அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஆசியாவின் சிறந்த நடிகை மாலினி பொன்சேகா

malani_fonseka.jpgஇலங் கையின் மூத்த நடிகை யான மாலினி பொன்சேகாவை ஆசியாவின் சிற ந்த நடிகைகளில் ஒருவராக சி. என். என். தெரிவு செய்துள்ளது. ஆசியாவின் 25 சிறந்த நடிக, நடிகையர் பட்டியலில் மாலினி பொன்சேகா இடம்பெற்றுள்ளார்.

சீனா, ஹொங்கொங், ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான், கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேஷியா மற்றும் கம்போடியா ஆகிய நாடுக ளில் இருந்து 25 சிறந்த நடிக, நடி கையர் இடம் பெற்றுள்ள இந்த பட்டியலில் அமிதாப் பச்சன், நர் கிஸ், குரு தத், பிரான், மீனாகுமாரி ஆகியோர் இந்தியாவின் சார்பில் தெரிவு செய்யப்பட்டவர்களாவர்.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதலாவது இலங்கை நடிகை மாலினி பொன்சேகா ஆவார்.

ஜனாதிபதியின் 2வது பதவியேற்பு நவம்பர் 18

gl_pereis.jpgநாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான பின்னணியை ஏற்படுத்துவதற்காக சகல சட்டங்களையும் நவம்பர் நடுப் பகுதிக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த சட்ட மூலங்கள் புதிய பாராளுமன்றம் கூடும் எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதிக்கும் ஜனாதிபதி இரண்டாவது தடவையாக சத்தியப்பிரமாணம் செய்யும் எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கடந்த 20 வருடங்களாக கிடைக்காதிருந்த அரிய சந்தர்ப்பம் இப்போது கிடைத்துள்ளது. இதன் உச்ச பயனை பெற்றுக் கொள்ளும் வகையில் பலதுறைகள் அடையாளங் காணப்பட்டு ள்ளன. இந்தத்துறைகளை அபிவிருத்தி செய்வதற்கான சகல சட்டங்களும் நிறைவேற்றப்பட்டு 5 வருட காலத்துக்குள் இந்த திட்டங்கள் செயற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (4) தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது:- பாராளுமன்றம் கூடியவுடன் முன்னுரிமை வழங்க வேண்டிய விடயங்கள் குறித்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு துரித திட்டங்களை முன்னெடுக்கவும் அதற்குத் தேவையான அனைத்து சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 18 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக் காலத்திற்காக சத்தியப்பிரமாணம் செய்யும்போது அபிவிருத்திக்கு தேவையான சகல சட்டங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கும்.

முன்னேற்றத்துக்கான துறைகளாக மின்சக்தி, எரிசக்தி, விவசாயம் முதலீடுகள், கல்வி உட்பட பல துறைகள் அடையாளங் காணப்பட்டுள் ளன. எதிர்வரும் காலங்களில் 2000 மெகா வாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது. நுரைச்சோலை அனல் மின் திட்டத்தினூடாக 3 கட்டங்களில் 900 மெகா வாட், கொத்மலை திட்டத்தின் மூலம் 150 மெகாவாட் கெரவலப்பிட்டிய மின் திட்டத்தின் மூலம் 300 மெகாவாட், சாம்பூர் மூலம் 500 மெகாவாட், மொர கஹகந்த மூலம் 80 மெகா வாட், உமாஓய மூலம் 140 மெகாவாட் மின்சாரம் கிடை க்கவுள்ளது. கிராமிய மட்டத்தில் ஆரம் பிக்கப்படவுள்ள கைத்தொழிற்துறைகளுக்கு மின்சக்தி பயன்பட உள்ளதோடு இதனூடாக பெருமளவு தொழில் வாய்ப்புகளும் கிடைக்கவுள்ளன. விவசாயத்துறை மேம்படுத்தப்படும். விவசாய கிராமங்கள் அமைக்கவும் உள்நாட்டு மூலப் பொருட்களுக்கு உரிய இடம் பெற்றுக் கொடுக்கவும் மின் வளத்தை முழுமையாக பயன்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அபிவிருத்தியின் பலனை நாட்டின் சகல பகுதிகளுக்கும் வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும். கல்வித்துறையை நவீனமயப்படுத்துதல், பாடத் திட்டங்களை தற்காலத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல் ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. கிராமங்களில் கணினி அறிவை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையை சுற்றியுள்ள எரிபொருள் வளங்களை ஆய்வு செய்து அவற்றை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இடம்பெயர் பறவைகள்: சைபீரியன் வாத்துக்களை வேட்டையாடிய 4 பேர் கைது

புத்தளம் நவதங்குளம் பகுதியில் சைபீரியன் வாத்துக்களை வேட்டையாடிய 4 நபர்களை முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாடுகளில் கடும் குளிர்காலத்தையிட்டு பறவைகள் அபயம் தேடி இலங்கை போன்ற நாடுகளுக்குள் இடம்பெயர்ந்து வருவதுண்டு.

இவ்வாறு சைபீரியாவிலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ள ஒருவகை வாத்துகள் (சைபீரியன் டக்) நான்கை சுட்டுக் கொன்றதாலேயே இவர்கள் நான்கு பேரும் கைதாகினர். வாத்துக்களை சுடுவதற்காக பயன்படுத்தியதாகக் கூறப்படும் 2 டபிள் பெரல் துப்பாக்கிகள், 12 போர் ரக 12 தோட்டாக்கள், டபிள் கெப் ரக வாகனமொன்று என்பவற்றை யும் முந்தல் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அபயம் தேடி வரும் வெளிநாட்டு பறவைகளை சுடுவதோ, வதைப்பதோ தண்டனைக்குரிய குற்றம் என்பதாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்க முடியும் – அட்வகேட் ஜெனரல் சமரகோன்

sucide.jpgஇராணுவ சட்டத்தின் 133வது பிரிவின் கீழ் இராணுவ நீதிமன்றம் ஒன்றினால் வாய்மூல எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர் ஒரு சந்தேக நபருக்கு மரண தண்டனை விதிக்க முடியுமென்று பாதுகாப்பு படைகளுக்கான முன்னாள் நீதிபதி அட்வகேட் ஜெனரல் ஓய்வுபெற்ற பிரிகேடியர் எம். ஜே. சமரகோன் தெரிவித்தார். இராணுவ நீதிமன்றம் குறித்து விளக்கமளிக்கும் விசேட சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றது. இதன் போது அவர் விபரிக்கையில்,

சேவையிலுள்ள ஒரு அதிகாரி அல்லது ஓய்வுபெற்ற அதிகாரி இழைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காகவே இராணுவ நீதிமன்றம் நியமிக்கப்படுகிறது. சிவில் நீதிமன்றத்தைப் போன்றே இராணுவ நீதிமன்றிலும் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும்.

இராணுவ சட்டம், இராணுவ ஒழுக்க விதிகள் மற்றும் இராணுவ நீதிமன்றம் என்பவற்றிற்கு அமைய இராணுவ பொலிஸாரால் கைது செய்ய முடியும். அதேபோன்று, ஒருவருக்கு எதிராக இராணுவ பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்படும் பட்சத்தில் அல்லது சேவையில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற ஒருவர் இராணுவ சட்டத்திற்கு முரணாக நடந்துள்ளார் என்பதை இராணுவ பொலிஸாரால் இனங் காணப்பட்டால் அவர்களை கைது செய்யும் அதிகாரம் இராணுவ பொலிஸாருக்கு உண்டு என்றார்.

ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரை ஆறு மாத காலத்திற்குள் இவ்வாறு கைது செய்யலாம். ஆனால், தேசத் துரோகம், இராணுவத்தை ஏமாற்றுதல் மற்றும் இராணுவத்திலிருந்து தப்பிச் செல்லுதல் போன்ற குற்றங்களை செய்த ஒருவரை எந்த நேரத்திலும் கைது செய்யலாம்.

இராணுவ நீதிமன்றம் மூன்று முதல் ஐந்து உறுப்பினர்களைக் கொண்டதாகும். முப்படைகளின் தளபதியே இதனை நியமிப்பார். குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் தரத்திற்கு சமமானவராகவும் தற்போது சேவையில் இருப்பவர் ஒருவரே இந்த நீதிமன்றத்திற்கு நியமிக்க முடியும். சமமான தரத்தைக் கொண்ட அதிகாரி ஒருவர் இல்லாத பட்சத்தில் அந்தத் தரத் தைவிட குறைந்த தரத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் நியமிக்க முடியும் என்றார்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டதும் அவருக்கு எதிரான சாட்சியங்க ளின் தொகுப்பு தயாரிக்கப்படும். இதற்குப் பல மாதங்களும் செல்லலாம். இதனை அடிப்படையாகக் கொண்டே இராணுவ நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்திய வெளியுறவுச் செயலர் நாளை இலங்கை வருகை

nirupama.gifஇலங் கையின் முன்னாள் இந்திய தூதுவரும், தற்போதைய இந்தியாவின் வெளியுறவுச் செயலாளருமான நிருபமாராவ் இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை சனிக்கிழமை கொழும்பு வருகின்றார். இந்தியாவின் வெளியுறவுச் செயலர் பதவியை ஏற்றபின்னர் அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும்.

பொதுத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள இந்தச் சமயத்தில் அவர் இங்கு விஜயம் செய்வதால் அவரது இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை, அதிகாரப் பரவலாக்கல் யோசனைத் திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு கொழும்புக்கு புதுடில்லி அழுத்தம் கொடுத்து வருகையில், இந்தியத் தூதுவரின் கொழும்பு வருகை இடம்பெறுகின்றமை முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இந்திய வெளிவிவகாரச் செயலரின் வருகை வழமையான இரு தரப்பு பரஸ்பர நலன் நோக்கிய உறவாடல் தொடர்பானதே என அதிகாரிகள் மட்டத்தில் கூறப்பட்டது.

அவுஸ்திரேலியா செல்ல முயற்சி: சிலாபம், உடப்பு இளைஞர்கள் 21 பேர் மட்டக்களப்பில் கைது

சட்ட விரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு செல்வதற்கு எத்தணித்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சிலாபம், உடப்பு பகுதியைச் சேர்ந்த 21 இளைஞர்கள் மட்டக்களப்பில் நேற்று கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

மட்டக்களப்பு, நாவலடி பகுதியில் கடற்கரையோரமாக அவர்களை ஏற்றிச் செல்வதற்கு வள்ளம் வரும் வரை காந்தி ருந்த சமயமே இவர்கள் 21 பேரும் கைதாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். சந்தேக நபர்கள் பயணம் செய்ததாக கருதப்படும் வேன் ஒன்று, கடல் வழிப்பாதையை கண்டறியக் கூடிய வரை படங்கள், உணவு வகைகள், பணம், உடைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு 234 ஆவது படையணியினரும் மட்டக்களப்பு பொலிஸாரும் இணைந்தே இவர்களை கைது செய்துள்ளனர். காத்திருந்தும் வள்ளம் வராத காரணத்தினால் நாளை புறப்படலாம் என்ற எண்ணத்தில் நாவலடி வீடொன்றினுள் இருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் வாக்கு முலங்களும் பெறப்பட்டன. உடப்பு கிராமத்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக சிலாபம் பொலிஸ் நிலையத்துக்கும் அறிவித்தல்கள் விடுக் கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செலாவணி கட்டுப்பாட்டை ரவி கருணாநாயக்க மீறினார் – பிரதி செலாவணி கட்டுப்பாட்டாளர் நீதிமன்றில் தெரிவிப்பு

ravi.jpgஅமெரிக்க நெக்ஸியா நிறுவனத்திடமிருந்து ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சரான ரவி கருணாநாயக்கவின் தனிப்பட்ட கணக்குக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைத்ததாக பிரதி அந்நிய செலாவணி கட்டுப்பாட்டாளர் சிசிரகுமார பெரேரா நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சரான ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் தீபானி விஜேசுந்தர முன்னிலையில் சாட்சியம் அளித்தபோதே பிரதி அந்நிய செலாவணி கட்டுப்பாட்டாளர் இவ்வாறு தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான ஏழு கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு தான் ரவி கருணாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

கருணாநாயக்கவும் மற்றும் இருவரும் தங்களிடம் 3 மில்லியன் அமெரிக்க டாலர்களை வைத்திருந்தனர்.  இது அந்நிய செலாவணி கட்டுப்பாட்டு விதிகளை மீறும் செயலாகும்.  இந்த அளவு அந்நிய செலாவணியை ஒருவர் வைத்திருக்க வேண்டுமாயின் அதற்கான அனுமதியை இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து பெற்றுக்கொள்ளவேண்டும். குறிப்பிட்ட இந்த வெளிநாட்டு பணம் யூனியன் வங்கியில் பங்குகளை கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்தப்படவிருந்ததாக பிரதி அந்திய செலாவணி கட்டுப்பாட்டாளர் நீதிமன்றத்தில் மேலும் கூறினார்.

சிரேஷ்ட அரச சட்டத்தரணி குறுக்கு விசாரணை செய்தபோது, இரண்டாவது குற்றவாளியாக இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள லின்டன் பியசேனவின் வாக்கு மூலத்தின்படி ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சரான ரவி கருணாநாயக்க இந்த கொடுக்கல் வாங்கல் பற்றி நன்கு தெரிந்திருந்தார் என்று பிரதி கட்டுப்பாட்டாளர் கூறினார்.

அத்துடன் வேரகல என்ற மற்றொருவரின் வாக்குமூலத்தின்படி அமெரிக்க நிறுவனமொன்றுக்கு ஊடாக யூனியன் வங்கியின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு ரவி கருணாநாயக்க அமெரிக்காவில் இருந்த இலங்கை வர்த்தகரான ராஜ் ராஜரட்னத்துடன் ஏற்பாடுகளை செய்திருந்ததாகவும் பிரதி கட்டுப்பாட்டாளர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வழக்கு விசாரணை இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தேர்தல் முடிவடையும் வரையில் காத்திராது அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்: ரணில்

ranil.jpgஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடையும் வரையில் காத்திருக்காமல் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியுள்ளார்.  தேர்தலின் பின்னர் அமைச்சர்களின் எண்ணிக்கையை 35 ஆக குறைக்க முடியுமாயின், தேர்தல் வரையில் காத்திராது அமைச்சர்களின் எண்ணிக்கையை தற்போதே குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகால சட்ட நீடிப்பு விவாதம் 9ம் திகதி – பாராளுமன்றம் வரும் எம்.பிக்கள் கோரினால் போதிய பாதுகாப்பு

parliament.jpgஅவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான நடவடிக்கைகளுக்காக பாராளுமன்றம் அடுத்த வாரம் கூடும் போது சபைக்கு வரும் எம்.பி க்கள் கோரினால் உரிய பாதுகாப்பினை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ் வாறு தெரிவித்தார். அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் :-

கடந்த மாதம் 5ம் திகதி அவசர காலசட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 8ம் திகதிவரை இதனை நீடிக்க வேண்டியுள்ளதால் பாராளுமன்ற நியதிகளின் படி பாராளுமன்றம் கூட்டப்பட்டு உரிய முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதற்கென பாராளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.

இதற்கிணங்கவே எதிர்வரும் 9ம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது. இதன் போது பாராளுமன்றத்திற்கு வருகை தரும் முன்னாள் எம்.பிக்கள் தமக்கான பாதுகாப்பைக் கோரினால் அதனைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கல்வியியற் கல்லூரி வினாத்தாள் திருட்டு விவகாரம்; பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டதால் ஒரு கோடியே 25 இலட்சம் நஷ்டம்

teacher.jpg“ஆசிரியர் பயிலுனர்களுக்கான இறுதிப் பரீட்சையை மீண்டும் நடத்தும் போது, அரசுக்கு ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம் செலவு ஏற்படுமென்று பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார். கல்வியியல் கல்லூரிகளின் ஆசிரிய பயிலுனர் மாணவர்களுக்கான இறுதிப் பரீட்சை ரத்துச் செய்யப்பட்டது தொடர்பாக பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகத்திடம் வினவிய போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், ரத்துச் செய்யப்பட்ட பரீட்சைக்கு அரசு ஒரு கோடியே பதினெட்டு இலட்சம் ரூபாவினை செலவி செய்திருக்கின்றது.  பரீட்சை வினாத்தாள் களவென்பது அரச சொத்து களவாடப்பட்டதற்கு சமமாகும். இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு கூடிய பட்ச தண்டனை வழங்கப்பட்டேயாக வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே, நான் இருந்து வருகின்றேன்.

இப்பரீட்சை இனி எப்போது நடைபெறுமென்று உறுதியாகக் கூறமுடியாது” என்றார். பொல்கலை, பிந்துனுவெவ கல்வியியல் கல்லூரிகளின் ஆசிரிய பயிலுனர் மாணவர்களது இறுதிப் பரீட்சையின் போதே வினாத்தாள் களவு ஏற்பட்டிருக்கின்றது.

இது தொடர்பாக, பண்டாரவளைப் பொலிஸாருக்கு செய்யப்பட்ட புகாரையடுத்தே, 33 ஆசிரிய பயிலுனர் மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதும், அவர்களை நீதிபதி எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார். பண்டாரவளையின் பிந்துனுவெவ ஆசிரியர் பயிற்சி கல்வியியல் கல்லூரி பீடாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகத்திற்குள் புகுந்த ஆசிரிய பயிலுனர் மாணவர்கள் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளுடனான மூன்று வினாத்தாள்களைத் திருடியது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்தே 33 பயிலுனர் மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதுடன் இறுதிப் பரீட்சையும் காலவரையறை இன்றி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.