::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

ஊடகவியலாளர்கள், பெண்கள் உட்பட 21 பேர் பிலிப்பைன்ஸில் படுகொலை தேர்தல் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யச் சென்றவேளை சம்பவம்

பிலிப்பைன்ஸின் மகுண்டனோ மாகாணத்தில் 21 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டோர் மகுண்டனோ மாகாண உள்ளூர் அரசியல் வாதிகளின் ஆதரவாளர்களும், ஊடகவியலாளர்களுமாவர். உள்ளூர் ஆட்சி தேர்தல்களுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்றோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டனர். தீவிரவாத அமைப்பு கடந்த திங்கட்கிழமை இவர்களை ஆயுதமுனையில் கடத்திச் சென்றதாக அறிவிக்கப்படுகின்றது.

படுகொலை செய்யப்பட்ட 21 பேரின் சடலங்களைக் கண்டெடுத்ததாகக் கூறிய பொலிஸார் இவர்களில் 13 பேர் பெண்களென்றும் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுத்ததாகவும் கூறினர். பிரேதங்களின் தலைகள் துண்டிக்கப்பட்டும், உருக்குலைந்த நிலையிலும் காணப்பட்டன.

கொலைசெய்யப்பட்டோரில் உள்ளூர் அரசியல் வாதியின் மனைவியும் அடங்குகின்றார். மாகாண ஆளுநருடன் தொடர்புகொண்ட ஆயுததாரிகள் இவர்களைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுவதை ஆளுநர் முற்றாக நிராகரித்துள்ளார். தேர்தலில் வாக்களிக்கக் கூடாதென முஸ்லிம் அமைப்பொன்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்ததாகப் பொலிஸார் கூறினர்.

அரசியல் நோக்கங்களுக்காக இக்கொலைகள் நடந்துள்ளன. ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமைக்கு பிலிப்பைன்ஸ் அராசங்கம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸில் அடுத்த வருடம் பொதுத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இதை முன்னிட்டு உள்ளூராட்சித் தேர்தல்கள் சில மாகாணங்களில் நடத்தப்படவுள்ளன. இத் தேர்தலில் வாக்களிக்கவோ போட்டியிடவோ கூடாதென பிரிவினைவாத அமைப்புக்கள் கோரியுள்ளன.

பாகிஸ்தான் பிரதமரின் மனைவி மீது குற்றச்சாட்டு

பாகிஸ்தான் பிரதமர் கிலானியின் மனைவி பவுசியா வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாமல் இழுத்தடித்தார் என்றும் இது தொடர்பான வழக்கில் அவருக்கு சாதகமாக அதிகாரிகள் நடந்துகொண்டனர் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.

பவுசியா, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வங்கியில் இருந்து 20 கோடி ரூபாய் கடன் வாங்கினார். ஆனால் பணத்தை ஒழுங்காக செலுத்தாததால் அந்த கடன் 57 கோடி ரூபாயாக உயர்ந்து விட்டது. அதன்பிறகு வட்டியில் சலுகை காட்டினால் பணத்தை திருப்பி செலுத்துவதாக அவர் வங்கிக்கு விண்ணப்பித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் அவர் 4 கோடியே 55 லட்சம் ரூபாய் மட்டுமே கட்டினால்போதும் என்று அதிகாரிகள் சலுகை காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த குற்றச்சாட்டை பிரதமர் கிலானி மறுத்து இருக்கிறார்.

ஈரான் ஜனாதிபதி பிரேஸில் பயணம்: இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் நேற்று திங்கட்கிழமை பிரேஸில் பயணமானார். இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் பிரேஸில் ஜனாதிபதி ஈரான் ஜனாதிபதியை வரவேற்கவுள்ளார். பிரதான வர்த்தக உடன்படிக்கையில் இருதலைவர்களும் கையெழுத்திட்ட பின்னர் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்ச்சிகளில் ஈரான் தலைவர் பங்கேற்கவுள்ளார்.

பிரேஸில் பல்கலைக்கழகத்தில் உரையாற்றவும் பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொள்ளவும் பிரேஸில் காங்கிரஸில் உரையாற்றவும் ஈரான் ஜனாதிபதி அழைத்துச் செல்லப்படவுள்ளார். மேற்கு நாடுகளின் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் பிரேஸிலுடனான உறவை வளர்ப்பதில் ஈரான் அக்கறை செலுத்தியுள்ளது.

இஸ்ரேல் ஜனாதிபதி ஷிமோன் பெரஸ் அண்மையில் பிரேஸில் சென்ற வேளை இவரது விஜயத்தை எதிர்த்துப் பாரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். ஈரான் யுரேனியத்தை மின்சாரத் தேவைக்காகவும் அமைதியான முறையிலும் கையாள்வதாக கடந்த செப்டம்பர் மாதம் ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு பிரேஸில் ஜனாதிபதி தெரிவித்தார். இதிலிருந்து இவ்விரு நாடுகளினதும் உறவுகள் விரிவடைய ஆரம்பித்துள்ளன.

பிரேஸில் பயணம் குறித்து ஈரான் ஜனாதிபதி கடந்த வெள்ளிக்கிழமை கூறியபோது இருநாடுகளினதும் பல்வேறுபட்டதுறைகளுக்கு இரு நாடுகளினதும் ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தினார். மேற்கத்தேய நாடுகள் ஏனைய நாடுகளின் விஞ்ஞான வளர்ச்சியைத் துண்டிக்க முயற்சிப்பதாகவும் அஹ்மெதி நெஜாத் குறிப்பிட்டார்.

பிரேஸில் மக்கள் உள்ள பக்கம் ஈரான் மக்கள் உள்ளனர். அப்பாவிப் பொது மக்களுக்கெதிரான ஷியோனிஸவாதிகளின் தாக்குதல்களைக் கண்டிக்கும் விடயத்தில் பிரேஸிலியர்களும் ஈரானியர்களும் ஒற்றுமையுடனுள்ளதாகவும் ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டார். மேற்கு நாடுகளின் அழுத்தங்கள் அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாத ஈரான் ஜனாதிபதி தென்னமெரிக்க நாடுகளுடனான உறவை வளர்ப்பதில் அக்கறையுடனுள்ளார். யுரேனியத்தை செறிவூட்டும் ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக இஸ்ரேலும் மேற்குலக நாடுகளும் சந்தேகிக்கின்றன.

இவ்வாறான நிலையில் பிரேஸில் ஈரானுடன் உறவு கொள்வதை அந்நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாப்புப் பெற பிரேஸில் ஈரானுடன் தொடர்புகளைப் புதுப்பிப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது. 2010 ல் ஈரானுக்கு வருமாறு பிரேஸில் ஜனாதிபதியை அஹ்மெதி நெஜாத் அழைப்புவிடுப்பார்

நாளை நடப்பதை யார் அறிவார்? பிரதமராவது பற்றி ராகுல் காந்தி கருத்து

19rahul.jpgவருங்கால பிரதமராக தன்னை நினைக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் என்ன நிகழும் என்று எவராலும் கணிக்க முடியாது. அப்படியிருக்க வருங்கால பிரதமராக எப்படி என்னை நினைக்கிறீர்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பினார். விஜயவாடாவில் புதன்கிழமை கல்லூரி விழாவில் பங்கேற்ற ராகுல், அங்கு மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.

நாட்டின் பிரதமராக யார் வேண்டுமானாலும் வரலாம். அப்படியிருக்கையில் தயவுசெய்து என்னை எதிர்கால பிரதமராக நினைக்க வேண்டாம் என்றார். தற்போது பிரதமராக உள்ள மன்மோகன் சிங் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார். சிறந்த பிரதமர் நிறைவேற்ற வேண்டிய அனைத்துப் பணிகளையும் அவர் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்” என்றார்

பொலிவியாவில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்: உடன் நடவடிக்கை வேண்டுமென்கிறது யுனிசெப்

பொலிவியாவில் இடம் பெறும் சிறுவர்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு யுனிசெப் அந்நாட்டு அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.

இவ்வாறான அநியாயங்களில் ஈடுபடும் குற்றவாளிகளில் பெருமளவானோர் சட்டத்தின் முன் கொண்டுவரப்படாதுள்ளதை சுட்டிக்காட்டிய யுனிசெப் அமைப்பு பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடு வோரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்துமாறும் தெரிவித்துள்ளது.

தென்னமெரிக்க நாடுகளில் மிக மோசமான பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம் பெறும் நாடாக பொலிவியா உள்ளது. சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ள போதும் பொலிவியாவில் அதிகரித்துவரும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களையிட்டு யுனிசெப் கடும் கவனம் செலுத்தியுள்ளது.

தலைநகர் லாபாஸிலுள்ள யுனிசெப் அதிகாரி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- பாலியல் துஷ்பிரயோகங்களுக்கெதிராக பொலிவிய மக்கள் கிளர்ந்தெழவேண்டும். இதற்கான காரணங்களைக் கண்டறிந்து இந் நிலையை மாற்ற வேண்டும். எதிர் கால இளைஞர்கள், சிறுவர்களுக்கு வள மான வாழ்வை வழங்க வேண்டுமானால் அவசரமாக இப் பணியைச் செய்து முடிக்க வேண்டுமென்றார்.

பாலியல் வல்லுறவுக்குள்ளான சிறுவர்கள், இளைஞர்கள் உடல், உள ரீதியாகப் பாதிக் கப்படுகின்றனர். இதனால் வாழ்க்கையில் நம்பிகையிழக்கும் நிலைக்கும் சில சிறு வர்கள் செல்கின்றனர். பொலிவியாவிலுள்ள சகல தரப்பினரும் இப் பிரச்சினையைத் தீர்க்க ஒன்றுபட்டு உழைக்க வேண்டு மென்றும் யுனிசெப் அழைப்பு விடுத்து ள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பொங்கலுக்கு கேப்டன் டிவி

images-tv.jpgநடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்த் புதிய தொலைக்காட்சி சேவையொன்றை ஆரம்பிக்கவுள்ளார். கேப்டன் டிவி என்ற இந்த தொலைக்காட்சி எதிர்வரும் பொங்கல் தினத்தன்று ஒளிபரப்பை ஆரம்பிக்கவுள்ளது.

இந்தத் தொலைக்காட்சிக்கு பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை என பெரிய விளம்பரமெல்லாம் கொடுத்திருக்கிறார் விஜய்காந்த்.

இந்த தொலைக்காட்சி மட்டுமல்லாமல், புதிய பத்திரிகையும் ஆரம்பிக்கவுள்ளாராம். இது வாரப் பத்திரிகையாக முதலில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் நாளிதழாக மாறும் என்கிறது தேமுதிக வட்டாரம். ஏற்கெனவே மூன்று இணையதளங்களைத் ஆரம்பித்துள்ளார் விஜய்காந்த்.

இராணுவத்தினர் மீதான புகார்களை பிரிட்டன் மறுத்துள்ளது

britishtroops.jpgஇராக்கிலே பிரிட்டிஷ் இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் தொடர்பில் புதிய புகார்கள் பெரும் எண்ணிக்கையில் வந்துகொண்டிருப்பதாக கூறப்படுவதை பிரிட்டிஷ் ஆயுதப் படைகளுக்கான அமைச்சக அதிகாரி பில் ரம்மெல் மறுத்துள்ளார். புதிதாக முப்பது புகார்கள் வெளிவந்துள்ளதாக முன்னதாக வழக்கறிஞர்கள் கூறியிருந்தனர். அமெரிக்க துருப்பினர் கைகொண்டதாக வெளிவந்திருந்த பாலியல் துன்புறுத்தல் வழிவகைகள் போன்றவையும் புதிய புகார்களிலே பலவற்றில் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இந்தப் புகார்களில் பல புதியவையே அல்ல என்று கூறியுள்ள அதிகாரி ரம்மெல், புகார்களில் தெரிவிக்கப்பட்டிருப்பவைதான் நடந்த விஷயங்கள் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தினார். பிரிட்டிஷ் துருப்புகளைப் பொறுத்தவரை அவர்கள் பரவலாகவே துஷ்பிரயோகம் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் கிடையாது; ஆனால் புகார்கள் ஒழுங்காக விசாரிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

நேபால் மாவோயிஸ்ட்டுக்களின் தொடரும் போராட்டம்

Nepal_Maoists_Protestநவம்பர் 12ல் நேபால் மாவோயிஸ்ட்டுக்கள் மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். தலைநகர் காத்மண்டு வீதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரச கட்டிடத் தொகுதியை சுற்றி வளைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அதன் அனைத்து நுழைவாயில்களையும் அடைத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகையையும் குண்டாந்தடி அடியையும் பயன்படுத்தி கடுமையாக நடந்த கொண்டனர். மாணவர்களும் இளையவர்களும் இவ்வார்ப்பாட்டத்தில் பெருமளவில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியுடைய அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டது தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Nepal_Maoists_Protestஆயுதப் போராட்டத்தில் இருந்து சமாதான உடன்பாட்டுக்கு வந்த மாவோயிஸ்ட்டுக்கள் சென்ற தேர்தலில் அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று கூட்டாட்சியை ஏற்படுத்தினர். தங்களது போராளிகளை நேபாள இராணுவத்தில் இணைப்பதற்கு இராணுவத் தளபதி சம்மதிக்காததால் அவரை பதவிநீக்கம் செய்தனர். அரசியலமைப்புக்கு மாறாக ஜனாதிபதி இப்பதவி நீக்கத்தை நிராகரித்து இராணுவத் தளபதியை மீண்டும் பதவியில் அமர்த்தியதை அடுத்து மாவோயிஸ்ட்டுக்களின் ஆட்சி தடம்புரண்டது.

அண்மைக் காலத்தில் ஆயுதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி அரசியல் ரீதியாகவும் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு முன்ணுதாரணமாக நேபால் மாவோயிஸ்ட்டுக்களின் போராட்டம் அமைந்திருந்தது. பிராந்திய மற்றும் சர்வதேச வல்லரசுகளின் பல்வேறுபட்ட நெருக்குவாரங்கள் மத்தியிலும் மாவோயிஸ்ட்டுக்கள் தங்கள் அரசியல் வல்லமையை நிரூபித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்குப் பின்னரேயே மாவோயிஸ்ட்டுக்களின் போராட்டம் தீவிரமடைந்தது. இலங்கையில் மார்க்ஸிய அமைப்புகள் சில உருவான போதும் அவை போராட்டத்திற்கு தலைமை தாங்கக் கூடிய ஆளுமையைக் கொண்டிருக்கவில்லை. இன்று இலங்கையில் புரட்சி பற்றி பேசுபவர்கள் பெரும்பாலும் இலங்கைக்கு வெளியிலேயே வாழ்கின்றனர். இவர்கள் கீ போட் மார்க்ஸிட்டுக்களாகவே உள்ளனர். ஆனால் நேபாளில் புரட்சி பற்றிப் பேசும் மாவோயிஸ்ட்டுக்கள் காத்மண்டு வீதிகளில் போராட்டத்தை நடத்துகின்றனர். அதனால் அங்கு புரட்சி சாத்தியமாவதற்கான வாய்ப்பும் அதிகம் காணப்பட்டது.

காஸா போர்க்குற்ற விசாரணை அறிக்கை: 114 நாடுகள் ஆதரவு: 18 நாடுகள் எதிர்ப்பு

ஐ.நா.வால் வெளியிடப்பட்ட காஸா போர்க்குற்ற விசாரணை அறிக்கை கடந்த வியாழக்கிழமை வாக்களிப்புக்கு விடப்பட்டது. 114 நாடுகள் ஆதரவாகவும் 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 44 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தன. ஐ.நா. பொதுச் சபையில் 192 நாடுகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, இஸ்ரேல், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட 18 நாடுகள் போர்க்குற்ற விசாரணை அறிக்கைக்கு எதிராக வாக்களித்தன. ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலானவை இஸ்ரேலுடன் இணைந்து விசாரணைக்கெதிராக வாக்களித்தன. பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் நடுநிலைமை வகித்தன. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் முஸ்லிம் நாடுகளும் விசாரணை அறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. காஸாவில் 22 நாட்கள் நடந்த யுத்தத்தில் இஸ்ரேல், ஹமாஸ் இராணுவங்கள் நடந்து கொண்ட விதங்கள் பற்றி அந்நாடுகளை விசாரணை செய்ய வேண்டுமென ஐ.நா. வால் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகின்றது. இரண்டு தரப்பும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறும் இந்த அறிக்கை 575 பக்கங்களைக் கொண்டதாகும்.

விசாரணைகள் மூன்று மாதங்கள் இடம்பெறவுள்ளதால் இஸ்ரேல், பலஸ்தீன் தரப்புக்கள் இதற்குப் பூரணமாக ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள் வாழும் பிரதேசங்களில் பேரழிவு ஆயுதங்களைப் பாவித்தமை, மக்களை யுத்தக் கேடயமாக பாவித்தமை போன்ற குற்றங்களுக்காக இவ்விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன. இஸ்ரேலின் தாக்குதலில் 1300 பலஸ்தீனர்களும் ஹமாஸின் தாக்குதலில் 12 இஸ்ரேலியப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். மஸ்ஜித்களின் மீதும் அகதிகள் தஞ்சமடைந்த முகாம்கள் மீதும் வான்தாக்குதல் நடத்தப்பட்டதாலே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக ஐ.நா.வின் அறிக்கை கூறுகின்றது.

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் நீதியரசர் ஜுரிஸ்ட் ரிச்சார்ட் கோல்ஸ்டோன் தலைமையிலான குழு இந்த அறிக்கையை தயாரித்தது இஸ்ரேலையும், பலஸ்தீனையும் விசாரணை செய்தபின் பெறப்பட்ட அறிக்கைகள் மூன்று மாதத்தின்பின் ஐ. நா.வின் பாதுகாப்புச் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் மீண்டும் ஐ.நா. பொதுச் சபைக்கு தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்காக அனுப்பி வைக்கப்படவேண்டும் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விசாரணையை பகிஷ்கரிக்கப் போவதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ஐந்து நாடுகளுக்கு வீட்டோ அதிகாரமுள்ள போதும் ஐ.நா. பொதுச் சபையில் எந்த நாட்டுக்கும் வீட்டோ அதிகாரமில்லை.

சவுதி அரேபிய பெண்ணை கொன்ற இந்தியருக்கு மரண தண்டனை

சவூதி அரேபிய பெண்ணை கொலை செய்த ஒரு இந்தியர் உள்ளிட்ட மூன்று பேருக்கு தலை துண்டிக்கப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரக வட்டாரங்கள் கூறியதாவது: கேரளாவைச் சேர்ந்தவர் முகமது நவ்ஷாத் இலங்கையைச் சேர்ந்தவர்கள் பந்தர் மற்றும் ஹலிமா இவர்கள், சவூதியில் பணிபுரிந்து வந்தனர். 2005ல் இவர்கள், மேலும் சிலருடன் சேர்ந்து, சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கொலை செய்தனர்.

இதையடுத்து, இவர்கள் மூவருக்கும் சவுதி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மற்றவர்களுக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும், கசையடி தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், முகமது நவ்ஷாத்துடன், இலங்கையைச் சேர்ந்த இருவருக்கும் சேர்த்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மூவரும், தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

சவுதியில் இந்தியர்களுக்கு இது போன்ற மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைத் தடுக்க தூதரகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. மரண தண்டனையைக் குறைக்க வேண்டும் என, இவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.