::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம்

j-j-j.jpgமுன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உதவியாளர் கார்த்திகேயன் நேற்று மாலை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயருக்கு இன்று (நேற்று) பகல் 12.30 மணி அளவில் “இன்-லேன்ட்” கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தை அனுப்பியவர் பெயரோ, முகவரியோ இல்லை.

கடிதத்தில் முன்னாள் முதல்-அமைச்சரை கொலை செய்து விடுவோம் என்று கடுமையான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதோடு முன்னாள் முதல்-அமைச்சருக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

புகார் மனுவோடு கொலை மிரட்டல் கடிதத்தின் நகலும் இணைக்கப்பட்டிருந்தது. கடிதத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு:-

நீங்கள் ரவுடி வக்கீல்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, அரசுக்கும், போலீசுக்கும் பிளவை உண்டாக்கும் கருவியாக இருக்கிறீர்கள். இலங்கை தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் பிளவை உண்டாக்கும் வகையில் உங்கள் செயல்பாடு உள்ளது. எனவே உங்களை மே 1-ந் தேதியில் இருந்து 4-ந் தேதிக்குள் குண்டு வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

நீங்கள் தேர்தல் பிரசாரம் செய்யும் போது சக்தி வாய்ந்த குண்டு வெடிக்கலாம். தேர்தல் பிரசாரத்தின் போது ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டது போல நீங்களும் கொலை செய்யப்படுவீர்கள். தேர்தல் பிரசாரத்திற்கு கிளம்பும் போது உங்கள் வீட்டு வாசலில் குண்டு வெடிக்கலாம். நீங்கள் கொலை செய்யப்படும் தினம் ஒவ்வொரு ஆண்டும் அரசு விடுமுறை தினமாக கடைப்பிடிக்கப்படும். எச்சரிக்கையாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் வாசகங்கள் உள்ளன. கடித வாசகங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்டிருந்தது.

இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளார்.

‘அடங்காப்பற்று’ மனித சங்கிலி போராட்டம் ஒத்திவைப்பு

adangappattu-2.jpg கனடாவின் ரொறன்ரோ நகரில் இன்று நடைபெறவிருந்த ‘அடங்காப்பற்று’ நிகழ்வும் மனிதச் சங்கிலிப் போராட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.

இது தொடர்பாக கனடியத் தமிழ் மாணவர்களும் கனடியத் தமிழர் சமூகமும் தெரிவித்திருப்பதாவது:

பல தரப்பினரது அவசர வேண்டுகோள்களுக்கு இணங்க ரொறன்ரோவின் நகரின் மத்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (05.05.09) நடைபெறவிருந்த ‘அடங்காப்பற்று’ மற்றும் மனிதச்சங்கிலி – 3 ஆகிய நிகழ்வுகள் தற்காலிகமாக பின்போடப்படுகின்றது. எமது தாயக அவலம் தீர்க்கும் வரை என்றும் அடங்காது எமது ‘அடங்காப்பற்று’.

‘அடங்காப்பற்று’ மற்றும் மனிதச்சங்கிலி – 3 ஆகிய நிகழ்வுகளின் மேலதிக விபரங்களை விரைவில் அறியத்தரப்படும். உறுதியும், ஓர்மமும் கொண்ட ஒற்றுமைப்பட்ட சமூகமாக எமது தாயக அவலம் தீரும்வரை தொடர்ந்தும் முன்னெறுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது

இன்னும் என்னென்ன எல்லாம் நடக்குமோ?-ராம கோபாலன்

ramagopalan.jpgஇலங்கைப் பிரச்சனையைக் காரணம் காட்டி இந்திய ராணுவ வாகனங்களையும் ராணுவத்தினரையும் தாக்குவது என்பது மன்னிக்க முடியாத தேச விரோதச் செயல் என்று இந்து முன்னணித் தலைவர் ராம கோபாலன் கூறியுள்ளார். கோயம்புத்தூரில் மே 2ம் தேதி விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் கட்சியினர் ராணுவ வண்டிகளை, ராணுவ வீரர்களைத் தாக்கியிருப்பது வேதனைக்கும், வெட்கத்துக்கும் உரிய விஷயம். இப்படி அசம்பாவிதம் நடக்கலாம் என்பதை மத்திய, மாநில அரசுகள் எதிர்பார்க்காமல் இருந்தது மிகுந்த கவலை அளிக்கிறது.

உளவுத்துறை முன்கூட்டியே அறிந்து உரிய நடவடிக்கையால் தடுத்து நிறுத்தாமல் இந்தத் தடவையும் கோட்டை விட்டுள்ளது. இது ஆபத்தானது. இலங்கையில் நடந்து வருகிற அட்டூழியங்கள் கடும் கண்டனத்திற்குரியது என்பதில் சந்தேகமே இல்லை. அந்நாட்டில் போரால் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு அவர்கள் உரிமையோடும் தன் மானத்தோடும் வாழ வழி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இலங்கைப் பிரச்சனையைக் காரணம் காட்டி பாரத ராணுவத்தைத் தாக்குவது என்பது மன்னிக்க முடியாத தேச விரோதச் செயல். இந்தச் சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு மேலாகியும் மாநில அரசியல் கட்சிகள் எதுவும் இதற்குக் கண்டனம் தெரிவிக்காதது அரசியல் சந்தர்ப்பவாதத்தின் உச்சகட்டம்.

கோவையில் முன்பு காவல்துறையினர் தாக்கப்பட்டபோது பொறுப்பில்லாமல் வேடிக்கைப் பார்த்ததினால்தான் பெரும் கலவரம் மூண்டது. அதை அன்றே வேருடன் கிள்ளி எறியாமல் விட்டதால் இன்று ராணுவமே தாக்கப்பட்டிருக்கிறது. தாக்கியவர்கள் வெளிநாட்டவர்களாக இருந்தால் திருப்பித் தாக்க முடியும். வெறி பிடித்த சிலர் இப்படித் தாக்கியது பாரதத்தின் இறையாண்மைக்கு விடப்படுகிற மிகப்பெரிய சவால். இந்தச் சம்பவம் நடந்தவுடன் விடுதலைப் புலி ஆதரவு இணைய தளங்களில் மிகுந்த மகிழ்ச்சியோடு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது வருங்காலத்தில் என்னவெல்லாம் நிகழ முடியும் என்பதற்கு இது முன்னோட்டமாகத் தெரிகிறது.

கிட்டத்தட்ட உள்நாட்டு யுத்தத்திற்கான ஒத்திகையோ இது என்று பலர் சந்தேகிக்கிறார்கள். வருங்காலத்தில் பாதுகாப்பு அமைப்புகள் தாக்கப்படலாம். வானொலி, தொலைபேசி போன்ற தொலைத் தொடர்பு சாதனங்கள் சேதமாக்கப்படலாம், மின்சாரம், சாலைகள் துண்டிக்கப்படலாம். பிரிவினைவாதிகளும், பயங்கரவாதி களும் கைகோர்த்துக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யத் துணிவார்கள். மத்திய, மாநில அரசுகள் இத்தகைய புல்லுருவிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முன்வர வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும், ஊரிலும் உள்ள தேசபக்த இளைஞர்கள் தான் இதனை எதிர்த்துப் போராடி முறியடிக்க முடியும். நாட்டிற்கு ஏற்படும் இதுபோன்ற ஆபத்துகளை எதிர்த்துப் போராட எவ்விலை கொடுக்கவும் ஆயத்தமாக இருப்பது காலத்தின் கட்டாயம் என்று கூறியுள்ளார் ராம கோபாலன்.

கருணாநிதிக்கு நிரந்தர ஓய்வு கொடுங்கள்-ஜெ

j-j-j.jpgகருணாநிதியைப் பார்ப்பதற்கு எனக்கு பயமில்லை. அவருக்குத் தான் என்னை நேருக்கு நேர் சந்திக்க பயம். நான் சட்டசபைக்கு வருகிறேன் என்று தெரிந்தாலே என்னைப் பார்க்கப் பயந்து கொண்டு தனக்கு முன்பு ஏராளமான கோப்புகளை அடுக்கி வைத்து முகத்தை மறைத்துக் கொள்வார் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,

இன்று காலை பத்திரிகைகளில் பரபரப்பான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். அது என்னவென்றால், நேற்று சென்னை விமான நிலையத்தில் நானும், கருணாநிதியும் நேருக்கு நேராக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவானது. இதை எப்படி தவிர்ப்பது என்று காவல் துறை அதிகாரிகள் பதற்றமடைந்தார்கள், கவலை அடைந்தார்கள் என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. ஏன், கருணாநிதியும், நானும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொண்டால் என்ன? அதனால் என்ன ஆகப் போகிறது? நேருக்கு நேராக கருணாநிதியைப் பார்ப்பதற்கு எனக்கொன்றும் பயம் கிடையாது. ஆனால், நேருக்கு நேர் என்னை சந்திப்பதற்கு கருணாநிதி தான் பயப்படுகிறார்.

அதனால்தான் சட்டப்பேரவையில் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் எதிரெதிரே அமரும் வகையில் இருந்த இருக்கையை 15 அடி தொலைவுக்கு மாற்றிவிட்டார். நான் பேரவைக்கு வருகிறேன் என்று தெரிந்தாலே என்னைப் பார்க்கப் பயந்து, தன் முன்பு ஏராளமான கோப்புகளை அடுக்கிவைத்துக் கொள்வார் கருணாநிதி.

கருணாநிதியால் இப்போது கடமையாற்ற முடியவில்லை. முதலமைச்சர் செய்ய வேண்டிய பணிகளை செய்ய முடியவில்லை. ஆகவே, நீங்கள் கருணாநிதிக்கு நிரந்தர ஓய்வு அளிக்க வேண்டும். என்றார் ஜெயலலிதா.

உண்ணாவிரதம் வெற்றி பெற்றிராதுவிட்டால் ஈழத்து திலீபன் கல்லறையருகே இருந்திருப்பேன் – கருணாநிதி

20-karunanithi.jpg இலங்கையில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி நான் இருந்த உண்ணாவிரதம் வெற்றிபெற்றிராதுவிட்டால் ஈழத்து திலீபன் கல்லறைக்கு அருகில் தற்போது நானும் இருந்திருப்பேனென தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார்.

யாருக்கும் தெரிவிக்காமல் உண்ணாவிரதம் இருந்ததற்கான காரணத்தை விளக்கி முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கைப் பிரச்சினைக்காக ஏப்ரல் 27 ஆம் திகதி கருணாநிதி திடீரென அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். இது தொடர்பில் அவர் எழுதியுள்ள கடிதம்:

தமிழர்களைக் காத்திட எனது உயிர் பயன்பட்டால் என்ன என்றுதான் யாருக்கும் தெரிவிக்காமல் உண்ணாவிரத முடிவை எடுத்தேன். வீட்டில் உள்ளவர்களுக்குக் கூட தெரிவிக்கவில்லை.

உண்ணாவிரதம் வெற்றிபெற்றதால் தான் உங்களோடு இருக்கிறேன். இல்லாவிட்டால் விருதுநகர் சங்கரலிங்க கல்லறையின் அருகிலோ ஈழத்து திலீபன் கல்லறைக்கு அருகிலோதான் இருந்திருப்பேன்.

பெரியார் தி.க.வினரை விடுதலை செய்யவேண்டும்; தா.பாண்டியன்

koovai.jpgஇந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுத்து, ஈழத்தில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு இந்திய அரசுதான் காரணம் என்ற கோபம் தமிழகம் முழுவதும் பெருக்கெடுத்து நிற்கிறது. இதன் வெளிப்பாடாகத்தான் கோவைக்கு அருகில் ராணுவ லாரிகளை மக்கள் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள். இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்து கொல்லப்படுவதால் எழுந்த கோபம் தான் இது என்பதை, இந்த நேரத்தில் அரசாங்கங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மாறாக தொடர்புடையவர்கள் என்று கூறி கைது செய்தல், கடுமையான அடக்குமுறைகள் ஆகியவற்றை கண்டிக்கிறோம். கோவையில் பெரியார் திராவிடர் கழகத்தின் முன்னணித்தலைவரான ராமகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

நேபாள பிரதமர் பிரச்சண்டா ராஜிநாமா

prachanda.jpgநேபாளப் பிரதமர் பதவியில் இருந்து பிரச்சண்டா இன்று ராஜிநாமா செய்தார். நேபாளத்தின் தலைமை இராணுவத் தளபதி பதவியிலிருந்து ஜெனரல் ருக்மாங்கத கடாவல் (வயது 61) நீக்கப்படுவதாக பிரச்சண்டா நேற்று அறிவித்தார். புதிய தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் குல்பகதூர் கட்கா நியமிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.

ஆனால், தன்னைப் பதவி நீக்கம் செய்யப் பிரதமருக்கு அதிகாரம் கிடையாது என்று கூறிய கடாவல், பிரதமரின் முடிவுக்கு எதிராக என்ன செய்வது என்பது குறித்து துணைத்தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரச்சண்டாவின் இந்த முடிவை ஏற்க முடியாது என்று அறிவித்த கூட்டணிக் கட்சிகள், அரசுக்கு வந்த ஆதரவை வாபஸ் பெற்றன. இதனால், அரசு கவிழ்வதுடன், இராணுவப் புரட்சியும் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், பிரதமர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதாக பிரச்சண்டா அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் மீண்டும் உண்ணாநிலைப் போராட்டம்

au.jpgதமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கம் நடத்திவரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்தக்கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் அவுஸ்திரேலியா மற்றும் அனைத்துலகத்தின் தாயக தமிழர்களுக்கு எதிரான மௌனத்தை கண்டித்தும் அவுஸ்திரேலியாவில் சுதாகரன் தனபாலசிங்கம் மீண்டும் உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கியுள்ளார்.

இலங்கை அரசுக்கு ஆதரவானோர் தமிழகத்தில் இருக்கமுடியாது இன்று முதல் 8 இடங்களில் விழப்புணர்வுத்தேர்தல் பிரசாரம்

தமிழ் துரோகிகளை தமிழகத்தை விட்டு துரத்துவோம். இதை மையமாக வைத்து தமிழகத்தில் இன்று திங்கட்கிழமை முதல் எட்டு இடங்களில் விழிப்புணர்வு தேர்தல் பிரசாரத்தை திரையுலக தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கம் மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

காஞ்சிபுரத்தில் முதல் கூட்டம் நடைபெறும் எனவும் பாரதிராஜா கூறியுள்ளார். சென்னபோர் பிரேம் பிரிவியூ தியேட்டரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பாரதிராஜா. அப்போது அவர் கூறுகையில்; திரைப்பட கலைஞர்களுக்கு சமூகப்பார்வை இருக்க வேண்டியது அவசியம். தமிழக அரசியலில் சினிமாவுக்கு பெரும் பங்கு உண்டு. திரைப்படத்துறையிலிருந்து இயக்கம் ஆரம்பித்து அரசியல் கட்சியாகி ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள்.  இன்றைய சூழ்நிலையில் தமிழ் உணர்வு மங்கிப்போய்விட்டது.

இந்த தேர்தல் பிரசாரத்தில் இயக்குநர்கள் ஆர்.கே. செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன், சீமான், சேரன், அமீர், சரவண சுப்பையா, செல்வபாரதி, பிரவீண்காந்த், மனோஜ்குமார், மணிவண்ணன், நடிகர் வடிவேலு, கவிஞர் அறிவுமதி, கவிஞர் சினேகன் உட்பட ஏராளமான இணை,துணை உதவி இயக்குநர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் திங்கட்கிழமை எங்களது பிரசார பயணத்தை தொடங்குகிறோம்.

உலகில் எந்த மூலையில் தமிழனுக்கு இன்னல்கள் ஏற்பட்டாலும் அதைத் தட்டிக்கேட்கவும் தோள் கொடுக்கவும் முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவும் புறப்படுகிறோம்.தமிழ் மக்களுக்கு இன உணர்வு ஏற்பட வேண்டும் என்பதுதான் எங்கள் பிரசாரத்தின் நோக்கம்.தமிழ் துரோகிகளை தமிழகத்திலிருந்து ஒழிப்போம் .விரட்டியடிப்போம். தமிழ் இனத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் சிங்கள இனவாத அரசுக்கு ஆதரவுதரும் எந்த துரோகியும் தமிழகத்தில் இருக்கமுடியாது.

தமிழர்களின் முதுகில் குத்தியுள்ள கட்சிகளை எதிர்த்து நாங்கள் பிரசாரம் செய்கிறோம். குறிப்பிட்ட கட்சி என்று இல்லை. துரோகிகள் அனைவரையும் நாங்கள் எதிர்க்கிறோம்.மத்திய கிழக்கில் முன்பு யூதர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை விடமோசமான முறையில் தமிழர்களுக்கு இன்று அநீதி இழைக்கப்பட்டுள்ளது.  இன்று தொடங்கும் எங்கள் தேர்தல் பிரசாரம் 11 ஆம் திகதி வரை நடைபெறும். தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வரும் சோனியா காந்திக்கு எங்களது எதிர்ப்பை எந்த முறையில் காட்டவேண்டுமோ அந்த வகையில் காட்டுவோம் என்றார்.

அமெரிக்கா கிடக்கட்டும்;அவசரமாக இந்தியா அணுகுண்டு தயாரிக்க வேண்டும்: அத்வானி

india.jpgபா. ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி டெல்லியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ’’மற்றவர்கள் நம்மை விமர்சித்தாலும் பா.ஜனதா எப்போதுமே அணுகுண்டு தயாரிப்பதை ஆதரித்து வந்திருக்கிறது.

1961, 1971, 1999 ஆகிய ஆண்டுகளில் நாம் பாகிஸ்தானை தோற்கடித்தோம். இதே போன்ற நிலையில் சீனாவுடன் மோத நேர்ந்தால் இந்தியாவிடம் கட்டாயம் அணுகுண்டு இருக்கவேண்டும். அப்போதுதான் 1952-ம் ஆண்டு இந்திய- சீனப் போரின்போது ஏற்பட்ட தோல்வி இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

அணுகுண்டு தொடர்பாக 1964-ம் ஆண்டு பாரதீய ஜனசங்கம் வாரணாசியில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அப்போது அமெரிக்கா கோபமாக இருப்பதாக நம்மை விமர்சனம் செய்தார்கள்.

1998-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி அமைந்த சில நாட்களில் பொக்ரானில் அணுகுண்டு வெடித்து சோதனை செய்யப்பட்டது. இந்தியா முன்னேற வேண்டும் என்றால், முக்கியமான முடிவுகளை எடுக்கவேண்டும். அமெரிக்கா என்ன நினைக்குமோ என்ற சிந்தனை இதில் தவிர்க்கப்படவேண்டும்’’ என்று கூறினார்.