அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடும் காலி மாவட்ட வேட்பாளர் நிஷந்த மீண்டும் இன்று கைது

150909anarkali.jpgசுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரான நடிகை அனார்கலியின் காலி அலுவலகத்தை கும்பலோடு சென்று தாக்கிஇ சேதம் விளைவித்ததாக  தென் மாகாண சபை தேர்தலில் சுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடும் மற்றுமொரு காலி மாவட்ட வேட்பாளர் நிஷந்த முத்துஹேட்டிகம  மீது இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து தென் மாகாண சபை தேர்தலில் சுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடும் காலி மாவட்ட வேட்பாளர் நிஷந்த முத்துஹேட்டிகம இன்று மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்தும் பல வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதையடுத்துக் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் மெதிவக்க தெரிவித்தார்.

கடந்த வாரம் நிஷந்த காலி பிரதம மாஜிஸ்திரேட் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து அவரைக் கடுமையாக எச்சரித்த பிரதம மாஜிஸ்திரேட் நீதவான் 2 லட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதித்திருந்தார். இந்நிலையில், இன்று மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிஷந்தவை நாளை (22ஆந் திகதி) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அஸ்ஸாமில் கடும் நிலநடுக்கம்

அஸ்ஸாமில் இன்று பிற்பகல் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆகப் பதிவானதாக ஷில்லாங் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அஸ்ஸாமில் உள்ள இந்திய-மியான்மர் எல்லையில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், இன்று மதியம் 2.23 மணியளவில் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஸ்ஸாம் தலைநகர் கவுஹாத்திக்கு வடமேற்கே 125 கி.மீ தொலையில், பூமிக்கடியில் 7.2 கி.மீ ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.

ஒபாமா முன் ஐ.நாவில் உரையாற்றும் லக்னோ சிறுமி

21-yugrathna.jpgநியூ யார்க்கில் அமெரிக்க அதிபர்  ஒபாமா உள்ளிட்ட உலகின் 100 முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் சுற்றுப்புற சூழல் குறித்த ஐ.நா. மாநாட்டில் இந்தியாவை சேர்ந்த 13 வயது சிறுமி பங்கேற்றுப் பேசவுள்ளார். அவரது பெயர் யுக்ரத்னா ஸ்ரீவஸ்தவா. லக்னோவில் உள்ள புனித பிடலிஸ் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் நாளை நடக்கும் கூட்டத்தில் அவர் மூன்று கோடி இளம் குழந்தைகளின் சார்பாக புவி வெப்பமாதல் குறித்து பேசவிருக்கிறார்.ஐநாவின் சுற்றுப்புற திட்டமிடுதல் அமைப்பின் இளைஞர்களுக்கான அங்கமான துன்சாவின் இளம் ஆலோசகராகவும் இருக்கிறார் யுக்ரத்னா.

இந்த கூட்டத்துக்கு ஐநா பொது செயலாளர் பான் கி மூன் தலைமை தாங்குகிறார்.

ஜனாதிபதி நாளை வாகரைக்கு விஜயம்

slpr080909.jpgஐரோப்பிய யூனியனின் நிதி உதவியுடன் ரூபா 300 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட வாகரை மத்திய மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத் தொகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை வைபவ ரீதியாக திறந்து வைக்கவிருக்கின்றார். மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள இம்மகா வித்தியாலய திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை அங்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.

2004ஆம் ஆண்டு சுனாமியின் போது வாகரை மகா வித்தியாலயத்தின் கட்டிடத் தொகுதிகள் சேதமடைந்திருந்தன. சுனாமி மீள் கட்டுமான திட்டத்தின் கீழ் இவ்வித்தியாலய புனரமைப்பு பணிகளுக்கான உதவிகளை வழங்க ஐரோப்பிய யுனியன் முன்வந்திருந்தது.

புலம் பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் ஒத்துழைப்புடன் கல்வி அமைச்சு இணைந்து ஐரோப்பிய யுனியனின் நிதி உதவியில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாடசாலை கட்டிடத் தொகுதி,  நவீன தொழில் நுட்பத்துடன்,  மட்டக்களப்பு மாவட்டத்திலேயே முன்மாதிரி பாடசாலையாக அமைந்துள்ளது என ஐரோப்பிய யுனியன் தெரிவிக்கின்றது.

இம்மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 13 வரை கல்வி பயிலும் 700இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இதனால் பயன் பெறுவார்கள். முழுமையான வசதிகளுடன் நூலகம்,  விஞ்ஞான ஆய்வு கூடம், கணினி பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சிக் கூடங்களுடன் மொழி வள நிலையம்,  விளையாட்டு மைதானம் ஆகியன வித்தியாலயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வித்தியாலக் கட்டிடத் திறப்பு விழாவில் ஐரோப்பிய யுனியனின் இலங்கைக்கான தூதுவர் பேர்னாட் சவேஜ்கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்,  மத்திய தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் ஆகியோர் உட்படப் பலரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்

ஐ.நா. கூட்டத் தொடர் நாளை ஆரம்பம் – பிரதமர் ரட்னசிறி சனியன்று உரை

1509sri-lankan-prime-minister.jpgஐ. நா. பொதுச் சபையின் 64 ஆவது கூட்டத் தொடர் நாளை நியூயோர்க்கில் ஆரம்பமாகிறது. இதில் இலங்கையின் சார்பில் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தலைமையிலான உயர்மட்டக் குழு கலந்துகொள்ளும்.

பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க எதிர்வரும் 26ம் திகதி பொதுச் சபையில் உரையாற்றுவார். சர்வதேச சமாதானம்,  பாதுகாப்பு அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும் பல்லினத் தன்மையை உறுதிப்படுத்துவதும் எனும் தலைப்பில் பிரதமர் உரையாற்றுவார்.

இந்த விஜயத்தின்போது ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்தித்துப் பேசவுள்ள பிரதமர்,  நியூயோர்க்கில் ஆசிய சமூகத்தினரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

இலங்கை முன் உள்ள சவால்கள்: புலிகளின் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின் சமாதானத்தை உறுதிப்படுத்துதல் எனும் தலைப்பில் ஆசிய சமூகத்தினர் மத்தியில் பிரதமர் உரையாற்றுவார். பிரதமருடன் அமைச்சர் ரோஹித போகொல்லாகம மற்றும் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகளும் இந்த விஜயத்தின்போது கலந்துகொள்கின்றனர்

விடுதலை கோரி நளினி சாகும் வரை உண்ணாவிரதம்

nalini-111.jpgதன்னை விடுதலை செய்யக் கோரியும், தனது விடுதலை கோரிக்கையைப் பரிசீலிக்கும் சிறை ஆலோசனைக் குழுவை மாற்றி அமைக்கக் கோரியும் நளினி வேலூர் மகளிர் சிறையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் முருகன் தூக்குத் தண்டனை பெற்று ஆடவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கருணை மனு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி உயர்நீதிமன்றத்தை அணுகினார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக உரிய முறையில் பரிசீலிக்குமாறும், புதிய சிறை ஆலோசனைக் குழுவை அமைக்குமாறும் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி புதிய ஆலோசனைக் குழுவை அரசு அமைத்தது. ஆனால் அந்தக் குழுவை மாற்றியமைக்க வேண்டும். தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி நளினி சிறைக்குள் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார்.

ஐ.நா.சபையின் பிரதிநிதி கெலின் நாளை இலங்கை விஜயம்

210909walter-kalin.jpgஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதி வோல்டர் கெலின் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை இலங்கை செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு கிழக்கு இடம்பெயர் முகாம் நிலைமைகள் தொடர்பில் இந்த விஜயத்தின் போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
வவுனியா மெனிக்பாம் உள்ளிட்ட இடம்பெயர் முகாம்களுக்கு சென்று நிலைமைகளை அவர் நேரில் பார்வையிடுவார் என இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் இந்த விஜயத்தின் போது வோல்டர் கெலின் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா தெற்கு 1000 குடும்பங்களைச் சேர்ந்த 5320 பேர் – சொந்த இடங்களில் மீளக் குடியமர்வு – 48 சிங்கள குடும்பங்களும் குடியேற்றம்

210909va-re-set.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்த ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 5320 பேர் நேற்று சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டனர்.

தமது சொந்த இடங்களில் நேற்று மீள்குடியமர்த்தப்பட்டவர்களுள் 489 பேர் வவுனியா வடக்கு பகுதியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்த சிங்களவர் ஆவர்.  நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்த 1000 குடும்பங்களும் நேற்று மீள்குடியேற்றத்துக்காக வவுனியா தெற்கு பிரதேச செயலக பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந் நிகழ்வு நேற்று காலை 11 மணியளவில் வவுனியா கலாசார மண்டபத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ எம். பி. தலைமையில் நடைபெற்றது. 15 பஸ் வண்டிகளில் இவர்கள் நேற்று தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வவுனியா சைவப் பிரகாச வித்தியாலய மைதானத்திலிருந்து பஸ்கள் புறப்பட்டுச் சென்றன. இவர்களுக்கான உலர் உணவுகளை பசில் ராஜபக்ஷ எம். பி. வழங்கினார்.

வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் பிரம்மமடு, அருகம்புல்வெளி, பாவற்குளம் ஆகிய இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்த மேற்படி 489 சிங்களவர்களே மீண்டும் அவர்களது சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிகழ்வில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, வடக்கின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலக இணைப்பாளர் சந்திரா பெர்னாண்டோ, நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் டபிள்யூ. பீ. ஏக்கநாயக்க ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

செங்கல்பட்டு முகாமில் 40 இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்

தங்கள் மீதான வழக்குகளை விரைவாக முடித்து தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி செங்கல்பட்டு சிறப்பு முகாமில் நேற்று தொடங்கிய 40 அகதிகளின் உண்ணாவிரதம் இன்று 2வது நாளாக தொடர்ந்தது. இவர்களில் பலரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். தங்கள் மீதான விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்று இவர்கள் கோரி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக 20 அகதிகளும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

தங்கள் மீதான வழக்குகளை முடித்து, விடுதலை செய்து பிற முகாம்களில் தங்கியிருக்கம் தங்களது குடும்பத்தினருடன் சேர அனுமதிக்க வேண்டும் என செங்கல்பட்டு சிறப்பு முகாம் அகதிகள் கோரி வருகின்றனர். சமீபத்திலும் இதுபோன்ற போராட்டம் நடந்தது. இதையடுத்து சிலரை அரசு விடுதலை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய – பாலத்தீன தலைவர்களை ஒபாமா கூட்டாக சந்திக்கிறார்

210909_flatboyafp.jpgமத்திய கிழக்கு சமரச பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கமாக இஸ்ரேலியப் பிரதமர் பின்யாமின் நெதன்யாகு மற்றும் பாலத்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ் ஆகியோருடன் அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் கூட்டு சந்திப்பு ஒன்றை செவ்வாய்க்கிழமை நடத்தவுள்ளார்.

நியூயோர்க்கில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டம் நடக்கும் போது இந்தச் சந்திப்பும் நடக்கும். உடனடியாக இந்த விடயத்தில் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுவிடும் என்பது தொடர்பில் அனைத்து தரப்பும் நம்பிக்கையற்றே இருக்கின்றன.

இஸ்ரேலுக்கு அதிபர் அப்பாஸ் அவர்கள் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்களையும் செய்துவிடக் கூடாது என்று போட்டி பாலத்தீனக் குழுவான ஹமாஸ் எச்சரித்துள்ளது. அமெரிக்க சிறப்பு பிரதிநிதியான ஜோர்ஜ் மிட்சேல் அவர்கள் மத்திய கிழக்குக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் பகிரங்கமான முன்னேற்றங்கள் எதுவும் தெரியாததை அடுத்து, தற்போது இந்தச் சந்திப்பு நடக்கவிருக்கிறது.