அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

மீள்குடியேற்ற மக்களின் சுகாதாரம்; தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைக்கு வடக்கு ஆளுநர் உத்தரவு

chandrasiri_governer.jpgவடபகுதியில் மீளக்குடியமர்த்தப்படும் மக்களின் சுகாதாரத்தை பேணும் வகையிலும், மழை காலமாதலால் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி வடமாகாண சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

வவுனியாவிலுள்ள உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே ஆளுநர் இந்த பணிப்புரையை வழங்கினார். மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும், மீள்குடியேற்றம், அபிவிருத்தி உட்கட்டமைப்பு, நீர்ப்பாசனம், விவசாய நடவடிக்கைககளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் நேற்று வவுனியாவில் நடைபெற்றது.

மாந்தை மேற்கு பகுதியில் உடனடியாக 7000 வீடுகளை கட்டுவதற்கான துரித வேலைத்திட்டமொன்றையும் ஆரம்பிக்குமாறும் அதிகாரிக்கு பணிப்புரை விடுத்தார். அத்துடன் விவசாயம், சுகாதாரம், கல்வி, கூட்டுறவு, நீர்ப்பாசனம், நீர்வழங்கல், மின்சாரம், போன்ற சகல துறைகளிலும் கவனம் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

வடமாகாணத்திலுள்ள சகல அரச ஊழியர்களும் தத்தமது பிரதேசத்திற்கு திரும்பும் வகையில் போக்குவரத்து ஏற்பாடுகளும், அனுமதிகளும் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

மீளக்குடியமர்தப்பட்ட பகுதிகளிலுள்ள மக்கள், தமது பொருட்களை கொண்டு செல்வதற்காக கெண்டர் ரக 2 வாகனங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. அரச ஊழியர்களின் தேவைகளுக்கென 700 துவிச்சக்கர வண்டிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.

அடம்பன் மற்றும் திருக்கேதிஸ்வரம் ஆஸ்பத்திரிக்கு தாதியர் மற்றும் ஊழியர்கள் வந்து செல்வதற்கென துவிச்சக்கர வண்டிகளும் பெற்றுக் கொடுக்கப் படவுள்ளன. அத்துடன் இப்பகுதியில் டெங்கு, மலேரியா தடுப்புக்கென நடமாடும் நோய்த்தடுப்பு பிரிவொன்றும் ஏற்படுத்தப்படவுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

ஆளுநரின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் போது வடமாகாண பிரதம செயலாளர் வீ. சிவசாமி, கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதிஸ்வரன் உட்பட வடமாகாண அமைச்சுக்களின் செயலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நுரைச்சோலை மின் நிலைய 2ம் கட்ட பணிக்கு சீனா கடனுதவி

நுரைச்சோலை அனல் மின் நிலைய இரண்டாம் கட்டப் பணி சீன அரசின் 891 மில்லியன் டொலர் இலகு கடனுதவியுடன் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இரண்டாம் கட்டத்தின் கீழ் 600 மெகா வோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை நிதி, திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் நிலைய முதலாம் கட்டப் பணிகள் 2010ல் பூர்த்தி செய்யப்படவுள்ளது. இதன் மூலம் 300 மெகா வோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வுள்ளது. முதலாம் கட்டத்திற்கு 455 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் ஒத்திவைப்பு

janka.jpgஉள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார். 2010ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்குள் இரண்டு பிரதான தேர்தல்கள் நடாத்தப் படவிருப்பதால்தான் உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்க முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் பொதுத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும். இதேவேளை, ஜனாதிபதி தேர்தலும் நடாத்தப்படவுள்ளது. அதேநேரம், உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடையவிருக்கின்றது.

இவ்வாறான நிலையில் இரண்டு பிரதான தேர்தல்கள் எப்ரல் மாதத்திற்குள் நடைபெறவிருப்பதால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஏப்ரல் மாதம் முதல் ஒரு வருடத்திற்கு ஒத்தி வைப்பதற்கு முடிவு செய்துள்ளேன். இது விடயமாக கலந்துரையாடி வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு இறுதியாக 2005ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடாத்தப்பட்டது. அதன்படியே 2010ம் ஆண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நிறைவடைகின்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டப்படி உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒரு வருட காலத்திற்கு ஒத்திவைக்க அமைச்சருக்கு அதிகாரமுள்ளது.

கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் ஜோன் ஹோம்ஸ் சந்திப்பு

இலங்கை வந்துள்ள ஐ. நா. மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம். பி.க்கள் நேற்று சந்தித்து பேச்சு நடத்தினர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான என். ஸ்ரீகாந்தா, ஏ. செல்வம் அடைக்கலநாதன், திருமதி பத்மினி சிதம்பரநாதன், பி. அரியநேத்திரன், விலியம் தோமஸ் ஆகியோர் சந்தித்து பேச்சு நடத்தினர்.

நேற்றுக் காலை 10.30 மணி முதல் 11.15 வரையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மீளக் குடிய மர்த்தப்படும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உடனடி நிவாரணம், புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களின் பிரச்சினைகள் குறித்தும் பேச்சு நடத்தினர்.

தொடர் மழையால் 58,000 பேர் பாதிப்பு; 40 குடும்பங்கள் இடம்பெயர்வு

srilanka-today.jpgநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெய்துவரும் கடும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவு காரணமாக நேற்றுவரை 58,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

இவ்வனர்த்தங்களில் கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள் ளதுடன் கண்டி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து 40 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் மேற்படி நிலையத்தின் உயரதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பெய்துவரும் மழை தொடரும் எனவும் இரவு நேரத்தில் இடி, மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதால் மின்னலிலிருந்து பொதுமக்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.

பன்றிக் காய்ச்சல் – மத்திய மாகாண பாடசாலைகள் 23ம் திகதி முதல் காலவரையறையின்றி பூட்டு.

influenza-a.jpgஇதுவரை  பல உலக நாடுகளில் அச்சுறுத்தலாக இருந்து வந்த  இன்புளுயன்சா ஏ/ எச்1என்1 வைரஸ்  இலங்கையிலும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டது.  இலங்கையில் முதல் தடவையாக இன்புளுயன்சா ஏ/ எச்1என்1  நோய்த்தாக்கத்தின் காரணமாக  கண்டியைச் சேர்ந்த 16 வயது மாணவரொருவர்  நவம்பர் 04, 2009ஆம் திகதி  உயிரிழந்தார்.

தற்போது 10 பேர் அளவில், ஏ/ எச்1என்1  நோய்த்தாக்கத்தின் காரணமாக இறந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.  இதையடுத்து,  மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மத்திய மாகாணத்திலுள்ள 1470 பாடசாலைகளையும் 23ம் திகதி முதல் காலவரையறையின்றி மூடும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ஜனாதிபதிக்கு தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோரின் பிறந்த நாள் வாழ்த்து

18kishor.jpgதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

18kishor.jpg

யாழ் பல்கலைக்கழகத்துக்கு புதிய கட்டடம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழத்தின் பட்டப் பின்படிப்பு கல்விப் பீடத்துக்கு புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.
 
அதன்படி 42.35 மில்லியன் ரூபா செலவில் 600 சதுர மீற்றர் பரப்பளவில் இதற்கான மூன்று மாடிக் கட்டடம் அமைக்கப்படவுள்ளது.தற்போது இந்தப் பீடத்தில் சுமார் 600 மாணவர்கள் பட்டப் பின்படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓசனிக் வைக்கிங் இலங்கையரை இறக்கிவிட்ட பின் ஆஸி. திரும்புகிறது

Oceanic_Viking_Refugeesஅவுஸ் திரேலியாவின் சுங்கப்பிரிவுக் கப்பலான ஓசனிக் வைக்கிங்கிலிருந்து 36 பேர் 5 படகுகளில் நேற்று புதன்கிழமை காலை ஏற்றிச்செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தோனேசியாவின் பின்ரன் தீவிலுள்ள தஞ்ஜுன் பினாங்கிலுள்ள தடுப்பு நிலையத்தில் தங்கவைக்கப்படவிருப்பதாக ஏ.ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்தது.

இதற்கு முன்னர் இந்தோனேசியாவின் சிரேஷ்ட இராஜதந்திரியான டாக்டர் சுஜாத்மைக்கோ தலைமையிலான அதிகாரிகள் குழு கப்பலுக்கு சென்று புகலிடம் கோருவோர் தொடர்பாக பரிசீலனைகளை மேற்கொண்டது. கப்பலிலிருந்த இலங்கையரின் உடல் ஆரோக்கியம் மற்றும் ஆலோசனைகள் என்பன பரிசீலிக்கப்பட்டன. கப்பலிலிருந்து புகலிடம் கோருவோர் யாவரும் இறங்கிச் சென்றவுடன் ஓசனிக் வைக்கிங் இந்தோனேசியாவுக்கு திரும்பிச் செல்லவுள்ளது.

அகதிகளென்பது நிரூபிக்கப்பட்டால் சில மாதங்களில் இவர்கள் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படுவர் என்ற உறுதிமொழியை புகலிடம் கோரும் இலங்கையர் இப்போது ஏற்றுக்கொண்டதையடுத்து இந்தோனேசியாவின் தடுப்பு நிலையத்துக்கு அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

முப்படை வீரர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு!

முப்படை வீரர்களுக்கு விசேட கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சர் என்ற வகையில் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

அதன்படி குறிப்பிட்ட சில பிரதேசங்களில் கடமையாற்றும் படை வீரர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த 80 ரூபா முதல் 100 ரூபா வரையிலான நாளாந்த விசேட கொடுப்பனவுத் தொகை ஏனைய படைவீரர்கள் அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை முப்படை அதிகாரிகள் அனைவருக்கும் மாதந்தம் 1000 ரூபா விசேட மேலதிகக் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது. மேலும் அரச சேவையிலுள்ள அனைவருக்கும் வாழ்க்கைச் செலவு கொடுப்னவாக ஒரு மாதத்துக்கு 750 ரூபாவையும் ஓய்வுபெற்றவர்களுக்கு 375 ரூபாவையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற் கூறப்பட்ட கொடுப்பனவுகள் 2009 நவம்பர் முதல் அமுலுக்கு வருவதுடன் 2010 ஜனவரி முதல் வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.