசாயக் கல்லூரியில் நடைபெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘அரச துறை வெற்றிடங்கள் நிரப்புவதை அரசாங்கம் ஒருபோதும் நிறுத்தவில்லை’

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென பெருமளவிலான வேலைவாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் தேவைக்கேற்ப அரச துறையில் வேலைவாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்படும். அரசாங்கம் ஒருபோதும் அரசசேவைக்கு ஆட்சேர்பை நிறுத்தவில்லை என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜே. வி. பி. பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கா கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் நிகழ்த்திவரும் போராட்டம் தொடர்பாக கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் கூடியது. சபையின் வழமையான நடவடிக்கையின் பின்னர் ஜே.வி.பி. எம்.பி. அனுரகுமார திஸாநாயக்க விசேட அறிக்கையொன்றின் ஊடாக கேள்வியொன்றை முன்வைத்தார்.

இதற்கு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதிலளிக்கும் போது :-அரச துறையிலுள்ள வெற்றிடங்களை நிர ப்புவதை அரசாங்கம் ஒருபோதும் நிறுத்தி வைக்கவில்லை. வெற்றிடங்கள் ஏராளம் இருந்தாலும் வெற்றிடங்களை நிரப்புவதற்குரிய திறமையுள்ளவர்களை தெரிவு செய்வது கஷ்டமாகவுள்ளது.வெற்றிடங்கள் உள்ள பதவிகளுக்கு பட்டதாரிகளுக்கு பட்டம் பெற்றமைக்கு மேலதிகமாக வேறு தகைமைகள் தேவைப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு.

அரச துறைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு தமது கடமையை சரிவர செய்வதற்கும், தொழில்சார் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகிறது. 2004/2005 விண்ணப்பித்த அனைத்து பட்டதாரிகளுக்கும் அரசதுறையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஊடாக வேலைவாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் போது அந்தப் பகுதி களிலுள்ள பட்டதாரிகளுக்கு தகைமையடிப்படையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். இந்தப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களின் ஊடாக பெருமளவிலான நேரடியான, மறைமுகமான வேலை வாய்ப்புகள் ஏற்படும். 2004 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 57,764 பட்டதாரிகளுக்கு அரச துறையில் வேலைவாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப் பட்டுள்ளன என்றும் நிதி மற்றும் அரச வரு வாய்த்துறை அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

யாழ்.வைத்தியசாலையின் குறைபாடுகளை நீக்க ஏற்பாடு

jaffna-teaching-hospital.jpgயாழ்ப் பாணம் போதனா வைத்தியசாலையில் பல குறைபாடுகள் அவதானிக்கப்பட்டிருப்பதால் அதனை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சக்தி பிரதியமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.  யாழ்.வைத்தியசாலையைப் பார்வையிட்டபோது பல குறைபாடுகள் இருப்பதை அவதானித்துள்ளேன். இவை உடனடியாக மேற்கொள்ள வேண்டியதால் சுகாதார அமைச்சருடன் தொடர்பு கொண்டு செயல்படுத்தவுள்ளேன் எனத் தெரிவித்தார்.

அவசரமாக யாழ்.போதனா வைத்தியசாலையின் சகல பிரிவுகளும் வர்ணம் தீட்டி அழகுபடுத்த வேண்டியுள்ளது எனவும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ். தீவு பகுதியில் 6 இந்திய மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கின

இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றபோது காணாமற்போனதாக கூறப்படும் இந்திய மீனவர்கள் அறுவரின் சடலங்கள் இலங்கையின் வடக்கு கடலில் கரையொதுங்கியிருப்பதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார்.

நெடுந்தீவு மற்றும் ஊர்கா வற்றுறை பகுதிகளில் கடந்த 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையில் கரையொங்கிய ஆறு இந்திய மீனவர்களின் சடலங்களை கடற்படையினர் மீட்டிருப்பதாகவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார். இந்திய மீனவர்கள் ஏழு பேரைக் கொண்ட படகு கடலில் கடந்த வாரம் கவிழ்ந்துள்ளது.

இதனையடுத்து இம் மீனவர்கள் பற்றிய தகவல்கள் தெரியவரின் அறிவிக்குமாறு இந்திய பொலிஸார் எமக்கு அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து நாம் வடக்கு கடலில் கூடுதல் அவதானத்துடன் இருந்தோம். இதன்போதே கரையொதுங்கிய ஆறு சடலங்களும் மீட்கப்பட்டதாகவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார்.

இந்திய மீனவர்கள் அறுவரின் சடலங்களும் யாழ்ப்பாண வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இந்தியப் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட கடற்படை பேச்சாளர், சடலங்கள் குறித்த மேலதிக விடயங்களை இந்திய உயர் ஸ்தானிகராலயம் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கு முழுமையான ஓய்வூதியம்

mahinda_raajapakse11.jpg யுத்த நடவடிக்கைகளின் போது மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளினால் அல்லது சட்டத்தை செலுத்தும் போது அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கு முழுமையான ஓய்வூதியம் வழங்க அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. அரச பாதுகாப்பு. மக்கள் பாதுகாப்பு,  சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

அதன்படி படைத்தரப்பைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு 55 வயதில் கிடைக்கக்கூடிய சம்பளத்தையும் பெண் ஒருவருக்கு 45 வயதில் கிடைக்கக் கூடிய சம்பளத்தையும் மதிப்பீடு செய்து ஓய்வூதிய சம்பளத்தொகை நிர்ணயிக்கப்படவுள்ளது.

திருமணம் முடிக்காத நிலையில் கடமையிலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள் அதன் பின்னர் திருமணம் முடித்திருந்தால் அவரின் மனைவியையும் இதில் இணைத்துக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.

நெருக்கடி நிலை வழக்கு; முஷர்ரப் ஆஜராக வேண்டுமென்று ஆணை

பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்படுத்தி உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அதிரடியாக பதவி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அதிபர் முஷாரபை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த புதன்கிழமை ஆணை பிறப்பித்துள்ளது.

நெருக்கடி நிலை, நீதிபதிகள் பதவி நீக்கம் தொடர்பான தனது நடவடிக்கை குறித்து ஜுலை 29ல் நீதிமன்றத்தில் ஆஜராகி முஷாரப் தனது விளக்கத்தை அளிக்குமாறும் தலைமை நீதிபதி இப்திகர் செளத்ரி தலைமையிலான பெஞ்ச் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

முஷாரப் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்பதில்லை. தனது தரப்பில் வழக்கறிஞரைகூட ஆஜர்படுத்தி உரிய விளக்கத்தை அளிக்கலாம் என்றும் அந்த நோட்டீஸில் நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முஷாரப் அதிபராக இருந்த போது திடீரென நெருக்கடி நிலையை அமுல்படுத்தினார். இதற்கு உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி இப்திகர் செளத்ரி உட்பட நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் அனைவரையும் அதிரடியாக பதவி நீக்கம் செய்தார்.

இதையடுத்து ஜர்தாரி அதிபரானதும் அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் வலியுறுத்தலால் இப்திகர் கெளத்ரி உட்பட பதவிநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

இந்நிலையில் முஷாரப் தனது ஆட்சியில் எடுத்த நடவடிக்கை குறித்து இப்திகர் செளத்ரி தலைமையிலான பெஞ்ச், மறுஆய்வு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரிட்டனில் முஷாரப்: முஷாரப் தற்போது பிரிட்டனில் உள்ளார். அவர் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்வதற்காகச் சென்றுள்ளார். இதனால் அவர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.