அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சம்மாந்துறையில் 25 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு; விழிப்புடன் இருக்க எச்சரிக்கை

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் இதுவரை 25 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்னும் பலர் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் இதனையிட்டு பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக டெங்குக் காய்ச்சலை பரப்பப் கூடிய நுளம்புகள் பெருக்கமடையும் இடங்களை பொதுமக்கள் சிரமதானம் மூலமாக துப்புரவு செய்யுமாறும் வீடுகளில் காணப்படும் டயர், சிரட்டை, தகரடப்பா, குரும்பை மட்டை போன்ற நீர் தேங்கியிருக்கக் கூடிய பொருட்களை வீட்டின் சுற்றுப் புறச் சூழலிலிருந்து அகற்றி புதைத்து விடுமாறு அல்லது எரித்து விடுமாறு கேட்டுள்ளனர்.

இதேவேளை சம்மாந்துறைப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் காணப்படும் நுளம்புகளைக் கட்டுப்படுத்த சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை இது வரையும் புகை விசுறும் நடவடிக்கையினை மேற்கொள்ள வில்லையென இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு

police_logo.jpgஎதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதிலும் தேர்தல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

நாடு முழுவதிலுமுள்ள 488 பொலிஸ் நிலையங்களிலும் இந்தப் பிரிவு அமைக்கப்படுகிறது. அத்துடன் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்,  பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரை உள்ளடக்கிய 75 தேர்தல் நடவடிக்கை அலுவலகங்களும் இயங்கும் என குறிப்பிட்டார்

அத்துடன் பொலிஸ் நிலைய மட்டத்தில தேர்தல் முறைப்பாட்டுக்கென; 413 விசேட பிரிவுகளும் நிறுவப்படவுள்ளது.  மூன்று மட்டத்தில் நிறுவப்படும் விசேட கண்காணிப்பு நிலையத்தின் பணிகள் யாவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம், மாவட்ட பொலிஸ் அலுவலகம், பிரதேச பொலிஸ் நிலையம் என்ற மட்டத்தில் பணிகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

சத்துணவு நஞ்சாகியதில் 10 வயது மாணவி மரணம் – மேலும் 62 மாணவர் ஆஸ்பத்திரியில்

சத்துணவு விஷமாகியதால் பத்து வயது பாடசாலை மாணவி ஒருவர் மரணமடைந்துள்ளதாக மாத்தளைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மேலும் 62 மாணவர்கள் மாத்தளை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவை உண்டதையடுத்து மாணவர்கள் மயக்கமுற்றதாகவும் சிலர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இறந்துபோன மாணவி மாத்தளை பலாபத்வெல புத்தகோஸ சிங்கள மகா வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டில் கல்வி பயிலும் பத்து வயதுடைய தனஞ்சனி கமகே என பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் பலாபத்வெல புத்தகோஸ தொம்பவெல, கவட்டயாமுனை ஆகிய மூன்று பாடசாலை மாணவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாத்தளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலண்டன் இலங்கை வங்கியை உலகக் கிளைகளின் மேற்பார்வை வங்கியாக மாற்ற நடவடிக்கை

london.jpgஇலண்டனில் உள்ள இலங்கை வங்கிக் கிளையை வங்கியாக மாற்றியமைத்து அதனூடாக உலக நாடுகளில் கிளைகளைத் திறக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

‘இலங்கை வங்கி யூ. கே. லிமிடெட்’ என்ற பெயரில் இலண்டனில் ஆரம்பிக்கப்படும் இந்த வங்கியே உலக நாடுகளில் உள்ள இலங்கை வங்கிக் கிளைகளை நிர்வாக மேற்பார்வை செய்யும் என்று தெரிவித்த கலாநிதி விக்கிரமசிங்க, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் கிளைகளைத் திறக்க எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரி வித்த கலாநிதி விக்கிரமசிங்க, தற்போது இலண்டனிலிருந்து இலங்கை வங்கி ஊடாக மேற்கொள்ளப்படும் அனைத்துவித பணப்பரிமாற்றங்களுக்கும் கட்டணம் எதுவும் அறவிடப்படமாட்டாதென்றும் குறிப்பிட்டார்.

திருமலை மாவட்டத்தில் 4 மீன்பிடி இறங்குதுறைகள்

கிழக்கு மாகாணத்தில் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் நான்கு மீன்பிடி இற ங்குதுறைகளை இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனம் “யுனொ ப்ஸ்” அனுசரணையில் அமைக்கவுள் ளதாக கிழக்கு மாகாண மீன்பிடி அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கிண்ணியாவில் அண்ணல்நகர் மூதூரில் தக்வா நகர், குச்சவெளியில் சலப்பையாறு, பட்டிக்குடா ஆகிய இடங்களில் புதிய மீன்பிடி இறங் குதுறைகள் அமையப்பெறவுள்ளன. இதன் மூலம் பிரதேச மீனவர்கள் பெரிதும் நன்மையடைவர் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜெனரல் பொன்சேகாவின் அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு ஏற்றது உயர்நீதிமன்றம்

sarath.jpgஇராணுவப் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் சார்பில் அவரின் மனைவி அனோமா பொன்சேகா தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ள உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணை பெப்ரவரி 23 இல் இடம்பெறுமெனத் தெரிவித்திருக்கிறது.

சித்திரவதை, பலவந்தமாக கைதுசெய்யப்பட்டு தடுத்து வைத்தல் என்பனவற்றிலிருந்து விடுவிக்கப்படுவதற்கான உரிமையை அடிப்படை உரிமைகள் மனுவானது நாடி நிற்கிறது.மனு மீதான விசாரணையின் ஆரம்பகட்டமான “விசாரணை செய்வதற்கான அனுமதியை பிரதம நீதியரசர் அசோக டி சில்வா மற்றும் இரு உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய குழாம் வழங்கியுள்ளதாக பொன்சேகாவின் சட்டத்தரணிகளில் ஒருவர் தெரிவித்தார்.

இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டவேளை, நீதிமன்ற வளாகத்தைச் சூழ 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நீதிமன்ற வளாகத்திற்குள் செல்வோர் சோதனையிடப்பட்டனர். பாதிக்கப்பட்டவரால் இந்த மனுத் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவரின் மனைவியலேயே மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக்கூடாதென்று அரசாங்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி சமர்ப்பித்த ஆட்சேபனையை நீதிமன்றம் நிராகரித்ததுடன் பொன்சேகா சார்பல் அவரின் சட்டத்தரணிகள் முன்மொழிவுகளைச் சமர்ப்பில் அனுமதியளித்தது. நீதியரசர்கள் குழுவில் சிராணி பண்டாரநாயக்க மற்றும் சந்திரா ஏக்கநாயக்க ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஜெனரல் சரத் பொன்சேகாவின் அடிப்படை உரிமை மனுவைச் சமர்ப்பித்த அவரது மனைவியான அனோமா பொன்சேகாவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சிப்லி அகீஸ் உட்பட சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

இது இவ்வாறிருக்க எதிர்க்கட்சிகளின் சார்பில் வழக்கினைப் பார்வையிட ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இடதுசாரி முன்னணித் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன, சுனில் ஹந்துன் நெத்தி, விஜேய ஹேரத் ஆகியோர் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

உயர்நீதிமன்றத் தீர்ப்பையடுத்து ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்; எமது அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை எமக்குக் கிடைத்துள்ள முதலாவது வெற்றியாகும். நீதி எங்கும் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதை இது எடுத்துக்காட்டுகின்றது.தேர்தல் முடிவுக்கு எதிரான மனுவில் ஜெனரல் சரத் பொன்சேகா கையொப்பம் இடுவதற்கு சட்டத்தரணிகள் எந்நேரத்திலும் பார்வையிட அனுமதி கிடைத்துள்ளது. இதன் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை, உயர்நீதிமன்றம் மேற்கொண்ட தீர்மானத்தின் பின்னர் நீதிமன்ற வளாகத்திற்கு அப்பால் சட்ட உதவி ஆணைக்குழுவுக்கு முன்னால் உள்ள சந்தியிலிருந்து வாழைத்தோட்டப் பொலிஸ் சந்திவரை சட்டத்தரணிகள் ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி அமைதிப் பேரணியை நடத்தினர். இதில் இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இதில் தேசிய சட்டத்தரணிகள், சங்கத்தின் உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். இது இவ்வாறிருக்க, உயர் நீதிமன்றத்தின் விசாரணையைப் பார்வையிட உயர் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், மகிந்த சமரசிங்க ஆகிய அமைச்சர்கள் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறும்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கூச்சல்களை எழுப்பினர். இதையடுத்து பொலிஸாரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர்களும் அமைதி பேணுமாறு கோரியதையடுத்து அமைதி திரும்பியது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக மீண்டும் பிபிஸி!

bbc.jpgஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக பிபிஸியின் ஒலிபரப்பு மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வொலிபரப்பு தொடர்பாக இன்றுகாலை இரு தரப்பினரிடையே ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பாக அதன் தலைவர் ஹட்சன் சமரசிங்கவும் பிபிஸி சார்பாக அதன் தெற்காசிய பணிப்பாளர் மிஷைல் ரோபலும் கைச்சாத்திட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிபிஸியின் ஒலிபரப்பு நீண்டகாலமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக பரிவர்த்தனை ஒலிபரப்பு செய்யப்பட்டபோதும் கடந்தகால உள்நாட்டு மோதல்களின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக அது இடைநிறுத்தப்பட்டிருந்தது.

ஆயினும் தற்போது உள்நாட்டு மோதல்கள் அனைத்தும் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பிபிஸியின் ஒலிபரப்பு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாவிட்டால் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் – ஜனாதிபதி ரணிலிடம் தெரிவிப்பு

ranilmahinda.jpgஇராணுவச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சரத் பொன்சேகா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாவிட்டால் அவர் விடுதலை செய்யப்படுவார் என ஜனாதிபதி மஹிந்த ராஷபக்ஷ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்து முக்கியமாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று  சரத் பொன்சேகா சட்டத்திற்கு முரணாக கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்து அவரது மனைவி அனோமா பொன்சேகா தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை விசாரணைக்காக உயர் நீதி மன்றம்  இன்று ஏற்று எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது

அரசுக்கு ஆதரவாக இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

அரசாங்கத்துக்கு ஆதரவாக இன்று பிற்பகல் கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் பெரும்  ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின.

ஜனாதிபதியின் வெற்றியை குறைத்து மதிப்பிட்டு ஏளனம் செய்யும் எதிர்க்கட்சியின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையிலுள்ள 80 தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களும் பெருந்தொகையான பொது மக்களும்  இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர் என அறிவிக்கப்பட்டுள்ளது

பொன்சேகாவை 5 வருடங்களுக்கு சிறையில் வைத்திருக்க முடியும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ

gotabhaya.jpgதேசத் துரோகத்திற்காக உடனடியான இராணுவ நீதிமன்ற விசாரணையை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எதிர்கொள்வாரெனவும் அவரை ஐந்து வருடங்களுக்கு சிறை வைத்திருக்க முடியுமெனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டிருக்கும் பேட்டியொன்றிலேயே கோதாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்திருக்கிறார்.

இராணுவ ஆட்சியை அமுல்படுத்த பொன்சேகா திட்டமிட்டிருந்ததாகவும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் வேட்பாளராகப் போட்டியிட்டமைக்கு அமெரிக்கா,நோர்வே ஆதரவளித்திருந்ததாகவும் சிங்கப்பூரின் ஸ்ரெய்ட்ஸ் ரைம்ஸ் பத்திரிகைக்கு கோதாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக ஐஏஎன்எஸ் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடம் மே மாதம் விடுதலைப்புலிகளுக்கெதிரான யுத்தத்தின் போது பெற்ற இராணுவ வெற்றியில் பொன்சேகா முக்கிய பங்களிப்பை வழங்கியதாக அவர் உரிமை கோரியிருப்பதை கோதாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். “அவர் வெற்றியடைந்ததை நாங்கள் வேறு யாராவது தளபதி மூலம் செய்து முடித்திருப்போம். வேறு சிறப்பான அதிகாரிகளும் இருந்துள்ளனர  என்று கோதாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

இராணுவச் சட்டத்தின் கீழ் பொன்சேகா மீது நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் இராணுவத்திலிருந்து விலகிச் சென்ற ஆறு மாதங்களுக்குள் இராணுவச் சட்டத்தின் பிரகாரம் எந்தவொரு அதிகாரி மீதும் நடவடிக்கையெடுக்க முடியுமெனவும் அவர் கூறியுள்ளார். ஏனைய விடயங்களும் உள்ளன. சிவில் நடைமுறையின் கீழ் அவற்றை நாம் செய்வோம். சாட்சியங்களை ஒன்றுதிரட்டிய பின் உடனடியாக இராணுவ நீதிமன்ற விசாரணை ஆரம்பமாகும். இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஏனெனில், இது வழக்கறிஞர்களிலேயே தங்கியுள்ளது. ஆனால், இதனை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர நாம் விரும்புகிறோம். சில சமயம் ஆறு மாதங்களுக்குக் குறைவானதாகக் காலமெடுக்கக்கூடும். குற்றச்சாட்டுகளின் தன்மை மிகவும் கடுமையாக உள்ளது. அவரை ஐந்து வருடங்களுக்கு சிறைவைக்கக் கூடியதாகவும் இருக்கலாம் என்று கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

படைகளின் பிரதானியாக பதவி வகித்த காலத்தில் அரசியல்வாதிகளுடன் பொன்சேகா செயற்பட்டதாகவும் அது முற்றுமுழுதாகத் தவறானது என்றும் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். ஏனென்றால் பாதுகாப்புச் சபை கூட்டங்களில் அமர்ந்திருந்த அவர் அரசியல்வாதிகளுடன் தொடர்புபட்டிருப்பது தவறானதென்றும் இது துரோகத்தனத்தின் அளவைக் கொண்டதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் இராணுவ ஆட்சிக்குத் திட்டமிட்டிருந்தார். அரசியலை தனிமைப்படுத்திவிட்டு நாட்டை வேறுபட்ட பாதையில் கொண்டு செல்வதற்கு முயற்சித்தார். இராணுவத் தளபதியாக அவரிருந்த இறுதிக் கட்டங்களின் போது அவருடைய ஆட்களை கொழும்புக்குக் கொண்டுவர ஆரம்பித்திருந்தார். அவருடைய படை அணியை மற்றும் அவருடைய சிரேஷ்ட படையணி ஆட்களை சகல இடங்களிலும் அமர்த்தியிருந்தார். இந்த விடயங்கள் யாவும் இராணுவ சதிப்புரட்சியைப் போன்றதாகக் காணப்பட்டதென்றும் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அதேசமயம், மேற்குலகின் ஒரு பிரிவினர் பொன்சேகாவுடன் இணைந்து சதி செய்ததாக கோதாபய ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையின்போது போர்க்குற்றங்களை இழைத்ததாக ராஜபக்ஷ சகோதரர்களை மேற்குலகின் ஒரு பிரிவினர் குற்றஞ்சாட்டியிருந்தனர். “குறிப்பிட்ட நலன்களைக் கொண்டிருந்த மேற்குநாடுகள் அவருக்கு (பொன்சேகா) ஆதரவளித்தன என்பதில் நூறு சதவீதம் நாம் நம்புகின்றோம். அமெரிக்கா,நோர்வே போன்ற நாடுகள் அவரின் பிரசாரத்திற்காகப் பெருந்தொகை பணத்தைச் செலவழித்திருந்தன.

அரசாங்கத்திற்கு எதிராக எழுதுவதற்காக ஊடகவியலாளர்களுக்கு நோர்வே அரசாங்கம் கொடுப்பனவுகளை வழங்கியதற்கான ஆதாரத்தை நான் வைத்திருக்கின்றேன். அவர்கள் குறிப்பிட்ட நலன்களை வைத்திருந்தனர். தமிழ்ப் புலிகளுக்கு பல்வேறு வழிகளில் ஆதரவு வழங்கியிருந்தனர். அத்துடன், அரசாங்கத்தைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான முயற்சிக்கு பொன்சேகாவுக்கும் அவர்கள் ஆதரவளித்திருந்தனர் என்று கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பாக பொன்சேகாவை கோதாபய ராஜபக்ஷ தொடர்புபடுத்தியுள்ளார். “வேறு எவருமில்லை என்பதை நாமறிவோம்.சூழ்நிலைகளை நீங்கள் கண்டுகொள்ளலாம்.அவரையோ அல்லது நெருக்கமானவர்களையோ தவிர,வேறு எவரை விமர்சித்த எந்தவொரு ஊடகத்துறையினரும் இம்சிக்கப்படவில்லை. என்னையோ, ஜனாதிபதியையோ விமர்சித்தவர்களுக்கு எதுவும் நடந்திருக்கவில்லை. அவர் எவரைப் பயன்படுத்தினார் என்பதற்கான துப்பை நாம் வைத்திருக்கின்றோம். அதில் நாம் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். உண்மையில் எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஐந்து அல்லது ஆறு விடயங்களுக்கு திட்டவட்டமாக நிச்சயமாக அவர் பொறுப்பாகவிருந்தார். ஊடகத்துறையினர் சம்பந்தப்படுகின்ற ஐந்து அல்லது ஆறு விடயங்களில் அவர் நிச்சயமாக சம்பந்தப்பட்டிருந்தார். உண்மை மிக விரைவில் வெளிவரும் என்று கோதாபய ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.