அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

புனித நோன்பு பெருநாள் இன்று

friday-of-ramadan-2010.jpgஹிஜ்ரி 1431 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களில் தென்பட்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டதை அடுத்து ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாள் இன்று (10) வெள்ளிக்கிழமை கொண்டாடுவதென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா ஆகியன இணைந்து உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளன.

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு நேற்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெற்றது.

மூதூர், கிண்ணியா, சிலாவத்துறை, புல்மோட்டை போன்ற பிரதேசங்களில் தலைப்பிறை கண்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டதை அடுத்து கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக் குழுத் தலைவர் மெளலவி ஏ. டபிள்யூ. எம். ரியாழ் (பாரி), அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா தலைவர் மெளலவி எம். ஐ. எம். ரிஸ்வி முப்தி ஆகியோர் ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை அறிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை

0010.jpgபுனர் வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகராவின் ஆலோசனைக்கு ஏற்ப யாழ்ப்பாணத்தில் 272 மில்லியன் ரூபா செலவில் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் 1000 கைதிகள் தங்கக் கூடிய வசதி கொண்ட புதிய சிறைச்சாலை ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் கலப்பு முறையில்…

athaulla.jpgஉள்ளுராட்சி மன்ற தேர்தல்களை பழைய முறை உட்படுத்தப்பட்ட கலப்பு முறையில் நடத்துவதற்கான சட்டம் இயற்றுவதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

உள்ளுராட்சி மன்றங்கள் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

அதன்படி மூன்றில் ஒரு வீதம் விருப்பு வாக்கு அடிப்படையிலும் மூன்றில் இரண்டு பழைய முறைப்படியும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன.

18வது திருத்தம்

logo.jpg* எந்த ஒரு நபரும் இரண்டு தடவைகள் மட்டுமே பதவி ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் என்பதை நீக்குதல்

* ஜனாதிபதி மூன்று மாதத்துக்கு ஒரு முறை பாராளுமன்றத்துக்கு வரும் வகையில் வழி செய்தல்

* அரசியலமைப்புச் சபைக்குப் பதிலாக “பாராளுமன்ற சபை” ஒன்றை உருவாக்குதலும் அதன் செயற்பாடுகளை இலகுவாக்குவதும்

* அமைச்சரவை மற்றும் அரச சேவைகள் ஆணைக்குழு என்பவற்றின் அதிகாரங்கள் செயற்பாடுகள், பொறுப்புக்கள் மீளமைக்கப்பட்டு அதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் களையப்படும்.

* பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதிலாக பொலிஸ் மா அதிபர் உட்பட பொலிஸார் ‘அரச சேவைகள்’ என்ற கட்டமைப்புக்குள் கொண்டு வரப்படுவர்.

* தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் மீளமைக்கப்படும்.

6 உறுப்பினர்களையும் கட்சியில் இருந்து இடைநிறுத்த ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம்

unp_logo.jpgஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட 6 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சியில் இருந்து இடைநிறுத்த கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுதவிர அரசியலமைப்பு சீர்திருத்ததிற்கு ஆதரவாக வாக்களிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உபேக்சா சுவர்ணமாலி, நிமல் விஜேசிங்க, லக்ஷ்மன் செனவிரட்ன,  அப்துல் காதர், மனுஷ நாணயக்கார ஏர்ல் குணசேகர ஆகிய அறுவரையுமே இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

மக்கள் மனதை அறிந்து செயற்படும் மதிநுட்பம் ரணிலுக்கு கிடையாது – லக்ஷ்மன் செனவிரட்ன

laxman0000.jpgமக்களின் மனதை அறிந்து செயற்படும் மதிநுட்பம் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடையாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டமூல விவாதத்தில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்புச் செய்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு மறைமுகமாக ஆதரவளிப்பதாகவும் அவ்வாறென்றால் தாம் நேரடியாக ஆதரவளிப்பதில் என்ன தவறிருக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

18 ஆவது திருத்தச் சட்டமூலத்தினை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்ட லக்ஷ்மன் செனவிரட்ன, ஐக்கிய தேசிய கட்சி அதன் தலைவர் மீது அதீத நம்பிக்கை வைத்து அழிவைத் தேடிக்கொண்டது என்றார். 18 ஆவது திருத்தத்தை எதிர்த்து ஐ. தே. க. வெளிநடப்புச் செய்துள்ள போதிலும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன தலைமையிலான ஏழு உறுப்பினர்கள் நேற்று சபையில் அமர்ந்திருந்தனர்.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய செனவிரட்ன எம்.பி., மக்களின் நலனைச் சிந்தித்தே நான் இந்த முடிவை எடுத்தேன். தலைவர் ஒருவர் இல்லாமல் எந்த அமைப்பும் உருப்படாது. அதிபர் இல்லாத பாடசாலை, தலைவர் இல்லாத கட்சி எதுவும் சரிவரப் போவதில்லை. தலைவர்கள் அதிகம் இருந்தாலும் சிக்கல்தான் ஏற்படும்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் சிந்தனை இடதுபக்கம் சமிக்ஞை போட்டு வலதுபக்கம் பயணிக்கும் போக்கினைக் கொண்டவர். ஜனாதிபதியுடன் அவர் எதனைப் பேசி இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாரோ தெரியவில்லை. விவாதத்திலிருந்து விலகியது எமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர் மறைமுகமாக அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குகிறார். அதனால் நாம் வெளிப்படையாகவே ஆதரிக்கின்றோம்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்திருந்தால், அவரும் இந்தத் திருத்தத்தை நிச்சயம் மேற்கொண்டிருப்பார். அவரது தனிப்பட்ட பிழையான முடிவுகளால் கட்சி அழிந்துவிட்டது. இந்தத் திருத்தம் அவசரமாக மேற்கொள்ளப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார்.  போர் நிறுத்த உடன்படிக்கையை ரகசியமாக செய்த எமக்கு இன்று அவ்வாறு கேள்வி எழுப்ப எந்த அருகதையும் கிடையாது. மக்களுக்கு சேவை செய்தால் மட்டும்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறை வெல்ல முடியும். இல்லாவிட்டால் ரணில் விக்கிரமசிங்க வெல்லமுடியும். இதனை எல்லாம் அவருக்குச் சொல்லிப் புரியப் போவதில்லை’ என்றார்.

மீண்டும் மேர்வின் சில்வா பிரதி அமைச்சராக சத்தியப்பிரமாணம்

mervin0000.jpgகளனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா பெருந்தெருக்கள் பிரதியமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதியமைச்சர் பதவிக்கான நியமனக் கடிதம் நேற்று மாலை பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் தெரிவித்தார்.

18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் – ஆதரவாக 161 வாக்குகள், எதிராக 17 வாக்குகள். ஐ.தே.க வாக்களிக்கவில்லை.

parliment.jpg18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குப்பலத்துடன் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. திருத்தத்திற்கு ஆதரவாக 161 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் 8 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் செனவிரட்ன, அப்துல் காதர், மனுஷ நாணயக்கார, ஏர்ல் குணசேகர, உபேக்சா சுவர்ணமாலினி, நிமல் விஜேசிங்க,  பீ திகாம்பரம், பிரபா கணேஷன், ஜே. ஸ்ரீ ரங்கா ஆகியோர் உள்ளடங்குகின்றனர். .

இதேவேளை 18 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 10 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் 07 பாராளுமன்ற உறுப்பினர்களுமாக மொத்தம. 17 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.ஐ.தே.க வாக்களிக்கவில்லை.

ஆறு எதிர்கட்சி உறுப்பினர் அரசுடன் இணைவு

unp_logo.jpgபாராளு மன்றத்தில் அரசியல்யாப்பு திருத்தம் தொடர்பில் விவாதம் நடைபெற்ற வேளையிலே  எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல் காதர், உபேக்சா சுவர்ணமாலி, மனுஷா நாணயக்கார, ஏல் குணசேகர, லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் நில்வலா விஜயசிங்க ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இவர்கள் அரசிற்கு 18 ஆவது அரசயல்யாப்பு திருத்தம் தொடர்பில் மாத்திரம் தமது கட்சிகளில் இருந்து ஆதரவளிப்பதாக கூறியமை குறிப்பிடத்தக்கது. 

நடிகர் முரளி மரணம்

08-murali.jpgதமிழ் திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளா நாயகனாக நடித்துவந்த முரளி(46) இன்று சென்னையில் நெஞ்சுலியால் மரணமடைந்தார். முரளியின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

1984ம் ஆண்டு பூவிலங்கு வெளியானபோது அதில் நாயகனாக அனல் பறக்க வசனம் பேசி நடித்த முரளி, தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். 1984ல் தொடங்கிய முரளியின் நடிப்பு பயணம் 2002ம் ஆண்டு வரை நிற்காமல் படு பிசியாக போய்க் கொண்டிருந்தது.

08-2muralai.jpgபூவிலங்கைத் தொடர்ந்து பகல் நிலவு படத்தில் மணிரத்தினத்தின் கையால் குட்டுப்பட்டு பண்பட்ட நடிப்பைக் காட்டினார் முரளி. ஆக்ரோஷமாகவும் நடிக்க முடியும், பக்குவப்பட்ட நடிப்பையும் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தார் இப்படத்தின் மூலம். தொடர்ந்து பல படங்களில் நடித்த முரளிக்கு பெரும் ஏற்றத்தையும், அவரை ஒரு ஸ்டார் நடிகராகவும் உயர்த்திய படம் விக்ரமனின் புது வசந்தம். அவரது திரையுலக வாழ்க்கையில் அது ஒரு முக்கிய மைல் கல். அதைத் தொடர்ந்து மிகவும் பிசியான நடிகராக உயர்ந்தார் முரளி.
சேரன் இயக்கத்தில் முரளி நடித்த பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு ஆகிய இரு படங்களும் முரளியின் நடிப்புத்திறமையை மேலும் பளிச்சிட வைத்த அருமையான படங்கள். சுந்தரா டிராவல்ஸில் இவரும், வடிவேலுவும் செய்த காமெடிக் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலங்க வைத்ததை மறக்க முடியாது.

ஆனந்தம் படமும் முரளியின் அருமையான நடிப்பை வெளிக் கொண்டு வந்த படங்களில் ஒன்று.. தமிழ் சினிமாவின் ஆர்ப்பாட்டமில்லாத, அதேசமயம் ஏராளமான வெள்ளி விழா படங்களைக் கொடுத்த மிகச் சிறிய நடிகர்களில் முரளியும் குறிப்பிடத்தக்கவர். எந்த நிலையிலும் அவர் தலைக்கணம் பிடித்து நடந்ததில்லை. பந்தா செய்ததில்லை. தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் மதித்து நடந்தவர்.

2001ம் ஆண்டு பாரதிராஜாவின் கடல் பூக்கள் படத்திற்காக சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதைப் பெற்றார் முரளி. கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்காக தேர்தல்  பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கடைசியாக முரளி நடித்த படம் அவரது மகனின் முதல் படமான பாணா காத்தாடிதான். அதற்கு முன்பு அவர் நடித்த படமான கவசம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ள நிலையில் அகால மரணத்தை சந்தித்துள்ளார் முரளி. முரளியின் மனைவி ஷோபா. இந்தத் தம்பதிக்கு மகன் அதர்வா தவிர காவ்யா என்ற மகள் உள்ளார்.

மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தி செய்தியாளர்களிடம் முரளி பேசிய வார்த்தை இது… நான் 30 வருடங்களா நடித்த காலத்தில் எத்தனையோ தவறுகளை செய்துள்ளேன். ஆனால் அதை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் பொறுத்துக் கொண்டு என்னை வாழ வைத்தனர்.எனவே தயாரிப்பாளர்களுக்கு மதிப்பு கொடு, நல்ல பெயரெடு, நல்ல நடிகராக உருவாகு, பணத்தை விட நல்ல படம் முக்கியம் என்பதையே எனது மகனுக்கு அறிவுரையாக கூறியுள்ளேன் என்றார் முரளி.