::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

மதத்தின் அர்த்தத்தை திரிப்பதை போப் கண்டித்துள்ளார்

pope_afp.jpgமத்திய கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் போப் பெனடிக்ட், மதத்தை அர்த்தம் திரித்து கற்பிப்பதை கண்டித்துள்ளார். ஜோர்டான் தலைநகர் அம்மானில் மசூதி ஒன்றில் முஸ்லிம் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இவ்வாறு அர்த்தத்தை திரிப்பதனால் சமுதாயத்தில் பாகுபாடுகள் மற்றும் வன்முறை ஏற்படுவதாக கூறினார்.

இதற்கிடையே, கடந்த 2006 ஆம் ஆண்டு இஸ்லாம் வன்முறையானது என கிறிஸ்துவ பேரரசர் ஒருவர் கூறியதாக போப் பெனடிக்ட் கூறினார், அதற்கு பின்னர் அவர் வருத்தம் தெரிவித்தார். அவ்வாறு போப் பெனடிக்ட் வருத்தம் தெரிவித்தமைக்கு ஜோர்டன் மன்னரின் மூத்த ஆலோசகர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் முஸ்லிம்கள் வருத்தம் அடைந்ததாகவும், எனினும் அந்த பேரரசரின் கருத்தை போப் பெனடிக்ட் கொண்டிருக்கவில்லை என்பதை முஸ்லிம்கள் ஏற்பதாகவும் அவர் கூறினார்.

இன்று சென்னையில் கருணாநிதியுடன் இணைந்து சோனியா பிரசாரம்

06-sonia.jpgகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை சென்னை வரவுள்ளார். முதல்வர் கருணாநிதியும், அவரும் இணைந்து பிரசாரப் தீவுத் திடலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். இக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகின்றது. சோனியா வருகைக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாலும், போராட்டங்களை அறிவித்துள்ளதாலும், பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

பாக். – அமெரிக்கா கூட்டு இராணுவ நடவடிக்கை

w_news.jpgபாகிஸ்தான் வடமேற்கிலிருந்து 5 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு பாகிஸ்தானின் வடமேற்கில் இருந்து 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளி யேறியுள்ளதாக ஐ. நா. அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெ ரிக்காவும், பாகிஸ்தானும் கூட்டு இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சிவிலியன்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்டுள்ளதாக சீ. என். என். ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நிலைமை எப்படி இருந்தாலும் தலிபான்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடருமென பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் வட மேற்கில் பழங்குடியினர் வாழும் பகுதியில் தலிபான் தீவி ரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள அமெரிக்க இராணுவத்தினர் மீது இவர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இதனால் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும், பாகிஸ்தானும் கூட்டாக சேர்ந்து இராணுவ நடவடிக்கை எடுத்து வருகிறது. தலிபான்கள் மீது அமெ ரிக்க இராணுவம் ஏவுகணைகளை வீசியும் பீரங்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு வசிக்கும் மக்களை கேடயமாக வைத்து தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர்.

கடந்த 2 நாட்களாக வடமேற்கு பாகிஸ்தானில் இராணுவ தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. அதில் 170 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது.

இராணுவ தாக்குதல் காரணமாக வட மேற்கு பகுதியில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர். அவர்கள் அகதிகளாக மலைகளிலும் காடுகளிலும் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். தொடர்ந்து மக்கள் வெளியேறிய வண்ணம் உள்ளனர்.

ஆனால், மக்களை வெளியேற விடாமல் தீவிரவாதிகள் தடுத்து வருகிறார்கள். ஏற்கனவே இராணுவ நடவடிக்கை காரணமாக 2 இலட்சம் மக்கள் வெளியேறி விட்டனர். தற்போது மேலும் 3 இலட்சம் பேர் அங்கிருந்து வெளியேறி வருவதாக ஐ. நா. அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே தலிபான்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை நீடிக்கும் என்று பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி அறிவித்துள்ளார். வடமேற்கு பகுதியில் 45 ஆயிரம் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியையும் பிரதமர் யூசுப் ரசாக் கிலானியையும் குடும்பத்தோடு கொல்லப்போவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். தொலைபேசி மூலம் பேசிய தலிபான்களின் பேச்சாளரொருவர், “முஸ்லிம்கள் என்ற வகையில் போராட்டத்திற்கு உதவுவார்களென எதிர்பார்த்தோம். முடியவில்லை. இவர்களை பழிவாங்கியே தீருவோம்” எனக் கூறியதாக இணையச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனையிலிருந்து கருணாநிதி வீடு திரும்பினார்.

karunanithi.jpgஉடல் நலக்குறைவு காரணமாக கடந்த 3ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் கருணாநிதி உடல் நலம் தேறியதைத் தொடர்ந்து நேற்று இரவு வீடு திரும்பினார். கடந்த 3ம் தேதி முதல்வருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. கூடமே முதுகு வலியும், தொண்டை வலியும் ஏற்படவே அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு முதல்வர் கருணாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இரவு ஒன்பதரை மணியளவில் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

இந்தியாவின் மேற்குக் கரையூடாக நுழைய விடுதலைப்புலிகள் முயற்சிக்கலாம்: தீவிர கண்காணிப்பு.

indiannavyship.jpg இந்தியாவின் மேற்குக் கரை ஊடாக இந்தியாவுக்குள் நுழைவதற்கு புலிகள் முயற் சிப்பதாக இந்தியக் கடற்படையின் தென்பிராந்திய கடற்படைக் கொமடோர் வைஸ் அட் மிரல் எஸ். கே.டம்லே தெரிவித்துள்ளார். அதனால் மேற்குக் கடற்பிராந்தியத்தில் கடும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

இந்திய மேற்குக்கரையின் சகல பகுதிகள் ஊடாகவும் இந்தியாவுக்குள் ஊடுருவ இலங்கையர்களும் விடுதலைப்புலிகளும் முயற்சித்து வருகிறார்கள் என்று பொலிஸ் மற்றும் ஏனைய பாதுகாப்பு முகவர்கள் கடற்படையினருக்குத் தெரியப்படுத்தியிருந்தனர் எப்படி இருந்தாலும் இந்தப் பிரச்சனை இன்று உருவானதல்ல. இந்தியாவுக்குள் ஊடுருவும் சாத்தியங்கள் எப்போதும் இருந்து வருகின்றன.

சட்டவிரோதமாக நுழையும் எந்த ஒரு முயற்சியையும் முறியடிக்கும் விதத்தில் நாங்கள் உயர் எச்சரிக்கையுடன் உள்ளோம். இந்தியக் கடற்பரப்பில் புலிகளின் எந்தவொரு கப்பலையும் நாங்கள் இதுவரை சந்திக்கவில்லை  என்றும் அந்த சிரேஷ்ட கடற்படை அதிகாரி  மேலும் கூறினார்.

இலங்கைக் கடற்படையினர் தங்களது நாட்டின் பாதுகாப்பிற்காக தாங்களாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் தென்பிராந்திய கடற்படைக்கும் இலங்கைக் கடற்படைக்கும் இடையில் நேரடியான இடைத் தொடர்புகள் எதுவும் இல்லை என்றும் எஸ்.கே.டம்லே மேலும் சொன்னார். பனாஜியில் இந்தியக் கடற்படையின் “மண்டோவி” என்ற கப்பலின் வெள்ளோட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே வைஷ்அட்மிரல் டம்லே மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கைக்கு இந்திய இராணுவம் செல்வது எளிதல்ல – இந்திய பிரதமர்

karunanithi-apalo-hos1.jpgஇலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கு இராணுவத்தை அனுப்புவது என்பது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் சென்னையில் செய்தியாளர்கள் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்றும், சுயாதீனம் கொண்ட நாட்டில் தலையிடுவதில் வரையறைகள் உள்ளன என்றும் அவர் கூறினார். அத்தோடு இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ வேண்டும் என்று இந்தியாவில் உள்ள அனைவருமே விரும்புவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு தேடப்பட்டு வரும் குற்றவாளி என்றும், ஆனால் தற்போது அதுவல்ல பிரச்சனை என்றும், இலங்கை தமிழர்கள் எல்லா நலனும் பெற்று நன்றாக வாழ வேண்டும் என்பது தான் இப்போது முக்கியமான விஷயம் என்றும் பிரதமர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது கூறினார்.

அத்தோடு, இலங்கை பிரச்சனைக்கு அரசியல் தீர்வே சரி என்பதை இலங்கை மக்களும், அரசும் உணர வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டார்.

வேறு கூட்டணி பற்றி சிந்திக்க மாட்டேன்: ஜெயலலிதா பேட்டி

j-j-j.jpgவட சென்னை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வியாசர்பாடியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

ராகுல்காந்தி டெல்லியில் கூறும்போது காங்கிரஸ் கட்சியுடன் ஒத்த கருத்துள்ள கட்சி அ.தி.மு.க. என்று கூறியிருக்கிறாரே?

அப்படி சொல்லவில்லை என்று அவர்களின் கட்சி தலைமை அறிவித்து இருக்கிறதே?

தேர்தலுக்கு பிறகு கூட்டணி தொடர்பாக காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி தலைவர்களிடம் பேசுவீர்களா?

நாங்கள் 3-வது அணியில் இருக்கிறோம். 3-வது அணியில் இருக்கும் போது வேறு ஒரு கூட்டணி பற்றி சிந்திக்கும் ஆள் நான் இல்லை. அப்படி பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இப்போது என் கவனம் முழுவதும் தேர்தலில் 40-க்கு 40 இடங்கள் பெறுவதிலே தான் இருக்கிறது.

புலிகளின் அனுபவத்திலிருந்து பாடம் கற்ற மக்கள் விடுதலை இராணுவம்

nilakannikal.jpgஇலங் கையில் விடுதலைப் புலிகளின் அனுபவத்தின் மூலம் தாங்கள் பாடம் கற்றுள்ளதாக இந்தியாவின் பயங்கரவாதக் குழுக்களின் பட்டியலில் உள்ள அமைப்பான மக்கள் விடுதலை இராணுவம் தெரிவித்துள்ளது. எமது இலக்கை வென்றெடுக்க இராணுவ பலம் மட்டும் போதாது. ஆதலால் எமது போராட்டத்தை நாம் முழு அளவில் சர்வதேச மயப்படுத்தவுள்ளோம். அத்துடன் இந்தியமக்களின் ஆதரவையும் திரட்டி வருகின்றோம் என்று மக்கள் விடுதலை இராணுவத்தின் உப தலைவர் மனோகர் மயூன்நுகோபா நிருபர்களிடம் தெரிவித்ததாக “ரெலிகிராப்’ பத்திரிகை நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை இராணுவத்தின் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணியின் பயிற்சிக்கட்டளை தலைமையகத்தில் வியாழக்கிழமை இக் கருத்தை மனோகர் மயூன் கூறியுள்ளார். மணிப்பூர் மியன்மார் எல்லையில் இத்தலைமையகம் அமைந்துள்ளது.

மோதலுக்கு தீர்வு காண அரசியல் பேச்சு வார்த்தையின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட மனோகர் மயூன், அதேசமயம் நிகழ்ச்சி நிரலானது “இறைமை’யாக இருக்காவிடின் மக்கள் விடுதலை இராணுவம் புரட்சிகரமான மக்கள் முன்னணி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாது என்று உறுதியாகக் கூறியுள்ளார். மணிப்பூரில் தனிநாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் 1978 செப்டெம்பரில் மக்கள் விடுதலை இராணுவம் உருவாக்கப்பட்டது.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் பிரதமர் & கருணாநிதி ஆலோசனை

karunanithi-apalo-hos.jpgஅப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் கருணாநிதியை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாலை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது இருவரும் தேர்தல் குறித்து முக்கிய பேச்சு நடத்தினர். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உடனிருந்தார்.

மேலும், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவர்னர் பர்னாலா, முன்னாள் மத்திய அமைச்சர் சிபுசோரன் ஆகியோரிடமும் பிரதமர் நலம் விசாரித்தார். பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று பிற்பகல் 2.30க்கு வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியிடம் கேட்டறிந்தார்.

அவருடன் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் எம்பி, அமைச்சர் ஆற்காடு வீராசாமி, காங்கிரஸ் பொருளாளர் சுதர்சனம், தயாளு அம்மாள் ஆகியோர் இருந்தனர். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு, பிரதமரும் முதல்வரும் தனியே ஆலோசனை நடத்தினர். தேர்தல் குறித்த அந்தப் பேச்சின் போது முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மட்டும் உடனிருந்தார். முதல்வர் அறையில் பிரதமர் 15 நிமிடங்கள் இருந்திருக்கிறார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அமெரிக்க இராணுவத்தின் தாக்குதலை கண்டித்து ஆப்கானிஸ்தான் வீதிகளில் பாரிய ஆர்ப்பாட்டம்

w_news.jpgஅமெரிக்க இராணுவத்தை வெளியேறுமாறு ஆப்கானிஸ்தானில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடந்தது. ஆப்கானிஸ்தானின் மேற்கு நகரான பராவில் சென்ற வியாழக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் பிரவேசித்த எட்டு வருடங்களில் நடந்த மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் இதுவாகும். அமெரிக்கப் படைகள் நடாத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதைக் கண்டிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அமெரிக்காவுக்குச் சாவு, ஆக்கிரமிப்புப் படையே வெளியேறு என ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆவேசமாகக் கத்தினர். அரச கட்டடங்களின் ஜன்னல்கள் கதவுகளை உடைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அலுவலகங்கள் சிலவற்றுக்கும் தீவைத்தனர். இவர்களை அடக்க பொலிஸார் முயன்ற போது பொலிஸார் மீது கற்கள் போத்தல்கள் பொல்லுகளை வீசினர். நிலைமை மோசமடைந்த போது பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தனர். இதில் ஒருவர் காயமடைந்தார். மூன்று பேர் சன நெரிசலில் சிக்கிக் காயமடைந்தனர். வைத்தியசாலையில் மூன்றுபேர் சிகிச்சை பெறவந்ததாக டாக்டர்கள் கூறினர்.

நேற்று முன்தினம், அமெரிக்க இராணுவம் நடாத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் யார் என்பதை சி.ஐ.ஏ.உம் ஆப்கானிஸ்தான் இராணுவமும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக் காரர்கள் கூறினர்.

147 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் கிடைத்துள்ள போதும் அதை ஊர்ஜிதம் செய்ய முடியாதுள்ளதாக மாகாண ஆளுநர் தெரிவித்தார். 20 சிறுவர்களின் பிரேதங்களை தாம் கண்டதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிலர் கூறினர். பொதுமக்களின் உச்சக் கட்டப் பாதுகாப்பை உறுதிசெய்ய அமெரிக்கப் படைகள் உத்தரவாதம் தந்துள்ளதாக ஜனாதிபதி ஹமித் அல் கர்ஸாயி சொன்னார்.

அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட்கேட்ஸ் இது பற்றிக் கூறுகையில் தலிபான்கள் வீசிய கைக்குண்டுகளில் ஏராளமான பொது மக்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்கப் படைகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்று தலிபான்கள் பொதுமக்களைக் கொல்வதாகவும் ரொபேர்ட் கேட்ஸ் சொன்னார். என்றுமில்லாதவாறு ஆப்கானிஸ்தானியர்கள் ஆவேசத்துடனும் ஆத்திரத்துடனும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். பொதுமக்கள் பலியானமைக்கு அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும்.

ஆக்கிரமிப்புப் படை ஆப்கானைவிட்டு வெளியேர வேண்டும். அதுவரை ஆர்ப்பாட்டங்கள் தொடருமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். பொதுமக்கள் பலியாவது ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஹமித் அல் கர்ஸாயிக்கு பாதிப்பை ஏற்படுத்துமென அவதானிகள் கூறுகின்றனர்.