அறிக்கைகள்

அறிக்கைகள்

கட்சிகள் அமைப்புகள் நிறுவனங்கள் வெளியிடும் அறிக்கைகள்

கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசையின் இன்றைய வேண்டுகோள்!!!

Susaiகடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை இன்று (May 17 2009) ஊடகங்களுக்காக தொலைபேசியில் வெளியிட்ட வேண்டுகோள்.

”சிறிலங்கா படையினரின் ஆட்டிலறி தாக்குதலில் படுகாயமடைந்த சுமார் 25 ஆயிரம் பேர் மருத்துவப் பராமரிப்புக்கள் எதுவும் இல்லாமல் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில் மரணமடைந்து இருக்கின்றனர். படுகாயமடைந்த இந்த 25 ஆயிரம் பேரையும் இரட்டைவாய்க்கால் அல்லது வட்டுவாகல் பகுதி ஊடாக வெளியே கொண்டுவருவதற்கு அனைத்துலகப் பொறுப்பாளர் செ.பத்மநாதன் மூலமாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் நாம் கோரிக்கை முன்வைத்தோம்.

ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டுக்கொண்டோம். நாம் அவர்களை அனுப்பி வைக்கின்றோம் நீங்கள் பொறுப்பு எடுங்கள் எனக் கேட்டோம். இருந்தபோதிலும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அந்த 25 ஆயிரம் மக்களும் மருத்துவ சிகிச்சைகள் இல்லாமல் மரணமடைந்திருக்கின்றனர். சுமார் இரண்டு கிலோ மீற்றர் சதுர நிலப்பரப்புக்குள் பெரும் தொகையான உடலங்கள் குவியலாகவும் சிதறுண்டும் காணப்படுகின்றது. ஏனையவர்கள் சிறிலங்கா படையினர் பயன்படுத்தும் கடுமையான ஆயுதங்களுக்கு அஞ்சி பதுங்குகுழிகளுக்குள்ளேயே இருக்கின்றனர்.

போர் நடைபெறும் பகுதியில் இருந்து மக்கள் தப்பிச் செல்வதற்கு கூட சிறிலங்கா படையினர் அனுமதிக்கின்றனர் இல்லை. அந்த மக்களை சுட்டுக்கொன்றுவிடுவதற்குத்தான் அவர்கள் முற்படுகின்றனர்.

இங்கு என்ன நடைபெறுகின்றது என்பதையிட்டு எந்தவிதமான அக்கறையும் இல்லாததாகவே அனைத்துலக சமூகம் இருக்கின்றது. தற்போது படுகாயமடைந்திருக்கும் 25 ஆயிரம் மக்களைவிட மேலும் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நாம் படையினருடன் தொடர்ந்தும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். இறுதி வரையில் நாம் அடிபணியப் போவதில்லை. கடுமையான சண்டை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. அதற்குள் பொது மக்களும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அனைத்துலக சமூகம் திரும்பிப் பார்க்கவில்லை. நாங்கள் நேற்று முன்நாள் இரவு தொடக்கம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்த 25 ஆயிரம் மக்களையும் எடுக்கச் சொல்லி. காலத்தைத் தாமதித்தார்கள். தற்போது இன்னும் 20 ஆயிரம் மக்கள் வரையில் காயப்பட்டிருக்கின்றனர். அதனைவிட மற்றவர்கள் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் இருக்கின்றனர். படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் இருக்கின்றனர்.

போர் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்போது கடைசி மணித்தியாலச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இரண்டு கிலோ மீற்றர் சதுர நிலப் பரப்புக்குள் பரவலாக ஆட்டிலறி தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர்”

இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும் : திருமாவளவன்

manig.jpgஉடனடியாக போர் நிறுத்தம் செய்ய இல‌ங்கை அரசை இ‌ந்‌திய அரசு எச்சரிக்க வேண்டும் என்று‌ம் பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்த உடனடியாக நடவடி‌க்கைகளை மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கை : அமெரிக்க அதிபர் ஒபாமா ஈழத் தமிழர்கள் மீதான கொடூரத் தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முற்றிலுமாக போர் நிறுத்தம் செய்வதே இப்போதைக்குள்ள உடனடித் தேவையாகும். புலிகள் ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகள் என்பதை மறுத்துவிட முடியாது. அவர்களை அழித்தொழித்துவிட்டால் வேறு எவருடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்?

அவ்வாறு ஏதேனும் நடந்துவிட்டால் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் ஆயுள் கால அடிமைகளாகவே சிங்கள இனவெறியர்களின் அடக்குமுறைக்கு ஆளாக நேரிடும். எனவே புலிகளிடமிருந்து மக்களை மீட்கும் முயற்சி என்கிற நடவடிக்கைகளையும் கைவிட்டு இந்த அளவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்துவிட்டு பேச்சுவார்த்தை நடத்துவதுதான் நாகரீகமுள்ள அரசியல் அணுகுமுறையாகும்.

எனவே இந்திய அரசும் அமெரிக்க அதிபரின் கருத்து வலுப்படுத்தும் வகையிலும் ஐ.நா பாதுகாப்புப் பேரவையின் தீர்மானத்தை வழிமொழிகிற வகையிலும் இலங்கை அரசை எச்சரித்து உடனடியாக போர் நிறுத்தத்திற்கும் பேச்சுவார்த்தைக்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம் என்று அந்த அறிக்கையில் ‌திருமாவளவ‌ன் கூறியுள்ளார்

இலங்கைத் தமிழ் மக்கள் அவலம் குறித்து சர்வதேசத்திற்கு பொய் உரைப்பவர்கள் யார்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாகவும், சர்வதேசத்திற்கு பொய்யான தகவல்களை அனுப்புவதாகவும் அவர்கள் தொடர்ந்தும் புலிகளுக்கு சார்பாகவே செயற்பட்டு வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா 7 ஆம் திகதி நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்;

அரசாங்கத்திற்கும், அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகின்றது. சர்வதேசத்திற்கு நாம் பொய்யான தகவல்களை கொடுப்பதாக அமைச்சர் ஆதங்கப்படுகின்றார். என்ன பொய்யான தகவல்களை நாம் கொடுத்தோம் என்பதை அரசாங்கமோ, அமைச்சரோ கூறட்டும் பார்க்கலாம்.

யுத்த களத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் நாளாந்தம் கொல்லப்படுகின்றார்கள் என்பது பொய்யா? இன்னும் பலநூறு பேர் அங்கவீனர்களாக்கப்படுகின்றார்கள் என்பது பொய்யா? யுத்தப் பிரதேசத்தில் உள்ள 1,50,000 மக்களுக்கு மாதக்கணக்கில் உணவுப் பொருட்களோ, மருந்துப்பொருட்களோ அனுப்பவில்லை என்பதும், அங்கு பட்டினியால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் பொய்யா? இலங்கையின் குடிசனத்தில் ஒரு பகுதியாகிய வன்னித்தமிழ் மக்களை இலங்கையின் முப்படைகளும் விமானக்குண்டு வீச்சாலும், பல்குழல் பீரங்கி வீச்சாலும் கொலை செய்கின்றதென்பது பொய்யா? கடந்த ஜனவரியில் இருந்து இன்றுவரை ஏறத்தாழ 3000 பொதுமக்கள் கொல்லப்பட்டும், 16,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பதும் பொய்யா? மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் அகதிகளாக்கி வவுனியாவுக்கு கொண்டு வரப்பட்ட தமிழ் மக்களுக்கு உணவு, மருத்துவம், சுகாதாரம், நீர் போன்ற அடிப்படை வசதிகளே ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதும், இன்றும் அவை பூரணப்படுத்தப்படவில்லை என்பதும் பொய்யா? அகதி முகாம்கள் அனைத்தும் இராணுவ நிர்வாகத்திற்குள் கொடுக்கப்பட்டிருக்கின்றதென்பதும் அந்த மக்களுக்கான சகலவிதமான ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்பட்டு கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதும் பொய்யா? சரியான மருத்துவ வசதிகள் இல்லாமல், கவனிப்பு இல்லாமல், நாளாந்தம் வயோதிபர்களும், குழந்தைகளும் உங்கள் நலன்புரி நிலையங்களில் இறக்கின்றார்கள் என்பதும் பொய்யா? இவற்றில் எதையாவது பொய்யென இலங்கை அரசு மறுக்கட்டும் பார்க்கலாம்.

மாறாக, ஏறத்தாழ 4 இலட்சம் மக்கள் இருந்த வன்னிப்பிரதேசத்தில் 70,000 பேர் இருப்பதாக உலகம் முழுக்க பொய்யைக்கூறி 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கடந்த 6 மாதத்துக்கு மேலாக பட்டினி போட்டவர்கள் யார்? 70,000 மக்கள் இருந்திருந்தால் 190,000 மக்கள் இன்று எப்படி உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தார்கள். இன்னும் ஏறத்தாழ 150,000 மக்கள் புதுமாத்தளனில் இருப்பதாக நாங்கள் கூறுகின்றோம். 20,000 பேர் தான் இருப்பதாக நீங்கள் கூறுவதுடன், அவர்களுக்கு உணவோ, மருந்தோ அனுப்புவதுமில்லை.

நீங்கள் உருவாக்கிய பாதுகாப்பு வலயத்தின் மீது பாரிய பீரங்கிகளையோ விமானக்குண்டு வீச்சையோ நடத்துவதில்லையென நீங்கள் கடந்த 27.04.2009 இல் அறிவித்தீர்கள். ஆனால் எப்போதாவது அதனை நிறுத்தியதுண்டா? ஒவ்வொரு நாளும் அப்பாவி மக்கள் மீது பாரிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவது உண்மை இல்லையா? புலிகளை அழிக்கின்றோம், பயங்கரவாதிகளை அழிக்கின்றோம் என்ற பெயரில் உங்கள் யுத்தத்தில் அப்பாவித்தமிழ் மக்கள் கொல்லப்படுகின்றார்களா இல்லையா?

யுத்தம் என்ற பெயரில், தமது சொந்தக்காணிகளில் மிகவும் வசதியாக, செழிப்பாக இருந்த மக்களை பீரங்கித் தாக்குதல்கள் மூலம் அவர்களை விரட்டியடித்தவர்கள் யார்? உங்கள் இராணுவம் இல்லையா? மக்களை விரட்டி வெறும் நிலங்களை கைப்பற்றுவதுதான் மக்களை விடுவிப்பதென்ற உங்கள் இலட்சணமா? வீடுகள், வாகனங்கள், பூமிகள், விளைநிலங்கள் என தமது அன்றாட வாழ்க்கையை யாரிடமும் கையேந்தாமல் வாழ்ந்த மக்களை விரட்டியடித்து அகதிகளாக்கி, அவர்கள் எல்லாவற்றையும் இழந்து ஒருவேளை உணவுக்கு வரிசையில் நின்று தட்டேந்த வைத்தவர்கள் யார்? ஸ்ரீ லங்கா அரசாங்கம் இல்லையா?

இவ்வளவு மாத்திரம் அல்ல இதற்கு மேலும் ஆயிரம் தவறுகளை விட்டுக்கொண்டு, ஒரு இனத்தை அழித்துக்கொண்டு செயற்படும் நீங்கள், உண்மைகளை மறைத்து பொய்களையே பிரசாரமாக்கும் நீங்கள், பொய்யர்களா? அல்லது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பொய்யர்களா? நாங்கள் கூறுவது பொய்யாயின் சர்வதேச ஊடகவியலாளர்களை ஏன் அனுப்ப மறுக்கின்றீர்களா? நீங்கள் கூறுவதெல்லாம் உண்மையாயின் த.தே.கூட்டமைப்பை ஏனைய எதிர்க்கட்சிகளை ஏன் முகாம்களுக்கு அனுப்ப மறுக்கின்றீர்கள்? நீங்கள் செய்வதெல்லாம் சரியாயின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவை முழுமையாக இங்கு இயங்க வைக்க ஏன் மறுக்கிறீர்கள்? யுத்த பிரதேசத்திற்குள் ஐக்கிய நாடுகள் மனிதாபிமான குழுக்களை அனுப்ப ஒப்புக்கொண்ட நீங்கள் அவர்களை அனுமதிக்க ஏன் தயங்குகின்றீர்கள்? நீங்கள் உண்மை பேசுபவர்களாக இருந்தால் ஏன் இராணுவ இழப்புகள் தொடர்பான உண்மைகளை வெளியிட மறுக்கின்றீர்களா? யார் பொய் பேசுகின்றார்கள்? யார் உண்மை பேசுகின்றார்கள் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். உலகம் தீர்மானிக்கும்.

“அமைச்சரின் அடுத்த குற்றச்சாட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளுக்கு சாதகமாக பேசுகின்றார்கள் என்பது’…

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக, அவர்களின் விடுதலைக்காக யார் பேசினாலும் உங்களுக்கு அவர்கள் புலியாகத் தான் தோற்றுவார்கள். பாராளுமன்றத்திலும் வெளியிலும் நீங்களும் உங்கள் ஆங்கில, சிங்கள ஊடகங்களும் அவ்வாறுதான் பிரசாரம் செய்கின்றீர்கள். புலிகளும் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறார்கள். நாங்களும் தமிழ் மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுக்கிறோம். எனவே எங்கள் எல்லோரையும் நீங்கள் புலிகளாகத்தான் பார்ப்பீர்கள். புலிகளுக்கு முன்னர் இருந்த தமிழர் தலைவர் செல்வநாயகமும் அமிர்தலிங்கமும் அவர்கள் இருந்த காலத்தில் உங்கள் கண்களுக்குப் புலிகளாகத் தான் தோற்றினார்கள். ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நீங்கள் புலியாகப் பார்ப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. யுத்தத்தை நிறுத்துங்கள். மக்கள் கொல்லப்படுகின்றார்கள் என்று கூறும் நாம் உங்களுக்குப் புலிகளாகத் தெரிகின்றோம். யார் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை யுத்தத்தைத் தொடர்ந்து நடத்துங்கள் என்போர் உங்களுக்குத் நண்பர்களாகத் தென்படுகின்றார்கள். தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் வரை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உங்களுக்குப் புலியாகத்தான் தெரியும்.

யுத்தத்தின் மூலம் வடக்கு, கிழக்கு மயான பூமியாக்கப்பட்டது மாத்திரமல்ல. தென்பகுதி பொருளாதாரமும் சீரழிந்துள்ளது என்பதை நாம் மாத்திரமல்ல சிங்கள மக்களும் அறிவார்கள். உலக வங்கியிடம் பல மில்லியின் டொலர்களுக்காக வரிசையில் நிற்பதையும் நாம் அறிவோம். இன்று உங்கள் பொளாதாரத்தை மீட்க பிச்சைக்காரன் புண்ணைக்காட்டி பிச்சையெடுப்பது போல தமிழரைக்காட்டி பிச்சையெடுப்பதையும் நாம் பார்க்கின்றோம். “ஆடு நனைகிறது என ஒநாய் அழுததாம்’ என தமிழில் ஒரு பழமொழி உண்டு. தமிழ் மக்களின் துன்பம் பற்றி நீங்கள் ஒவ்வொருவரும் பேசும் போதும் எங்களுக்கு அந்தப் பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகின்றது.

எனவே, எங்களுக்காக நீங்கள் முதலைக் கண்ணீர் வடித்தது போதும். தமிழ் மக்கள் இந்த நாட்டின் குடிகள் என நம்பினால் அவர்களைப் பட்டினி போடாதீர்கள். அவர்களைக் கொல்லாதீர்கள், அவர்களை அகதிகளாக்காதீர்கள். அவர்களுக்கும் சம உரிமைகளை வழங்கி அவர்களது கடமைகளை அவர்களே செய்ய வழிவிடுங்கள். ஊடக அமைச்சர் என்பதற்காக தொடர்ந்து பொய் பேசாதீர்கள். ஏனைய அமைச்சர்களுக்கும் இது பொருந்துமென்றும் தெரிவித்துள்ளார்.

இடம் பெயர்ந்தோரின் உடனடித் தேவைகள்

vavuniyatents.jpgதமிழர் விடுதலை கூட்டணி தலைவர் வி. ஆனந்தசங்கரி, புளொட் அமைப்பின் தலைவர் த. சித்தார்த்தன், பத்மநாபா ஈ பி ஆர் எல் எப் அமைப்பின் செயலாளர் தி. சிறிதரன் ஆகிய மூவரும் இணைந்து ஜனாதிபதியை சந்தித்து பேசியசந்தர்ப்பத்தில் அவரிடம் விடுத்த வேண்டுகோள்

05.05.2009

மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ,
அலரி மாளிகை,
கொழும்பு – 03

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,

இடம் பெயர்ந்தோரின் உடனடித் தேவைகள்

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலிருந்து பல்வேறுபட்ட கோரிக்கைகள் வருவதால் தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வரும் விடயங்கள் சம்பந்தமாக உடன் நடவடிக்கை எடுக்குமாறு தங்களை வேண்டுகிறோம்.

01. நீர்

தந்போதைய காலநிலையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவது சகஜமே. வேறு பல்வேறு தேவைகளுக்கும் உதவும் நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பெறுவதற்காக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்து நிற்கின்றனர். இடம் பெயர்ந்த மக்களுக்கு இதுவொரு பாரிய பிரச்சினையாகும். பலர் நீண்ட நாட்களாக குளிக்கும் வாய்ப்பையும் இழந்துள்ளனர். இந் நீர் தட்டுப்பாட்டை நீக்க யுனுசுயு என்ற ஸ்தாபனத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம். இப் பிரச்சினையை தீர்ப்பதற்கு போதிய வசதிகள் அவர்களிடம் இருப்பதாக நான் நம்புகின்றேன். 250 மீற்றர் ஆழத்திற்கு குழாய் கிணறை அடிக்கின்ற வாய்ப்பும் ஒரு நாளைக்கு இரண்டு கிணறுகள் அமைக்கக்கூடிய தகுதியும் அவர்களிடம் இருக்கிறது. 5000 கலன்கள் கொள்ளக்கூடிய கொள்கலன்களும் அவர்களிடம் உண்டு.

02. உணவு

அதிகமான முகாம்களில் உணவுப் பிரச்சினை இல்லாத போதும் சில முகாம்களில் சில வேளைகளில் உணவு வழங்கப்படுவதில்லை. முறையான திட்டமின்மையே இதற்குக் காரணமாகும்.

03 முதியோர்களை விடுவித்தல்

60 வயதுக்கு மேற்பட்ட முதியோரை விடுவிப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்தும் அதை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. இத் தீர்மானத்தை மாற்றி 60 இற்கும் 60 இற்கு அண்மித்துள்ள வயதுடையோரின் மனைவிமாரை அல்லது கணவன்மாரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

04. நோயாளிகள்

பல நோயாளிகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தால் தம் செலவிலேயே நல்ல வைத்திய சேவையை பெற்றிருக்க முடியும். இதற்குக் காரணம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் மருந்து தட்டுப்பாடு நிலவுவதுமே ஆகும்

05. வெளிநாட்டில் வைத்தியம் பெறுதல்

வெளிநாட்டில் வைத்தியம் பெற வசதியுடையோர் விரும்பிக் கேட்பின் அதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

06. அரச ஊழியர்கள்

கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டங்களும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் கடமையாற்றிய அரச ஊழியர்கள் அவரவர் குடும்பத்துடன் விடுவிக்கப்பட்டு அவர்களி;ன் சேவை முகாம்களில் பயன்படுத்தப்பட வேண்டும்.

07. அரசாங்க அதிபர்கள்

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்கள் தங்கள் மாவட்டங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்தோரை பொறுப்பெடுத்து வவுனியாவில் கச்சேரி அமைத்து செயற்படுவதோடு படிப்படியாக அப் பணிகளை தம் மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கலாம். இம் மாவட்டங்களைச் சேர்ந்த கிராம சேவகர்கள் உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை கவனிக்க பணிக்கப்பட வேண்டும்.

08. குடும்பத்தினரை மீள ஒன்றிணைத்தல்

பல்வேறு முகாம்களில் சிதறுண்டு இருக்கும் ஓரே குடும்பத்தினரை ஒன்றிணைக்கும் பணியில் அனைவரும் ஒரு முகாமுக்கு மாற்றப்பட வேண்டும்.

09. தொலைபேசி இணைப்புக்கள்

தற்போது வழங்கப்படுகின்ற தொலைபேசி இணைப்புக்கள் போதாமையால் மேலும் சில இணைப்புக்கள் ஒவ்வொரு முகாமுக்கும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

10. உறவினர்களின் சந்திப்பு

முகாம்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரையும் ஒருவரேனும் வந்து பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.

11. கர்ப்பிணி பெண்கள் பற்றியது.

கர்ப்பிணிகளும், குழந்தைகளின் தாய்மார்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் மடு தேவாலய முகாமில் அனுமதிக்கப்பட வேண்டும்.

12. ஊனமுற்றோர், அனாதை குழந்தைகள், முதியோர், சித்த சுயாதீனமற்றோர்.

ஓர் விசேட குழு அமைக்கப்பட்டு மேற் கூறப்பட்டவர்களுக்கு நிம்மதியாக வாழக்கூடிய வகையில் வதி விடங்கள் ஏற்படுத்திக் கொடுத்தல்.

13. விதவைகள்

விதவைகள் அனேகர் உருவாக்கப்பட்டிருக்கின்றபடியினால் அவர்களை பொறுப்பேற்பதற்கும் புதிய ஆலோசனை வழங்குவதற்கும் மகளிர் நலன்புரி அமைப்புக்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

14. பிரேத அறை

முறையான ஒரு பிரேத அறை இன்மையால் நாம் மதிப்பு மரியாதையோடு எமது கலாச்சாரத்துக்கு அமைய அடக்கம் செய்ய முடியாமல் அழுகிய நிலையில் அண்மையில் உள்ள நோயாளிகளுக்கு பெரும் சங்கடத்தை உண்டு பண்ணியதோடு அப் பிரேத அறையிலிருந்து எழும் துர்நாற்றம் சுமார் 200 மீற்றர் விட்ட பிரதேசத்துக்கு பரவுகிறது. பிரேதங்கள் உறவினரிடமோ அல்லது நண்பர்களிடமோ கையளிக்கப்படும் வரை பாதுகாத்து வைக்கக்கூடிய ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும்

புதுமாத்தளனில் வாரத்திற்கு 478 மெற்றிக் தொன் உணவு தேவைப்படுகிறது. எம்மால் கூறப்படுகின்ற ஆலோசனைகளை கவனத்திலெடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி

வீ.ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ  

த.சித்தார்த்தன்
புளொட்         

தி.சிறிதரன்
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்

முதலாம் கட்ட வழிகாட்டித் தொகுதிகள் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. : ஜெயபாலன் & புன்னியாமீன்

01.jpgவன்னி யுத்த அனர்த்தங்கள் காரணமாக முல்லைத்தீவு,  கிளிநொச்சி,  மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நகரிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களின் நலன்கருதி அந்தந்த நலன்புரி நிலையங்களினுள்ளே கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. ஏப்ரல் 01ஆம் திகதி புள்ளிவிபரப்படி மேற்படி நலன்புரி நிலையங்களில் 13 பாடசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.

தேசம்நெற் உம் சிந்தனைவட்டமும் இணைந்து இந்த நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களின் நலன்கருதி சில கல்வி செயற்பாட்டு உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. இதன் முதல்படியாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்காக வேண்டி மாதிரி வினாத்தாள்களையும்,  வழிகாட்டி புத்தகங்களையும் வழங்க முன்வந்துள்ளது.

செட்டிக்குளம் ம.வித்தியாலயத்தில் இயங்கும் விசேட கல்வி அலுவலகத்தின் இணைப்பாளரும், துணுக்காய் வலய கல்விப் பணிப்பாளருமான திரு. த. மேகநாதன் அவர்களின் வேண்டுகோளின் கீழ் நலன்புரிநிலையங்களில் தரம் 05 இல் கல்வி பயிலும் 1057 மாணவர்களுக்கு முதல் கட்டமாக பின்வரும் மாதிரிவினாத்தாள்களும்,  வழிகாட்டிப் புத்தகங்களும் திரு. த. மேகநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்டு மாணவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டுள்ளன.

Letter_01_Mehanathan_06May09

Letter_02_Mehanathan_06May09

மாதிரி வினாத்தாள் இலக்கம் 01 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 02 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 03 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 04 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 05 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 06 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 07 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 08 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 09 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 10 – 1100 பிரதிகள்

இவ்வினாத்தாள்கள் மாணவர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு பரீட்சையாக நடத்தப்பட்டு மாணவர்கள் வழிகாட்டப்படுகின்றனர்.

மேலும்,  தரம் 05 புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 01 எனும் நூலின் 1100 பிரதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேற்படி மாதிரி வினாத்தாள்களும், வழிகாட்டிப் புத்தகமும் கீழுள்ள பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கதிர்காமர் வித்தியாலயம், சிவானந்தா வித்தியாலயம்,  செட்டிக்குளம் ம.வி, பம்பைமடு விடுதி, தொழில்நுட்பக்கல்லூரி, கலைமகள் வித்தியாலயம்,  முஸ்லிம் ம.வி, காமினி வித்தியாலயம், சைவபிரகாச வித்தியாலயம், தமிழ். ம.ம.வி, புந்தோட்டம் ம.வி, கல்வியியற் கல்லூரி, கோவில்குளம் இந்துக் கல்லூரி.

தரம் 05இல் கல்வி பயிலும் மாணவர்களுக்காக வேண்டி மேலும் புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 02, புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 03, புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 04 ஆகிய நூல்களையும் 20 மாதிரி வினாத்தாள்களையும் (இலக்கம் 11 – 30 வரை) இம்மாத இறுதிக்குள் வழங்க தேசம்நெற் உம் சிந்தனைவட்டமும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பரீட்சை ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதினால் அதற்கேற்ற வகையில் இந்த வழிகாட்டல் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன்,  தரம் 06,07,08,09,10,11 மாணவர்களுக்காக வேண்டி ஒரு தொகுதி செயல் நூல்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் மாத இறுதியில் வன்னி பிரதேசத்திலிருந்து வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களுக்கு அதிகளவில் மக்கள்  இடம் பெயர்ந்துள்ளனர். இந்தநிலையங்களில் தரம் 5 இல் பயிலும் மாணவர்கள் மாத்திரம் 1860 பேர் கடந்த இரண்டு வாரத்துக்குள் இடம் பெயர்ந்துள்ளதாக உத்தியோக பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிதாக இடம்பெயர்ந்துள்ள மாணவர்களின்  கற்றல் நடவடிக்கைகளில் உதவுவது  குறித்தும்  சிந்தனைவட்டமும், தேசம்நெற் உம் ஆலோசித்து வருகின்றது.

02.jpg 03.jpg 04.jpg

பட்டினிச் சாவிலிருந்து தமிழர்களைக் காப்பாற்றுங்கள் – உலக நாடுகளுக்கு புலிகள் கோரிக்கை

lttelogo.jpgவன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மக்களுக்கான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கான விநியோகத்தை இலங்கை அரசு தடை செய்திருப்பதால், அவர்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களால் அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு உலக நாடுகளுக்கு விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழர்களுக்கான உணவு மற்றும் மனிதாபிமான உதவிகளைத் திட்டமிட்ட முறையில் இலங்கை அரசு தடுத்து வைத்திருப்பதால், பட்டினிச்சாவை எதிர்நோக்கியிருக்கும் முல்லைத்தீவுப் பகுதியில் உள்ள தமிழர்களுக்காக நேரடியாகவே மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கொண்டிருக்கின்றார்கள்.  இந்த மனிதாபிமான உதவிகள் அவர்களுக்கு கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறு அனைத்துலக சமூகத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு கேட்டுக்கொள்கின்றது.

இந்த முயற்சியைச் செயற்படுத்துவதற்குத் தேவையான தார்மீக, அரசியல் ஆதரவை அனைத்துலக சமூகம் வழங்கும் என எதிர்பார்க்கின்றோம். கடந்த சில நாட்களில் மட்டும் பட்டினியால் ஒன்பது பேர் மரணமடைந்திருப்பதுடன், இவ்வாறு மரணமடைபவர்களின் எண்ணிக்கை அடுத்துவரும் நாட்களில் பெருமளவுக்கு அதிகரிக்கப்படலாம் என்ற அச்சம் காணப்படுவதையும் கவனத்துக்குக் கொண்டுவருகின்றோம்.

இங்குள்ள 1,65,000 மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் நிலையில் புலம்பெயர்ந்த மக்களுடைய இந்த முயற்சி மிகவும் அவசரமானதாக இருக்கின்றது. இங்குள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் போன்றவற்றை அனுப்பிவைக்குமாறு ஐ.நா.வும் ஏனைய மனிதாபிமான அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அந்தக் கோரிக்கையை நிராகரிப்பதுடன், அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்கள் அனைத்தையும் மீறும் வகையில் இலங்கை அரசு நடந்து கொள்கின்றது.

இப்பகுதியில் உள்ள மக்களுக்கு 2,474 மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள் தேவை என உலக உணவுத் திட்டம் மதிப்பிட்டிருந்த போதிலும், 2008 ஏப்ரல் 2 ஆம் நாள் 60 மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள் மட்டுமே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் விநியோகிக்கப்பட்டது. ஆனால், அதன்பின்னர் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்வதற்குத் உலக உணவுத் திட்டம் தயாராகவிருந்த போதிலும், உணவுப் பொருட்களை விநியோகிக்கும் செயற்பாடுகளில் இருந்து செஞ்சிலுவைச் சங்கம் அரசினால் தடுக்கப்பட்டது.

இது தொடர்பாக செஞ்சிலுவைச் சங்கத்திடமும், ஏனைய மனிதாபிமான அமைப்புக்களிடமும் விடுதலைப் புலிகள் அமைப்பு வலியுறுத்திய போதிலும், எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இந்த நிலைமையைக் கவனத்திற்கொண்டு இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அதில் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.

உலக நாடுகளின் அக்கறைகளைக் கவனத்திற்கொள்ளாமல் புறந்தள்ளி, தன்னுடைய இனப்படுகொலை நடவடிக்கைகளை இலங்கை அரசு தொடர்ந்து கொண்டிருப்பதற்கு எதிராக உலக நாடுளால் இதுவரையில் கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. பல்வேறு தடுப்புக்காவல் முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமைப்புக்களும் வெளிநாட்டு அரசுகளும், விடுதலைப் புலிகளின் நிர்வாகப்பகுதியில் உள்ள 1,65,000 மக்களுக்கான உதவிகளை வழங்குவதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளனர்.

எமது மக்கள் உடனடி ஆபத்தை எதிர்கொண்டுள்ள இந்த நிலைமை காரணமாகத்தான் நேரடியாக மனிதாபிமான உதவிகளை அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கையில் இறங்குவதற்கு புலம்பெயர்ந்த மக்கள் தூண்டப்பட்டனர். எறிகணை வீச்சுக்களாலும், குண்டு வீச்சுக்களினாலும் அவதிப்படும் எமது மக்களின் நிலை திட்டமிட்ட முறையில் உணவு மற்றும் மருந்துப் பொருட்களைத் தடுத்துவைத்திருப்பதால் மேலும் மோசமாகியிருக்கின்றது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடங்கியுள்ள இந்தப் பணிக்கு தார்மீக ஆதரவை வழங்க வேண்டிய பொறுப்பு ஐ.நா.வுக்கும் உலக நாடுகளுக்கும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திஸ்ஸநாயகம் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கவலை

tissa-nayakam.jpgஉலகமெங்கும் ஊடகத்துறைக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக கவலை தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கையில் ஓராண்டு காலத்திற்கு மேலாக ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலைமை குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார். உலக ஊடக சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி அமெரிக்க ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,.

“உலகின் ஒவ்வொரு மூலையிலும், ஊடகவியலாளர்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள். அல்லது தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அஸர்பைஜான் முதல் ஸிம்பாப்வே வரை, பர்மா முதல் உஸ்பெகிஸ்தான் வரை, கியூபா முதல் எத்த்திரியா வரை இந்த நிலை உள்ளது. இவ் விடயத்தில் மனத்துயரை உண்டாக்கும் உதரணங்களாக தோன்றுவது இலங்கையில் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் சீனாவில் ஷிடாலோ மற்றும் ஹு ஸ்ரீயாவோ ஆகியோராவர்.

உண்மையை பொறுப்புடன் வெளிப்படுத்தும் முழு உலகத்தின் ஊடகத்துறையைச் சேர்ந்த தைரியமிக்க ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆதரவாக இன்று என் குரலை எழுப்புகிறேன். அவ்வாறு செய்வதன் மூலம் தோமஸ் ஜெர்ப்பஸன் கூறிய வார்த்தைகளை நினைவு கூருகிறேன். எமது அரசாங்கத்தின் அடிப்படை மக்களின் அபிப்பிராயமேயாகும். அந்த நோக்கத்திற்கான உரிமை காக்கப்பட வேண்டும். மேலும் ஊடகமில்லாத ஒரு அரசாங்கம் வேண்டுமா? அல்லது அரசாங்கமில்லாத ஊடகம் வேண்டுமா? என்பதை நான் தீர்மானிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.,.

பாரீஸில் சமூகப் பாதுகாப்பு அமைப்பு மே தின ஊர்வலம்

May_Day_Protest_Parisபிரான்ஸ் – பாரீஸில் சமூகப் பாதுகாப்பு அமைப்பு ( Comité de Défense Social) மற்றும் Les Libertaires அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்ட மே தின ஊர்வலம் நேற்றைய தினம் (01.05.2009) மிச் சிறப்பாக நடந்தேறியது. இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் யுத்த அவலங்களை வெளிப்படுத்தும் கோசங்களை முதன்மைப்படுத்தி இவ் மே தின ஊர்வலம் அமைந்திருந்தது. குறிப்பாக இலங்கை அரசு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், இலங்கை அரசோடு சேர்ந்து இயங்கும் ஆயுதக் குழுக்கள் மீதான கண்டன கோசங்கள் மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்டோரால் முன் வைக்கப்பட்டது.

May_Day_Protest_Parisபெரும்திரளான மக்கள் கலந்துகொண்ட இந்த மே தின ஊர்வலம் இலங்கையில் நடக்கும் அனைத்து வன்முறைகளையும் எதிர்க்கும் மே தின ஊர்வலமாக இவ்வருடம் அமைந்திருந்தது. பிரான்சில் இருக்கும் பல்வேறு அமைப்புக்களைச்சார்ந்த இடதுசாரிகள், பெண்ணியலாளார்கள், அனார்க்கிஸ்டுக்கள் சுற்றுப்புறச் சுhழலியலாளர்கள் என பலரும் இவ் மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்டு இலங்கையில் நடக்கும் அனைத்து வன்முறைகளுக்கும் எதிரான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

வழமைபோல் அரச ஆதரவாளர்களினதும் புலி ஆதரவாளர்களினதும் பல்வேறு எதிர்ப்பையும் தடைகளையும் மீறி இவ் ஊர்வலம் நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகப் பாதுகாப்பு அமைப்பு ( Comité de Défense Social)

பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

thinu.jpgதிருமலையில் சிறுமி வர்ஷா கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டதும் பின்னர் படுகொலை செய்யப்பட்டதும் இப்போது மட்டக்களப்பில் சிறுமி தனுசிகா கடத்தப்பட்டதும் கப்பம்  பின்னர் படுகொலை செய்யப்பட்தும் அருவருக்கத்தக்கதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.

இவ்வாறான சம்பவங்கள் எமது மக்கள் மத்தியில் ஒருவகைப் பீதியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுமி வர்ஷாவின் படுகொலையோடாவது முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்க வேண்டிய இவ்வாறான சம்பவங்கள் தொடர்வதானது மக்களின் பாதுகாப்பு அமைதி மீதான நம்பிக்கையை சீர்குலைப்பதாகவே இருக்கின்றது.

கொலை கொள்ளை கப்பம் கோருதல் தொடர்பாக பல முறைப்பாடுகள் தொடர்பில் எமது கண்டனத்தையும், உரிய நடவடிக்கையையும் நாம் கோரியிருந்தபோதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்த அசமந்தமான போக்கே மேற்குறிப்பிட்ட சம்பவங்களின் தொடர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது.

புலிப் பயங்கரவாதம் போல் இவ்வாறான சமூக விரோதிகளின் செயற்பாடுகளும் எமது மக்களின் நிம்மதியான, அமைதியான வாழ்வுக்கும்  பிள்ளைகளின் சுமூகமான கல்விச் செயற்பாட்டுக்கும் தடையாகவே இருக்கின்றது. எனவே சமூக விரோதிகளை இனங்கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விடயத்தில் தாமதத்தையும் நியாயமற்ற காரணத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே போல் குடும்ப உறுப்பினர் ஒருவரின் பாதுகாப்புத் தொடர்பில் நிச்சயமற்ற நிலையில் எமது மக்கள் வாழுகின்ற கொடுமைக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

இதே வேளை பாடசாலை சிறுவர்களான ஏரம்பமூர்த்தி ஜனார்த்தனன் (13 வயது) வள்ளுவன் ஜீவகுமார் ஆகிய சிறுவர்களும் கடத்தப்பட்டிருப்பதாக அறிகின்றோம். இவர்கள் கவனமாக காப்பாற்றப்பட  வேண்டும்.

கிழக்கு மாகாணத்தின் இயல்புச் சூழலைக் குழப்பியிருக்கும் இவ்வாறான நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர மத்திய மற்றும் மாகாண நிர்வாகங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

ஊடகச் செயலாளர்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி)

வன்னி மாணவர்களுக்கு பாடநூல்களை வழங்கும் பொறுப்பை தேசம்நெற் – சிந்தனை வட்டம் ஏற்றுள்ளன: த ஜெயபாலன் & பி எம் புன்னியாமீன்

Class 05 Text Bookஉள்நாட்டு யுத்தத்தினால் ஏற்பட்ட மனித அவலம் வன்னி மக்களை நீண்ட துயர்மிகு வாழ்விற்குள் தள்ளியுள்ளது. இளம்தலைமுறை மாணவர் சமூகம் காணாமல் போய்விட்டது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களும் அங்கங்களை இழந்தவர்களுமாக வாழ்வாதாரங்களை இழந்துள்ள மக்களுக்கு பல்வேறு வகையிலும் கைகொடுக்க வேண்டிய கடமைப்பாடு புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு உள்ளது. இது உடனடியான நாளாந்த வாழவியல் தேவைகளுடன் மட்டுப்படுத்தப்படாமல் நீண்டகால நோக்கிலும் மேற்கொள்ளப்படுவது அவசியம்.

Letter_from_T_Meganathan

இந்நிலையில் ஏப்ரல் 4ல் வன்னிப் பகுதி வலயக் கல்விப் பணிப்பாளர் த மேகநாதன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் 1057 மாணவர்கள் (மார்ச் இறுதிப்பகுதி புள்ளிவிபரம்) இடம்பெயர்ந்தவர்களுக்காக அமைக்கபக்பட்ட 13 நலன்புரி முகாம்களில் இருப்பதாகவும் அவர்களுக்கான பாட நூல்களை வழங்கி உதவுமாறும் தேசம்நெற்றைக் கேட்டுக்கொண்டார்.

தற்போது நலன்புரி முகாம்களில் உள்ள மாணவர்கள் மிகவும் கடினமான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றீர்கள். அதற்கு மத்தியிலும் அவர்கள் கல்வியை கைவிடாமல் தொடர்வது மிக மிக அவசியம். இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பது முதுமொழி மட்டுமல்ல உண்மையானதும் கூட. ஒரு சமூகத்தின் அத்திவாரம் அந்த சமூகத்தின் இளம் தலைமுறையினருக்கு வழங்கப்படும் கல்வி. அது பரீட்சையுடன் மட்டும் முடிந்துவிடாது.

புலம்பெயர்ந்து வாழும் உங்கள் உறவுகளாகிய நாம் அவர்கள் எதிர்கொள்ளும் மிகத்துயரமான வாழ்வை எண்ணி வேதனைப்படுகின்றோம். சிலசமயம் குற்ற உணர்வுக்கும் உள்ளாகிறோம். அக்குற்ற உணர்வில் இருந்து எம்மை சற்று விடுவித்துக் கொள்ள அவர்களுக்கு ஆறுதலாக இருக்க நினைக்கின்றோம். அந்த வகையில் சிறுவர் சிறுமியராகிய அவர்கள் எதிர்கொள்ள இருக்கும் புலமைப் பரிசில் பரீட்சைக்கு படிப்பதற்கு உதவும் வகையில் இப்பாடநூல்களை மாணவர்களுக்கு வழங்கும் பொறுப்பை தேசம்நெற் ஆசிரியர் குழு ஏற்றுக்கொண்டு உள்ளது.

பரீட்சைக்காக மட்டுமல்ல மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள இப்புத்தகம் உதவியிருக்குமானால் அது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

 Letter_from_P_M_Puniyameen

இப்பாடநூல் பதிப்பினை சிந்தனை வட்டம் மேற்கொள்கிறது. இப்பாடநூலிற்காகும் செலவின் மூன்றில் ஒரு பகுதியான 200 000 ரூபாய்களைச் சிந்தனை வட்டம் பொறுப்பேற்பதாக அதன் அமைப்பாளார் புன்னியாமீன் தெரிவித்து உள்ளார். மிகுதியான 400 000 ரூபாயை தேசம்நெற் ஆசிரியர் குழுவினர் பொறுப்பேற்கின்றனர். ஆனால் தற்போது மாணவர் தொகை அதிகரித்து இருப்பதால் இத்தொகை அதிகரிக்க வேண்டி இருக்கும்.

மேலும் மாணவர்களின் கல்விக்கான மேலதிக பாடப்புத்தகங்களை வழங்கவும் சிந்தனை வட்டம் நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.

இலங்கையில் அரசாங்கப் பரீட்சை என்ற அடிப்படையில் 03 பிரதான பரீட்சைகள் நடைபெறுகின்றன.
1. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை
2. க.பொ.த சாதாரணதர பரீட்சை
3. க.பொ.த உயர்தர பரீட்சை
இப்பரீட்சைகளுள் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை பாடசாலை மாணவனொருவன் எதிர்நோக்கும் முதலாவது பரீட்சையாகும். தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையானது மாணவர்களை உயர்தர பாடசாலைகளுக்குத் தேர்ந்தெடுப்பதற்கும், மாணவர்களுக்கு உதவிப் பணம் வழங்குவதற்குமான பரீட்சையாக அமைந்துள்ளது. இப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப்பெறும் மாணவர்கள் இலங்கையிலுள்ள மிகவும் பிரபல்யமான பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவர். அதேநேரம், இப்பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு க.பொ.த. உயர்தரம் சித்தியடையும் வரை மாதந்தோறும் (தற்போது) ரூபாய் 500 உதவிப் பணமாக அரசாங்கத்தால் வழங்கப்படும். உரிய மாணவன் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டாலும் இத்தொகை அதிகரிக்கப்பட்டு வழங்கப்படும்.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையானது ஒரு போட்டிப் பரீட்சையாகும். சராசரியாக ஆண்டொன்றுக்கு 70000 மாணவர்கள் மட்டில் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலமாக தோற்றுவர். இவர்களுள் சுமார் 3500 மாணவர்கள் மட்டில் சித்தியடைவர்.

வன்னியில் இடம்பெயர்ந்துள்ள 1057 மாணவர்கள் 13 இடைத்தங்கல் முகாம்களில் தரம் 05 பரீட்சையை எழுதுகின்றனர். இம்மாணவர்களுக்கு மேலதிக உசாத்துணை வழிகாட்டிகளான தேசம்நெற் உம், சிந்தனைவட்டமும் இணைந்து புதிய பாடத்திட்டத்திற்கமைய (2009ஆம் ஆண்டில் புதிய பாடத்திட்டத்திற்கமைய முதற் தடவையாக தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.) 30 மாதிரி வினாத்தாள்களையும் நான்கு வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கவுள்ளது.

மே 2ல் (எதிர்வரும் சனிக்கிழமை) மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு என்ற தலைப்பிலான கலந்தரையாடல் ஒன்றினை தேசம்நெற் ஈழவர் திரைக்கலை ஒன்றியத்துடன் இணைந்து மேற்கொண்டு உள்ளனர். எதிர்கால உதவி நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடப்படுவதுடன் உதவி வழங்க முன்வரும் ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்றடைவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றியும் இச்சந்திப்பில் ஆராயப்பட உள்ளது.

வலயக் கல்விப் பணிப்பாளர் த மேகநாதனால் சிந்தனை வட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மடல்:

Letter_to_Sinthanai_Vaddam

.

Letter_to_Sinthanai_Vaddam