ஜனாதிபதியின் 2வது பதவியேற்பு நவம்பர் 18

gl_pereis.jpgநாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான பின்னணியை ஏற்படுத்துவதற்காக சகல சட்டங்களையும் நவம்பர் நடுப் பகுதிக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த சட்ட மூலங்கள் புதிய பாராளுமன்றம் கூடும் எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதிக்கும் ஜனாதிபதி இரண்டாவது தடவையாக சத்தியப்பிரமாணம் செய்யும் எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கடந்த 20 வருடங்களாக கிடைக்காதிருந்த அரிய சந்தர்ப்பம் இப்போது கிடைத்துள்ளது. இதன் உச்ச பயனை பெற்றுக் கொள்ளும் வகையில் பலதுறைகள் அடையாளங் காணப்பட்டு ள்ளன. இந்தத்துறைகளை அபிவிருத்தி செய்வதற்கான சகல சட்டங்களும் நிறைவேற்றப்பட்டு 5 வருட காலத்துக்குள் இந்த திட்டங்கள் செயற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (4) தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது:- பாராளுமன்றம் கூடியவுடன் முன்னுரிமை வழங்க வேண்டிய விடயங்கள் குறித்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு துரித திட்டங்களை முன்னெடுக்கவும் அதற்குத் தேவையான அனைத்து சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 18 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக் காலத்திற்காக சத்தியப்பிரமாணம் செய்யும்போது அபிவிருத்திக்கு தேவையான சகல சட்டங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கும்.

முன்னேற்றத்துக்கான துறைகளாக மின்சக்தி, எரிசக்தி, விவசாயம் முதலீடுகள், கல்வி உட்பட பல துறைகள் அடையாளங் காணப்பட்டுள் ளன. எதிர்வரும் காலங்களில் 2000 மெகா வாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது. நுரைச்சோலை அனல் மின் திட்டத்தினூடாக 3 கட்டங்களில் 900 மெகா வாட், கொத்மலை திட்டத்தின் மூலம் 150 மெகாவாட் கெரவலப்பிட்டிய மின் திட்டத்தின் மூலம் 300 மெகாவாட், சாம்பூர் மூலம் 500 மெகாவாட், மொர கஹகந்த மூலம் 80 மெகா வாட், உமாஓய மூலம் 140 மெகாவாட் மின்சாரம் கிடை க்கவுள்ளது. கிராமிய மட்டத்தில் ஆரம் பிக்கப்படவுள்ள கைத்தொழிற்துறைகளுக்கு மின்சக்தி பயன்பட உள்ளதோடு இதனூடாக பெருமளவு தொழில் வாய்ப்புகளும் கிடைக்கவுள்ளன. விவசாயத்துறை மேம்படுத்தப்படும். விவசாய கிராமங்கள் அமைக்கவும் உள்நாட்டு மூலப் பொருட்களுக்கு உரிய இடம் பெற்றுக் கொடுக்கவும் மின் வளத்தை முழுமையாக பயன்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அபிவிருத்தியின் பலனை நாட்டின் சகல பகுதிகளுக்கும் வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும். கல்வித்துறையை நவீனமயப்படுத்துதல், பாடத் திட்டங்களை தற்காலத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல் ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. கிராமங்களில் கணினி அறிவை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையை சுற்றியுள்ள எரிபொருள் வளங்களை ஆய்வு செய்து அவற்றை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *