இறைமை, ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு எதிராக எவர் செயற்பட்டாலும் அவர்கள் தேசத்துரோகிகள்- பாராளுமன்றத்தில் பிரதமர்

pmsrilaka.jpgநாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயற்படுபவர்கள் எந்த தராதரத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தேசத் துரோகிகளாகவே கருதப்படுபவர்களென்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் சட்டத்தரணிகள் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 10 ஆம் திகதி வெளியாகியிருந்த செய்தி தொடர்பாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோசப் மைக்கல் பெரேரா பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே பிரதமர் விக்கிரமநாயக்க மேற்கண்வாறு கூறினார்.

ஜோசப் மைக்கல் பெரேரா தமது கேள்வியில்; பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவினால் சண்டேலீடர் பத்திரிகை மற்றும் அதன் மறைந்த ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க மீது தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில், பத்திரிகை சார்பாக ஆஜராண சட்டத்தரணிகள் நால்வரும் கறுப்பு அங்கி அணியும் தேசத் துரோகிகலென அவர்களது பெயர் குறிப்பிட்டு மேற்குறித்த தினத்தில் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நீதிமன்ற சுயாதீனம், சட்ட ஆதிக்கம் மற்றும் வழக்கொன்றில் சட்டத்தரணியொருவர் ஆஜராக இருக்கும் உரிமை போன்றன முழுமையாக மீறப்பட்டுள்ளன. இது சட்டத்தரணிகளுக்கு மட்டுமல்லாது மறைமுகமாக நீதிமன்றத்துக்கு விடுவிக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தலாகும் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்து பிரதமர் பேசுகையில்;  பாதுகாப்பு அமைச்சின் உத்தயோகபூர்வ இணையத்தளமானது ஒரு இலத்திரினியல் ஊடகமே. அதுவும் ஊடகத் துறையின் ஒரு அங்கமே. இதற்கும் ஊடகச் சுகந்திரம், உரிமை, பொறுப்பு என்பன இருக்கிறது. இவை அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கப்பட்டவையாகும். பிரஜைகளின் / பொதுமக்களின் அடிப்படை பொறுப்பு என்பனவற்றினூடாக வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புகளை பாதுகாக்க வேண்டியதும் சகலரினதும் கடமையாகும்.

இந்த பொறுப்புகளை பாதுகாக்கும் போது சாதாரண பிரஜையாக இருந்தாலும் சரி அல்லது சட்டத்தரணி, டாக்டர், வர்த்தகர் என எந்த தரத்திலானவர்களாக இருந்தாலும் சரி அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அடிப்படை பொறுப்புகளை பாதுகாக்கவும் கடைபிடிக்கவும் கடமைப்பட்டுள்ளவர்களாகவே இருக்கின்றனர். மேற்படி அடிப்படை பொறுப்புகள் அரசியலமைப்பின் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு என்பனவற்றின் ஊடாக உரித்தாக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், சட்டத்தரணி ஒருவர் தொடர்பாக நோக்கும் போது மேற்குறிப்பிடப்பட்ட அடிப்படை பொறுப்புகளுக்கு மேலதிகமாக அரசியலமைப்பின் ஊடாகவும், உயர் நீதிமன்ற சட்டங்கள் மூலமாகவும் அடிப்படை பொறுப்புகள், கடமைகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருகிறது. ஒருவர் சட்டத்தரணியாக பதவியேற்கும் போது செய்யப்படும் சத்தியப்பிரமாணத்தின் ஊடாகவும் இது குறிப்பிடப்படுகிறது. எனவே, அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு என்பனவற்றையும் பாதுகாக்க வேண்டியது சகல பிரஜைகளினதும் பொறுப்பாகும். அதை புறக்கணித்து செயற்படுபவர்கள் எந்த தரத்திலானவர்களாக இருப்பினும் அவர்கள் தேசத் துரோகிகளாகவே கருதப்படுவார்கள். இதன் பிரகாரம், பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் வெளியான விடயத்தில் தவறில்லை என்று தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *