அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இலங்கை – வியட்நாம் இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கைக்கும் வியட்நாமுக்குமிடையிலான பரஸ்பர இருதரப்பு ஒப்பந்தம் நேற்று வெளிவிவகார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.

வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவும் வியட்நாம் வெளிவிவகார அமைச்சர் டாவு வியட் ட்ரூங் ஆகிய இருவருமே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இருநாடுக ளுக்குமிடையிலான பரஸ்பர இருதரப்பு ஒப்பந்தம் முதன் முறையாக 2003 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது.

பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க 2006 ஆம் ஆண்டில் வியட்நாமுக்கு விஜயம் மேற்கொண்டதைய டுத்தும் இவ் வருடம் வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம அந்நாட்டுக்கு சென்று வந்ததை தொடர்ந்தும் ஒப்பந்தம் இரண்டாவது தடவையாக புதுபித்தல் சாத்தியமாகியிருப்பதாக அமைச்சர் போகொல்லாகம செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும்போது கூறினார்.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியட்நாம் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஒக்டோபர் மாதம் அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவிருப்பது இரு நாடுகளுக்குமிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமையுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சில் வைத்து நேற்று கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம், அரசியல், கலாசாரம், சமயம், மக்களுக்கிடையிலான தொடர்புகள் உள்ளிட்ட பரந்துபட்ட அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை வியட்நாமுடன் மேற்கொள்ளும் வர்த்தக நடவடிக்கைகளில் வருடத்துக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலாபமீட்டுகின்றது. இதனை 100 மில்லியன் அமெரிக்க டொலர்களாக்குவதை குறிக்கோளாக வைத்து வியட்நாம் வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு நடத்தியதாகவும் அமைச்சர் போகொல்லாகம குறிப்பிட்டார்.

பிராந்திய ரீதியாக இருநாடுகளுக்குமிடையிலான உறவு மேலும் பலப்படுத்தப்படுவதுடன் 70 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் மூடப்பட்ட வியட்நாம் தூதரகத்தை விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அதற்கான பூரண ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்குமென தான் உறுதி மொழிந்ததாகவும் அமைச்சர் சொன்னார்.

அங்கு செய்தியாளர் மத்தியில் கருத்து தெரிவித்த வியட்நாம் வெளிவிவகார அமைச்சர்; இரு நாடுகளுக்குமிடையிலான உறவு குறித்து விளக்கியதுடன் தமது தூதரகத்தை விரைவில் கொழும்பில் மீளத் திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் கூறினார்.

இலங்கை ஜனாதிபதி எதிர்வரும் ஒப்டோபரில் எமது நாட்டுக்கு வருகை தரவிருப்பது இலங்கையுடனான எமது உறவில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகுமெனவும் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூன்றாம் கட்டம் 2011 ஆம் ஆண்டு வியட்நாமில் வைத்து கைச்சாத்திடப் படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

தென் மாகாணசபைத் தேர்தல் வேட்பு மனு 21 முதல் 28 வரை தாக்கல்

election000.jpgதென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரையும் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தென் மாகாணத்தில் உள்ள காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்ட செயலகங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.

2008 ஆம் ஆண்டு தேர்தல் இடாப்பில் உள்ள வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தென் மாகாணத்தில் 17 இலட்சத்து 61 ஆயிரத்து 843 வாக்காளர்கள் உள்ளனர். இதில் காலி மாவட்டத்தில்

7 இலட்சத்து 68 ஆயிரத்து 801 வாக்காளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 5 இலட்சத்து 78 ஆயிரத்து 856 வாக்காளர்களும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 4 இலட்சத்து 21 ஆயிரத்து 156 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

இதேவேளை, தென் மாகாண சபையில் போட்டியிடும் அரச தரப்பினர் மற்றும் அரசியல் கட்சிகள் தமது பிரசார வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.

இராக்கில் இரு கார் குண்டுத் தாக்குதலில் 40 பேர் பலி

000000.jpgஇராக்கின் தலைநகர் பாக்தாதிலும் வடபுற நகரான மொசூலிலும் நடந்த இரு வெவ்வேறு கார் குண்டுத் தாக்குதல்களில், நாற்பது பேர் கொல்லப்பட்டதோடு, இருநூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஒன்றன் பின் ஒன்றாக சில நிமிட இடைவேளையில் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. மொசூலுக்கு அருகே நடந்த தாக்குதல், ஷியா இன சிறுபான்மை மக்கள் வாழும் ஒரு கிராமத்தில் பல வீடுகளை அழித்துள்ளது. பாக்தாதிலும், ஷியா பிரிவினர் வாழும் பகுதியே இவ்வாறு குறி வைத்து தாக்கப்பட்டுள்ளது.

இராக்கிய அமைச்சர் ஒருவர் இது குறித்து கருத்து வெளியிடும் போது, இது அல் கயீதாவின் கைவரிசை என்று குறிப்பிட்டுள்ளார். வன்முறைகள் அதிகரித்திருந்தும் கூட, அமெரிக்கப் படைகள் நகர் புறங்களிலிருந்து வெளியேறிய பின்னரும் தமது பாதுகாப்பை தம்மால் கவனிக்க முடியும் என்று இராக்கிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் என்று அம்னெஸ்டி கோரிக்கை

இலங்கையின் வடபகுதியில் அரசாங்கம் நடத்தும் இடைத் தங்கல் முகாம்களில், வைக்கப்பட்டுள்ள சுமார் மூன்று லட்சம் தமிழ் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை அகற்றப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது.

இந்த முகாம்களை திறந்து விடுங்கள் என்று பெயரிடப்பட்டுள்ள பிரச்சார இயக்கம் ஒன்றை தொடங்கி வைத்து, இந்த அமைப்பின் அதிகாரிகள் பேசும்போது, இந்த முகாம்களிலுள்ள மக்கள் வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இவை உண்மையில் தடுப்பு முகாம்கள்தான் என்று சுட்டிக் காட்டியுள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையில் இடம் பெற்ற கடைசி கட்ட போரின் போது, சுமார் மூன்று லட்சம் தமிழர்கள் தமது இருப்பிடங்களை இழந்தார்கள்.

இலங்கை அரசு இது பற்றி குறிப்பிடும் போது, இவர்கள் தமது இருப்பிடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படும் முன்னர், விடுதலைப் புலிகளின் போராளிகள் அடையாளம் காணப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

“எப்படியும் வெற்றிபெறுவதை’ அரசாங்கம் நிறைவேற்றிவிட்டது – மாவை சேனாதிராஜா

election000.jpgயாழ்ப் பாணத்தில் 80 சதவீதமான மக்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்பதும் ஆனால், “எப்படியும் வெற்றி பெறும்’ என்ற அறிவிப்பை அரசாங்கம் நிறைவேற்றியிருப்பதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; யாழ். மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்குமான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றுள்ள நிலையில், வவுனியா நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருப்பது ஆறுதல் தரும் செய்தியாகும்.

யாழ்ப்பாணத்தில் 18.26 வீத வாக்குகளே பதியப்பட்டுள்ளன. ஒரு இலட்சத்து நாலாயிரம் வாக்காளர்களில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டிருக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களிடம் தேசிய அடையாள அட்டை இல்லை. இராணுவத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளே இருந்துள்ளன. இதனால் அவர்களால் வாக்களிக்க முடியவில்லை. 81.74 வீத மக்கள் இத்தேர்தலில் பங்குபற்றவில்லை என்பது கவனிக்க வேண்டிய விடயமாகும்.

கரையோரப் பகுதி மக்கள் இராணுவத்தினால் அன்றைய தினம் காலை கடலுக்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டு வாக்களிக்க அனுப்பப்பட்டதாகச் செய்திகள் வந்துள்ளன. தேர்தலில் 18.26 வீதத்திற்கும் குறைவான வாக்குகள் பதியப்பட்டமைக்கு மக்களிடம் ஏற்பட்டிருந்த அச்சம், பீதி மட்டுமல்ல மனவிரக்தியும் அதனால் ஏற்பட்ட தேர்தலில் ஈடுபாடற்ற தன்மையும் ஒரு காரணமாகும்.

அரசின் அதிகார பலம், இராணுவத்தின் தொடர்ச்சியான பிரசன்னமும் நடமாட்டமும், அமைச்சர்கள் தொடர்ச்சியாகத் தேர்தல் காலங்களில் யாழ்ப்பாணம் வந்து அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பல்கலைக்கழகம் முதலான பல துறைசார் அரச ஊழியர், மாணவர்களை நிர்ப்பந்தமாக அழைத்து நடத்திய கூட்டங்களில் சலுகைகளை அறிவித்து வந்தமை, தேர்தலில் அரசுக்கு ஆதரவளிக்காவிட்டால் மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுமென அறிவுறுத்தப்பட்ட அச்சம் மற்றும் அரசாங்கத்தில் முழு வளங்களும் இத்தேர்தலில் பாவிக்கப்பட்டுள்ளமை, அதற்கும் மேலாகப் புத்தளம் போன்ற இடங்களில் இடம்பெயர்ந்த மக்களில் 47 வீதமான வாக்குகள் பதியப்பட்டமையும், அரசாங்கக் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 10,600 வாக்குகளைப் பெறுவதற்கு காரணிகளாகும். அத்துடன் தேர்தலில் அரசு வெற்றி பெறாவிட்டால் தமக்கு ஆபத்து ஏற்படுமென மக்கள் அச்சமுற வைக்கப்பட்டிருந்தனர்.

அரசாங்கம் திட்டமிட்டவாறு, எதிர்பார்த்தவாறு தமிழ் மக்கள் பெருமளவில் வாக்களிக்கவில்லை என்பது வெளிப்படை. எப்படியும் அரசு வெற்றிபெறும் என்ற அறிவிப்பை அரசு நிறைவேற்றியுள்ளது. ஆனால், உண்மையில் அரசு எதிர்பார்த்த அளவுக்குத் தமிழ் மக்களிடம் வெற்றி பெறவில்லை. யாழ்ப்பாணத்தில் 18.26 வீத வாக்களிப்பையும் வவுனியாவில் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்று ஆளுங்கட்சிக் கூட்டமைப்பு மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டமையும் தமிழ் மக்களிடம் ஆளும் கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதை நிரூபிப்பதாயுள்ளது.

எவ்வாறெனினும் வவுனியா நகர சபைத் தேர்தலில் எமது வேட்பாளர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு மக்களும் அச்சுறுத்தப்பட்டிருந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெற வைத்தமைக்காக அங்குள்ள மக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதியப்பட்டுள்ளன. பல இடங்களில் எமது மக்கள் தேர்தலில் அக்கறை காட்டாது வாக்களிக்காமல் இருந்தமை ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இத்தனை மனிதப் பேரவலம், அடக்கு முறைச் சூழல், அச்சம் நிலவிய போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களுக்கு இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கிழக்காசியாவில் பாரிய சூறாவளி 10 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு – 13 பேர் பலி

கிழக்காசியாவில் திங்களன்று வீசிய பாரிய சூறாவளியால் தாய்வான், ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் கரையோரங் களிலிருந்து 10 இலட்சம் பேர் வெளியேறியுள்ளனர்.

ஜப்பானில் வீசிய கடும் சூறாவளி மற்றும் கனமழை காரணமாக 13 பேர் பலியாகினர். இன்னும் பெருந்தொகையானோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்களை உடனடியாக மீட்கும் பொருட்டு ஆயிரம் படை வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். இரண்டாயிரம் பேர் வெள்ளத்தி லிருந்து மிட்கப்பட்டு தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை ஜப்பான், சீனா, தாய்வான் ஆகிய நாடுகளில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டது.

வேகமாக வீசிய காற்றில் மரங்கள், வீட்டுக் கூரைகள், மின்கம்பிகள் என்பன நிலத்தில் விழுந்தன. பின்னர் பெய்த கடும் மழையால் கட்டடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்தன. வீதியால் சென்ற வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

தலை நகர் டொக்கியோவின் சில பகுதிகளும் இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன. சரிவு ஏற்பட்டதில் சுமார் 450 வீடுகள் சேதமடைந்தன. 180 கி. மீற்றர் வேகத்தில் காற்று வீசியது. இடிபாடுகளுக்குள் சில பேர் சிக்கியுள்ளதால் தேடும் பணிகள் துரிதமாக்கப்பட்டுள்ளன.

காணாமல் போனோரைத் தேடவென விசேட படகுச் சேவைகளும் நடத்தப்படுகின்றன. கிழக்காசியாவில் வீசிய இந்தப் பாரிய சூறாவளி வெள்ளம் என்பன தாய்வான், சீனா ஆகிய நாடுகளையும் தாக்கியது.

இடம்பெயர்ந்தோருக்கான உணவுகள், குடிபானங்கள், இருப்பிடங்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை தொண்டர் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. வெள்ள நீர் வடியும் வரை இயல்பு நிலை பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறு அரசாங்கம் அறிவித்ததையடுத்து தாய்வான், ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் பத்து இலட்சம் பேர் வெளியேறியதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பு – யாழ் சொகுசு பஸ் சேவை – கட்டணம் 1000 ரூபாவென அமைச்சு அறிவிப்பு

bus_luxury.jpgகொழும் புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான சொகுசு பஸ் சேவை விரைவில் ஆரம்பிக்கப்டும் என்றும் அதற்கான ஒரு வழிக் கட்டணமாக 1000 ரூபா அரவிடப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது, அத்துடன் யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய நகரங்களுக்கும் சொகுசு பஸ் சேவையினை ஆரம்பிக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டுவருவதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு யாழ் சொகுசு பஸ் சேவை கொழும்பு – மதவச்சி, மதவச்சி – யாழ்ப்பாணம் என இரு கட்டங்களாக நடத்தப்படும் என்றும் முதல் கட்டமாக ஐந்து சொகுசு பஸ் வண்டிகள் சேவையிலீடுபடுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ9 வீதியூடான சேவை பதிவை மேற்கொள்ள கோரிக்கை

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையில் லொறிப் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கான பதிவுகளை யாழ்.வணிகர்கழகம் மேற்கொள்ளவுள்ளது.
இதுவரை லொறி உரிமையாளர்கள் தமது பதிவினை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தில் செய்யாதிருந்தால் இன்று திங்கட்கிழமை அதற்கான பதிவை மேற்கொள்ளுமாறு யாழ்.வணிகர் கழகம் வேண்டியுள்ளது.

யாழ் மாநகரசபைக்கு ஐந்து முஸ்லிம்கள்

election000.jpgயாழ் மாநகரசபைக்கு ஐ. ம. சு. முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் நான்கு ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது.  சுயேட்சைக் குழுவாக போட்டியிட்ட சுபியான் மௌலவி 1779 விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார். இதன்படி முஸ்லிம்கள் ஐவர் யாழ். மாநகரசபைக்குத் தெரிவாகியுள்ளனர்.

யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபையில் ஐ. ம. சு. முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐந்து ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது. யாழ். மாநகர சபைக்கு அ. இ. மு.கா. சார்பாக போட்டியிட்ட நான்கு வேட்பாளர்களும் வெற்றிபெற்றுள்ளதுடன், வவுனியா நகர சபைக்கும் ஒருவர் தெரிவாகியுள்ளார்.

இதன்படி,  வவுனியா நகர சபைக்கு எம். எஸ். எம். பாரி என்பவர் தெரிவாகியுள்ளார். இவர் பெற்ற விருப்பு வாக்கு 2270 ஆகும்.

யாழ். மாநகர சபைக்கு தெரிவாகியுள்ள முஹம்மது மீரா சாஹிப் முஹம்மது ரமீஸ் 1338 விருப்பு வாக்குகளையும்,  முஹம்மது மீராசாஹிப் முஸ்தபா 1029 விருப்பு வாக்குகளையும், பதூர்தீன் அஸ்கர் ரூமி 979 விருப்பு வாக்குகளையும்,  அஜ்மயின் அஸ்பர் 960 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதேவேளை வவுனியா நகர சபைக்கு மு. கா. உறுப்பினர் ஒருவரும் தெரிவாகியுள்ளார். 587 வாக்குகளை மாத்திரமே பெற்ற மு. கா வுக்கு இந்த ஒரு  ஆசனம் கிடைத்துள்ளது.

யாழ். மாநகர சபைக்கு சுயேட்சைக் குழுவாக போட்டியிட்ட சுபியான் மௌலவி 1779 விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார். யாழ். மாநகர சபைக்கு வாக்களிக்க தகுதி பெற்றிருந்த சுமார் 6000 இடம்பெயர்ந்த முஸ்லிம் வாக்காளர்களில் 70 வீதமானோர் தேர்தலில் வாக்களித்துள்ளனர

முஸ்லிம் பெயரில் புலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரி கொழும்பில்!

lady00000.jpgபுலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரியொருவர்  பொய்யான தகவல்களை சமர்ப்பித்து கொழும்பு நகருக்குள் பிரவேசித்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான  ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

1985 ஆம் ஆண்டு ஒக்டோபர் 09 ஆம் திகதி பிறந்த அப்துல் சலாம் பாத்திமா யெஸ்மின் என்னும் பெயரில் நடமாடும்  தற்கொலைப் படையைச் சேர்ந்த இந்தப் பெண் உறுப்பினர் தற்போது பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் தேடப்பட்டு வருகின்றார்.

இவர் கொழும்பு 12,  பழைய சோனகத்தெருவை வசிப்பிடமாகக் கொண்டிருப்பதாக அவருடைய தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பெண்ணினது தேசிய அடையாள அட்டை இலக்கம் 857835641எ யாகும். இவர் பற்றிய தகவல் தெரிவோர் பொலிஸ் தலைமையகத்துடன் 011-2421111 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் அல்லது பயங்கரவாத தடுப்புப் பிரிவுடன் 011-2321839,  011-2451636,  011-2384401 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனும் அல்லது குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்துடன் 011-2320141 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் அல்லது கொழும்புப் பொலிஸின் அவசர நடவடிக்கைப் பிரிவின் 011-2243333 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு தகவல்களை அறியத்தருமாறு தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.