கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

இலங்கையில் சனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி…. : தேடகம் (கனடா)

Thedakam_Logoதமிழ் மக்களின் போரின் ரணங்கள் ஆற முன்னர் அவர்களை தேர்தல் சூழ்ந்துள்ளது. தடுப்புமுகாம்களுக்குள்ளும், கூரை பிடுங்கிய வீட்டுக்குள்ளும் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் இவர்களை நாடி வாக்குகள் கேட்டு வேட்பாளர்கள் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கிய இரு கட்சிகளும் தங்களின் சிங்கள பேரினவாத மேலாதிக்க போக்கை இன்று வரை கைவிடத் தயாராய் இல்லை. 50 வருடங்களுக்கு மேலான தமிழர்களின் ஜனநாயகக் கோரிக்கைக்கு எந்தவொரு தீர்வையும் எட்ட முடியாத நிலையிலேயே இக் கட்சிகள் இருந்து வருகிறார்கள். இலங்கையை மிகவும் மோசமான அரசியல் – பொருளாதார நிலைக்குள் தள்ளிய பொறுப்பு இந்த இரு கட்சிகளையுமே சாரும்.

இந்தியாவும், மேற்குலகும் தங்கள் மேலாதிக்கப் போக்கை நிலை நிறுத்துவதற்கு பிரயத்தனங்களை எடுத்த வண்ணமே உள்ளன. மேற்கில் புலம்பெயர்ந்த தமிழர்களை தமது நலன்களுக்காக பயன்படுத்துவதில் மேற்குலகம் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது. இந்தத் தேர்தலில் புலம்பெயர்ந்த சமூகத்தின் ஊடாக ஒரு பொது அரசியல் போக்கை இலங்கைத் தமிழர்கள் மத்தியில் உருவாக்குவதில் மேற்குலகு அக்கறை கொண்டுள்ளது. ஏற்கனவே ஒற்றைத் தன்மையுடன் செயற்படும் மேற்கு தமிழ் ஊடகங்கள் மற்றும் மேற்கு ஊடகங்களும் நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கின் அரசியல் நலனுக்காக செயற்பட்டு வருகின்றன. இன்னுமொரு பக்கம் இந்திய அழுத்தம் தமிழ் அரசியல் கட்சிகளுக்கூடாக நடந்த வண்ணமே உள்ளது. இலங்கைத் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு கௌரவமான தீர்வை எட்டுவதை நோக்கமாகக் கொள்ளாது தமது நலன் சார்ந்தவர்களை ஆட்சியில் இருத்துவதற்கே இவர்கள் பிரயத்தனம் செய்து வருகிறார்கள். இவற்றை மீறி தமிழ் தேசிய இனத்துக்கான கௌரவமான தீர்வை முன்னிறுத்தி அதற்காய் தொடர்ச்சியான அரசியல் அடித்தளத்தை நிறுவுவதே தமிழர்களுக்கான அரசியலாய் இருக்க முடியும்.

50 வருடங்களுக்கு மேலாக இழுபடும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன? என்பதை இத் தேர்தலுக்கான பகிரங்க விவாதத்திற்குரிய பொருளாக தமிழ்த் தலைமைகள் நிறுத்தியிருக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைக்குமாறு பிரதான கட்சிகளுக்கு அரசியல் அழுத்தத்தை கொடுத்திருக்க வேண்டும். இன்றைய அரசியல் சூழலில் இத் தேர்தலை சிறுபான்மை தேசிய இனங்கள் தம்வயப்படுத்தியிருக்க வேண்டும். சிறுபான்மை தேசிய இனங்களின் ஜனநாயக் கோரிக்கையை முதன்மை பிரச்சினையாக்கியிருக்க வேண்டும். அதன் ஊடாக சிறுபான்மை தேசிய இனங்களின் நலன் சார்ந்த ஒரு பொது அரசியல் போக்கை உருவாக்கியிருக்க வேண்டும். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காய் குரல் கொடுக்கும் சக்திகளை ஒருங்கிணைக்கும் அரசியல் அடித்தளத்தை மேற்கொண்டிருக்க வேண்டும்.

கடந்த 50 வருடகால அரசியல் போராட்டமும், கடந்த 30 வருட கால ஆயுதப் போராட்டமும் தமிழ் மக்கள் மீது ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அரசியல் நிர்ப்பந்தத்தை புரிந்து செயற்படுவதற்கான அரசியல் விவாதத்தையும், அரசியல் அறிவூட்டலையும் ஏற்படுத்தவேண்டிய கடப்பாடு அனைத்து அரசியல் அபிலாசை கொண்டவர்களுக்கும் உண்டு. இலங்கைத் தமிழர்களின் அரசியல் என்பது, தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, விடுதலைப் புலிகள் என்பவற்றின் தலைமைகள் காட்டும் இடத்தில் புள்ளடி போட மட்டுமேயானதாக மட்டுப்படுத்தப்பட்டே வந்துள்ளது. இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து சுதந்திரமான விவாத தளத்தையோ, ஆய்வுகளையோ தமிழ் தலைமைகள் ஊக்கப்படுத்தவில்லை. தமிழ் அரசியல் என்பது மேட்டுக்குடிகளினதும், ஆதிக்க சக்திகளிதும் பேரங்களுக்கு ஒத்துழைப்பு நல்கும் சாதனமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. அரசியல் தன்னுணர்வு கொண்ட ஒரு தமிழ் சமூகம் உருவாவதற்கு இவர்கள் முட்டுக்கட்டை போட்ட வண்ணமே வந்துள்ளனர். இந்த நிலைமையே மலையகத் தமிழர்கள் மத்தியிலும், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் தொடர்கிறது. இதன் தொடர்ச்சியாகவே புலம்பெயர்ந்த நாடுகளில் இடம்பெறும் அரசியல் நடவடிக்கைகளையும் பார்க்கக்கூடியதாய் உள்ளது.

பழிக்கு பழி, பொங்கலுக்கு விடிவு என்னும் கற்பனை அரசியலை தலைமேற் கொண்டு வந்த எமக்கு குறுகியகால பலன்களுக்காய் அடிபணியும் அரசியல் முடிபுகளையே எடுக்கக்கூடியதாய் உள்ளது. இன்றும் தமிழர்கள் அரசியல் அடித்தளமற்று குறுகிய நலன்களுக்கு தம்மை பயன்படுத்தும் தலைமைகளை நம்பி ஏமாறும் நிலை தொடர்கிறது. அதனால்தான் இன்றைய சனாதிபதித் தேர்தலில் தமிழர்கள், தம்மை கொன்றவர்களை ஆதரிக்கும் ஒரு அவல நிலைக்குள் தள்ளி விடப்பட்டுள்ளார்கள்.

தமிழர்களுக்கான அரசியல் விதியை தமிழர்கள் நிர்ணயிக்கவும், இலங்கையின் தேசிய இனங்களுக்கான ஜனநாயகத்தை வலியுறுத்தும் அனைத்து தரப்பும் ஒன்றினைந்து செயற்படுடவும் வேண்டிய காலமிது. வெறுமனமே ஒரு சனாதிபதியை தெரிவு செய்வது என்பது இலங்கைத் தமிழ் மக்களின் நோக்கமாயிருக்க முடியாது. இலங்கையின் தேசிய இனங்கள் கௌரவமாக வாழ வழிவகுக்கும் ஒரு தீர்வைத் தரக்கூடிய அரசியல் மாற்றமே தமிழர்களின் நோக்கமாய் இருக்க வேண்டும். அத்தகைய மாற்றத்தை இலங்கை அரசியலில் ஏற்படுத்தக்கூடிய அரசியல் களத்தை உருவாக்குவதில் தமிழ் தலைமைகளும், தமிழ் மக்களும் உன்னிப்பாய் செயற்பட வேண்டும். அதுவே தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கக்கூடிய சனநாயக வழிமுறையாய் அமையும்.

தமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்)
ரொரன்டோ. கனடா
சனவரி 14. 2010

ஹெய்ட்டி பூகம்பத்தில் மரணித்தோர் எண்ணிக்கை 2 இலட்சமாக உயர்வு

haiti-earthquake02.jpgஹெய்ட்டி பூகம்பத்தில் மரணித்தோரின் எண்ணிக்கை இரண்டு இலட்சமாக உயர்ந்துள்ளது.

இது குறித்து ஹெய்ட்டி உள்துறை அமைச்சர் பால் அந்தோனி கூறும் போது, மரணித்தோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை தாண்டியுள்ளது. மீட்கப்பட்ட 40 ஆயிரம் உடல்களை கூட்டம் கூட்டமாக பல்வேறு இடங்களில் புதைத்து இருக்கிறோம்’ என்றார்.

மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே வீடுகளை இழந்தவர்களுக்கு போதிய உணவு மற்றும் தண்ணீரும் கிடைக்கவில்லை. இதனால் அங்கு கலவரம் வெடித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல்: எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்? : (ஈ.பி.ஆர்.எல்.எவ்_பத்மநாபா)

SF_PostersMR_Postersதமிழ் பேசும் மக்களே!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்  நாம் புத்திபூர்வமாகவும் தீர்க்கதரிசனமாகவும் நடந்துகொள்ள வேண்டும். மேலும் மேலும் துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகாதவாறும் எமது வாழ்வில் ஒளியை ஏற்றி வைக்குமாறும் நாம் செயற்பட வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் நிதானமான சிந்தனையுடனும் எதிர்காலம் பற்றிய கரிசனையுடனும் வாக்களிக்க வேண்டுமென்ற அபிப்பிராயத்தையே தமிழ் புத்திஜீவிகளும் ஆன்மீக தலைவர்களும் ஆசிரியர்களும் உயர் கல்வி மாணவர்களும் கொண்டிருக்கிறார்கள். அதனையே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினராகிய நாமும் தமிழ் வாக்காளர்களுக்கு வலியுறுத்த விரும்புகிறோம்.

தேர்தலைப் பகிஷ்கரிப்பதோ அல்லது தமிழ் வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பதோ தமிழர்களுக்க உரிய புத்திபூர்வமான நடவடிக்கையாகாது என்பதே தமிழ் அறிவார்ந்தோரில் பெரும்பாலானோரின் கருத்தாகும். அதுவே எமது கருத்துமாகும்.

விபரிக்க முடியாத துன்பங்களையும் வேதனைகளையும், இழப்புக்களையும் சுமந்து நிற்கும் எம் மக்கள் எழுந்து நிற்பதற்கு, எம் மக்களின் வாழ்வில் விடியல் பிறப்பதற்கு நாம் செயற்பட வேண்டும் என்று இவர்கள் கேட்டிருந்தார்கள்.

பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பொறுப்புணர்ச்சி உள்ள அரசியல் கட்சி என்ற வகையில் மக்களின் உடனடித் தேவைகளுடனும் நீண்டகால அபிலாஷைகளுடன் இணைந்து செல்லவே விரும்புகிறது.

எமது மக்களுக்கு நன்மை பயக்கும் ஜனநாயக சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அரசியல் அதிகாரப்பகிர்வும், சமூக பொருளாதார அபிவிருத்தியும் ஆகிய விடயங்களை கருத்திற்கெடுத்தே செயற்பட வேண்டியிருக்கிறது.

பொறுப்பற்ற நிராகரிப்பு அரசியலை நாம் மேற்கொள்ள முடியாது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை பொறுத்தவரை அவர் 40 வருடம் அரசியல்வாதியாக செயற்பட்டிருக்கிறார்.

1980 களின் இறுதிப் பகுதியில் இலங்கையில் மோசமான மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்த போது உள்ளுரிலும், சர்வதேச அரங்கிலும் மனித உரிமைகளுக்காக உறுதியுடன் குரல் கொடுத்தவர்.
எமது பிரதேசங்களையும் இந்த நாட்டையும் பீடித்திருந்த வன்முறைக் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர்.

அனைத்துக் கட்சிகளையும் இணைத்து அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு இலங்கையை பல்லினங்களின் நாடாக நிர்மாணிப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டவர். 

எனினும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் இணைக்கப்பட்டு 20 வருடங்கள் நடைமுறையில் இருந்த  இணைந்த வடக்கு கிழக்கை ஜே.வி.பி நீதிமன்றம் வரை சென்று பிரிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டது. அவசரகாலச் சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு நீதி மன்றத்தால் பிரிக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் ஊடாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் மாத்திரமே அதனை மேற்கொள்ள முடியும்.

கிழக்கு மாகாணசபை செயற்படுவதாக இருப்பினும் 13வது திருத்தத்தின் கீழான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. குறிப்பாக பொலிஸ் அதிகாரம், நிலத்தின் மீதான அதிகாரங்கள், நிதி அதிகாரங்கள் இன்றுவரை வழங்கப்படவில்லை என்பதே யதார்த்தம். 13வது திருத்தச்சட்டத்திற்கும் கூடுதலான அதிகாரப்பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் அதிகாரப்பகிர்வினூடாக ஜனநாயகத்தை விரும்பும் சிங்கள மக்கள் மத்தியிலும் அந்த நிலைப்பாடே காணப்படுகிறது. எமது பிராந்தியத்தின் பிரதான ஜனநாயக நாடும் இலங்கையின் நண்பனுமான இந்தியாவும் அதனையே வலியுறுத்துகிறது.

எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளர் சரத் பொன்சேகா அவர்கள் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இராணுவ ஜெனராலாக இருந்து மிகத் திறமையாகச் செயலாற்றியவர். இப்போது வடக்கு கிழக்கு இணைப்பு, உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கி அங்கு மீண்டும் தமிழ் மக்கள் குடியேறி வாழச் செய்வார் எனவும் வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பார் எனவும் தமக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பிரிவினர் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது அவர் அவ்வாறு கூறவில்லை என்றும் கிழக்கை கைப்பற்றி வடக்கு கிழக்கை பிரிப்பதற்கு வழிவகுத்தது தானே என்றும் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் அதிகாரப் பகிர்வு பற்றியோ, உயர்பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக்குடியமர்த்தல் பற்றியோ, சிறுபான்மை சமூகங்கள் பற்றியோ தமிழ் பேசும் மக்கள் பற்றியோ ஒரு வார்த்தையும் இடம்பெறவில்லை. இன்று இதனை பகிரங்கமாக தெரிவிக்காத நிலையில் நாளை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பாக உறுதியாக செயற்படுவார் என நாம் எதனையும் உறுதியாக கூறிவிட முடியாதுள்ளது.

இப்போது அரசாங்கம் உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்கி அங்கிருந்த மக்கள் மீள அவ்விடங்களில் குடியேறும் வழி வகைகளைச் செய்ய ஆரம்பித்திருக்கிறது. அவ்வேலைத்திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டு முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டுமென்று கோருகின்றோம்.

அதிகாரப்பகிர்வுக்கு எதிராகவும், எமது அண்டை நாடான இந்தியாவுக்கு விரோதமாகவும் செயற்பட்டுவரும் ஜே.வி.பி எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பிரதான பங்குதாரர் என்பதையும் நாம் மனம் கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன் ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் பொன்சேகாவின் முதுகில் ஏறி தான் அதிகாரத்தைப் பிடிக்கும் எண்ணத்துடனேயே அவருக்கு ஆதரவளிக்கிறார். சரத் பொன்சேகாவுக்கு என்று ஒரு அரசியற் பின்னணியோ அல்லது ஒரு கட்சிப்பின்னணியோ இல்லாதிருக்கிறார். இந்நிலையில் பொன்சேகா அவர்கள் தமது வாக்குறுதிப்படி எவ்வளவு தூரம் செயல்படுவார் என்பதே எமது கேள்வி. இது ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி பின்னர் நீ யாரோ நான் யாரோ என அவர் ஆக்கி விடுவாரோ என்பதே எமது கவலை.

இப்போது பலதும் பத்தும் கூறும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களும் எல்லாம் பிழைத்ததன் பின்னர் எல்லா சிங்களத் தலைவர்களும் இப்படித்தான் என்று சுலபமாகக் கூறி தாம் மக்களை பிழையாக வழி நடத்தியதற்கான பொறுப்பைக் கை கழுவி விட்டு அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் எப்படி வெல்வது என்பதை நோக்கி மக்களுக்கு உணர்ச்சி ஊசி அடிக்கத் தொடங்கி விடுவார்கள்.

புலிகளை ஏக பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொண்டே  தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது அரசாங்கம்தான் அவர்களை ஏகபிரதிநிதிகளாக  ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியது. நாங்கள் அவ்வாறு கூறவில்லையென்று திரு.சம்பந்தன் அவர்கள் தெரிவிக்கின்றார்.

புலிகளால் உருவாக்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பு இப்போது பல்வேறு பிரிவுகளாக உள்ளது.. சிவநாதன் கிஷோர் தலைமையில் ஒரு பிரிவினர் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கின்றனர். பொன்னம்பலத்தின் பேரன் கஜேந்திர குமார் தலைமையில் ஒரு பிரிவினர் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென்கின்றனர். சிவாஜிலிங்கம் தன்னை வேட்பாளராக நிறுத்தியுள்ளார். சிறீகாந்தா, செல்வம் ஆகியோர் அவருக்கு ஆதரவளிக்கின்றனர். சம்பந்தன் சேனாதிராஜா மற்றம் சுரேஷ் பிரிவினர் சரத் பொன்சேகா தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் பொன்சேகாவும், ஜே.வி.பி யும் ஊடகங்களுக்கு தெரிவித்துவரும் கருத்துக்கள் எதிர்மாறானவையாக இருக்கின்றன. பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்படும் பத்து விடயங்களைத் தவிர வேறு எதுவும் கூட்டமைப்பினருடன் பேசப்படவில்லையென ஜே.வி.பி யின் பேச்சாளர் அனுரகுமார திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.

கடந்த ஏழு எட்டு மாதங்களாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் வைக்கப்பட்டிருந்த 3,50,000 இற்கு மேற்பட்ட மக்களின் பிரச்சினைகளே கவலை அளிப்பதாக அமைந்திருந்தன. இந்த மக்கள் எல்லாவற்றையும் இழந்தவர்கள். உறவுகளை இழந்தவர்கள், பிள்ளைகள், இரண்டுவருட கல்வியை இழந்தவர்கள். தற்போது அவர்கள் படிப்படியாக தமது சொந்த ஊர்களுக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். 2,50,000 இற்கு மேற்பட்ட மக்கள் வரை ஊர்திரும்பியிருக்கிறார்கள். அவர்களுக்குரிய வீட்டுவசதிகள், வீதிகள், தொழில்வசதிகள், கல்வி, போன்ற விடயங்களில் அரசாங்கம் கூடுதலான அக்கறை செலுத்த வேண்டும் என்றே கோருகின்றோம். 

பாதுகாப்பு வலயங்களால் ஒரு லட்சத்துக்க மேற்பட்டோர் பத்தாண்டுகளுக்கு மேலாக அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம் மக்கள் ஒரு லட்சம் பேரளவில் உள்ளனர். இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்தோர் ஒரு லட்சத்துக்கு மேல் உள்ளனர். இருபத்தைந்து வருட யுத்தத்தால் வருமானம் உழைப்போரை இழந்து விதவைகளையும் அனாதைகளையும் கொண்டு நிற்கும் குடும்பங்கள் பல்லாயிரம். இவர்கள் அனைவருக்கும் உரிய பொருளாதார சமூக வாழ்வை மீளளிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் அனைத்தும் போதிய அளவில் அளிக்கப்பட வேண்டும். இந்த மக்களின் வாழ்வில் புதிய வெளிச்சம் வருவதற்கான அரசியல் பொருளாதாரக் கதவுகள் பல முனைகளிலும் திறக்கப்பட வேண்டும்.

இடம்பெயர்ந்த மக்களின் பிள்ளைகளில் பலர் சிறப்பு முகாம்களில் வாழ்வது அவர்களின் பரவலான கவலையாகும். பலாத்காரமாக யுத்தப் பயிற்சிக்கு பிடித்துச் செல்லப்பட்டவர்களே இதில் அதிகமானோர். அவர்களை துரிதமாக விடுவிப்பதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ள போதிலும் இன்னும் வேகமாக அவை நடைபெற வேண்டும். பிள்ளைகளை பெற்றோரிடம் நேரடியாக கையளிக்கும் நடவடிக்கையை ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார். அது இன்னமும் வேகமாகவும் முறையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோருகின்றோம்.

ஏ-9 பாதை தற்போது 24 மணிநேரமும் திறந்திருக்கிறது. எமது வெறிச்சோடிய நகரங்களில் மீண்டும் உயிர்ப்பு, மானிட செயற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளன். முட்கம்பிகளாகவும், இருளாகவும் காணப்பட்ட எமது நகரங்களில் பஸ்நிலையங்களும், கடைத்தெருக்களும் சினிமாத் தியேட்டர்களும் இரவு நேரங்களிலும் உயிரோட்டம் உடையவையாக காணப்படுகின்றன.
ஊரடங்கு உத்தரவு யாழ்ப்பாணத்தில் முற்றுமுழுதாகவே தளர்த்தப்பட்டு விட்டது.
தென்னிலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு கெடுபிடிகளாக இருந்த பொலிஸ் பதிவு முறைகள், பாஸ் முறைகள் நீக்கப்பட்டுள்ளன.

இன்னும் பல காரியங்கள் நடந்தேறியாக வேண்டியிருக்கின்றன. எல்லாவற்றையும் ஆக்கிரமித்திருந்த ஆயுத வன்முறைக் கலாச்சாரம் முடிவுக்கு வந்திருப்பதால் அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் ஆகியன இனி அவசியமற்றவை. அவை உடனடியாக நீக்கப்பட வேண்டும்
சோதனைச்சாவடிகள், மணல் மூட்டைகள், முட்கம்பி சுருள்கள் இனி எமது வீதிகளில் அவசியமற்றவை. அவை இல்லாத ஒருநிலை விரைவாக வேண்டும்.

தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் பங்குதாரர்களாக இருக்கக்கூடிய அதிகாரப் பகிர்வு அரசியல் முறைமையொன்றைக் கொண்டதாக இலங்கை அமைய வேண்டும்.

தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களுக்கு இடையேயான நல்லுறவுகள் பலப்படுத்தப்பட வேண்டும். ஒரு பல்லினங்களின் தேசமாக நாம் அனைவரும் இலங்கையர் என மானசீகமாக உணரக்கூடிய விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தென்னாசியாவின் கண்ணீர்துளி என கடந்த 30 வருடங்களாக அழைக்கப்பட்ட இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்து என்ற பெயரை மீண்டும் பெற வேண்டும்.

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பக்கத்தில் இருக்கும் இலங்கை அதனோடு பரஸ்பர நல்லுறவுடன் தனது ஜனநாயக பாராம்பரியங்களை பாதுகாத்துக் கொள்வதோடு அனைத்து மனித உரிமைகளையும் மதிப்பதாக விரிவாக்கப்படவும் வேண்டும்.

வறுமை, பிணி, அச்சம் நீங்கிய சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும். பலமான ஜனநாயக அடித்தளத்தில் எமது சமூக பொருளாதார நிர்மாணம் நடைபெற வேண்டும்.

ஆனால் நாடு பூராவும் இராணுவ உடையுடனும், தொப்பியுடன் எதிர்க்கட்சி பொது வேட்பாளர்pன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதன் பொருள் என்ன? இராணுவ பெருமிதம்தான் நாட்டின் எதிர்காலமா?

பாகிஸ்தான், பங்களாதேசம், மியான்மார் ஆகிய நாடுகளில் நிகழ்ந்த இராணுவ சதிப்புரட்சிகளையும் அந்நாடுகளில் ஜனநாயக சமூகத்தின் அடிப்படை அத்திவாரங்களே ஆட்டம் கண்டு போயிருப்பதை இலங்கையர்கள் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

40 வருடமாக படை அதிகாரியாக இருந்தவர்pன் இராணுவ மனோபாவமே இயல்பாக அவரின் சிந்தனையை தீர்மானிக்கும் என்பது கவனத்துக்குரியதொன்று. அவர் இப்போதும் கூட நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் என்ன நல்லவற்றைச் செய்யப் போகிறார் என்பதைவிட படைத்தரப்பினர், பாதுகாப்பு பற்றியே அதிகம் பேசுகிறார். சம்பள உயர்வு வேலைவாய்ப்புக்ள் பற்றி அவர் கூறுபவைகள் நடைமுறைக்குதவாத வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன.

சிறுபான்மை சமூகங்கள் பெரும்பான்மை சமூகத்தை அண்டிப்பிழைக்க வேண்டும் என்று அவர் இராணுவ கமாண்டராக இருக்கும் போதே கூறியவர். இலங்கையின் சனத்தொகை பொருளாதாரம் இவற்றை கரிசனையில் கொள்ளாமல் படையினரின் தொகையை மூன்று லட்சமாக அதிகரிக்க வேண்டுமென்று கூறியவர். இப்போதும் அதே நிலைப்பாடுகளையே கொண்டுள்ளார்.

ஜனநாயக உணர்வு கொண்டவர்களுக்கு குடிமக்களின் ஆட்சி பற்றி நம்பிக்கை கொண்டவர்களுக்கு இது மிகவும் நெருடலான விடயமாகும்.

தமிழ் பேசும் மக்களின் தலைமைகள் மக்களின் எதிர்காலம் பற்றி தீர்க்க தரிசனத்துடன் சிந்திக்க வேண்டும்.

வரலாற்றில் தூரதிருஷ்டியும் சமூகப் பொறுப்புணர்வும் இல்லாமல் போனதன் விளைவு எத்தகைய விபரீதங்களை நாம் சந்திக்க வேண்டி நேர்ந்தது. மொத்த சமூகமுமே அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட வில்லையா? இழந்தவற்றைத்தான் ஈடு செய்ய முடியுமா?

இத்தனைக்கும் எமக்கு எத்தகைய சந்தர்ப்பங்கள் எல்லாம் வந்தன.
இந்தியாவின் அனுசரணையுடன் வடக்கு கிழக்கு இணைந்த அதிகாரப்பகிர்வு முறைமை
1990 களின் நடுப்பகுதியில்  சந்திரிகா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சமஷ்டி முறையிலான தீர்வு
2002 இல் ஒஸ்லோவில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளால் பரிந்துரைக்கப்பட்ட கூட்டாட்சி முறை

தமிழ் மக்களால் நம்பப்பட்டவர்கள் எல்லாவற்றையும் நிராகரித்தார்கள்.
 
இந்த நிராகரிப்பு அரசியலே எமது சமூகத்திற்கு துன்பக் குழிகளையும் துயரக் குழிகளையம் தோண்டியது. தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புத்திசாலித்தனமாகவும், தீர்க்க தரிசனத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.

எமது மக்களுக்கு அச்சமில்லாத சுதந்திரமான அரசியல் பொருளாதார வாழ்வு வேண்டும்: இலங்கையில் ஆட்சி முறையில் தமிழர்களும் சகோதரமான பங்காளர்கள் என இருக்கும் நிலை ஏற்பட வேண்டும்:  தமிழ் மக்கள் தமக்கான சுபிட்சமான வாழ்வை தமது உழைப்பால் அடைவதற்கு இனவாத அரசியற் தடைகளற்ற ஓர் ஏற்பாடு உருவாக வேண்டும். இவற்றை சாத்தியமாக்க மஹிந்த ராஜபக்ஸவே தமிழ் மக்களின் தெரிவாக வேண்டும்

தமிழ் மக்களின் சுதந்திரமான வாழ்வுக்கும்,
தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார உரிமைகளுக்கும்
இன, மத, சாதி பேதங்களற்ற ஒரு சமதர்ம இலங்கைக்கும்
மக்கள் பங்களிப்புடன் தொடர்ந்து போராடுவோம். 

பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ்) ஜனவரி 2010, யாழ்ப்பாணம்

10 நிமிட “கட்சிதாவும்” நாடகம் அரங்கேற்றம்

mohomad-muzzammil.gifஜே.வி.பி. யிலிருந்து வெளியேறி தேசிய சுதந்திர முன்னணி (விமல் வீரவன்ச)யில் இணைந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மத் முஸம்மில் எதிரணி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கப்போவதாக வந்து விட்டு பத்து நிமிடத்தில் மீண்டும் திரும்பிச் சென்ற சம்பவம் ஜெனரல் பொன்சேகாவின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

நேற்று ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் மயோன் முஸ்தபாவுடன் ஒன்றாக வாகனத்தில் ஜெனரல் பொன்சேகாவின் அலுவலகத்துக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் முஸம்மில் மயோன் முஸ்தபாவிடமும் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிடமும் தனது குடும்பத்தவர்கள் ஆளும் தரப்பினரால் அச்சுறுத்தப்படுவதாகவும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்து தனக்கும் குடும்பத்துக்கும் பாதுகாப்புப் பெற்றுத்தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படுனெ ரவி கருணாநாயக்க உறுதியளித்த பின்னரும் கூட பயந்ததுபோல் காட்டிக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் முஸம்மில் திடீரென ஜெனரலை சந்திக்காமலேயே வெளியேவந்து ஊடகவியலாளர்கள் நின்ற இடத்தில் வந்து இங்கு எம்மை காசுக்கு வாங்கப்போகிறார்கள். இந்த விளையாட்டு எனக்குச் சரிவராதென்று கூறிவிட்டு கதவைத்திறந்து கொண்டு வெளியே பாய்ந்து காரில் ஏறி விரைவாகச் சென்று விட்டார்.

அதன் பின்னர் இச் சம்பவம் பற்றி செய்தியாளர் மாநாட்டில் மயோன் முஸ்தபாவிடம் கேட்டபோது மேலே எதுவுமே நடக்கவில்லை. அவர் ஜெனரல் சரத் பொன்சேகாவைச் சந்திக்கவுமில்லை. யாருடனும் பணப்பரிமாற்றம் இடம்பெறவுமில்லை என அவர் தெரிவித்தார். தனது குடும்பம் அச்சுறுத்தப்படுவதாகவும் தனக்கும் குடும்பத்துக்கும் பாதுகாப்பைப் பெற்றுத்தருமாறுமே அவர் கேட்டார். பின்னர் எதுவுமே பேசாமல் வெளியேறிவிட்டார். அவர் ஏன் வந்தார். எதற்காகத் திரும்பிப்போனார் என்பது எவருக்குமே தெரியவில்லை எனவும் மயோன் முஸ்தபா தெரிவித்தார்.

இதுவரை 473 தேர்தல் வன்முறைகள்

sri_election.jpgதேர்தல் வன்முறை தொடர்பில் இதுவரை 473 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. பொலிஸாருக்கு எதிராக 6 முறைப்பாடுகளை பெற்றுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இது தொடர்பாக மேலும் அந்நிலையும் தெரிவிக்கையில்

தேர்தல் வன்முறை தொடர்பில் 473 முறைப்பாடுகளை பதிவுசெய்துள்ளோம். தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது முதல் வியாழக்கிழமை மாலை 4 மணிவரை தேர்தல் வன்முறைகள் இவ்வாறு அதிகரித்துள்ள நிலையில், எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கின்றோம். எமக்கு கிடைத்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் பாரிய, சிறிய மற்றும் துப்பாக்கி பிரயோக சம்பவமென மூன்றாக பிரித்துள்ளோம்.

இதன்படி பாரிய சம்பவங்களாக 208, சிறிய சம்பவங்களாக 265 மற்றும் துப்பாக்கியுடன் தொடர்புடைய சம்பவமென 62 என வகைப்படுத்தியுள்ளோம்.பாரிய சம்பவங்களில் ஒரு கொலைச் சம்பவம் உட்பட கொலை முயற்சி சம்பவங்கள் 4 அடங்குகின்றது. அத்துடன் இதில் 60 தாக்குதல் சம்பவங்களும் 59 அச்சுறுத்தல் சம்பவங்களும் அடங்குகின்றன. மாவட்ட ரீதியில் அதிகூடிய சம்பவங்களாக மாத்தறையில் 43 ம் குருநாகலில் 41 ம் அம்பாந்தோட்டையில் 39 ம் அநுராதபுரத்தில் 35 ம் கம்பஹாவில் 32 ம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு எதிராக நாம் 239 ம் புதிய ஜனநாயக முன்னணிக்கு எதிராக 5 ம் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக 24 ம் ஜே.வி.பி.க்கு எதிராக 10 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளோம்.

அடையாளம் காணப்படாமல் 181 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ள அதேநேரம், இம்முறை பொலிஸாருக்கு எதிராக 6 முறைப்பாடுகளை பெற்றுள்ளோமென தெரிவித்துள்ளது.இதேவேளை, தேர்தலைக் கண்காணிப்பதற்கான மற்றுமொரு அமைப்பான கபே தேர்தல் வன்முறை தொடர்பில் 317 முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து அதன் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் கருத்துத் தெரிவிக்கையில் பொலநறுவை வன்முறைச் சம்பவத்துக்குப் பின் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. ஆகிய வற்றின் 6 தேர்தல் காரியாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்ற நிலையில், எதிர்காலத்தில் நிலைமை மோசமடையும். நாம் நேற்று வியாழன் வரை 317 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளோம்.

இந்த நிலைமைக்கு அரசாங்கம் 17 ஆவது அரசியல் திருத்தத்தை அமுல்படுத்தாமல் இருப்பது தான். இதனால் பொலிஸார் வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. தேர்தல் ஆணையாளரின் உத்தரவையும் பொலிஸார் நடைமுறைப் படுத்தாததற்கு இதுவே காரணமாகும்.

பொன்சேகா அணிக்கு மாற 3 கோடி ரூபாவுக்கு பேரப் பேச்சு விலைபோகமாட்டேன் என்கிறார் முஸம்மில்

muzzammil.jpgஅரசாங் கத்திலிருந்து வெளியேறி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதற்காக தனக்கு 30 மில்லியன் ரூபா மயோன் முஸ்தபாவால் வழங்கப்பட்டதாகவும் ஆனால் தன்னை வாங்க முடியவில்லை என்றும் தான் கட்சி மாறப்போவதில்லை என்றும் தேசிய சுதந்திர முன்னணி எம்.பி. எம்.முஸம்மில் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் முஸம்மில் இதனை தெரிவித்ததாக “அததெரண’  இணையத்தளம் தெரிவித்தது.செய்தியாளர் மாநாட்டில் பேசிய பா.உ முசம்மில், ரணில் விக்கரமசிங்க மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் என்னை அழைத்து சரம்பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குமாறும், அவ்வாறு ஆதரவு வழங்கினால் 300 மில்லியன் பணமும் வெளிநாடு ஒன்றில் வாழ்வதற்குரிய சகல ஏற்பாடுகளும் செய்து தருவதாகவும்; கூறினர். அதன்பொருட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம அவர்களின் ராஜகிரியவில் உள்ள காரியாலயத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம் அங்கும் பா.உ ரவி கருணாநாயக்க இருந்தார். ஜெனரல் கலந்து கொள்ளும் விசேட ஊடகவியலாளர்கள் மாநாடொன்று உள்ளதாகவும் அதில் கலந்து கொண்டு ஜெனரலுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிகுமாறும் என்னை வேண்டினர். அத்துடன் பா.உ மயோன் முஸ்தபா தலைமையிலான குழுவொன்று என்னிடம் பணப்பெட்டி ஒன்றை தந்தனர். அந்தப்பணத்தை எண்ணுவதற்குக்கூட எனக்கு இதுவரை நேரம் கிடைக்கவில்லை. 

இது இவ்வாறிருக்க கவர்ச்சிகரமான நிதியை வழங்குவதன் மூலம் தேசிய சுதந்திர முன்னணி எம்.பி.யான முகமட் முஸம்மிலின் ஆதரவை பெறுவதற்கு எதிரணி முயற்சித்ததாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச நேற்று தெரிவித்துள்ளதுடன் இதற்கான ஆதாரம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆதரவை விலைக்கு வாங்குவதற்கு எதிரணி மேற்கொண்ட முயற்சிக்கான ஆதாரத்தை ஊடகங்களுக்கு விரைவில் வெளிப்படுத்த இருப்பதாக நிருபர்களிடம் நேற்று வீரவன்ச தெரிவித்ததாக டெய்லி மிரர் இணையத்தளம் தெரிவித்தது. இந்த செய்தியாளர் மாநாட்டின் போது பிரசன்னமாகியிருந்த முஸம்மில் தன்னை எதிரணிக்கு விற்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

ஹெய்ட்டிக்கு உதவிகளை அனுப்புவதில் சிரமம்

haiti-earthquake02.jpgபெரும் பூகம்பம் ஏற்பட்ட ஹெய்ட்டியில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோருக்கு அவசர உதவிப் பொருட்களைக் கொண்டு சேர்க்க தாங்கள் போராடிவருவதை சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தினால் ஏற்பட்டுள்ள கடுமையான அழிவுகள் நிவாரணப் பொருட்களையும் கருவிகளையும் கொண்டு சேர்ப்பதென்பதை மிகவும் சிரமமாக்கியுள்ளதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் கூறியுள்ளது.  இருபது லட்சம் பேர் வரையிலானவர்களுக்கு உணவு உதவி வழங்க ஐ.நா. எண்ணம் கொண்டுள்ளது என்றாலும் தற்போது வெறும் நான்காயிரம் பேரை மட்டுமே அதனால் சென்றடைய முடிந்துள்ளது.

haiti-earthquake02.jpgஅமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பலான கார்ல் வின்சன் ஹெட்டியை சென்றடைந்துள்ளது. அதிலிருந்த ஹெலிகாப்டர்கள் தலைநகருக்கு உணவுப் பொருட்களின் விநியோகத்தை ஆரம்பித்துள்ளன.

முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சரும், ஜனாதிபதி வேட்பாளருமான முஸ்தபா,சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு

ballot-muthaffa.jpgமுன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சரும், ஜனாதிபதி வேட்பாளருமான, மயோன் முஸ்தபா, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்க முன்வந்துள்ளார். இந்த ஆதரவு தொடர்பில் அவர் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அறிவித்தார்.

இதேவேளை, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சேகு இஸ்ஸதீன் நேற்று காலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன் போது அவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஜனாதிபதியின் ஆலோசகராக கடமையாற்றிய நசீர்; அகமட்; ஜெனரல் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
 

தேர்தலில் போட்டியிடும் பிக்கு வேட்பாளர் ஜனாதிபதியை ஆதரிக்க முடிவு

himi.jpgஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ட்டிரக்டர் சின்னதில் போட்டியிடும் ‘ஜனசெத பெரமுன’ கட்சியின் வேட்பாளர் வண. வத்தறமுல்ல சீலரத்ன தேரர் ஜனாதிபதியை ஆதரிக்க முன்வந்துள்ளார். பத்தரமுல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்த ஜனாதிபதிக்கு எதிர்வரும் 26ம் திகதி நன்றிக்கடன் செலுத்த வேண்டும்.

ஜனசெதபெரமுன ஜனாதிபதிக்கு தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் மனோகணேசன், ரவூப் ஹக்கீம் போன்றோர் நாட்டை துண்டாட முனைபவர்களுடன் சில பிக்குகள் ஆதரவு வழங்குவது துரதிர்ஷ்ட வசமானதெனக் கூறினார்.

ஜனாதிபதியின் தலைமையின் கீழ் முப்படைகள், பொலிஸ், சிவில் பாதுகாப்பு படையினரது வீரமிக்க செயற்பாடுதான் பயங்கரவாதத்தை முறியடிக்க உதவியது.

அதேநேரம் ராஜபக்ஷ சகோதரர்க ளின் அயராத உழைப்பும் பயங்கரவாதத்தை ஒழிக்க பேருதவி புரிந்துள்ளது. உள்ளூர், வெளிநாட்டுச் சக்திகள் இன்னும் நாட்டை அழிக்கவே முயன்று கொண்டிருக்கின்றன வென்றும் சீலாரெட்ன தேரர் சுட்டிக் காட்டினார்.

திருமணத்துக்குப் பின் டென்னிஸிலிருந்து விலகல்: சானியா

sania-mirza.jpgதிருமணத் துக்குப் பின் டென்னிஸிலிருந்து விலகவிருப்பதாக பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

சானியாவுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவரது இளவயது நண்பரான சோஹப் மிர்சாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. எனினும் திருமணம் எப்போது நடைபெறும் என அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், திருமணத்துக்குப் பின் டென்னிஸ் விளையாடும் எண்ணமில்லை என சானியா தெரிவித்தார். எனினும் திருமணத்துக்கு சிறிது காலம் ஆகலாம் என்றார் அவர். விளையாடுவதா, வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க சானியாவுக்கு முழு சுதந்திரம் உண்டு என அவரை மணக்கவிருக்கும் சோரப் முன்னதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.