அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஊவா மா.ச. முதலமைச்சர் 20ஆம் திகதி சத்தியப் பிரமாணம்

shasendrakumararajapaksa.jpgஊவா மாகாண சபை முதலமைச்சராக சசேந்திர ராஜபக்ஷ எதிர்வரும் 20ஆம் திகதி சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளதாக ஊவா மாகாண சபை வட்டாரங்கள் இணையத் தளம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளன.

ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்ட கதிர்காம தேவாலயத்தின் தியவதன நிலமே சசேந்திர ராஜபக்ஷ 1 லட்சத்து 36 ஆயிரத்து 697 வாக்குகள் பெற்று முதலமைச்சர் பதவிக்குத் தகுதி பெற்றுள்ளார். இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சகல மாவட்டங்களையும் தனதாக்கி அமோக வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பாலாவியில் 1 கோடியே 38 லட்சம் ரூபா செலவில் புதிய தபாலகம் – அமைச்சர் பீரிஸ் திறந்து வைப்பு

புத்தளம் பாலாவியில் 1 கோடி 38 லட்சம் ஷரூபா செலவில்; நிர்மாணிக்கப்பட்ட புதிய தபாலகத்தை வெளிநாட்டு ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் பதில் தபால், தொலைத் தொடர்புகள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று திறந்து வைத்தார்.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தபாலகத்தைத் திறந்து வைத்து உரை நிகழ்த்திய அமைச்சா பீரிஸ் நாட்டில் பயங்கரவாதம் நிலவிய போது,  எவ்வித அபிவிருத்திகளையும் செய்ய முடியாத நிலை காணப்பட்டது. இன்று அவற்றை அழித்து அபிவிருத்திகளை ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார் எனக்கூறினாh.;

புத்தளம் மிகவும் முக்கியமான பிரதேசமாகும். மன்னார், மற்றும் ஏனைய முக்கிய வடமாகாண பகுதிகளுக்குப் பயணம் செய்யக் கூடிய பாதைகள்; இங்கிருந்து செல்கின்றன. புலிகளின் சர்வதேச தலைவர் பத்மநாதனும் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமைத்துவமற்ற அமைப்பாக இன்று புலிகளின் அமைப்பு மாறிவிட்டது. இனி அவர்களுக்கு விமோசனம் இல்லை. புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.மு.தசநாயக்கவை கொன்றதும் புலிகளே. இம்மாவட்ட மக்களுக்குப் பெரும் பணியாற்றிய நல்லதொரு தலைவர் த.மு.தசநாயக்க” என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார்.

இருபது குடும்பங்களுக்கான காணி உறுதிகளையும் அமைச்சர் இந்நிகழ்வில் வழங்கினார். கால்நடை வளத்துறை பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸின் அழைப்பின் பேரில் அமைச்சர் இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இதில் கடற்தொழில் பிரதி அமைச்சர் நியோமல் பெரேராவும் கலந்து கொண்டார்.

யாழ். குடாவில் நான்கு நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு முற்றாக நீக்கம்

jaffna_8.jpgவரலாற் றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இன்று செவ்வாய்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான நான்கு நாட்களுக்கு யாழ் குடாநாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு முற்றாக நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.பி.டி சில்வாவிடம்  சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடாந்த திருவிழாவில் பெருமளவு பக்தர்கள் பங்கேற்கவுள்ளதால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இரத்மலானைக்கும் பலாலிக்கும் இடையே நடைபெற்று வரும் உள்ளுர் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் ரூபவாஹினி தொலைக்காட்சி நிலையம் என்பன இரதோற்சவத்தையும் தீர்த்தத்திருவிழாவையும் நேரடி ஒலி ஒளிபரப்பு செய்யவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக இடைத் தேர்தலில் 65% வாக்குகள் பதிவு

தமிழகத்தில் தொண்டாமுத்தூர், இளையாங்குடி, கம்பம், ஸ்ரீவைகுண்டம், பர்கூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடந்து முடிந்தது. சராசரியாக 65 சதவீத வாக்குகளுக்கும் மேலாக பதிவாகியிருக்கலாம் என்று தெரிகிறது. ஐந்து தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. காலை முதலே அனைத்துத் தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது.

அதிமுகவின் தேர்தல் புற்ககணிப்புக்கு இடையே வாக்காளர்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

விறுவிறுப்பாக நடந்த வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. ஐந்து தொகுதிகளிலும் சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கும் எனத் தெரிகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் திட்டத்தை நிறைவுசெய்ய முன்வாருங்கள்: உருத்திரகுமாரன் : உருத்திரகுமாரனை நாடு கடத்தக் கோரும் இலங்கை

rudrakumaaran_voo.jpgஈழத்து தமிழ் பேசும் மக்களின் அதிஉயர் அரசியல்பீடமாக – உலகத் தமிழர்களின் நேரடி வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து – நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்தினை திடமாகவும் விரைவாகவும் முன்னெடுப்பதற்கு முன்வருமாறு அந்தத் திட்டத்தின் உருவாக்கச் செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் உலகத் தமிழ் அமைப்புகளுக்கு வேண்கோள் விடுத்துள்ளார்.  நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் திட்டச் செயற்குழுவின் சார்பாக அவர் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

“உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழர் அமைப்புக்கள் இந்தத் திட்டத்துக்கு தமது அதிகாரபூர்வ ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்கி வருவது இந்தத் திட்டத்துக்கு வலுச்சேர்த்து வருகிறது.

ஏற்கெனவே – பிரித்தானிய தமிழர் பேரவை, கனடியத் தமிழர் பேரவை, அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கம், சுவிஸ் தமிழர் பேரவை, பிரான்ஸ் தமிழீழ மக்கள் அவை, தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம், தமிழ் நாடு திராவிடர் பேரவை உட்பட பல அமைப்புக்கள் இந்தத் திட்டத்தின் வெற்றிக்காக தமது அதிகாரபூர்வ ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த அமைப்புக்களுக்கு எமது நன்றியினைத் தெரிவிக்கும் அதேவேளை, உலகளாவிய ரீதியில் இயங்கும் ஏனைய தமிழர் அமைப்புக்கள் எல்லோரிடமும் இந்தத் திட்டத்துக்கு ஆதரவினை வழங்குமாறும் எம்முடன் சேர்ந்தியங்க முன்வருமாறும் உரிமையுடன் வேண்டிக் கொள்கிறோம்.” என்று தெரிவிக்கும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையை நசுக்கி விடுவதற்கு சிறிலங்கா அரசு பகீரத முயற்சி செய்து வருவதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். தாயகத்தில் நமது தேசத்தின் மீது தான் நிலைநிறுத்தியுள்ள இராணுவ மேலாதிக்க நிலையின் மூலம் தமிழர் தேசத்தை அடிமைப்படுத்திவிடலாம் என்ற இறுமாப்புடன் செயற்பட்டுவரும் சிங்கள அரசு, தற்போது தனது இராணுவக் கொடும் கரங்களை சிறிலங்காவின் எல்லை தாண்டியும் விரித்துள்ளது. இதன் மூலம் புலத்தில் தமிழர் உரிமைப் போராட்டச் செயற்பாடுகளை நசுக்கிவிடலாம் என சிங்கள அரசு எண்ணுகிறது.

சிறிலங்கா அரசின் இராணுவ மேலாதிக்க நிலையுடனான அடக்குமுறைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் தாயகத்திலோ புலத்திலோ ஈழத்தமிழர் தேசம் அடிபணியப் போவதில்லை. தாயகத்தில் நமது மக்கள் தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புக்களாலும் இதனை வெளிப்படுத்த முனைகின்றனர். அண்மையில் நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மூலமும் மக்கள் இதனைத் தம்மால் இயன்றவரை வெளிப்படுத்தியுள்ளனர்.

புலத்தில் மக்களின் நேரடி வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து, ஈழத் தமிழர் தேசத்தின் அதிஉயர் அரசியல்பீடமாக அமையும் வண்ணம் நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்துக்கான செயற்பாடுகளை நாம் மிகவும் திடமாகவும் விரைவாகவும் முன்னெடுக்க உறுதிபூண்டுள்ளோம். நாம் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்ட வகையில், தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக போராடும் நமது ஜனநாயக உரிமையில் எவரும் தலையீடு செய்ய நாம் அனுமதிக்க முடியாது.

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டம் தொடர்பான விளக்கக் கோவை ஒன்றினை நாம் இம்மாத இறுதிக்குள் வெளியிடவுள்ளோம். இத்திட்டம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் உரிய விளக்கங்களை இக்கோவை கொண்டிருக்கும்.

ஒவ்வாரு நாட்டிலும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக நாடு தழுவிய ரீதியில் அமைக்கப்படும் செயற்குழு விபரங்களையும் நாம் விரைவில் வெளிப்படுத்தவுள்ளோம். இக்குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக சமூகத்தின் மத்தியிலும் நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்துக்கு ஆதரவு திரட்டி திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக உழைக்கும்.

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்தின் வெற்றிக்கு நம் ஒவ்வொருவரினதும் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானதாகும். இத்திட்டத்துடன் இணைந்து செயற்பட ஆர்வமுள்ளவர்களை எம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கிறோம்.

எம்முடனான தொடர்புகளுக்குரிய மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருத்திரகுமாரனை நாடு கடத்தக் கோரும் இலங்கை

gothabaya.jpgநாடு கடந்த தமிழீழ அரசை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் பிரபல வழக்கறிஞர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் உள்ளிட்ட மூன்று முக்கிய நபர்களை நாடு கடத்தக் கோரப் போவதாக இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.  இதுகுறித்து கொழும்பிலிருந்து வெளியாகும் லக்பிம நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- அமெரிக்காவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக ஜெயந்த ஞானக்கோன் செயல்பட்டு வந்துள்ளார். இவரது சகோதரரான சார்ள்ஸ் ஞானக்கோன் என்பவர் சிங்கப்பூரில் இருந்தபடி புலிகளுக்காக செயல்பட்டு வந்துள்ளார். இந்தத் தகவல்களை கைது செய்யப்பட்டுள்ள கே.பி. விசாரணையில் தெரிவித்துள்ளார். இவர்கள் தவிர விஸ்வநாதன் உருத்திரகுமாரன். இவர்கள் மூவரையும் நாடு கடத்துமாறு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு கோரிக்கை விட இலங்கை அரசு தீர்மானித்துள்ளது என்றார்.

ஞானக்கோன் சகோதரர்களில் மூத்தவர் சார்ள்ஸ். இவரைத்தான் சில காலத்திற்கு முன்பு ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூரில் இரகசியமாக சந்தித்து புலிகளுடன் உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள முயன்றதாக ராஜபக்ச கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது.  ஜெயந்தா ஞானக்கோன் ஏர் சிலோனில் விமானியாக பணியாற்றியவர். மறைந்த ஜெயவர்த்தனவின் நண்பர் ஆவார். 1983ம் ஆண்டு இனக் கலவரம் வெடித்த பின்னர் இவர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர் ஜெயந்தா.

சார்ள்ஸ் ஞானக்கோன் ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர். கடந்த 2005ம் ஆண்டு லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவர். பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்.

விடுதலைப் புலிகளுக்காக பெருமளவில் துப்பாக்கிகளை விநியோகம் செய்து வந்தவர். இவர்கள் தவிர உருத்திரகுமாரன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர். சிறந்த சட்ட நிபுணர்.

இவர்கள் மூன்று பேரையும் இலங்கைக்கு நாடு கடத்தி கொண்டு வந்து விசாரிக்க இலங்கை அரசு தற்போது நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஆனால் அது எளிதாக இருக்குமா என்பது சந்தேகம் என்ற பேச்சு புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது.

நாலாயிரம் குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு

flood1111.jpgநாட்டின் பல பிரதேசங்களில் நேற்று முன்தினம் முதல் பரவலாகப் பெய்துவரும் மழை காரணமாக சுமார் நாலாயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இம்மழை காரணமாக இரத்தினபுரி, களுத்துறை, காலி, கேகாலை, கம்பஹா மாவட்டங்களின் வெவ்வேறு பிரதேசங்களில் தாழ்நிலங்கள் நீரில் மூழ்கி வெள்ள நிலைமையை ஏற்பட்டுள்ளன. சில பிரதேசங்களில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதால் பயணிகள் பஸ் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருப்பதுடன் அவ்வப் பிரதேச மக்களின் இயல்பு வாழ்வும் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் நேற்றுத் தெரிவித்தனர்.

இம்மழை காரணமாக ஏற்பட்டிருக்கும் வெள்ள நிலைமையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவென உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். இதேவேளை இம்மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கேகாலை மாவட்டத்தின் ஓரிரு இடங்களிலும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இம்மண்சரிவுகள் காரணமாக உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை. என்றாலும் சில இடங்களில் வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்ததாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இரத்தினபுரி மாவட்ட இணைப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் எஸ். எம். பி. பி. அபேரட்ன குறிப்பிட்டார்.

வளிமண்டலத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாகவே நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்து வருகின்றது. இது தென்மேல் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி அல்ல என்று வானிலை அவதான நிலைய வானிலையாளர் பி. டி. ஆனந்த பெரேரா கூறினார்.

நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி பொலட்டகமவிலேயே அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்றும் அவர் கூறினார். மழை வீழ்ச்சி தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், பொலட்டகம 200.5 மி.மீ, குக்குலேகங்கை 182 மி. மீ, கெனியன் 143 மி.மீ, கினிதும 101.5 மி.மீ, இரத்தினபுரி 127 மி.மீ, நேபொட 127 மி.மீ. நோட்டன் 90 மி.மீ, லக்ஷபான 84 மி.மீ என்றபடி மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதே காலநிலை அடுத்துவரும் ஓரிரு தினங்களுக்குத் தொடர முடியும். இம்மழைக் காலநிலை காரணமாக மேல், தென், தென்மேற்கு, தென் கிழக்கு, வடக்கு, கிழக்கு கடற்பரப்புக்களிலும் மழை பெய்ய முடியும். இச்சந்தர்ப்பங்களில் கடலில் கொந்தளிப்பு நிலை ஏற்படலாம். அதனால் வடபகுதி கடலில் இந்த நாட்களில் முன்னெச்சரிக்கையோடு மீன்பிடித்தலில் ஈடுபடுவது அவசியம் என்றார்.

இதேநேரம் இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் மேலும் கூறுகையில், இரத்தினபுரி கலவான வீதியின் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெகோ இயந்திரங்களைக் கொண்டு வாகனப் போக்குவரத்துக்கென மண்மேடுகள் அப்புறப்படுத்தப்பட்டன. கலவான பொத்துபிட்டிய வீதியிலும் வடக்கு கினிமலே, கனேகல்லையிலும் மண்சரிவு ஏற்பட்டது.

குருவிட்ட பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கரங்கொட கிராம சேவகர் பிரிவில் கரங்கொட குடியேற்றத்தில் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு மண்சரிவு ஏற்பட்டது. இம்மண் சரிவு 75 அடிகள் வரை கீழ் நோக்கி ஏற்பட்டிருக்கிறது. இம்மண்சரிவு காரணமாக உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை. ஆனால் வீடொன்று மூடுண்டுள்ளது. இப்பிரதேசத்தில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இம்மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள நிலையால் கலவான பிரதேச செயலகப் பிரிவில் 259 குடும்பங்களும் அயகம பிரதேச செயலகப் பிரிவில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களும் குருவிட்ட பிரதேச செயலகப் பிரிவில் 1636 குடும்பங்களும் எலபாத்த பிரதேச செயலகப் பிரிவில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வெள்ள நிலையினால் கலவான பிரதேச செயலகப் பிரிவில் சுமார் 30 வீடுகள் சிறுசேதங்களுக்கு உள்ளாகியுள்ளன என்றார். இதேவேளை அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் கே. பி. ஏ. தர்மரட்ன குறிப்பிடுகையில், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவரப் பிரதேச செயலகப் பிரிவில் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் இருநூறுக்கும் மேற்பட்ட வீடுகள் சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர மற்றும் புளத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவுகளிலும், காலி மாவட்டத்தின் நெலுவ, தவளம எல்பிட்டிய, பத்தேகம பிரதேசங்களிலும் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பல பிரதேசங்களுக்கான வழமையான பயணிகள் வாகனப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.  கம்பஹா மாவட்டத்திலும் அதிக மழை பெய்து வருவதால் களனி கங்கை பியகமவிலும் அத்தகலு ஓயா கம்பஹா பிரதேசத்திலும் பெருக்கக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இம்மாதம் 23ஆம் திகதி 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை

examination_departmentsss.jpgஇவ் வருடத்தின்  5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் சனிக்கிழமை நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக  பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் பிள்ளைகளுக்கு பெற்றோர் சாதகமான சுழலை ஏற்படுத்திக்கொடுக்குமாறும்,  பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தாது வினாப்பத்திரத்திற்கு அவர்கள் சுயமாக விடையளிப்பதற்கு தயார் செய்யுமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வருடம் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3 லட்சம்  மாணர்கள் தோற்றவுள்ளனர் எனவும்  ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். 

டெக் 115 கண்காடசியில் தொழிற் சந்தை!

piyasena_gamage.jpgகொழும்பு மருதானை தொழில் நுட்பக் கல்லூரியில் நாளை 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள டெக் 115 கண்காட்சி ஊடாக தொழில் சந்தை ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில் மற்றும் தொழில் நுட்ப பயிற்சி அமைச்சர் பியசேன கமகே 19 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 2;30 க்கு இந்தக் கண்காட்சியை வைபவ ரீதியாக திறந்து வைக்க உள்ளார்.

இந்தக் கண்காட்சியும் தொழில் சந்தையும் தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை நடைபெற உள்ளது.

மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு நாளை

இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களை துரிதமாக சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவது தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு நாளை (19) மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெறும்.

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்தும் இங்கு ஆராயப்படவுள்ளதோடு வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்தும் இங்கு கவனிக்கப்பட உள்ளதாக பிரதி மாவட்ட செயலாளர் திருஞானசம்பந்தர் கூறினார்.

இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் சுமார் 2,52,000 பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை 180 நாட்களுக்குள் மீள்குடியேற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

படுக்கையில் இணங்க மறுக்கும் மனைவியை பட்டினிபோட கணவனுக்கு அனுமதி – ஆப்கானிஸ்தானில் புதிய சட்டம்

ஆப்கானிஸ்தானில், கணவன் உடலுறவுக்கு அழைக்கும்போது மறுக்கும் மனைவியை அக்கணவன் பட்டினிபோடுவதற்கு அனுமதிக்கின்ற ஒரு புதிய சட்டம் அரசிதழில் (வர்த்தமானி) பிரசுரமாகியுள்ளதன் மூலம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலே சிறுபான்மை இனமாக உள்ள ஷியா மக்களின் குடும்ப வாழ்க்கை சம்பந்தமானது இந்த புதிய சட்டம்.

இந்த ஆண்டில் முன்னதாக இதற்கான மசோதா விவாதத்துக்கு வந்தபோது சர்வதேச அளவில் எதிர்ப்பு உணர்வலைகள் தோன்றியிருந்தன. அதனால் மசோதாவை அதிபர் கர்சாய் விலக்கிக்கொள்ள வேண்டி வந்திருந்தது.

ஆனால் தற்போது அமலுக்கு வந்துள்ள இம்மசோதாவின் மாற்று வடிவமும் பெண்களை பெருமளவில் ஒடுக்குவதாகவே அமைந்திருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சில நாட்களில் ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பழமைவாத ஷியா மக்களின் ஆதரவை பெற வேண்டும் என்பதற்காக ஆப்கானியப் பெண்களை விலைகொடுத்துவிட்டார் அதிபர் ஹமீத் கர்சாய் என்று விமர்சகர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.