வடக்கு, கிழக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென பெருமளவிலான வேலைவாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் தேவைக்கேற்ப அரச துறையில் வேலைவாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்படும். அரசாங்கம் ஒருபோதும் அரசசேவைக்கு ஆட்சேர்பை நிறுத்தவில்லை என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜே. வி. பி. பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கா கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் நிகழ்த்திவரும் போராட்டம் தொடர்பாக கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் கூடியது. சபையின் வழமையான நடவடிக்கையின் பின்னர் ஜே.வி.பி. எம்.பி. அனுரகுமார திஸாநாயக்க விசேட அறிக்கையொன்றின் ஊடாக கேள்வியொன்றை முன்வைத்தார்.
இதற்கு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதிலளிக்கும் போது :-அரச துறையிலுள்ள வெற்றிடங்களை நிர ப்புவதை அரசாங்கம் ஒருபோதும் நிறுத்தி வைக்கவில்லை. வெற்றிடங்கள் ஏராளம் இருந்தாலும் வெற்றிடங்களை நிரப்புவதற்குரிய திறமையுள்ளவர்களை தெரிவு செய்வது கஷ்டமாகவுள்ளது.வெற்றிடங்கள் உள்ள பதவிகளுக்கு பட்டதாரிகளுக்கு பட்டம் பெற்றமைக்கு மேலதிகமாக வேறு தகைமைகள் தேவைப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு.
அரச துறைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு தமது கடமையை சரிவர செய்வதற்கும், தொழில்சார் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகிறது. 2004/2005 விண்ணப்பித்த அனைத்து பட்டதாரிகளுக்கும் அரசதுறையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஊடாக வேலைவாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் போது அந்தப் பகுதி களிலுள்ள பட்டதாரிகளுக்கு தகைமையடிப்படையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். இந்தப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களின் ஊடாக பெருமளவிலான நேரடியான, மறைமுகமான வேலை வாய்ப்புகள் ஏற்படும். 2004 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 57,764 பட்டதாரிகளுக்கு அரச துறையில் வேலைவாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப் பட்டுள்ளன என்றும் நிதி மற்றும் அரச வரு வாய்த்துறை அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.