::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

மதுரையிலும் போலீஸ்-வக்கீல்கள் மோதல்

சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும்  இடையே நடந்த வரலாறு காணாத மோதலை அடுத்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவலுக்கு நின்றிருந்த போலீசார்களை தாக்கி தங்களது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டனர்.பதிலுக்கு போலீசாரும் திருப்பி தடியடி கொடுத்தனர். நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதனால் மதுரையில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

சுவாமியை கைது செய்யக் கோரி வக்கீல்கள் ரகளை- ஹைகோர்ட் காவல் நிலையம் எரிப்பு- நீதிபதிக்கும் அடி

_swamy_.jpgஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியைக் கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெளியே வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அது பெரும் கலவரமாக மாறியது. போலீஸாரும், வக்கீல்களும் கடுமையாக மோதிக் கொண்டனர். ஒரு நீதிபதி உள்பட பலர் படுகாயமடைந்தனர்.

ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்திற்கு வந்தபோது வக்கீல்கள் சிலர் அவரை தாக்கி அழுகிய முட்டைகள், தக்காளிகளை வீசி பெரும் ரகளையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தனது தலைமையி்ல் ஐந்து நீதிபதிகள் விசாரணை நடத்துவார்கள் என தற்காலிக தலைமை நீதிபதி முகாபாத்யாயா இன்று அறிவித்தார்.

இந் நிலையில் இன்று மாலை உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் பெருமளவில் திரண்டனர். சுப்பிரமணியம் சுவாமியைக் கைது செய்யக் கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை கலைந்து போகுமாறு போலீஸார் கூறினர். ஆனால் வக்கீல்கள் கேட்கவில்லை. அத்தோடு நிற்காமல், போலீஸாரை கற்களை வீசித் தாக்க ஆரம்பித்தனர். உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்த காவல் நிலையத்தை தாக்கத் தொடங்கினர். அங்கிருந்த பொருட்களை எடுத்து வெளியே வீசி சூறையாடினர்.

மேலும், காவல் நிலையத்திற்கு சிலர் தீ வைத்ததால் பதட்டம் ஏற்பட்டது. வெளியில் இருந்த ஒரு போலீஸ் பைக்கும் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் காவல் நிலையம் எரிந்து சாம்பலானது. இதையடுத்து போலீஸார் தடியடியில் இறங்கினர். கலவரத்தில் ஈடுபட்ட வக்கீல்களை சரமாரியாக தடிகளால் அடித்து விரட்டினர்.

இதனால் மேலும் கோபமடைந்த வக்கீல்கள், உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து கண்ணில் பட்ட வாகனங்களையெல்லாம் தாக்கி சேதப்படுத்தினர். பல மோட்டார் சைக்கிள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்த பயங்கர ரகளையில் ஒரு நீதிபதி உள்பட பலர் படுகாயமடைந்தனர். இந்த மோதலில் சில டிவி கேமராமேன்களும் காயமடைந்தனர்.கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இந்த அமளி துமளி நீடித்தது.

சு.சுவாமி மீது தாக்குதலை பாராட்டி போஸ்டர்கள்

_swamy_.jpgசென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஜனதாக் கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமியை தாக்கியதைப் பாராட்டி சென்னை நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது அவரை சில வக்கீல்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கினர். அழுகிய முட்டைகளையும், தக்காளிகளையும் முகத்திலும், முதுகிலும் வீசி அசிங்கப்படுத்தினர். நீதிபதிகள் முன்பு நடந்த நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சுப்ரமணியம் சுவாமி மீது முட்டை வீசியதை வரவேற்றும், பாராட்டும் இன்று சென்னை நகரின் பல பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சுப்ரமணியம் சுவாமி செல்லும் இடம் எல்லாம் இதுபோல சிறப்பு செய்யுங்கள் என்று அந்த போஸ்டர்களில் வாசகங்கள் உள்ளன

இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து தி.மு.க.குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

president-of-india-residence.jpgதமிழ் நாட்டில் தி.மு.க.சார்பில் அமைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் உரிமைப் பேரவையின் துணைக்குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீலை புதுடில்லியில் சந்தித்து பேசியுள்ளனர்.  தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அந்தக் குழுவில் மத்திய அமைச்சர் ஆர்.ராதா, கனிமொழி எம்.பி., திராவிட கழகத் தலைவர் வீரமணி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

இலங்கை அரசாங்கத்தை யுத்த நிறுத்தத்துக்கு அழுத்தம் கொடுக்க, இலங்கை மீது பொருளாதார கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென்றும், சர்வதேச அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென்றும் இந்தச் சந்திப்பில் இந்திய ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக துரைமுருகன் தெரிவித்திருக்கிறார்.

“இந்திய அரசு இந்த பிரச்சினையை ஐ.நா.பொதுச் சபைக்கு எடுத்துச் சென்று அங்கு விவாதித்து அதன் ஊடாக பாதுகாப்பு சபைக்கு அனுப்பி அங்கிருந்து அமைதிகாக்கும் படையினரை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென ஜனாதிபதியை நாம் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டோம்.

மனித உரிமைகள் அமைப்புகள், அகதிகள் ஆணைக்குழு போன்றவற்றுடனெல்லாம் இந்திய அரசாங்கம் தொடர்பு கொள்ளவேண்டும். மேலும், கடுமையான நடவடிக்கை என்றால் பொருளாதார கட்டுப்பாட்டைக் கூட இலங்கை மீது விதிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்தத்துக்கு படியுமென நாம் திட்டவட்டமாக ஜனாதிபதியிடம் தெரிவித்திருக்கிறோம்’ என்றும் துரைமுருகன் மேலும் கூறியிருக்கிறார்.

இலங்கைப் பிரச்சினையில் தெளிவான முடிவிலுள்ள ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதா : சோ

cho_ramaswamy.jpgஇலங்கைப் பிரச்சினையில் மிகத்தெளிவான முடிவை எடுத்துள்ள ஒரே தலைவர் ஜெயலலிதாதான் என்று “சோ” இராமசாமி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியின் பொதுமேடைப் பேச்சுக்களைத் தொகுத்து தமிழில் மொழிபெயர்த்து அதனை “கல்வியே கற்பகத் தரு” என்ற பெயரில் அலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதற்கான விழா சென்னையில் நடைபெற்றது, இந்த விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும், துக்ளக் ஆசிரியரும் பத்திரிகையாளருமான “சோ” இராமசாமி, நல்லி குப்புச்சாமி செட்டியார் கலந்துகொண்டனர். 

“சோ” இராமசாமி  இலங்கைப் பிரச்சினைகள் பற்றிப் பேசுகையில்,  காஷ்மீரில் இருக்கும் இராணுவத்தினரை உடனடியாக வெளியேறவும், அவர்களது நடவடிக்கைகளை நிறுத்தவும் பாகிஸ்தான் இந்தியாவைக் கேட்டுக்கொண்டால் எப்படி அபத்தமாக இருக்குமோ, அதேபோல்தான் இலங்கைப் போரை நிறுத்தச் சொல்லி இந்தியாவை வலியுறுத்துவது.  அந்த நாட்டில் பயங்கரவாதத்தை எதிர்த்து போர் நடந்துகொண்டுள்ளது.

இங்கிருந்து கூக்குரலிடுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை.  இதனைச் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது.  எந்த மேடையிலும் நான் தைரியமாகச் சொல்வேன். இதையே என்னை யாழ்ப்பாணத்தில் போய்ப் பேசச்சொன்னாலும் நான் பேசத் தயார். இலங்கைப் பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் இந்தியாவில் சரியான முடிவை எடுத்துள்ள ஒரே அரசியல் கட்சித் தலைவர் ஜெயலலிதா மட்டுமே என்று பேசினார்.

கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இளைஞர் தீக்குளிப்பு

fire_.jpgகடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஜோதி என்கிற தமிழ்வேந்தன் என்ற பிரமுகர் இன்று பிற்பகல் தீக்குளித்தார். கடலூர் குழந்தை காலனியை சேர்ந்தவர் ஜோதி என்கிற தமிழ்வேந்தன் (29) இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளராக உள்ளார்.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கடலூர் நீதிமன்ற அலுவலகத்திற்கு மண்ணெண்ணை கேனுடன் வந்தார் தமிழ்வேந்தன். பின்னர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கோஷமிட்டபடி உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீவைத்தார். இதைப் பார்த்து, அருகில் இருந்த காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் தமிழ்வேந்தனைக் காப்பாற்ற முயற்சித்தனர்.

ஆனால் அதற்குள் உடலின் பெரும் பகுதி எரிந்து போய் விட்டது. இதையடுத்து உடனியாக அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது தனியார் மருத்துவமனையில் தமிழ்வேந்தனை அனுமதித்துள்ளனர்.

திருமா, பிரபாகரன் பற்றிதான் எப்போதும் பேசுவான் என் மகன் – தீக்குளித்த தமிழ்வேந்தன் தாயார்!

ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேறு வழியில்லாததால் தீக்குளிக்கிறேன் என்ற படி கடலூரில் தீக்குளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகாம் பொருப்பாளர் தமிழ்வேந்தன் கடலூர் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நிலையில் பத்திரிகையாளர்களிடம் கதறியபடியே பேசிய அவரது தாயார் அஞ்சலைதேவி,

‘எம் மவனுக்கு எப்ப பாத்தாலும் ஈழத்துல இருக்கிற சனங்களைப் பத்திதான் பேச்சு.  நேத்திக்கு மனித சங்கிலி போராட்டத்துக்கு போயிட்டு வந்தவன் ராத்திரி பூரா பொலம்பிக்கிட்டிருந்தான்.  ஈழத்துல சனங்க ஆயிரமாயிரமா செத்துகிட்டு இருக்காங்க. என்னால ஒண்ணும் பண்ண முடியலையே புலம்பினான்.

இன்னைக்கு காலையில அவனுக்கு சோறு போட்டுட்டு கூலி வேலைக்கு போயிட்டேன்.  அங்க இருந்தப்பதான் புள்ள இப்படி பண்ணிகிட்டான்னு சொன்னாங்க.  அவனுக்கு எல்லாமே  திருமாவளவனும்,  இலங்கையில இருக்கிற பிரபாகரனும்தான்.  அவங்க ரெண்டு  பேரு மேலயும் பைத்தியமா இருப்பான்.    ” என்றபடி கதறினார்.

தமிழ்வேந்தனுக்கு ஜான்சி என்கிற மனைவியும், சந்தோஷ் என்கிற 7 மாத கைக்குழந்தையும் இருக்கிறார்கள். தமிழ்வேந்தனுடன் பிறந்த அண்ணன் சிவா, அக்கா சாந்தி இருவரும் மருத்துவமனையில் அழுதபடி இருந்தனர்.  தந்தை பஞ்சாங்கமும் கூலி வேலை செய்பவர்தான்.

இலங்கைப்பிரச்சினையை ஐ.நா.வுக்கு கொண்டு செல்ல இந்திய அரசுக்கு பா.ம.க. இருநாள் கால அவகாசம்

drramadoss.jpgஇலங்கை விவகாரத்தை ஐ.நா.வுக்கு கொண்டு செல்வதற்காக இந்திய மத்திய அரசாங்கத்துக்கு இருநாள் கால அவகாசம் வழங்கியிருப்பதாக அரசின் பங்காளிக்கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக முக்கிய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த நேற்று புதுடில்லிக்கு பயணமாகவிருப்பதாக பா.ம.க.வின் நிறுவுநர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

போர் நிறுத்தம் செய்வதற்கு இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும், உடனடியாக இந்த பிரச்சினையை ஐ.நா.மன்றத்திற்கு கொண்டு சென்று இலங்கையில் அமைதி ஏற்பட மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் ராமதாசை சந்தித்து இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் டி.சுதர்சனம் கூறியதாவது;

இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விஷயங்களை நாங்கள் பேசினோம். பா.ம.க.வை பொறுத்தவரை மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தான் இன்னும் உள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி அப்படியே நீடிக்க வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். தமிழ்நாட்டில் தி.மு.க.கூட்டணியில் பா.ம.க.தொடர்ந்து நீடிப்பது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

இலங்கை தமிழர் பிரச்சினையை பொறுத்தவரை நேரு, இந்திரா, ராஜீவ் ஆகிய தலைவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வு ஏற்படுவதற்கு பாடுபட்டு இருக்கிறார்கள். எனவே காங்கிரசுக்கு எதிரான மனப்போக்கு வரும் தேர்தலில் மக்களிடம் இருக்காது என்றே நம்புகிறேன் என்றார் சுதர்சனம். அதன் பிறகு ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது; இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து தங்கபாலு, சுதர்சனம் ஆகிய தலைவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதனை படித்துப் பார்த்து விட்டு சுதர்சனம் என்னை வந்து சந்தித்தார். இலங்கையில் தற்போது தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகள் இதற்காக கண்டனக் குரல் எழுப்பி வருவதுடன் இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

தமிழின அழிப்பில் இலங்கை அரசு ஈடுபட்டு வரும் இந்த நேரத்தில் ஜனாதிபதியின் உரை ஆறுதலாக அமைந்துள்ளது. இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்ற வேண்டுகோள் மட்டும் போதாது, போரை நிறுத்துங்கள் என்று அவர்களுக்கு இந்தியா கட்டளையிட வேண்டும். அதற்கான உரிமை இந்தியாவுக்கு உள்ளது. இந்த பிரச்சினையை ஐ.நா.மன்றத்திற்கு கொண்டு செல்லவும் மத்திய அரசுக்கு உரிமை உண்டு. இதனை இரண்டே நாட்களில் இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும். ஐ.நா.மன்றத்திற்கு மட்டுமன்றி சர்வதேச மனித உரிமை அமைப்பிற்கும் இந்த பிரச்சினையை கொண்டு சென்று இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை அரசை போரை நிறுத்துங்கள் என்று கண்டிப்புடன் இந்தியா சொன்னால் அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும். புலிகள் தரப்பில் போரை நிறுத்த தயாராக இருப்பதாக அந்த இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.  ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து விட்டு ஒரு போராளி இயக்கம் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. எனவே போரை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்துமாறு இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும்.

“1987ஆம் ஆண்டும் தற்போது நடைபெறுவதுபோல இலங்கையில் தமிழின படுகொலை நடைபெற்றது. அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி விமானம் மூலம் இலங்கை தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்கினார். அதே நிலைதான் இப்போதும் உள்ளது. இது தொடர்பாக எனக்கு கிடைத்த பல்வேறு தகவல்களின் தொகுப்புகளையும் சுதர்சனத்திடம் கொடுத்துள்ளேன். ராஜீவ் காந்தியை இழந்தது வருத்தத்திற்குரியது. தீட்சித் போன்றவர்களின் தவறான ஆலோசனைகளே அவரது இழப்புக்குக் காரணம். இப்போதும் இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு தவறான ஆலோசனைகளே வழங்கப்படுகின்றன. இந்த போக்கை கைவிட்டு ராஜீவ் காந்தியின் ஆலோசகராகவும், வெளியுறவுத்துறை செயலாளராகவும் இருந்த ஏ.பி.வெங்கடேஸ்வரனிடம் மத்திய அரசு ஆலோசனை பெற வேண்டும்.

நீதிமன்றத்தில் சுப்பிரமணியம் சுவாமி மீது தாக்குதல்

_swamy_.jpgஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையிலேயே சில வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டார். அவர் மீது அழுகிய முட்டைகளும் வீசப்பட்டன. சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது தலைமை நீதிபதி நடவடிக்கை எடுப்பார் எனக் கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களாகவே இலங்கைத் தமிழர்க்கு ஆதரவாக வழக்கறிஞர்கள், நீதிமன்ற வளாகத்திலேயே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடும் நிலைப்பாடு எடுத்துவரும் சுப்பிரமணியம் சுவாமி, நேற்று, சிதம்பரம் நடராஜர் ஆலய தீ‌ஷிதர்கள் சார்பாக வாதாட நீதிமன்றம் வந்திருந்தார்.

நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, மற்றும் சந்துரு முன்னிலையில் வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே சில வழக்கறிஞர்கள் அறைக்குள் நுழைந்து, சுவாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். நீதிபதிகளின் கண்டனங்களையும் மீறி சுவாமி மீது அழுகிய முட்டைகளை வீசியதோடு அவரைத் தாக்கவும் முயன்றனர்.

பின்னர் பொலிசார் விரைந்து வந்து வழக்கறிஞர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியம் சுவாமி தனக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்கத் தவறிவிட்டதென்றும், நீதிபதிகள் முன்னிலையில் இவ்வாறு தாக்குதல் நடைபெற்றிருப்பது தமிழ்நாட்டிற்கே அவமானம் என்றும், இது குறித்து உச்சநீதிமன்றத்தில் புகார் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

சுவாமி இவ்வாறு நீதிமன்றத்தி்ல் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஜெயலலிதா முதன்முறையாக முதல்வரானபோது அவருக்கு எதிராக பல்வேறு ஊழல் வழக்குகளைத் தொடர்ந்த சுவாமியை அதிமுகவினர் எல்லா இடங்களிலும் தாக்க முயன்றனர்.

உயர் நீதிமன்றத்தில் வைத்துக் கூட தாக்கும் முயற்சி நடந்தது. அப்போது அவரை வட சென்னை திமுகவினர் தான் காப்பாற்றினர்.

நீதிமன்றத்தையே அசிங்கப்படுத்தும் வகையில் சில மகளிர் அணியினர் சுவாமியின் கண் முன்னே புடவைகளை உயர்த்திக் காட்டிய மகா அசிங்கமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை முதல் குமரி வரை மனித சங்கிலி

tamilnaadu.jpgஇலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும், அப்பாவித் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில்  17 ந் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை பிரமாண்ட மனிதச்சங்கிலி பேரணி நடத்தப்பட்டது.

சென்னை தாம்பரத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமையில் மாபெரும் மனித சங்கிலி நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ம.தி.மு.க. அவைத்தலைவர் கண்ணப்பன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, பா.ஜ.க. கலை இலக்கிய பிரிவு மாநில பார்வையாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம், முன்னாள் அரசவை கவிஞர் புலமை பித்தன், திரைப்பட இயக்குனர்கள் வி.சி.குகநாதன், தங்கர்பச்சான், நடிகர் மன்சூர் அலிகான், கவிஞர் அறிவுமதி, ஓவியர் புகழேந்தி, ‘புதிய பார்வை  இதழ் ஆசிரியர் ம.நடராஜன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், பா.ம.க. ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சென்னையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் தொடங்கி மனித சங்கிலி, செங்கல்பட்டு, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், திருச்சி, கரூர் வழியாக குமரி வரை நீடித்தது. திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் தமிழின உணர்வாளர்கள், மதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். விழுப்புரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொள்ள வேண்டியிருந்தது, சோனியா அழைப்பின் பேரில்  ராமதாஸ் டெல்லி சென்றதால், பாமக மேல்மலையனூர் எம்எல்ஏ செந்தமிழ்ச்செல்வன், முகையூர் எம்எல்ஏ களிவரதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஈழத் தமிழரைக் காப்பாற்றக்கோரி தமிழகத்தில் இன்று மனிதச்சங்கிலி

1102-vaiko.jpgஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமாறுகோரி தமிழகம் முழுவதிலும் இன்று பெரும் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடைபெறவிருக்கின்றது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் அனைவரும் ஒன்றுதிரண்டு பங்கேற்கவேண்டும் என்று அந்த இயக்கம் அழைப்பு விடுத்திருக்கிறது.இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை வருமாறு:

“இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவே புலிகளின் ஆயுதப் போராட்டம் நடக்கிறது. ஆனால், புலிகள் மீது போர் தொடுக்கிறோம் என்று சொல்லி, மொத்த தமிழ் இனத்தையே இலங்கை இராணுவம் அழிக்கத் துடிக்கிறது. இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு குரல் கொடுத்தாக வேண்டும்.

நம் வேதனையை வெளிப்படுத்த இலங்கைத் தமிழர்களைக் காக்க தமிழ்நாட்டு வீதிகளில் கரம் கோத்து நிற்போம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகிறது. பெப்ரவரி 17ஆம் திகதி மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரம் கோர்த்து நிற்போம்.

இலங்கைத் தமிழர்கள் மீது பூட்டப்படும் அடக்குமுறை சங்கிலியை உடைப்பதற்கு நாம் மனித சங்கிலி அமைப்போம். கண்ணை இமை காப்பது போல இலங்கை தமிழர்களைக் காக்கும் இமைகளாக மாறுங்கள். தாய்த் தமிழகத்தின் மன வேதனையை, கொந்தளிக்கும் உணர்ச்சியை இந்திய அரசு உணரட்டும். போரை நிறுத்த முற்படட்டும்.’  இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.