பிலிப்பைன்ஸின் மகுண்டனோ மாகாணத்தில் 21 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டோர் மகுண்டனோ மாகாண உள்ளூர் அரசியல் வாதிகளின் ஆதரவாளர்களும், ஊடகவியலாளர்களுமாவர். உள்ளூர் ஆட்சி தேர்தல்களுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்றோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டனர். தீவிரவாத அமைப்பு கடந்த திங்கட்கிழமை இவர்களை ஆயுதமுனையில் கடத்திச் சென்றதாக அறிவிக்கப்படுகின்றது.
படுகொலை செய்யப்பட்ட 21 பேரின் சடலங்களைக் கண்டெடுத்ததாகக் கூறிய பொலிஸார் இவர்களில் 13 பேர் பெண்களென்றும் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுத்ததாகவும் கூறினர். பிரேதங்களின் தலைகள் துண்டிக்கப்பட்டும், உருக்குலைந்த நிலையிலும் காணப்பட்டன.
கொலைசெய்யப்பட்டோரில் உள்ளூர் அரசியல் வாதியின் மனைவியும் அடங்குகின்றார். மாகாண ஆளுநருடன் தொடர்புகொண்ட ஆயுததாரிகள் இவர்களைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுவதை ஆளுநர் முற்றாக நிராகரித்துள்ளார். தேர்தலில் வாக்களிக்கக் கூடாதென முஸ்லிம் அமைப்பொன்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்ததாகப் பொலிஸார் கூறினர்.
அரசியல் நோக்கங்களுக்காக இக்கொலைகள் நடந்துள்ளன. ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமைக்கு பிலிப்பைன்ஸ் அராசங்கம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸில் அடுத்த வருடம் பொதுத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இதை முன்னிட்டு உள்ளூராட்சித் தேர்தல்கள் சில மாகாணங்களில் நடத்தப்படவுள்ளன. இத் தேர்தலில் வாக்களிக்கவோ போட்டியிடவோ கூடாதென பிரிவினைவாத அமைப்புக்கள் கோரியுள்ளன.