“ஆசிரியர் பயிலுனர்களுக்கான இறுதிப் பரீட்சையை மீண்டும் நடத்தும் போது, அரசுக்கு ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம் செலவு ஏற்படுமென்று பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார். கல்வியியல் கல்லூரிகளின் ஆசிரிய பயிலுனர் மாணவர்களுக்கான இறுதிப் பரீட்சை ரத்துச் செய்யப்பட்டது தொடர்பாக பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகத்திடம் வினவிய போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், ரத்துச் செய்யப்பட்ட பரீட்சைக்கு அரசு ஒரு கோடியே பதினெட்டு இலட்சம் ரூபாவினை செலவி செய்திருக்கின்றது. பரீட்சை வினாத்தாள் களவென்பது அரச சொத்து களவாடப்பட்டதற்கு சமமாகும். இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு கூடிய பட்ச தண்டனை வழங்கப்பட்டேயாக வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே, நான் இருந்து வருகின்றேன்.
இப்பரீட்சை இனி எப்போது நடைபெறுமென்று உறுதியாகக் கூறமுடியாது” என்றார். பொல்கலை, பிந்துனுவெவ கல்வியியல் கல்லூரிகளின் ஆசிரிய பயிலுனர் மாணவர்களது இறுதிப் பரீட்சையின் போதே வினாத்தாள் களவு ஏற்பட்டிருக்கின்றது.
இது தொடர்பாக, பண்டாரவளைப் பொலிஸாருக்கு செய்யப்பட்ட புகாரையடுத்தே, 33 ஆசிரிய பயிலுனர் மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதும், அவர்களை நீதிபதி எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார். பண்டாரவளையின் பிந்துனுவெவ ஆசிரியர் பயிற்சி கல்வியியல் கல்லூரி பீடாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகத்திற்குள் புகுந்த ஆசிரிய பயிலுனர் மாணவர்கள் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளுடனான மூன்று வினாத்தாள்களைத் திருடியது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்தே 33 பயிலுனர் மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதுடன் இறுதிப் பரீட்சையும் காலவரையறை இன்றி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.