::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

விடுதலைசிறுத்தைகள் கட்சி திமுகவுடன்தான் கூட்டணி- எங்களுடன் இல்லை: காங்கிரஸ்

thiruma_8-4.jpgஇலங்கை போர் நிறுத்தத்திற்கு உண்மையாக முயற்சி செய்யாவிட்டால் காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று, உங்கள் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார்.

இதற்கு காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் வயலார் ரவி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில்,  ‘’விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் தான் கூட்டணி வைத்துள்ளது. காங்கிரசுடன் இல்லை’’ என்று தெரிவித்தார்.

போர் நடப்பதால் தமிழர்களுக்கு பாதிப்பு-ராகுல்

rahul.jpgஈழத்தில் தற்போது சண்டை நடந்து வருகிறது. எனவேதான் தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சாதாரண பிரச்சினைதான் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பினர். அது ஒரு தீவிரவாத அமைப்பு. எனது தந்தையையும், அப்பாவி மக்கள் பலரையும் கொன்ற அமைப்பு அது.

இலங்கைப் பிரச்சினை சாதாரணமானதுதான். அங்கு தற்போது போர் நடந்து கொண்டிருக்கிறது. எனவே தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்படும் தமிழர்களின் பாதிப்புகளைக் குறைக்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது. தமிழ் மக்களின் நிலை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.

அதை நாங்கள் குறைக்க முயற்சிப்போம். இதுகுறித்து இலங்கை அரசை வலியுறுத்தி வருகிறது இந்தியா. இலங்கை தமிழர்களின் உரிமைகள் அவர்களுக்கு கிடைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பாடுபடும். அவர்களின் துயரை துடைப்பதுதான் எங்களின் தலையாய கடமை.

ரஷ்ய இராணுவ உளவுப் பிரிவின் தலைவர் பதவி நீக்கம்

korabelnikovafp.jpgரஷ்யா வின் மிகப்பெரிய உளவு அமைப்பான இராணுவ உளவுப் பிரிவின் தலைவரை ரஷ்ய அதிபர் டிமித்ரி மெட்வெடேவ் அவர்கள் பதவி நீக்கம் செய்துள்ளார். பத்து வருடங்களுக்கும் அதிகமாக அந்த பதவியில் இருந்துவந்த வலன்ரின் கொரபல்நிக்கோவ் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.

ஆனால், ரஷ்ய இராணுவ ஆட்குறைப்பு திட்டத்துக்கு இவர் முக்கியமான எதிர்ப்பாளர் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.ஜோர்ஜியாவில் கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையில், ஏற்பட்ட சில தவறுகளுக்கு இந்த அதிகாரி மீதே அரசாங்கம் குற்றஞ்சாட்டப்படுவதாகவும் நம்பப்படுகிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரியங்கா

23-priyanka.jpgஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வாத்ரா கூறியுள்ளார்.

நாட்டின் முன்னாள் பிரதமரைக் கொன்றவர்கள் என்ற நிலையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்று அவர் பிபிசிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தப் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை தான் புரிந்துகொண்டுள்ளதாகவும், அம்மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய இந்தியா முயல வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி வாத்ரா தெரிவித்துள்ளார்.

சமீப காலங்களில் ராஜீவ் கொலை வழக்கு பற்றிய தனது கருத்துக்களை பிரியங்கா சற்று வெளிப்படையாகவே தெரிவித்துவருகிறார்.

வேலூர் சிறைக்கு சென்று ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினியை சந்தித்திருந்த பிரியங்கா காந்தி இக்கொலை தொடர்பாக யார் மீதும் பழி வாங்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அவரின் சகோதரரான ராகுல் காந்தி ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக தமக்கு இன்னமும் நியாயம் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார்

யேர்மனியில் சீனத் தூதரகம் புலி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது

germany.jpgஇலங்கையில் `யுத்த நிறுத்தம்` கோரி யேர்மனியில் ஆர்ப்பாட்டம் செய்த புலி ஆதரவாளர்கள் சிலர் பேர்லினில் உள்ள சீனத் தூதரகம் மீது இன்று (ஏப். 24) மதியம் தாக்குதல் நடத்தி உள்ளனர். சீன அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு சீன தூதரகத்தை முற்றுகையிட்ட சுமார் நூற்றுக்கணக்கான ஜேர்மன் வாழ் புலி ஆதரவாளர்கள் தூதரக கட்டிடத்தை நோக்கி சரமாரியான முட்டைகளை எறிந்துள்ளனர்.

மேலும் சிலர் சீன தூதரகத்துக்கு முன்னுள்ள தேசியக் கொடிக் கம்பத்தை முறிக்க முயன்ற வேளை பேர்லின் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். யேர்மன் காவற் துறையினரால் இந்த வன்முறையில் ஈடுபட்ட புலி ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகர் டில்லிக்கு அழைக்கப்பட்டார்

india.jpgஇலங்கையின் பிந்திய நிலைவரம் குறித்து ஆராய்வதற்காக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத்தை நேற்று வியாழக்கிழமை இந்திய மத்திய அரசாங்கம் புதுடில்லிக்கு அழைத்திருக்கிறது. புதுடில்லியில் ஆலோக் பிரசாத் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனனையும் சந்தித்து இலங்கையின் வடபகுதியின் பிந்திய நிலைவரம் தொடர்பாக விபரித்ததாக பி.ரி.ஐ.செய்திச் சேவை தெரிவித்தது.

தமிழ் நாட்டில் இலங்கை விவகாரம் உணர்வலைகளை தீவிரமாக்கியுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக இந்திய அரசு உறுதியான அணுகுமுறையை மேற்கொள்ள தற்போதைய கள நிலைவரத்தை அறிந்து கொள்ளுதல் உதவும் என்ற எதிர்பார்ப்புடன் உயர்ஸ்தானிகர் டில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அதேசமயம் வடபகுதி மோதல் நிலைவரம் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் நிலைமை குறித்து இலங்கை அதிகாரிகளுடன் இந்திய அரசு தொடர்ந்து தொடர்புகளை மேற்கொண்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

‘அன்பு சகோதரர்’ வைகோவை அவமானப்படுத்திய ஜெயலலிதா

jayalalitha.jpgவிருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்காக சிவகாசியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வைகோவின் பெயரை ஒரே ஒரு முறை மட்டுமே சொன்னார்.

வைகோவுக்காக ஓட்டு கேட்க வந்தபோதும்கூட, வைகோவை மேடையில் வைத்துக் கொண்டே அவரது பெயரை ஒரு முறைக்கு மேல் உச்சரிக்காமல் தனது ஒரு மணி நேர உரையை அவர் முடித்தார். அதுவும் கூட வைகோவுக்கு ஓட்டு போடுங்கள் என்று கூட கேட்கவில்லை. மாறாக முதல்வர் கருணாநிதியைத் தாக்கிப் பேசுகையில் மட்டும் மறந்துபோயோ என்னவோ வைகோவின் பெயரைச் சொல்லிவிட்டார்.

வழக்கமாக அன்புச் சகோதரர் என்று வைகோவை ஜெயலலிதா கூறுவார். ஆனால், இம்முறை பெயரையே சொல்லாமல் தவிர்த்தார். ஆனாலும் பெயரைச் சொல்வார் என்று மதிமுக தொண்டர்களும், ஏன் வைகோவும் கூட எதிர்பார்ப்புடன் இருக்க, அதிமுக கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்யுங்கள் என்று மட்டும் சொல்விட்டு ஜெயலலிதா பேச்சை முடித்தபோது மேடையில் இருந்த ‘அன்பு சகோதரர்’ அவமானத்தில் நெளிந்து கொண்டிருந்தார்.

வாக்களியுங்கள் என்று சொன்னபோது, தனது பெயரை ஜெயலலிதா சொல்லாவிட்டாலும் எழுந்து நின்று மக்களைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு அமர்ந்தார் வைகோ. பாவம் வைகோ..!

11வது நாளாக தொடரும் பெண்கள் உண்ணாவிரதம்

20-fast.jpgஈழத் தமிழர்களைக் காக்க்க கோரியும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் சென்னையி்ல பெண்கள் கூட்டமைப்பினர் நடத்தி வரும் உண்ணாவிரதம் 11வது நாளாக இன்றும் தொடருகிறது. மேலும் 6 பெண்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் நடத்திவரும் உண்ணாநிலைப் போராட்டம் சற்றும் தொய்வில்லாமல் தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே ஐந்து பெண்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 6 பெண்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சற்றும் கவலைப்படாமல் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

கடந்த 13ம் தேதி தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் நீடிக்கிறது. மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகம் வளாகத்தில் நடந்து வரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பேராசிரியை சரஸ்வதி (இவர்தான் கூட்டமைப்பின் தலைவர் ஆவார்), வழக்கறிஞர் பாண்டிமாதேவி, பழனியம்மாள், லித் வின் மேரி, பிலோமினா, பொன்னுத்தாய் ஆகிய 6 பேருக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.  உயிரே போனாலும் பரவாயில்லை. போர் நிறுத்தம் ஏற்படும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று அவர்கள் உறுதியாக கூறியுள்ளனர். இதனால் பதட்டத்துடன் உண்ணாவிரதம் நீடிக்கிறது. நேற்று இயக்குநர் தங்கர்பச்சான், நடிகை ரோகிணி ஆகியோர் உண்ணாவிரதம் இருந்த பெண்களை சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

கிருஸ்ணா அம்பலவாணரின் சாகும்வரையிலான உண்ணாவிரதம் முடிவிற்கு வந்தது

வன்னியில் உடனடிப் போர்நிறுத்தம் அங்கே அல்லல்படும் மக்களுக்கு உடனடி உணவு மற்றும் மருத்துவ உதவி உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்த சுவிஸ் தமிழர் பேரவையின் இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் அவர்களின் உண்ணா நோன்பு 11 நாட்களின் பின் வியாழக்கிழமை 11.30 அளவில் முடிவுக்கு வந்தது.

வேலைநிறுத்தம்: பஸ்களை நிறுத்திய அதிகாரிகள், கடைகளை மூடிய போலீஸ்

23-bandh-tamilnadu.jpgதிமுக அழைப்பு விடுத்திருந்த பொது வேலைநிறுத்தம் தமிழகத்தை கடுமையாக பாதித்தது. அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளே டிப்போக்களை மூடி விட்டதால் பஸ்களை இயக்க வந்த டிரைவர்களுக்கும் அனுமதி தரப்படவில்லை. போலீஸாரே பல பகுதிகளில் கடைகளை மூடச் சொல்லியதாக கடைக்காரர்கள் புகார் கூறுகின்றனர். திமுக பந்த்தால் மக்கள் பெரும் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளனர்.

ஈழத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி, இன்று பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சில அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இருப்பினும் அதிமுக, மதிமுக, பாமக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்து விட்டன. போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக திரையுலகம், வணிகர்கள் சங்கம் உள்ளிட்டவை தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், இன்று காலை போராட்டம் தொடங்கியது. பொது வேலைநிறுத்தத்தின்போது போக்குவரத்து இயல்பு நிலையில் இருக்கும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி அறிவித்திருந்தார். இருப்பினும் நேற்று இரவு முதலே அரசுப் பேருந்துகள் ஓடவில்லை. குறிப்பாக வெளியூர்ப் பேருந்துகள் ஓடவில்லை. பயத்தின் காரணமாக தனியார் பேருந்துகளும் ஓடவில்லை. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசுப் போக்குவரத்துக் கழக டிப்போக்கள் மூடப்பட்டு விட்டன. பஸ் நிலையங்களில் உள்ள போக்குவரத்துக் கழக விசாரணை அறைகளும் மூடப்பட்டு விட்டன.

போக்குவரத்துக் கழக அதிகாரிகளே, டிப்போக்களை மூடியதால், பஸ்களை இயக்க வந்த அதிமுக உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த டிரைவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளன. திறந்திருந்த கடைகளையும் திமுகவினர், போலீஸாரோடு வந்து மூடச் சொல்லியதாக கடைக்காரர்கள் புகார் கூறியுள்ளனர். சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் திமுகவினர் பெரும் கும்பலாக வந்து கடைகளை மூடுமாறு கூறியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக போலீஸாரும் கடைகளை மூடுமாறு மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.ரயில் போக்குவரத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. பலத்த பாதுகாப்புடன் அவை இயக்கப்பட்டு வருகின்றன.