::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி அதிகரிப்பு

karachci.jpgபாகிஸ்தானில் அரசியல் மோதல்கள் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் இராணுவம் தலையிடுவதற்கான சாத்தியமும் அதிகரித்திருக்கிறது. தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி அரசின் தடை உத்தரவை மீறி எதிரணி ஆதரவாளர்களும் வழக்கறிஞர்களும் நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஆரம்பித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இஸ்லாமாபாத்திற்குச் சென்று பாராளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிடப் போவதாக எதிரணியினரும் சட்டத்தரணிகளும் சூளுரைத்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி பதவிநீக்கம் செய்த நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்துவது தொடர்பாக ஜனாதிபதி சர்தாரி அளித்திருந்த உறுதிமொழியை நிறைவேற்றுமாறு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் பாகிஸ்தானின் வழக்கறிஞர்கள் சங்கமும் வலியுறுத்தி வருகின்றனர். பதவி வகிக்கமுடியாமல் தடுக்கும் தீர்ப்பொன்றைக் கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் நவாஸ் ஷெரீப்புக்கும் அவரின் சகோதரருக்கும் வழங்கியிருந்தது. அத்துடன் இத்தீர்ப்பையடுத்து பஞ்சாப் மாகாண அரசை பாகிஸ்தான் மத்திய அரசு பதவிநீக்கியிருந்தது. இது ஜனாதிபதி சர்தாரி மீது நவாஸ் ஷெரீப்பின் ஆத்திரத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை சகல நகரங்களிலுமிருந்தும் ஊர்வலமாகச் சென்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாக நவாஸ் ஷெரீப்பும் சட்டத்தரணிகளும் அறிவித்ததன் பிரகாரம் நேற்று நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இதனால் பல இடங்களில் சட்டத்தரணிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டன.

இதேவேளை பாகிஸ்தானின் இராணுவத் தலையீடு தொடர்பான ஊகங்கள் அதிகரித்துவரும் நிலையில், இராணுவம் நிர்வாகத்தை கைப்பற்றும் சாத்தியம் அறவே இல்லையென நவாஸ் ஷரீப் தெரிவித்திருக்கிறார். 1999 இல் இராணுவ சதிப்புரட்சி மூலம் ஷெரீப் பதிவிநீக்கம் செய்யப்பட்டவராகும். நீதிபதிகள் மீண்டும் பணிக்கமர்த்தப்படும் வரை தமது நீண்ட யாத்திரை தொடரும் என்று ஷெரீப் அறிவித்திருக்கிறார். முன்னர் வாக்குறுதியளித்ததன் பிரகாரம் நீதிபதிகளை மீண்டும் பணிக்கு அமர்த்தியதன் பின்பே சர்தாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க ஜனாதிபதி சர்தாரி செயற்படும் விதம் குறித்து அதிருப்தியடைந்துள்ள இராணுவத் தளபதி கயானி அரசியல் குழப்பத்துக்கு விரைவில் முடிவுகட்டுமாறு கேட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

புஷ்ஷுக்கு காலணி வீசிய செய்தியாளருக்கு மூன்று வருட சிறை

120309.jpgஅமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மீது இராக்கில் காலணிகளை வீசியெறிந்த பத்திரிகையாளருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என பி.பி.ஸி. செய்தி வெளியிட்டிருந்தது. .

வெளிநாட்டுத்தலைவர் ஒருவரை அவமதித்தமைக்காக முண்டா ஷார் அல் சைதி என்ற இந்தப் பத்திரிகையாளர் குற்றவாளியாக காணப்பட்டதாக பாக்தாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் இருந்த அவரது உறவினர்களும், ஆதரவாளர்களும் ஆத்திரத்துடன் கத்தினார்கள். அல் சைதி மேன்முறையீடு செய்வார் என்று அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

இந்தியா இல்லாமலேயே ஈரானிலிருந்து குழாய் வழி எரிவாயு – பாகிஸ்தான்

ஈரானிலிருந்து குழாய் வழியாக எரிவாயு கொண்டு வரும் திட்டத்தை இந்தியாவை விட்டுவிட்டு மேற் கொள்ள பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக எரிவாயு கொண்டு வரும் திட்டத்தை மூன்று நாடுகளும் இணைந்து மேற்கொள்வதாக முன்னர் முடிவு செய்யப்பட்டது.

7500 கோடி டாலர் மதிப்பிலான இத்திட்டத்துக்கு ஈரான் – பாகிஸ்தான் – இந்தியா குழாய்ப் பாதை திட்டம் (ஐ.பி.ஐ) என பெயரிடப்பட்டது. மூன்று நாடுகளும் இணைந்து இத்திட்டத்தை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. பாகிஸ்தான் ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடன் ஆஸிப் அலி ஜர்தாரி, முதல் முறையாக ஈரானுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

ஈரான் புறப்படுமுன் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இத்திட்டத்துக்கு இந்தியா ஒத்து ழைக்கவில்லை எனில் இந்தியாவை விட்டுவிட்டு பாகிஸ்தான் மேற்கொள்ளும் என்று தெரிவித்தார், சுமார் 2600 கி.மீ தொலைவு குழாய்வழி எரிவாயுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான 1994 ஆம்ஆண்டு முன்மொழியப்பட்டது.

ஆனால் மூன்று நாடுகளிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள், எரி வாயு விலையை நிர்ணயிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படாதது. எரிவாயுவை கொண்டு செல்வதற்கான கட்டண நிர்ணயம் (டிரான்ஸிட் ஃபீஸ்) உள்ளிட்டவை காரணமாக இத்திட்டத்தைச் செயல்படுத்துவது காலதாமதமானது.

தடையற்ற எரிவாயு விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என்று இந்திய அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் அதற்கு அத்தகைய உறுதியையும் ஈரான் அளிக்கவில்லை இதனாலும் இத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

தனது பயணத்தின் போது இத்திட்டத்தை நிறைவேற் றுவது குறித்து ஈரான் அதிகாரிகளுடன் விவாதிக்கப் போவதாக அவர் கூறினார்.

இது தொடர்பாக ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அகமதி நிஜாத்துடன் பேசுவதோடு இரு நாடுகளிடையேயான பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப் போவ தாகக் கூறினார்.

குறிப்பாக ஆப்கானிஸ்தானில் நிலவும் பிரச்சினை குறித்து விவாதிக்கப் போவதாக குறிப்பிட்ட அவர் ஈரானில் நடைபெறும் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்ப போவதாகக் கூறினார்.

இரு நாடுகளும் பயனடையும் வகையில் பலதரப்பு விஷயங்கள் குறித்து ஈரான் ஜனாதிபதியுடன் விவாதிக்கப் போவதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அப்துல் பாசித் தெரிவித்தார். இம் மாநாட்டுக்கு முன்னதாக சுற்றுச் சூழல் மாநாடும் நடைபெறும்.

இம்மாநாட்டில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஜனாதிபதிகள் பங்கேற்கின்றனர். இதை அடுத்து நடைபெறும் பொருளாதார கூட்டுறவு மாநாட்டில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சமாளிப்பது குறித்து விவாதிக்கப்படும். இம் மாநாட்டில் அஜர்பெய்ஜான், தஜகிஸ்தான், துருக்கி அதிபர்கள் மட்டுமன்றி இப்பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

தேர்தல் பிரச்சார நோட்டீஸில் இலங்கை பிரச்சனை பற்றி அச்சடிக்க தடை

tamil_nadu.jpgதமிழகத்தில் வருகிற மே 13-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் பணியை தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டுள்ளது. தேர்தலை சுமூகமாக நடத்தவும், வாக்காளர்கள் அச்சமின்றி, குழப்பமின்றி வாக்களிக்கவும் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது தேர்தல் பிரசாரத்துக்கு நோட்டீஸ் அடிக்கும் அச்சகங்களுக்கும் தேர்தல் தொடர்பாக வெளியிடும் நோட்டீஸ்கள், சுவரொட்டிகள் தொடர்பாகவும் புதிய விதிமுறைகளை தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

-வன்முறை, கலவரங்களை ஏற்படுத்தும் விதமாக நோட்டீஸ் அடித்துக் கொடுக்கக்கூடாது.
 
-ஜாதி, மத அமைப்புகள் கொடுக்கும் உணர்ச்சியை, கிளர்ச்சியை தூண்டும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தாலும் அச்சடிக்கும் உரிமையை ஏற்றுக்கொள்ளக்கூடாது.
 
-மத உணர்வை தூண்டும் சட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும் கேலி சித்தரங்களை அச்சடிப்பதை கைவிட வேண்டும்.
 
-தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புக்கும், ஜனநாய கத்துக்கும் எதிரான சுவரொட்டிகள் அடிக்கவே கூடாது.
 
-இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து எவ்வித வாசகமும் இடம்பெறவே கூடாது.
 
-அச்சகங்கள் மற்றும் பிளக்ஸ் போர்டு தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் ஆர்டர்களை தங்கள் எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தணிக்கை செய்து கொள்ள வேண்டும்.

முத்துக்குமார் மரணம் உள்ளத்தை வலிக்க செய்தது!: கருணாநிதி அறிக்கை

karunanithi.jpgமருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற போது என் உடல் வலியையும் மீறி, உள்ளத்தை வலிக்கச் செய்யும் அளவுக்கு முத்துக்குமார் தீக்குளித்து மரணமடைந்த செய்தி வந்தது என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய உடல் வலியையும் மீறி – உள்ளத்தை வலிக்கச் செய்கின்ற அளவிற்கு சென்னையில் தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ் இளைஞர், முத்துக்குமார் என்பவர் இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தீக்குளித்து மாண்டுவிட்டார் என்ற செய்தி மருத்துவமனையிலே உள்ள என்னை அடைந்து மனதை பெரிதும் பாதித்தது. கழகப் பொதுச் செயலாளரைத் தொடர்பு கொண்டு, அத்தகைய தற்கொலைகளை ஊக்கப்படுத்தக் கூடாது என்ற வகையில் அறிக்கை ஒன்றை வெளியிடச் செய்தேன். பொருளாளர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு, பேரவையில் அவர் உரையாற்றும்போது – தீக்குளித்து மாண்ட முத்துக்குமாரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கச் செய்தேன். ஆனால் அவரது மறைவுக்கு கழகத்தின் சார்பில் இரங்கல் செலுத்தச் சென்ற வடசென்னை மாவட்ட செயலாளர் மீது அரசியல் கண்ணோட்டத்தோடு அ.தி.மு.க., ம.தி.மு.க.வினர் கற்களை வீசி தாக்க முயன்றதாகவும், அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிதியினைக் கூட வாங்க மறுத்துவிட்டதாகவும் செய்தி வந்து, ஒரு இளைஞரின் தியாகச் செயலைக் கூட அரசியல் ஆக்குகிறார்களே என்றெண்ணி வேதனையடைந்தேன். இவ்வாறு கூறியுள்ளார்

இந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் இலங்கைத் தமிழருக்காகவே பேசும் – ஜெயலலிதா கூறுகிறார்

jayalalitha.jpgஇலங்கைத் தமிழர் விவகாரம் இந்திய பாராளுமன்றத் தேர்தலில் திட்டவட்டமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து தமிழ்நாட்டிலுள்ள சகல தரப்பினரும் அதிகளவுக்கு உடல், உள ரீதியான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்திருக்கிறார்.

இலங்கைத் தமிழருக்கு ஆதரவை வெளிப்படுத்தி திங்கட்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதமிருந்த ஜெயலலிதாவிடம் இலங்கைத் தமிழர் பிரச்சினையானது தேர்தல் விவகாரமாக அமையுமா என்று கேட்கப்பட்ட போது, “அவர்கள் தொடர்பாகவே தேர்தல் பெறுபேறுகள் அமையும். தமது சகோதரர்கள், சகோதரிகள், பிள்ளைகள் கொல்லப்படுவது குறித்து தமிழக மக்கள் அதிகளவுக்கு கவலை அடைந்துள்ளனர்’ என்று “இந்து’ பத்திரிகைக்கு ஜெயலலிதா கூறியுள்ளார்.

அத்துடன் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கம் இலங்கைத் தமிழருக்கு எந்த உதவியும் அளிக்கவில்லையென்ற பரவலான அபிப்பிராயம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தி.மு.க. அரசுக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் அவர்கள் துரிதமாக உணவு, மருந்துப் பொருட்களை இப்போது அனுப்பியிருப்பார்கள். இனப் படுகொலையை நிறுத்துமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்திருப்பார்கள். ஆனால், அவர்கள் வெற்று வார்த்தைகளையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இரு அரசுகளுமே இலங்கைத் தமிழருக்கு நிவாரணம் வழங்குவதைப் புறக்கணித்து குற்றம் இழைத்திருக்கின்றன என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இலங்கை அரசுக்கு நவீன ஆயுதங்கள், உபகரணங்களையும் இராணுவத்திற்கு பயிற்சியையும் இந்திய அரசாங்கம் விநியோகித்து வருவது தொடர்பான செய்திகளை சுட்டிக்காட்டிய ஜெயலலிதா ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு இதனை செய்வது பொதுவான விடயமாக இருந்தாலும் யாருக்கு எதிராக இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதே இங்குள்ள கேள்வியாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கை அரசு தனது இராணுவப் பலத்தை தமிழர்களுக்கு எதிராக பிரயோகிக்கின்றது என்பதே உண்மையாகும். புலிகளுடன் தான் சண்டையிடுவதாக அது கூறக்கூடும். ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கையானது அப்பாவித் தமிழர்களும் இலக்காக்கப்படுகின்றனர் என்பதையே தெளிவாகக் காட்டுகின்றது என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தனது உண்ணாவிரதம் தொடர்பாக கருணாநிதியின் விமர்சனம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர் நான் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பேன் என்பது யாருக்கும் தெரியும்’. என்னால் செய்ய முடியாதது தொடர்பாக நான் ஒருபோதும் உறுதிமொழி அளிக்கமாட்டேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பழரசம் கொடுத்து ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். கட்சிச் செயலாளர் என்ற முறையில் 1 கோடி ரூபாவும் தனிப்பட்ட ரீதியில் 5 இலட்சம் ரூபாவும் இலங்கைத் தமிழர் நிவாரண நிதியத்திற்கு ஜெயலலிதா வழங்கியுள்ளார்.

உண்டியல் நிதிக்கு வைகோவும் ரூபா 5 இலட்சம் வழங்கினார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்திய (மார்க்ஸிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என். வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா. பாண்டியன், புதிய தமிழகத் தலைவர் கே.கிருஷ்ணசாமி , தேசியவாத காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உட்பட அ.தி.மு.க. தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

அமெரிக்க படைகளை அனுப்பினால் தோல்விதான் ஏற்படும் – ராமதாஸ்

ramsoss.jpgபோரை நிறுத்தாமல், மக்களை மீட்கிறோம் என்று அமெரிக்க படைகளை அனுப்பினால் தோல்விதான் ஏற்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:-

இலங்கை போர்ப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ் மக்களை வெளியேற்றிவிட்டால், அவர்களது உரிமைகளுக்காக போராட்டக் களத்தில் நிற்கும் போராளிகளை அழிப்பதற்கு எளிதாக இருக்கும் என்று இலங்கை அரசு கருதுகிறது.

இதற்கு இந்தியாவின் ஆதரவையும், அமெரிக்காவின் உதவியையும் பாசிச ராஜபக்சே அரசு நாடியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய சூழ்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் அமெரிக்கா சென்றிருக்கிறார்.

வன்னிப் பகுதியில் உள்ள 2 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற்ற அமெரிக்காவின் தலைமையில் கூட்டு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக சிவசங்கர மேனன், அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

தமிழ் மக்களை அவர்களது பிறந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று சொல்லுவதும், அவர்களை கட்டாயமாக வெளியேற்ற முற்படுவதும் ஈழத் தமிழர்களின் அரை நூற்றாண்டுகால போராட்டத்தை அவமதிப்பதாகும்.

தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடத்தில் இருந்து வெளியேற்றி இலங்கை படையினரின் சித்ரவதை முகாம்களில் அடைத்திட முற்படும் எந்த நடவடிக்கைக்கும் இந்தியா ஆதரவு அளிக்கக் கூடாது.

பாகிஸ்தான் ஒரு பக்கம் பகையாக இருக்கிறது. வங்கதேசம் இன்னொரு பக்கத்தில் பகைமை பாராட்டுகிறது. சீனா எந்த நேரத்திலும் பகை கொள்ளும் என்ற நிச்சயமற்ற நிலை இருந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில் இந்தியாவின் தெற்கு பக்கத்தில் இருக்கும் இலங்கையும் தனக்கு பகையாக மாறிவிடக் கூடாது என்ற ஒரு காரணத்திற்காக, இனப்படுகொலை நடத்தும் ராஜபக்சே அரசுக்கு இந்தியா துணை போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலைப்பாடு இந்திய வெளியுறவுத்துறை மேற்கொள்ளும் மிகப்பெரிய மோசமான தவறாகும்.

ராஜபக்சே அரசின் பாசிச அராஜக நடவடிக்கைகளுக்கு இந்தியா வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ துணை நிற்பதை தமிழ்நாட்டில் இருக்கும் 7 கோடி தமிழர்களும் விரும்பவில்லை.

தமிழகத்தில் 7 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களின் 14 கோடி கரங்களும் ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு இன்று தயாராக இருக்கிறது. இந்த உணர்வை புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளிக்கும் வகையில், இந்திய அரசு தனது கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

முன்பு இந்திரா காந்தி காலத்திலும், அதன்பிறகு ராஜீவ் ஆட்சியின் போது, தொடக்க காலத்திலும் மேற்கொண்ட நிலைப்பாட்டை இந்திய அரசு இப்போது மேற்கொள்ள வேண்டும் என்பது தமிழர்களின் விருப்பம் ஆகும்.

இந்திராகாந்திக்கு இருந்த நம்பிக்கை, அவருக்கு இருந்த துணிச்சல், ஈழத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஈடுபாடு இப்போதுள்ள அரசுக்கு வரவேண்டும். இதுவும் ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமும், வேண்டுகோளும் ஆகும்.

போர்ப்பகுதியில் அகப்பட்டிருக்கும் மக்களை மீட்க வேண்டும் என்று இலங்கை அரசு விரிக்கும் வலையில் இந்தியா விழுந்து விடக் கூடாது. இந்த வஞ்சக செயலுக்கு அமெரிக்காவின் துணையையும் இந்தியா நாடக் கூடாது.

அமெரிக்காவும் முன்பு சோமாலியாவில் மேற்கொண்ட முயற்சியை இலங்கையில் மேற்கொள்ள முயலக் கூடாது. ஆய்த மோதலுக்கு தீர்வு காணாமல் மக்களை மட்டும் மீட்கப் போகிறோம் என்று படையை அனுப்பி வைத்ததால்தான் சோமாலியாவில் தோல்வி ஏற்பட்டது.

இப்போதும் இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளாமல், போர்ப்பகுதியில் சிக்கித் தவிக்கும் மக்களை மட்டும் மீட்க போகிறோம் என்று புறப்பட்டால், சோமாலியாவில் ஏற்பட்ட தோல்விதான் இலங்கையிலும் ஏற்படும் என்பதை இந்தியாவும், அமெரிக்காவும் மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

போரை நிறுத்த இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும் : விஜய்காந்த்

vijayakanth.jpgஉடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஏப்ரல் மாதத்தில் சிங்களவர்களின் புத்தாண்டு வருகிறது. அதற்குள் தமிழர்களை அழித்து புத்தாண்டை வெற்றித் திருநாளாகக் கொண்டாட இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கை அரசின் இனவெறிப்போக்கால் இனி தமிழர்கள் வாழ தனி நாடு தேவை என்ற நிலை உருவாகியுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்க ஐ.நா., செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் மேற்பார்வையில் முகாம்கள் அமைக்க வேண்டும். போர்நிறுத்தம் ஏற்பட இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

நிர்வாணப்படுத்தப்பட்ட மலைவாசிப் பெண் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி

laxmi_.jpgஇந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த போராட்டத்தின்போது நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட மலைவாசிப் பெண் ஒருவர் அங்கு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்திருக்கிறார்.

லக்ஷ்மி ஒராயன் என்கிற அந்த பெண்மணி, அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் இன்னமும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை.

2007 ஆம் ஆண்டு அஸ்ஸாமின் தலைநகர் கவுஹாத்தியில் நடந்த ஒரு போராட்டத்தில் அவர் கலந்து கொண்டபோது, உள்ளூர்வாசிகளால் அவர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டார்.

அஸ்ஸாமின் தேயிலைத் தோட்டங்களில் கூலிகளாக பணிபுரியும் ஆயிரக்கணக்கான மலைவாசிமக்களுக்கு கூடுதல் உரிமைகள் கோரி அந்த போராட்டம் நடத்தப்பட்டது.

புலிகளுக்கு ஆதரவான உள்ளூர் அமைப்பு விசாரணை நடத்துகிறது கம்போடிய அரசு

cambodia.jpgவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் அமைப்பு தொடர்பாக விசாரணை நடத்துவது குறித்து கம்போடிய அரசாங்கம் பரிசீலனை செய்துவருவதாக அந்நாட்டு ஊடகமொன்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக கம்போடிய வெளிவிவகார அமைச்சு உள்துறை அமைச்சர் சார் கெங்கிற்கு கடிதமொன்றை அனுப்பியிருப்பதாக கம்போடியா தினசரி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தளமாக கொண்ட தமிழ் மன்றமொன்று கம்போடியாவில் இயங்குவதாக அமெரிக்கத் தூதரகத்திடமிருந்து கடிதமொன்று வெளிவிவகார அமைச்சுக்கு கிடைத்துள்ளது. பெப்ரவரி 26 ஆம் திகதியிடப்பட்ட கடிதமென பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

“இந்த அமைப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கவும்’ என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்மன்றமொன்று கம்போடியாவில் இயங்குகின்றதா என்பது பற்றிய விபரம் அதில் தெரிவிக்கப்படவில்லை.

2007 ஜூலையில் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்களை வெளியிடும் சஞ்சிகையான “ஜேன்ஸ் இன்ரலிஜன்ஸ் ரிவியூ’ வெளியிட்ட தகவலில் புலிகளுக்கு ஆயுதங்களை பெற்றுக்கொள்ளும் குறிப்பிடத்தக்க இடமாக கம்போடியா விளங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பெற்றுக்கொள்ளும் வட்டாரங்கள் தொடர்பாக குறிப்பிட்டிருக்கவில்லை. அதனை அச்சமயம் கம்போடிய அரசாங்கம் மறுத்திருந்தது.