கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

Prof_Hoole_at_Thesam_Meeting_27Aug10பேராசிரியர் ரட்ன ஜீவன் ஹூல்  நேற்று நாடு திரும்பினார். 2006ல் யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் ஹூல்  தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை அச்சுறுத்தலையடுத்து இலங்கையை விட்டு வெளியேறி இருந்தார். கடந்த மூன்றரை ஆண்டுகளாக அமெரிக்காவின் நியோர் Rensselaer Polytechnic Institute இல் தன் தன் கற்பித்தலை மேற்கொண்டு இருந்த பேராசிரியர் செம்ரம்பர் 2 2010ல் மீண்டும் இலங்கை சென்றடைந்துள்ளார். நியூயோர்க்கில் இருந்து இலங்கை செல்வதற்கு முன்னதாக தேசம்நெற் அழைப்பில் லண்டன் வந்திருந்த பேராசிரியர் ஹூல் லண்டனில் இடம்பெற்ற கல்வியியல் சந்திப்புக்களில் கலந்துகொண்டிருந்தார். ஓகஸ்ட் 29 2010ல் இடம்பெற்ற சந்திப்பில் ‘வடக்கு – கிழக்கு (வடகிழக்கு) இல்/க்கான கல்வி’ என்ற தலைப்பில் 45 நிமிட பேருரையை வழங்கினார்.

Prof_Hoole_at_London_Meeting_29Aug10ஓகஸ்ட் 31 முதல் அவருடைய அமெரிக்க கல்வி நிறுவனத்தின் வேலையில் இருந்து நீங்கும் இவர் தான் பிறந்த தன்னை வளர்த்த மண்ணான யாழ்ப்பாணத்திற்கு தன் சேவையை வழங்க செல்வதாக தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார். சர்வதேச பல்கலைக்கழகங்களில் 17 ஆண்டுகள் பேராசிரியராக பணியை முடித்துக்கொண்டு இலங்கைப் பேரதனைப் பல்கலைக்கழகத்தில் தன் கற்பித்தலைத் தொடர்ந்த போதும் யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் இணைய முயற்சிகளை மேற்கொண்டு இருந்தார். மிகவும் முடிய இறுக்கமான  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் எப்போதும் தனக்கு வெளியே இருந்து வருபவர்களை உள்வாங்க முன்வருவதில்லை. கிணற்றுள் தவளையாகவே இந்நிர்வாகம் செயற்பட்டு வந்தது. பல்கலைக்கழக கணணியில் துறையை நிறுவி செயற்பட வைத்த பேராசிரியர் ஹூல்  யாழ் பல்கலைக்கழகத்தில் கணணியியல் துறைக்கு விண்ணப்பித்த போது யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் அவரது விண்ணப்பத்தை கவனத்தில் எடுக்கத் தவறியது. தற்போது மேற்படி துறைக்கு அவரை நியமிக்குமாறு நீதிமன்றம் ஆணை பிற்ப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் பேராசிரியர் ஹூல்  இன்னும் சில தினங்களில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் பயணமாகின்றார்.

பேராசிரியர் ஹூல்  உடன் அவரது துணைவி துஸியந்தி ஹூல்  உம் மகன் யோவான் ஹூல்  உம் யாழ் செல்கின்றனர். துஸியந்தி ஹூல்  உம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்திருந்த போதும் அவரது விண்ணப்பமும் கவனத்தில் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாதம் முதல் யோவான் ஹூல் யாழில் தன் இடைநிலைக் கல்வியைத் தொடர உள்ளார். பேராசிரியர் ஹூல் யாழ் திரும்புவதும் தனது கற்பித்தல் கடமையை தொடர முடிந்தால் இது பலருக்கும் முன்னுதாரணமாக அமையும். புலம்பெயர்நாடுகளில் கல்வியியல் செழிப்புடன் உள்ளவர்கள் தங்கள் ஆற்றலை தம் மக்களுடன் பகிந்துகொள்வதற்கு நல்லதொரு சந்தர்ப்பமாக இது அமையும்.

Sooriyasegaram_Mஇடதுசாரி சிந்தனையாளரும் கடந்த காலங்களில் தேசம்நெற் கூட்டங்களில் அறியப்பட்டவரும் ஆன சூரியசேகரம் தற்போது இலங்கை சென்று யாழ் மாநகரசபைக்கு ஆலோசகராக கடமையாற்றுகின்றார். கம்டன் கவுன்சிலின் பெரும்தெருக்கள் திணைக்களத்தில் இருந்து ஓய்வுபெற்ற இவர் தனது அனுபவங்களை ஆற்றலை யாழ் மாநகரசபையுடன் பகிர்ந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. மிகவும் அவசியமான ஒரு காலகட்டத்தில் பேராசிரியர் ஹூல்  யாழ் வருகிறார் எனத் தெரிவித்த சூரியசேகரம் பேராசிரியர் ஹூல்  போன்ற ஆளுமைகள் யாழ் கல்விச் சமூகத்திற்கு அவசியமானது எனத் தெரிவித்தார்.

அறிவுத் தேடலுடன் தம முன்னேற்றத்திற்கான தாகத்துடன் உள்ள தாயக மக்களுக்கு பேராசிரியர் ஹூல்  போன்று பல்துறை சார்ந்தவர்களும் தங்கள் சேவையை வழங்க அர்ப்பணிப்புடன் முன்வருவது லண்டனில் இடம்பெற்ற சந்திப்புக்களில் மிகவும் வரவேற்கப்பட்டது. இலங்கை செல்வது தொடர்பில் ஆரம்பத்தில் ஒரு தயக்கம் இருந்தாலும் லண்டனுக்கு வந்ததன் பின் கிடைத்த ஆதரவும் வாழ்த்துக்களும் தன்னை உற்சாகப்படுத்தியதாக லண்டனில் இருந்து விமானம் ஏறுவதற்கு முன் பேராசிரியர் ஹூல்  தெரிவித்தார்.

Prof_Hoole_Meeting_27Aug10தன்னிடம் பலரும் பல்வேறு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்ததாகக் கூறிய பேராசிரியர் ஹூல்  தனது எல்லைக்குட்பட்ட விடயங்களை மட்டுமே தன்னால் மேற்கொள்ளமுடியும் எனத் தெரிவித்தார்.

யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணை வேந்தருக்கான பதவிக்காலம் இவ்வாண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகின்றது. பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவி இரு கட்டங்களினூடாக தெரிவு செய்யப்படுகின்றது. முதற்கட்டத்தில் பல்கலைக்கழக சபையில் உள்ள உறுப்பினர்களின் வாக்களிப்பின் மூலம் மூவர் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் பெயர்கள் University Grants Commission வழங்கப்படும். அடுத்து பல்கலைக்கழக கவுன்சிலால் தெரிவு செய்யப்பட்ட மூவரில் ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்வார்.

2006ல் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் ஹூல் தெரிவு செய்யப்பட்ட போதும் அவர் தனது கடமையைச் செய்வதில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுக்கப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு இழைத்த பல்வேறு அநியாயங்களின் பட்டியலில் கல்விச் சமூகத்தை சீரழித்தது குறிப்பிடக்கூடிய ஒன்று.

தற்போது யாழ் திரும்பும் பேராசிரியர் ஹூல் யாழ் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தருக்கான பதவிக்கு போட்டியிட உள்ளார். அவர் இப்பதவிக்கு தெரிவு செய்யப்பட வேண்டியதன் அவசியம் தற்போது பரவலாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆயினும் பேராசிரியர் ஹூல் உடைய வெளிப்படையான பேச்சும் நேர்மையான நடவடிக்கைகளும் அவரது தெரிவுக்கு எதிரானதாக அமையலாம் என்ற அச்சமும் கல்வியியலாளர்கள் மத்தியில் உள்ளது.

Thavarajah_Sபேராசிரியர் ஹூல் ஓகஸ்ட்30ல் ரிபிசி வானொலியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு தமிழ் மக்களின் கல்வி நிலை தொடர்பாகவும் குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விநிலை தொடர்பாகவும் உரையாடினார். இக்கலந்துரையாடலில் பங்கேற்ற முன்னாள் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் தவராஜா பேராசிரியர் ஹூல் 2006ல் தனது துணை வேந்தர் பணியை மேற்கொள்ள முடியாது போனது துரதிஸ்டமானது என்றும் அவர் தற்போது யாழ் திரும்பிச் செல்வது பாராட்டுக்கு உரியது என்றும் தெரிவித்தார். பேராசிரியர் ஹூல் உடைய தகமையுடன் இலங்கையில் யாரும் இல்லை எனத் தெரிவித்த எஸ் தவராஜா அவருடைய சேவைக்கான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

பேராசிரியர் ஹூல் கலந்துகொண்ட ஒவ்வொரு சந்திப்பும் அவர் யாழ் செல்ல எடுத்த முடிவை மனதார வாழ்த்துவதாகவும் அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைந்திருந்தது. பேராசிரியர் ஹூல் அங்கு அதிசயம் எதையும் நிகழ்த்த முடியாது என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டு இது மாற்றத்திற்கான முதற்படியாக அமையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

வாழ்க்கை என்பது ஒரு தவம். அதில் கல்வி என்பது ஒரு வரம். – எனக்குத் தெரிந்த நியாயம் : சஹாப்தீன் நாநா

Fishermen_Kurunagarகடந்த நாலு வாரமாக கேபி அண்ணாவின் பேட்டிகளைப் பார்த்து தலை சுத்தோ சுத்தென சுத்துகின்றது. எனக்கென்னவோ அண்ணா செய்வார். ஆனா செய்ய மாட்டார் என்பது போல்தான் தெரிகின்றது. கழுவுற மீனுல நழுவுற மீனாகத்தான் பதில்கள் இருக்கின்றதே தவிர. நொட் ஸ்ரோங். இரண்டாயிரத்து ரெண்டுல என்ன விலக்கிட்டாங்க, நான் பிள்ளையும் குட்டியுமா வாழ்ந்திட்டிருந்தன், அப்புறம் ரெண்டாயிரத்து எட்டுல கூப்பிட்டாங்க. ஆனா எனக்கு காஸ்ட்ரோ அண்ணாவும் உதவல. நெடியவன் தம்பியும் உதவல. நான் ரொம்ப நொந்து போனன். அதனால போராட்டம் தெச மாறிப் போச்சென்கிறார். அப்ப தலைவருக்கு பவர் இருக்கலயா ? அவர்ர வொய்ஸ ஏற்கனவே யுரோப்பிய புத்திஜீவிகள் அமுக்கிட்டாங்களா? அப்ப மகின்த சகோதரர்கள் முள்ளிவாய்க்காலில் அமுக்கிய அந்த நபர் யார் என்ற சங்கதியையும் சொல்லிடுங்கோ.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் அலுவலகத்துக்கு தான் ரொம்ப பயந்து கொண்டு போனதாகவும், அங்கு சிரித்த புத்தர் சிலையை கண்டு தன் மனம் ஆறுதல் அடைந்ததாகவும் சொல்லுகின்றார். அதற்கு முதல் 25 வருடம் மக்களை மாக்களாக நினைத்துக் கொண்டு, சூரசம்ஹாரமாடிய ஒரு கூட்டத்துக்கு ஆயுத சப்ளை செய்த போது, பௌத்த நாடான பெங்கொக்கிலும், கம்போடியாவிலும் புத்தர் சிலைகள் என்ன ரத்தம் கக்கிக்கொண்டா இருந்தது. எனக்கு இது நியாயமா படல்.

வெள்ளயன்கள் ஒரு பழமொழி சொல்வார்கள். நண்பர்கள் எப்போதும் நெருக்கமாக இருப்பார்களாம். எதிரிகள் இன்னும் மிக, மிக நெருக்கமாக இருப்பார்களாம். அந்த தலைவனுடன் இறுதிவரையும், மிக மிக நெருக்கமாக இருப்பதாக காட்டிக்கொண்டிருந்த யுரோப்பிய புத்திஜிவிகள் எல்லாம்? பரமண்டலத்தில் இருக்கும் பிதாவே உன் நாமமும், எங்கள் நாமமும் பரிசுத்தமடைவதாக. ஆனால் ஒரே ஒரு விடயத்தில் நாம் எப்போதும் அந்த மறவனுக்கு ஸலாம் போட்டுக்கொண்டே இருப்போம். ஆம் இறுதிவரையும், இறுதிவரையும் இந்த புலம் பெயர் புண்ணாக்குகள் போலல்லாது, இறுதிவரையும் மக்களுடன் இருந்து மரணித்தவன். இறந்த வேலுப்பிள்ளையருக்கும், நோயுடனிருக்கும் அந்த தாய், பார்வதியம்மாளுக்கும் ஒரு சல்யூட் அடித்துத்தான் ஆக வேண்டும்.

கேபி அண்ணா, இப்ப யூரோப்புல இருக்கிற நம்மவன்கள் எல்லாம் முன்னமாதிரி இல்ல. முதல்ல, ஒரு ஓடர், ஒரு தலைவர், ஒரு எச்சரிக்கை. இப்போ எல்லோரும் தண்டல்காறர்கள். மனதுக்குள்ளால கேள்வி கேட்டவன்கள் எல்லாம், இப்ப வாயத் தொறந்து கேட்கத் தொடங்கிட்டான். இது ஒரு பெரிய முன்னேற்றமண்ணா.

வாயத்தொறந்து எப்ப எதிர் கேள்வி கேட்கத் தொடங்குகின்றானோ! அவ்விடத்தில் இருந்துதான் ஊற்றுக்கள் தொடங்கும் என்கின்றார் விரைவில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக வரயிருக்கும் ஐயா ரத்னஜீவன் ஹூல். எதிர்க் கேள்வி கேள், புரியலயா விவாதம் செய், உனக்கு ஆங்கிலம் தெரியலயா? தெரிந்ததை சொல்லிக்கொடு. இப்ப உள்ள, இந்த ஜெனரேசன் மாணவன் புரிந்து கொள்வான் அல்லது புரிய முயற்சி செய்வான் என்கின்றார்.
என்ன ஒரு சிம்பிளிசிற்றி, எத்தனையோ டிகிரிகளையும், உள்ளக்கிடக்கைகளையும், ஆதங்கங்களையும் அடக்கிக் கொண்டு, சின்னப்பிள்ளத்தனமா கருத்துக்களை முன் வைக்கின்றார். வெல்டன், வெல்டன். இப்படி ஒரு நாலு பேர் இப்போது சிறிலங்காவுக்கு தேவை.

அன்னதானம் செய்தால் பசியோடிருந்த ஒரு வயிறுக்கு சோறூட்டிய சந்தோசம் ஏற்படுமாம், இரத்ததானம் செய்தால் ஒரு உயிருக்கு உயிர் கொடுத்த சந்தோசம் ஏற்படுமாம், கண்தானம் செய்தால் இருட்டுக்குள் இருக்கும் ஒருவனுக்கு, இந்த உலகத்தை காட்டிய சந்தோசம் ஏற்படுமாம், உறுப்பு தானம் செய்தால் மரணத்தின் விளிம்புக்கே சென்ற ஒருவனுக்கு மறுவாழ்வு கொடுத்த சந்தோசம் ஏற்படுமாம், ஆனால் கல்விதானம் செய்தால், ஒருத்தனை அல்ல ஒரு தலைமுறையையே தூக்கிவிட்ட சந்தோசம் ஏற்படுமாம். அதை நான் செய்கின்றேன், செய்யப் போகின்றேன், அந்த சந்தோசத்தை பெற நீங்களும் என்னுடன் கைகோருங்கள் என்கின்றார். ரொம்ப நியாயமான, ஆரோக்கியமான சந்தோசம்.

நாம் கனிகளை மட்டுமே உண்ணப்பழகிவிட்டோம். அதனால் நமக்கு வேர்களின் வேதனை தெரிவதே இல்லை. எல்லாக் கசமாலங்களையும் உட்டுப் போட்டு, கொஞ்ச நாளைக்காவது வேர்களுக்கு தண்ணி பாய்ச்சுவோம். தகப்பனை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த தாய்மார்கள், அண்ணனை இழந்த தங்கைகள், தங்கைகளை தொலைத்த இளைஞர்கள், அவயங்களை தொலைத்த மனிதர்கள் என சிறிலங்கா முழுதும் புரையோடிப் போயுள்ள வேர்களுக்கு நீர் பாய்ச்சுவோம். அதற்கு கல்வி ஒரு திறவுகோல்.

இல்ல, எங்கள் முயற்சி மகின்தவை, சிங்கள அரசுகளை பழிவாங்குவதுதான் என்றால் அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. உன் முயற்சி, மலையைத் தோண்டி எலியை பிடித்ததாக இருக்கக் கூடாது. மலையைத் தோண்டி, தங்கச் சுரங்கங்களை கண்டு பிடித்ததாக இருக்க வேண்டும் என்பார்கள். நாம் நிறைய மலைகளைத் தோண்டி, தாண்டியும் வந்துவிட்டோம். ஒரு பூச்சி, பூரானைக் கூட எம்மால் பிடிக்க முடியல. ஆனால் மனதுக்குள்ளால் சிறிலங்கா சோனிகளின் முன்னேற்றம் பற்றி ஒரு ஆய்வு செய்து கொண்டிருக்கின்றோம்.

எப்படி சிறிலங்கா முஸ்லீம்கள் காய்களை நகர்த்துகின்றார்கள். வெரி சிம்பிள். வளைந்து கொடு நிமிர்ந்து நிற்கலாம் என்ற ஒரு சிம்பள் தத்துவம். சிறிலங்கா ஒரு நாடு. அதில் மூவின மக்கள் வாழ்கின்றார்கள். சிங்களவர்கள் பெரும் பான்மை, அடுத்து தமிழர், அடுத்து முஸ்லீம்களும், பறங்கியரும் ஒரு சொட்டுண்ணு இருக்கின்றோம். இது நாம் ஆள வந்த நாடில்லை. வாழ வந்த நாடு. அதனால் ரொம்ப அமைதி. தருவதை பெற்றுக் கொண்டு, அவர்கள் தர மறுப்பதை நாங்களாகவே தேடிக்கொண்டு வாழ்கின்றோம். வாழப்பழகி விட்டோம். தொப்பிகள் மாற்றப்படுகின்றன, அல்லது தொப்பிகள் புரட்டப்படுகின்றன. முந்தா நாள் கூட காக்கா ரவூப் ஹக்கீம் தொப்பி புரட்டியுள்ளார். அதில் எந்த தப்பும் இருப்பதாக தெரியலயே. நியாயமாத்தான் தெரியுது.

தானும் முன்னேறிக்கொண்டு (ரவுப் ஹக்கீம் சகோதரயா மீண்டும் ஒரு ஐஸ்கிறீம் கம்பனி திறக்கப் போகின்றார் போல் தெரிகின்றது), தனது தொகுதியையும் முன்னேற்றி, தனது சமூகமும் முன்னேற, வேறு என்ன வழியிருக்கின்றது. இல்ல தொப்பி மாற்றக் கூடாது, அரசுடன் மல்லுக்கு நிற்க வேண்டும் என்றால், சிறிலங்காவில் சோனிக்காக்காமார் என்ற சமூகம் வாழ்ந்த தடமே இருக்காது. இன்னேரம் புல்லு மொளைச்சிருக்கும். கம்பளையில் 1957ல் எங்களுக்கு முதல் அடி விழுந்த போது நாங்க ஆயுதம் தூக்கியிருப்போம். தூக்கல, தூக்க விடல. எங்களுக்கு யாவாரம் சொல்லிக் கொடுத்த வாப்பாமாரும் சரி, எங்களுக்கு பொது அறிவு சொல்லிக் கொடுத்த வாத்திமாரும் சரி ஆயுத தர்பார் பற்றி சொல்லித் தரல. நல்லகாலம் அந்தக் காலங்களில் எங்களிடம் லோயர்கள் இருக்கல.

ஆனால், 2009 நவம்பர் 13, 14 திகதிகளில் நமது ஜனாதிபதி கிட்டத்தட்ட 157, வெளிநாட்டுவாழ் சிறிலங்கா பிரஜைகளை அழைத்து, ஜனாதிபதி செயலகம், கோள்பேஸ் ஹோட்டல், ஜனாதிபதி மாளிகை ஆகிய இடங்களில் கலந்துரையாடல்களையும் நடாத்தி, மூக்கு முட்ட, முட்ட சாப்பாடும் தந்தார்கள். வியாபார நோக்கமாக, முதலிட வாங்கோ என அழைக்கப்பட்ட இந்த கலந்துரையாடல்களுக்கு, முக்காலே மூணுவீசம் பேர் அரசியல் காய்களை நகர்த்துபவர்கள்தான் வந்திருந்தார்கள். மீதி ஒரு வீசம் வியாபார நோக்கம் உள்ளவர்கள்.

இங்கு கனடாவில் இருந்து வந்த ஒரு புத்த பிக்குவை சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. என்னுடன் ஈபிடிபியைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியும் (லண்டனில் வாழ்ந்து, இப்போது கொழும்பில் தொழிலை தொடங்கியுள்ளவர்), புளட் அமைப்பின் நோர்வே பிரதிநிதி ஒருவரும், அமெரிக்கா லாஸ்ஏன்ஜலீஸ்சில் இருந்து வந்த ஒரு புத்தி ஜீவியும் இருந்தார்கள். சிறிலங்கா முஸ்லீம்களின் ஒவ்வொரு முன்னேற்றம் பற்றியும் விபரித்த அந்த புத்த பிக்கு, நாம் இங்கு அடிபட்டுக் கொண்டு அனைத்தையும் இழந்து நிற்கின்றோம், இவர்கள் வேகமாக முன்னேறிக் கொண்டு வருகின்றார்கள் என்பதில் தொடங்கி, புள்ளி விபரங்களுடன் கதைகள் பல சொன்னதுடன், நாளை மறுதினம், நான் கல்முனை சென்று சிங்களவர்களை எப்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் குடியேற்றுவது என மூன்று மாதம் வேலை செய்யப் போகின்றேன் என அழுத்தம் திருத்தமாக சொன்னார். ஒரு மணிநேரத்துக்கு பிறகு, மற்றவர்கள் நான் ஒரு முஸ்லீம் என்று கூறியதும்: அவர் தனது பேச்சை வேறுதிசைக்கு திருப்பிவிட்டார். இதுதான் இன்றைய முஸ்லீம்களின் நிலமை.

அவர்கள் சொல்வதில் எனக்கு எந்த தப்பும் தெரியவில்லை. ஆனால் சிங்களவர்கள் இன்னும் முஸ்லீம்களை மதித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். நம்மவர்களோ கூட்டம் கூட்டமாக சுட்டுக் கொன்றும், நாடுகடத்தியுமல்லவா விட்டார்கள். குடிக்கத் தண்ணியுமில்லாம நாங்க இருக்கோம், நீங்க என்னடா என்றால், நிலாவில இருந்து நாங்க தண்ணி கொண்டாறம் என்ற கதையை சொல்லி, வன்னிச் சனத்தயும் ஏமாற்றி, புலம் பெயர் நல்ல உள்ளங்களையும் ஏமாற்றி,
ஒன்றாக, ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்த எங்களையுமல்லவா புரட்டி எடுத்து விட்டீர்கள்.

இனி நம்முட வித்துவ திறமையை காட்டுவோம். சிறிலங்காவில் எங்க வாயத் தொறந்தாலும், யாழ்ப்பாணம் போகலயா, இன்க இருந்து உழைக்க முடியாது. யாழ்ப்பாணம்தான் இன்றைய வியாபார இலக்கு எனச்சொல்லிக்கொண்டு ஒவ்வொரு சிங்களவனும், சோனியும் ஆலாய் பறந்து கொண்டிருக்கின்றார்கள். கொழும்பில் 170 ரூபாய்க்கு சேர்ட்டுகளை வாங்கி மலையகத்தில் 225 ரூபாய்க்கு வித்துக் கொண்டிருந்த ஒரு மூணாங்கிளாஸ் காக்கா, இப்ப என்னடா என்றால் அதே சேர்ட்டை யாழ்ப்பாணத்தில் 450 ரூபாவுக்கு விற்றுக் கொண்டிருக்கின்றார். நாலு மாதத்துக்கு முன் அவர்ர கெப்பிட்டல் ஆறாயிரம் ரூபா, இப்ப பதினெட்டாயிரம் ரூபா.

ஒரு காலத்தில் மொத்த சிறிலங்கா மக்களின் மீன் தேவையையும் பூர்த்தி செய்த வட, கிழக்கு இப்போதுதான் மீண்டும் தலைநிமிரத் தொடங்கியிருக்கின்றது. ஆனால் அவர்கள் இன்னும் பழைய மீன்பிடி உபகரணங்களையும், முறைகளையும்தான் பயன் படுத்துகின்றார்கள். பழைய மரத்தோணி, அது ஓட்டையானால் குங்கிலியத்தை அரைத்து, கொஞ்ஞம் கிசிள் (கறுப்புத்தார்)யும் எடுத்து ஒட்டுவது, அதே சம்மட்டியார், ஓட்டையான வலைகளை 2ம், 3ம், 4ம் நம்பர் நைலோன் நூல்களை, நாலுகால் பாய்ச்சலில் இருந்து பொத்துவது ( இது மீனவர் பாஷை.பொருத்துவது எனவும் சொல்லலாம் ), அதே தூண்டில், 2ம் நம்பர் தொடக்கம் 23ம் நம்பர்வரை, அந்த தூண்டில்களில் இரையை ( புழு, பூச்சி, குட்டி மீன்) குத்துவது, எட்டு முழ வீச்சு வலை, முறுக்காத்தி, குறுலொன் கயிறு, ஈயம், மாயவலை, கடல் வலை என கொழும்பில் செட்டியார்தெரு ஜெபி பெர்னான்டோ புள்ளெ, மாழுகடை இப்றாகீம் அன் சன்ஸ், வெல்லம்பிட்டிய ஜபர்ஜீ பிறதர்ஸ் போன்றவற்றில், காசுகளை தண்ணியாக இறைத்து, வரவு எட்டணா செலவு ஏழணா என கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

பைபர் கிளாஸ் போர்ட் வந்துவிட்டது. முன்னர் அதை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம். இப்போது நம்மவர்களே நீர்கொழும்பிலும், பேருவளையிலும் செய்யத் தொடங்கிவிட்டார்கள். விலை 20 லட்சத்தை தொடும். பேரம் பேசினால் இன்சோல்மென்ட்டுக்கு நம்ம வீட்டுக்கதவை வந்து தட்டுவார்கள். மீன்பிடிவலைகள் கொரியாவில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றது. இந்திய வலைகள் ஸ்ரோங் பத்தாது. அறுக்குளா, தளப்பத்து, சுறா போன்ற பாரிய மீன்கள் பிடிப்பதற்கு இந்திய வலைகள் நல்லது. காரணம் விலை குறைவு. கூனி இறால், இறால், நெத்தலி, விரால், கெழுத்தி போன்ற ஆற்று மீன், களப்பு மீன்கள் பிடிப்பதற்கு கொரியா இஸ் பெற்றர். இந்தியாவை பகைத்துக் கொள்ளக்கூடாது என்று எல்லோருமே இப்போது சொல்லத் தொடங்கிவிட்டார்கள். நாம் எப்பவுமே பகைக்கல. எங்களையும் கொஞ்சம் யாவாரம் செய்ய உடுங்கப்பா என்றுதான் சொல்லுறோம்.

வலைகளை மணந்து பார்த்துவிட்டே நம்ம மூத்தப்பாமார் சொல்வார்கள். இது எந்த நாட்டு வலை என்ற சூட்சுமத்தை. கொரியன்ட வலையில ஒரு சூப்பர் பெற்றள்ற வாசனை வரும். இந்தியாட வலையில மெட்ராஸ் கூவம் மணக்கும். ஆனால் ஒரு காலத்தில் வெல்லம்பிட்டியில் பாக்கிஸ்தானிய மோறா முஸ்லீம்களின் வலை பெக்டரியே சிறிலங்காவின் மொத்த மீன்பிடித் தொழிலையும் தீர்மானித்தது. அப்புறம் என்எம் பெரேரா வந்து, சிறிமாவோ அம்மையார் புகுந்து, குண்டன்மால்ஸ், ஹைதராமணிகளை கழுவிலேற்றிய போது ( ஜனவசம, உசவசம) : இந்த பெக்டரி உரிமையாளர்களும், தொழிலாளர்களும் சோபை இழந்தார்கள். அதற்குப் பின் உருவானதுதான் குருநகர் வலை உற்பத்தி தொழிற்சாலை.

வாப்பாவின் அதட்டலையும் மீறி, பத்துவயதில் வாப்பாவின் கையை பிடித்துக் கொண்டு, எனக்கு எழுத்தறிவித்த தமிழாசிரியரின் துணையுடன்: 350 மைல் கடந்து, யாழ் பஸ் நிலையம் வந்து, காலையில், வாப்பாவின் முன்னாள் கொழுத்த பணக்காற நன்பரின் வீட்டுக்கு சென்று உட்கார்ந்தவுடன் : எனக்கும் வாப்பாவுக்கும் வெள்ளித் தாம்பாளத்தில் ரீயும், எனது ஆசானுக்கு, நிற்க வைத்து, ஏதோ ஒரு தகரப் பேணியில் தேனீரும் வளங்கப்பட்ட போதுதான், யாழ் ஜாதி வெறியின் மகத்துவம் தெரிந்தது. ஒரு வெறிபிடித்தது.

2ம் நம்பர் 90 வளையம் தொடக்கம் 110 வளையம் உள்ள வலைகளைக் கொண்டு பிடிக்கப்படும் இறால்களையும், நெத்தோலி மீன்களையும் பிடித்து உடனடியாக விற்பதில்தான் எம்மவர்கள் கவனம் செலுத்துகின்றார்கள். வறுமை இதற்கொரு காரணமாக அமையலாம். இனி அதுமாறும். மாறணும். பேங்கொக்கிலும், இந்தியாவில் தூத்துக்குடி போன்ற இடங்களிலும், சிறு மீன்பிடித் தொழிலாளர்கள் இதை பதப்படுத்தி பல லட்சம் ரூபா உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இறாலை உரித்து காயவைத்து பவுடராக மாற்றுகின்றனர். அதே போல் நெத்தோலி மீனையும் தலையையும், வாலையும் வெட்டி விட்டு, காய வைத்து பவுடராக மாற்றுகின்றனர். காயவைப்பதற்கு இடமில்லாதவர்கள் புறுட் றையரை (பழங்களை காயவைக்கும் இயந்திரம்) உபயோகப்படுத்துகின்றார்கள். இந்த இயந்திரம் 20 நிமிடத்துக்கு 5 கிலோ இறாலை உலரப்பண்ணும். விலையும் குறைவு. மின்சாரம் 6 வோல்ட் மட்டுமே.

வெட்டி வீசும் மீன் தலைகளையும், வால்களையும் உலரவைத்து கோழித்தீன், ஆட்டுத்தீன் உற்பத்தியாளர்களுக்கு விற்றுக் கொண்டிருக்கின்றார்கள். ஒரே கல்லில் இருமாங்காய் பிளஸ் மும்மடங்கு இலாபம். மேலும் அரசு இன்னும் ஆழ் கடல் மீன் பிடிக்க அனுமதி தரல என்ற வாதம் எல்லாம் இனி வேண்டாம். அவர்கள் ஆறுதலா அனுமதி தரட்டும். அதுவரை நம்ம வயிறு பொறுக்காதே. ஆம் இதற்கு நோர்வேயிலும், ஜப்பானிலும் இருக்கும் நம்மவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். பிஸ் பைன்டர் ( எங்க மீன் இருக்கு என்று கண்டு பிடிக்கும் கருவி), பிஸ் மியூசிக் என இரு கருவிகள் வந்து இந்நாடுகளில் கொட்டை போடு போட்டுக் கொண்டிருக்கின்றது.

ஜஸ்ட் பன்ரெண்டு டாலர். 100 கடல் மைல் தூரம், 150 கடல் மைல் தூரம் எல்லாம் இப்போதைக்கு ஓட வேண்டியதில்லை. ஒரு பிஸ்பைன்டர், எட்டுமுழ வலை ( 1200 ரூபா), இரண்டு கிலோ ஈயம், 4 மில்லிமீற்றர் குறுலோன் கயிறு எட்டு முழம், 18ம் நம்பர் நைலோன் நூல் 100 கிராம் இருந்தால், மீன் தேடி ஆழ்கடலுக்கு போக வேண்டிய அவசியம் இல்லை. மீன் வேலணைக்கோ, மயிலிட்டிக்கோ உங்கள் வீடு தேடி வரும்.

கொழும்பு காக்காமார் பெரியகடை மீன்சந்தையில் மீன் செதில்களை அள்ளுவதை போனமாதம் கண்டேன். அங்கு வேகவேகமாக மீன்களை கூறு போட்டு வெட்டி, ஒரு மீன் வெட்ட பத்து ரூபா கூலி வேண்டும் அந்த சகோதரர்களுக்கு ஒரு செய்தி அனுப்புங்கள். நீங்கள் வெட்டி வீசும் மீன்செதில்கள் உலக சந்தையில் தங்கத்தின் விலை. அது உங்கள் மண். உங்களுக்கு அந்த வருமானம் வரவேண்டும். யாரோ நீர்கொழும்பு காக்கா வந்து அள்ளிக்குப்போறான். சாக்கிரதை. சிங்கள இளைஞர்கள் சத்தமில்லாமல் எமென் ( அரபு நாடு ) சென்று கடற்கரை ஓரங்களில் உட்கார்ந்து, கொட்டிலும் அமைத்து பாரிய அறுக்குளா, தளப்பத்து மீன்களை இலவசமாக அள்ளுகின்றனர்.

எப்படி.. இப்போது உலக சந்தையில் மீன் செட்டைக்குத்தான் மதிப்பு. பிஸ் சூப் தயாரிக்க அதை வெட்டி எடுத்துவிட்டு, எமென் வியாபாரிகள் மீனின் நடுப்பாகத்தை அள்ளி வீசுகின்றனர். அதை சேகரித்து, பிளந்து, அதற்குள் உப்பை அரைத்து போட்டு, இருபது நாளில் அறுக்குளா கருவாடு, தளப்பத்து கருவாடு என சிறிலங்காவுக்கு அனுப்பி கொள்ளை லாபம் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். கிலோ 1400 ரூபா சில்லறை விலை. ஹோள்சேல் 1000ரூபா. அங்கு வேலை செய்பவன் நம்ம தமிழன். பத்தாயிரம் ரூபா சம்பளத்துக்கு. உப்புகாற்றில் கரைந்து கொண்டிருக்கின்றான். யுத்தம் தந்த வடு. 18, 20, 22 வயது பால்குடி மாறா இளைஞர்கள். சண்டிலிப்பாய், பளை, காங்கேசன்துறை இளைஞர்கள்.

ஆற்று மீன்களை நீர்த் தொட்டிகளிலும், வீட்டில் தொட்டில் அமைத்து வளர்த்தும், புத்தளத்திலும், பொலன்னறுவையிலும் சிங்கள, முஸ்லீம் இளைஞர்கள் பணத்தை அள்ளிக் கொண்டிருக்கின்றார்கள். சிறிலங்கா அரசே ஆறு, குளங்களில் மீன்கள் குறைந்து விட்டது, எங்களுக்கு மீன் தாங்கோ என இவர்களிடம் வாங்கி, நீர்நிலைகளில் விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அந்தக்காலத்திலேயே தனது வீட்டுக்குள்ளும், தனது தோட்டத்திலும் விழும் குப்பைகளை சேர்த்து செயற்கை உரம் தயாரித்த வடக்கு மக்களை கண்டிருக்கின்றேன். அவனுக்கு, அவன்ட பரம்பரைக்கு இப்போது இவைகளை சொல்லிக் கொடுத்தாலே போதும். அவன் ரோட்டு போடுவான். போட வேண்டும்.

( அனுபவமும், அட்வைசும் தொடரும்………)

1-9-2010

எச்சரிக்கை.

இல்மனைட். திருகோணமலை, புல்மோட்டை கடற்கரையில் நிரம்பிவழியும் இல்மனைட்டுக்காகத்தான் யுத்தமே நடக்கின்றது என ஒரு காலத்தில் மக்கள் பேசியது உண்டு. ஆனால் யாருக்குமே இல்லாமல் அந்த இல்மனைட் இப்போது தனியாருக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கடந்த மாதம் ஏலம் விடப்பட்டு: மெட்டிக் தொன் 64 யுஎஸ் டொலர் என இரண்டு காக்காமார் ஏலம் எடுத்துள்ளனர். ஒன்று கொழும்பு தொப்பி புரட்டி, மற்றது ( ஹி, ஹி, ஹி) இன்னொரு தொப்பி புரட்டி. அந்த இல்மனைட்டின் இன்றைய மார்கட் விலை 213 யுஎஸ் டாலர். வெட்கத்தைவிட்டு வேதனையுடன் சொல்லுகின்றேன். இந்த ஏலத்தில் நம்மவங்க யாரும் கலந்து கொள்ளல. எல்லோரும் உண்டியல் குலுக்குறதிலேயே கவனமாக இருக்கினம்.

வீரர்களின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை அணியிலிருந்து விலக்கும் எண்ணம் இல்லை – பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

cricket.jpgகிரிக்கெட் சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை முடிவு தெரியும் முன் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி லோர்ட்சில் நடந்த 4 வது டெஸ்ட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. கோடிக் கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு நோ- போல் வீசியது வெட்ட வெளிச்சமானது.

பாகிஸ்தான் அணியின் கப்டன் சல்மான்பட், வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆமிர், முகமது ஆசிப், விக்கெட் காப்பாளர் கம்ரன் அக்மல் உட்பட 7 வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வற்புறுத்தி உள்ளனர்.

இதனால் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் இடையே அடுத்து நடைபெற வேண்டிய இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் நிலவியது. இந்த போட்டி தொடர் ரத்து ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கு சுமார் ரூ. 90 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைகளிடம் ஆலோசனை நடத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் போட்டி திட்டமிட்டபடி தொடரும் என்று அறிவித்துள்ளது.  ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் மற்றும் ஐ.சி.சி. இலஞ்ச தடுப்பு பிரிவு அதிகாரிகளின் விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் வீரர்கள் மீது கருணை காட்டாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் சூதாட்ட புகாரில் சிக்கிய 7 வீரர்களில் 4 பேரை அணியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று ஐ.சி.சி. மற்றும் இங்கிலாந்து வீரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  பாகிஸ்தான் அணியில் விக்கெட் காப்பாளர் கம்ரன் அக்மல் மட்டும்தான் உள்ளார். அவரை நீக்கினால் அணிக்கு மாற்று விக்கெட் காப்பாளர் இல்லாத நிலை உள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் இஜாஸ் பட் அளித்த பேட்டியில், ‘வீரர்கள் மீதான புகார் குறித்து ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இவை அனைத்தும் குற்றச்சாட்டுகள் மட்டுமே. எந்தவொரு குற்றச்சாட்டும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. எனவே இந்த சூழ்நிலையில் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் அளித்த பேட்டியில், ‘இந்த சம்பவம் நடந்து இருக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவோ அல்லது பாகிஸ்தான் நாட்டின் புகழை கெடுக்கவோ சதித் திட்டம் எதுவும் தீட்டப்பட்டு இருக்கிறதா என்பதை தீர்மானிக்க நாங்கள் விரும்புகிறோம்.

முந்தைய காலகட்டங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இதுபோன்ற சதி திட்டங்கள் எங்களுக்கு எதிராக கிளம்பியதை நாங்கள் அறிவோம். அந்த கோணத்திலும் நாங்கள் இந்த விவகாரத்தை பார்க்கிறோம். உண்மை வெளிவந்து எங்கள் வீரர்கள் குற்றச்சாட்டில் இருந்து விடுபட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.  எங்கள் வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால் வீரர்கள் மீது முன்மாதிரியான நடடிவக்கை எடுப்பதில் உறுதியாக இருக்கிறோம்’ என்றார்.

கலாநிதி ஏ.ஸீ.எஸ். ஹமீட் அவர்களின் மறுபக்கம் – புன்னியாமீன்

acs-hameed.jpgநான்கு தசாப்தங்களாக தொடர்ச்சியாக இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததுடன் சுமார் 15 வருடங்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் இருந்த, கலாநிதி. ஏ.ஸீ.எஸ் ஹமீட் அவர்களின் 11வது சிரார்த்த தினம் செப்டம்பர் 3ம் திகதியாகும்.

ஒரு தலை சிறந்த இராஜதந்திரியாகவும்,  இலங்கை அரசுக்கும் -விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்ட ஒருவராகவும் இவர் விளங்குகின்றார்.

விடுதலைப்புலிகளின் பிரதான ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்களின் பாரியார் அடேல் பாலசிங்கம் எழுதிய The Will to Freedom எனும் நூலில் இடம்பெற்ற The Role Mr. Hameed  எனும் கட்டுரையில் “இராஜதந்திரத்தில் அவருக்கிருந்த ஆழ்ந்த அனுபவம் காரணமாகவும், சர்வதேச உறவுகளில் அவருக்கிருந்த மதிநுட்பம் மற்றும் அக்கறையும் காரணமாகவும் ஜனாப் ஹமீட் அவர்களுக்கு டில்லியைப் பகைத்துக் கொள்ள விருப்பமிருக்கவில்லை. ஜனாப் ஹமீட் அவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது பொறுமையுடன் செயல்பட்டதினால் அதிக நேரம் எடுத்தாலும் அவருடன் பணியாற்றுவதில் நாம் மற்றற்ற மகிழ்ச்சியடைந்தோம். அவர் முரண்பாடுகளைத் தீர்ப்பதில் பெரும் வல்லுனராகத் திகழ்ந்தார். இக்கலந்துரையாடல் பணியில் பங்குபற்றாதிருந்தால் இந்தியப் படையினர் வடகிழக்கில் இன்னும் நிலைகொண்டிருப்பார்கள்” என்று அடேல் பாலசிங்கம் 2001ஆம் ஆண்டில் தெரிவித்திருந்தார்.

ஒரு தீர்க்கதரிசனமிக்க அரசியல்வாதியாக எமக்கு நன்கு தெரிந்த ஹமீட் அவர்களின் மற்றுமொரு பக்கமான கலை இலக்கிய ஆர்வங்கள் பற்றி அனேகருக்குத் தெரியாது. அதனை எடுத்துக் காட்ட விளைவதே இக்கட்டுரையின் நோக்கம்.

acs-hameed01.jpgஎமது இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்பு ஆளும்கட்சி,  எதிர்க்கட்சி என நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் அரசியலில் ஈடுபட்டனர்,  ஈடுபட்டு வருகின்றனர். ஆனால்,  எல்லா அரசியல்வாதிகளும் மக்கள் மனதில் இலகுவாக இடம்பிடித்து விடுவதில்லை. சில அரசியல்வாதிகள் யாரென்ற விபரம் அடுத்த தலைமுறையினருக்கு தெரியாமலே போய்விடுவதும் உண்டு.

ஆனாலும், விரல்விட்டு எண்ணக் கூடிய ஒருசில அரசியல்வாதிகள் மாத்திரமே மக்கள் மனதில் நிலையான இடத்தினைப் பிடித்து விடுகின்றனர். அந்த அடிப்படையில் இலங்கை அரசியல் வரலாற்றில் அமரத்துவம் அடையாத நாமங்களில் ஒன்றாகவே கலாநிதி,  அல்ஹாஜ் ஏ.ஸீ.எஸ். அவர்களின் நாமமும் அமைந்துள்ளது. அவர் நாட்டுக்கும்,  தனது சமூகத்துக்கும் ஆற்றிய அருஞ் சேவைகளே இத்தகைய மனப்பதிவுகளுக்கு காரணமாகின்றது.

கண்டி மாவட்டத்தில் பிரதான முஸ்லிம் கிராமங்களில் ஒன்றான அக்குறணையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 1960 மார்ச் 19ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்த ஹமீத் அவர்கள், 1999.09.03 ஆம் திகதி மரணிக்கும்வரை தொடர்ச்சியாக நான்கு தசாப்த காலங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 1977ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட இவர், 1989ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி வரை அதே அமைச்சில் பணியாற்றியுள்ளதுடன்,  இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையாக்கத்திலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளவராவார்.

இலங்கை அரசியலில் வெளிநாட்டு அமைச்சராக சிறுபான்மை இனத்தவர் ஒருவர் இருக்கமுடியாது என்று காணப்பட்ட நிலைமையை இவரது நியமனம் மாற்றியமைத்தது. பின்பு ஐக்கிய சோஸலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றத்தில் 1989.02.18ஆம் திகதி முதல் உயர்கல்வி விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக நியமனம் பெற்ற இவர், 1990.03.30ஆம் திகதி முதல் நீதியமைச்சராகவும், 1990.08.30ஆம் திகதி முதல் உயர்கல்வித் திட்ட அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். மீண்டும் 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் திகதி முதல் 1994 ஆகஸ்ட் 15ஆம் திகதி வரை இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக பணியாற்றினார்.

கண்டி மாவட்டத்தில் அக்குறணை தேர்தல் தொகுதியில் குருகொடை எனும் கிராமத்தில் 1928 ஏப்ரல் 10ஆம் திகதி அப்துல் காதர் தம்பதிகளின் செல்வப் புதல்வராக சாஹ{ல் ஹமீத் பிறந்தார். கட்டுகஸ்தோட்டை சாந்த அந்தோனியர் வித்தியாலயம், மாத்தளை விஜய கல்லூரி, மாத்தளை ஸாஹிராக் கல்லூரி என்பவற்றில் தனது கல்வியினைப் பெற்ற ஹமீத் அவர்கள், தனது கல்லூரிக் காலம் தொட்டே மும்மொழிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார். அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு தனது இளமைப்பராயத்தில் கல்வி நடவடிக்கைகளில் இவர் அதிக ஆர்வம் காட்டி வந்தார். பிரதேசத்தில் ஒரு சிறந்த ஆங்கில ஆசானாக திகழ்ந்த இவர்,  1950இல் ஆங்கிலக் கல்விப் போதனைக்கென ஒரு தனியார் கல்லூரியையும் அமைத்தார். செயல்திறன்மிக்க இவரை அடையாளம் கண்டு கொண்ட மாத்தளை நகர மக்கள் மாத்தளை நகரசபைத் தேர்தலில் இவரை ஈடுபடச் செய்தனர்.

ஹமீத் அவர்கள் தனது மாணவப்பராயத்தில் தனது ஓய்வுநேரங்களை அதிகமாக வாசிப்பதிலும், பொதுச் சேவைகளிலுமே செலவழித்துள்ளார். வாசிப்பு ஒரு மனிதனின் அறிவுத்திறனை துலக்கமடையச் செய்யும். இந்த அடிப்படையில் தேசிய சர்வதேச சஞ்சிகைகளிலும்,  நூல்களிலும்,  பத்திரிகைகளிலும் பெற்ற அறிவே பிற்காலத்தில் இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலே இவரைப் புகழடையச் செய்ய அடிப்படைக் காரணியாக அமைந்தது. இவரின் திறமைகயைக் கருத்தில் கொண்டு சாஹ{ல் ஹமீத் அவர்களுக்கு கொரிய சனநாயகக் குடியரசு ஹனூக் பல்கலைக் கழகத்தினால் (Hanuk University, Republic of Korea) 1978ஆண்டில் அரசியல் விஞ்ஞானத்திற்கான கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டது. மேலும் 1990இல் இலங்கை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகமும்  இவருக்கு கலாநிதி கௌரவப் பட்டம் வழங்கி கௌரவித்தது.

ஒரு புகழ்பெற்ற சிரேஸ்ட அரசியல்வாதியாக இவரை நாம் அறிந்துள்ள போதிலும்கூட,  அரசியலுக்குப் புறம்பாக இவர் எழுத்துத்துறையிலும்,  ஊடகத்துறையிலும் அதீத ஆர்வமிக்கவராக இருந்தார் என்பது அநேகருக்குத் தெரியாத ஒரு விடயமே. தனது 15 வயதிலிருந்தே எழுத ஆரம்பித்த இவரின் கன்னியாக்கம் “சண்டே ஒப்சேவர்” பத்திரிகையின் சிறுவர் பகுதியில் 1943ம் ஆண்டில் பிரசுரமானது. இதைத் தொடர்ந்து நூற்றுக் கணக்கான ஆக்கங்களை ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதியுள்ளார்.    பாடசாலையில் வகுப்பு 7 இல் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது மாத்தளைப் பிரதேசப் பாடசாலைகளுக்காக “New Broom” என்ற பெயரில் ஒரு சஞ்சிகையொன்றை ஆரம்பித்தார். இச்சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து பல்வேறு பணிகளைப் புரிந்தார். தனது கல்லூரிக் காலம் முதல் தான் மரணிக்கும் வரை ஆயிரக்கணக்கான ஆக்கங்களை தேசிய, சர்வதேச இதழ்களிலும், பருவ வெளியீடுகளிலும்,  பத்திரிகைகளிலும் இவர் எழுதியுள்ளார். அதேபோல இதுவரை இவர் நான்கு பெறுமதிமிக்க நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றின் சுருக்க விபரங்கள் வருமாறு.

1. Foreign Policy Perspectives Of Sri Lanka
 Selected speeches 1977 – 1987
 இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின் நோக்கு.
 தெரிவு செய்யப்பட்ட உரைகள். 1977- 1987

2. In Pursuit of Peace
 On Non-Alignment and Regional Coopertion
 சமாதானத்தை நோக்கி

3. The Owl and the Lotus (ஆங்கிலம்)
 Lotus Och Ugglan (பிரான்ஸ்)
 தாமரையும் ஆந்தையும்

இது ஒரு சிறுவர்களுக்கான நீதிக் கதை நூலாகும். ஆங்கிலத்தில் இவர் எழுதிய நூல் பின்பு பிரான்ஸிய மொழியிலும் வெளிவந்தது. 

4. The Spring Of Love and Mercy
 அன்பின் ஊற்று

அல்குர்ஆன் ஆயத்துக்களை அடிப்படையாகக் கொண்டு கலாநிதி ஏ.ஸீ.எஸ். ஹமீட் அவர்களினால் இயற்றப்பட்ட கவிதை நூல் The Spring Of  Love and Mercy   (அன்பின் ஊற்று) என்பதாகும். இந்நூலில் காணப்படக்கூடிய கவிதைகளை நோக்குமிடத்து கலாநிதி ஹமீட் அவர்களின் ஆங்கில மொழி அறிவும்,  வர்ணனைத் திறனும்,  மார்க்க உணர்வும் நன்கு புலப்படுகிறது. மேலும் சாதாரண மக்களின் ஆத்மீக உணர்வைத் தூண்டக் கூடிய வகையிலும் இந்நூல் அமைந்துள்ளது.

ஹமீத் அவர்களும் கார்ட்டூன் சித்திரங்களும்.

பெரும்பாலான அரசியல்வாதிகள் விரும்பாத ஒரு பக்கத்தை இவர் நேசித்த பண்பானது,  இவரின் கலைத்துறை இரசனையையும்,  ஆர்வத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. அதாவது,  ஒரு அரசியல்வாதியின் ‘சித்திரவதைக் களம்| என வர்ணிக்கப்படும் கார்ட்டூன் துறையில் அவருக்கிருந்த ஆர்வமும் அதை அவர் இரசித்த முறைகளும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டியதொரு விடயமாகும்.

இலங்கையின் பிரபல கார்ட்டூன் ஓவியர்களான விஜயசோமா,  யூனுஸ்,  ஜெரயின்,  அபேசேகரா போன்றோர் ஹமீத் அவர்கள் இலங்கையில் வெளிவிவகார அமைச்சராக இருந்த காலத்தில் வெளிநாடுகளுக்கு அவர் அடிக்கடி சென்ற சந்தர்ப்பத்தை அவர்களின் கார்ட்டூன் சித்திரங்கள் மூலம் கருப்பொருளாக்கி கேலி செய்வதில் அலாதி பிரியம் காட்டியிருந்தார்கள்.

இக்காலகட்டத்தில் ஈழத்து தேசிய பத்திரிகைகளில் கார்ட்டூன் சித்திரங்களில் அமைச்சர்களான பந்துல குணவர்தன,  கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் விமல்வீரவங்ச,  மர்வின்சில்வா இடம்பெறுவதைப் போல, 1980களில் இலங்கைத் தேசிய பத்திரிகைகளில் முக்கிய கருப்பொருளாக விளங்கியவர் கலாநிதி ஹமீத் அவர்களே. ஆனால்,  அந்த கேலிச் சித்திர ஓவியங்களைக் கண்டு ஹமீத் அவர்கள் கோபம் கொள்ளவோ அவர்கள் மீது தாக்குதல் நடத்தவோ அல்லது முகம் சுழிக்கவோ இல்லை. மாறாக,  தனது உலகம் சுற்றுதலை இலக்காக்கிக் கொண்டு தன்னை ஓவியங்கள் ஊடாக சித்திரவதைப்படுத்திய அவ்வோவியங்களைத் தொகுத்து ஒரு புத்தமாக வெளிவருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

பத்திரிகைகளில் வந்த கேலிச்சித்திரங்கள் அழிந்துவிடக் கூடாதென்றும், அவை பாதுகாக்கப்பட்டு ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் அப்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் சேகரித்து வெளியிடப்பட்ட இந்த கேலிச்சித்திர தொகுப்பு நூல் சிங்களம்,  தமிழ்,  ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளிவந்தது. “வெளிநாட்டமைச்சர் ஹமீத் பற்றிய கார்ட்டூன் சித்திரங்கள்” எனும் இந்நூலுக்கு கலாநிதி ஏ.ஸீ.எஸ். ஹமீத் எழுதிய முன்னுரையின் தலைப்பு “கல்லெறிக்கு பிரதியுபகாரமாக மலர்ச் செண்டு” என்பதாகும்.

அம்முன்னுரையில் வெளிவிவகார அமைச்சர் ஏ.ஸீ.எஸ். ஹமீத் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

“…நானே இலக்காகிச் சித்திரவதை செய்யப்பட்டிருக்கும் இந்தக் கார்ட்டூன் தொகுப்பிற்கு ஒரு முன்னுரையோ,  ஓர் அணிந்துரையோ (விரும்பியபடி வைத்துக் கொள்ளுங்கள்) வழங்குமாறு இதன் வெளியீட்டாளர்கள் என்னைக் கேட்டுக்கொண்டனர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்று சொல்வார்களே. அதனைத் தான் இந்த வேண்டுகோள் ஞாபகப்படுத்துகிறது. இத்தொகுப்பைப் பார்க்கக் கையில் எடுக்கும் வாசக நேயர்,  பக்கங்களைப் புரட்டிச் செல்லும்போது நூல் முழுவதும் கல்லெறியும் சொல்லெறியும் விரவிக் கிடப்பதையே காண்பர். என்மீது தொடுக்கப்பட்ட கல்லெறிக்குப் பிரதியுபகாரமாக மலர்ச்செண்டு தரும்படி வேண்டுகிறார்கள். நான் அதனை மனமுவந்து வழங்குகின்றேன்…

‘முன்னைய காலத்தில் சித்திரவதை செய்வதற்கு ‘ரெக்’ என்ற கருவியை உபயோகித்தனர். இப்போதுதான் இருக்கவே இருக்கிறது பத்திரிகை’ என்று ஒஸ்கார் வைல்ட் ஒருமுறை குறிப்பிட்டார். இந்த இருவகை வேதனையூட்டும் சாதனங்களுள் எதை விரும்புகிறாய் என்று அரசியல்வாதியைக் கேட்டுப் பாருங்கள். நிச்சயமாக அவர் அப்புராதன சாதனத்தைத் தான் தேர்ந்தெடுப்பார். காட்டூன் சித்திரக்காரனை சகிக்கவொண்ணா கொடிய பிரதிநிதியாக காட்டும் பத்திரிகையைவிட பழைய கால ‘ரெக்’ காருண்யமானது….

…..இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள விஜேசோமா,  யூனுஸ்,  ஜெரய்ன்,  அபயசேகரா ஆகிய கார்ட்டூன் கலைஞர்களுக்கு ஓர் அந்தரங்கத்தை வெளிப்படுத்த விரும்புகின்றேன். மீண்டும் ஒஸ்கார் வைல்ட் கூறியவாறு “பிறர் பேச்சுக்கு ஆளாவது மோசம்: ஆனால்,  பேச்சுக்கு ஆளாகாமல்  இருப்பது அதனிலும் மோசம்”. அரசியல்வாதியைப் பொறுத்தமட்டில் பேச்சுக்கு ஆளாக்கப்படுவது மங்கிப்போகாது. பேரோடிருக்கவும், பெருவெற்றியீட்டவும் கார்ட்டூன்கள் துணiயாக நிற்கின்றன. ஆகவே,  கார்ட்டூன்காரர்கள் அரசியல்வாதிக்கு பக்க பலமானவர்களே…

….இக்கார்ட்டூன் சித்திரங்களைப் பார்த்தேன்: சுவைத்தேன் என்று சொல்லி வைக்க விரும்புகிறேன். எனது உவகையின் இரகசியத்தைத் தெரிந்து கொண்ட பின், என்னைப்போல் ‘இரை|யாக அகப்படுவோரை எள்ளி நகையாடுவதை இவர்கள் நிறுத்தமாட்டார்கள் என்று நினைக்கின்றேன்… 

….வேடிக்கை ஒரு புறம் இருக்க, தன்னையே நோக்கி ஒருவன் சிரிக்கப் பழகிக் கொள்வதானது ஜனநாயக முறைக்குத் தன்னைப் பயிற்றிக் கொள்வதாக அமையும். இது அரசியல்வாதிக்கு அத்தியாவசியம் தேவைப்படும் பண்பாகும். இம்முயற்சியில் அரசியல்வாதிக்கு துணைவனாய் விளங்குபவர் கார்ட்டூன் சித்திரக்காரர் என்பது மிகையாகாது….”

மேற்படி முன்னுரையானது ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய பல உட்கருத்துக்களை வெளிப்படுத்தி நிற்கின்றது. ஜனநாயக விழுமியங்களுக்கு புகழ்ச்சி மட்டுமல்ல.  இகழ்ச்சியும் அவசியம் என்பதையும்,  அத்தகைய இகழ்ச்சிகளை தாங்கிக் கொள்ளக்கூடிய வகையில் எதிர்கால அரசியல்வாதிகள் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் இவர் மிகவும் நாசுக்காக வெளிப்படுத்துகின்றார். மாறாக,  எவ்விடத்திலேனும் இந்த கேலிச்சித்திர ஓவியர்களை அவர் நிந்திக்கவோ, அவமதிக்கவோ இல்லை. இன்றைய அரசியல்வாதிகளுக்கும் ஹமீத் அவர்களின் இந்தப் பண்பு நல்லதொரு எடுத்துக் காட்டாகும். ஆனால் அண்மைக் காலத்தில் சில அரசியல் வாதிகள் கேலிச் சித்திரக்காரர்களை விமர்சிப்பதையும்;,  சில நேரங்களில் அவர்களைத் துன்புறுத்துவதையும்,  அச்சுறுத்தல்கள் விடுப்பதையும் ஊடகங்களில் காணக்கூடியதாக உள்ளது. இந்நிகழ்வுகள் குறித்த அரசியல் வாதிகளின் ஆற்றாமையையே வெளிப்படுத்துகின்றது.

இந்நூல் வெளிவந்த பின்பு கேலிச்சித்திர ஓவியர் யூனுஸ் அவர்களை நான்  கொழும்பில் ஒரு திருமண வீட்டில் சந்தித்து,  அவருடன் கதைத்துக் கொண்டிருந்த நேரத்தில் என்னிடம் கூறினார். “ஹமீத் ஒரு வித்தியாசமான மனிதர். நாங்கள் எவ்வளவுதான் கேலிச்சித்திரங்கள் மூலமாக அவரைக் கேலி பண்ணினாலும்கூட அவர் அதைப் பொருட்படுத்தவே மாட்டார். நாட்டிலிருந்தால் நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி தெரிவிப்பார். அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான போக்கினைக் கொண்ட மனிதர் அவர்” என்றார்.

சில அமைச்சர்கள்,  பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மைப் பற்றி ஒரு கேலிச்சித்திரம் வெளிவந்தால் அதைப் பெரிதுபடுத்திக் கொண்டு கேலிச்சித்திர ஓவியர்களை கண்டிக்கும் இக்காலத்தில் இப்படிப்பட்டவர்களுக்கு ஹமீத் அவர்களின் இந்த பண்பு ஒரு முன்னுதாரணமாகும்.

ஹமீத் அவர்கள் கலையை நேசித்ததாலேயே அவரால் கலையுணர்வினை நயக்க முடிந்தது. இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் காணப்படக்கூடிய தேசிய ஊடகங்களும் சரி,  தனியார் ஊடகங்களும் சரி  மறைமுகமாகவோ நேரடியாகவோ ஒவ்வொரு அரசியல்வாதிகளினதும் சாதகமான கருத்துக்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. ஒரு அரசியல்வாதியால் நிகழ்த்தப்படும் பேச்சிக்களையோ அல்லது அறிக்கைகளையோ கூட தமக்குச் சார்பான வகையில் உள்ளவற்றையே வெளியிட்டு வருகின்றன. இத்தகைய நிலையில் இன்று இலங்கையில் காணக்கூடிய ஊடகங்களில் பல இருப்பதை அவதானிக்கலாம். கட்டுரைகளில் மாத்திரமல்லாமல் கேலிச் சித்திரங்களில் கூட இத்தகைய போக்கினையே அவதானிக்கமுடியும்.

1970,  1980களில் கேலிச் சித்திரத் துறையில் இடதுசாரிப் போக்குமிக்க சில பத்திரிகைகளில் கட்டுரைகளிலும் சரி,  கேலிச்சித்திரங்களிலும் சரி பாரிய தாக்கங்களை ஏற்படுத்தின. இக்காலப் பகுதியில் ‘அத்த’ பத்திரிகையில் யூனூஸ் அவர்களின் கேலிச் சித்திரங்கள் வாசகர்களிடையே பெரிதும் வரவேற்பினைப் பெற்றதொன்றாகவே விளங்கியது. “வெளிநாட்டமைச்சர் ஹமீத் பற்றிய கார்ட்டூன் சித்திரங்கள்” எனும் நூலில் யூனூஸ் அவர்களின் கேலிச் சித்திரங்கள் முக்கிய இடத்தினைப் பிடித்திருந்தன.

யூனூஸ் அவர்களினால் அமைச்சர் ஹமீட் அவர்களைப் பற்றி வரையப்பட்ட கேலிச் சித்திரங்களுள்,  வாசகர்களிடையே பெரிதும் விமர்சனத்துக்குள்ளான சித்திரமும், அமைச்சர் அவர்களை வெகுவாகக் கவர்ந்ததுமான சித்திரம்,  அமைச்சர் அவர்கள் தமது அமைச்சின் வேலைப்பளு நிமித்தமாக அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்லும் போது  அவர் அதிகமான சந்தர்ப்பங்களில் தனது தொகுதியில் இருப்பதில்லை. இதனைக் கேலி செய்யும் வகையில் அமைச்சரவர்கள் விமானத்தில் இருந்து இறங்கி ஒரு பொதுமகனிடம் “ஹாரிஸ்பத்துவைக்குப் போகும் வழிஎன்ன?” என்று அமைச்சர் வினவுவதைப் போல அமைந்த கேலிச் சித்திரமாகும்.   

இலங்கையில் கேலிச் சித்திரத் துறையில் புகழ் பெற்ற மற்றுமொரு ஓவியரான டபிள்யு. ஆர். விஜேயசோமா ‘ஐலண்ட்’ பத்திரிகை நிறுவனத்தின்  கேலிச்சித்திர ஓவியராவார்.  இவர் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் புகழ்பெற்றவர்.  இவரின் கேலிச் சித்திரங்கள் பல கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கும். “வெளிநாட்டமைச்சர் ஹமீத் பற்றிய கார்ட்டூன் சித்திரங்கள்” எனும் நூலில் இடம்பெற்றுள்ள  கேலிச்சித்திரங்களை வரைந்த ஓவியர்களுள் ஒருவரான டபிள்யு.ஆர். விஜயசோமா அவர்கள் தன் கருத்தினைப் பின்வரும் அடிப்படையில் வெளியிட்டிருந்தார்.

“…..நியுயோர்க்கில் ஜனாப் ஹமீத் அவர்களை நான் சந்தித்தபோது கேலிச்சித்திர நூலொன்றைத் தாம் வெளியிட உத்தேசித்திருப்பதாக அவர் கூறினார். நான் ஒரு விநாடி சிந்தித்துக் கொண்டிருந்தபோது,  அவரே தொடர்ந்து “என்னைக் கிண்டல் செய்யும் சித்திரங்களையே வெளியிட உள்ளேன்” என்றார்.

உண்மையில் தான் மறைக்க விரும்பும் விடயங்களை ஓர் அரசியல்வாதி தானே வெளியிடத் துணிந்துள்ளமை இதுவே முதல் முறை போலும். கேலிச்சித்திரக்காரர்கள் அரசியல்வாதியின் பார்வையில் ‘உண்ணி’ போன்றவர்கள். ஓயாது எரிச்சல் ஊட்டுபவர்கள். பெரும்பாலான அரசியல்வாதிகள் இந்த சுய கேலிச்சித்திரக்காரர்களை சிறையில் போட வேண்டுமென்றே அந்தரங்கத்தில் விரும்புவர். ஆனால்,  ஹமீத் அவர்கள் இவர்களை எதிர்காலச் சந்ததியினர்களுக்காக புத்தகத்தில் போற்றி வைக்க முடிவு செய்துள்ளார்கள். தன்னையே கேலிப்பொருளாகக் கொண்டு சிரிக்கும் திறன் கிடைத்தற்கரிய பேறுகளுள் ஒன்று என்பது அறிஞர் கருத்து. இதனையே செய்ய முற்பட்டுள்ளார் ஜனாப் ஹமீத் அவர்கள். இது அவரின் வெற்றிச் சிரிப்பு என்றே கூற வேண்டும். என்றிருந்தார்

‘மார்க் ஜெரெயின்’ சன்,  வீக்கென்ட்,  தவச ஆகிய பத்திரிகைகளில் பிரபல்யம் பெற்ற கேலிச் சித்திர ஓவியராவார். இவரால் வரையப்பட்ட சித்திரங்கள் தேசிய ரீதியில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் பிரபல்யம் பெற்றிருந்தன. வெளிநாட்டு அமைச்சர் அவர்களைப் பற்றி நூற்றுக்கணக்கான கேலிச் சித்திரங்களை இவர் வரைந்துள்ளார். இவரால் வரையப்பட்ட பல சித்திரங்கள் வெளிநாட்டு ஊடகங்களில் பிரசுரமாகியுள்ளன. சர்வதேச புகழ்பெற்ற ‘மார்க் ஜெரெயின்’ ஹமீத் அவர்களை பற்றியும் அவரது கேலிச்சித்திர தொகுப்பு நூல் பற்றியும் கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.  

ஹாஸ்யத்தைப் புரிந்து கொள்பவர்களுக்கு விளக்கம் தேவையில்லை,
புரிந்து கொள்ளாதவர்களுக்கு விளக்கம் சாத்தியமில்லை”.

இந்த வார்த்தையில் பொதிந்துள்ள அர்த்தங்கள் ஆயிரம்.

அமித அபயசேகரா தவச,  ரிவிரச,  சன்,  வீக்கென்ட் ஆகிய பத்திரிகைகளில் பிரபல்யம் பெற்ற கேலிச் சித்திர ஓவியராவார். இவரால் வரையப்பட்ட சித்திரங்கள் பிரபல்யம் பெற்றிருந்தன. தனக்கென ஒரு தனி வாசகர் வட்டத்தை வைத்திருந்தவர் இவர். இவரின் கேலிச்சித்திரங்கள் பாராளுமன்றத்தில் கூட விமர்சிக்கப்பட்டவை. வெளிநாட்டு அமைச்சர் அவர்களைப் பற்றி நூற்றுக்கணக்கான கேலிச் சித்திரங்களை இவர் வரைந்துள்ளார். அமித அபயசேகரா “வெளிநாட்டமைச்சர் ஹமீத் பற்றிய கார்ட்டூன் சித்திரங்கள்” எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.  

“…பிறரைப் பார்த்துச் சிரிப்பவர் பலபேர். தம்மையே எள்ளிநகையாடுபவர் வேறு சிலர். அவ்வாறு செய்யக்கூடிய அரசியல்வாதிகள் சிலரிலும் சிலரே. இதற்காதாரமாகப் பத்திரிகையாளர்கள்,  அரசியல் விமர்சகர்கள்,  நகைச்சுவையெழுத்தார்கள்,  கேலிச் சித்திரக்காரர்கள் ஆகியவர்களுக் கெதிராக அ.சி.ம. (அதி சிரேஸ்ட மனிதர்கள்) என்போரும், அ.சி.ம. (அதி சிறிய மக்கள்) என்போரும் நாள்தோறும் விடுக்கும் மிரட்டல்களை நோக்குக.

ஆகவே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் போன்றவொரு முன்னணி அரசியல்வாதி,  தன்னைத்தானே எள்ளிநகையாடும் அரிய திறன் பொருந்தியிருப்பதையும் இதற்கு மேலாக அவர் பற்றியும்,  அவருக்கெதிராகவும் வரையப்பட்ட கேலிச்சித்திரங்கள் அடங்கிய நூலொன்றை வெளியிட முற்பட்டதன் மூலம்,  தன் நகைப்புத் திறனைப் புதிய பாணியில் புலப்படுத்தியிருப்பதையும் எண்ணிப் பார்க்குமிடத்து புதிய உற்சாகமும் உள்ளக்கிளர்ச்சியும் ஏற்படுகின்றது. “ஹமீதும்,  வழக்கமும்,  பிறவும்” என இதனைக் குறிப்பிடலாம். (இவ்வாறு வெளியிடப்படுவதனால் இத்துறையில் முதன்மை ஒன்றினை மாண்புமிகு ஹமீத் அவர்கள் தட்டிக் கொண்டார்கள் என்றே கூற வேண்டும். நான் அறிந்த வேறு எந்த அரசியல்வாதியும் இவ்வாறு செய்ததில்லை)

இந்நாட்டின் அதிசிறந்த கேலிச்சித்திரக்காரர்களுள் ஒருவரான கோலெற் அவர்கள் லண்டன் மாநகரைச் சேர்ந்த டேவிட்லோ அவர்கள் போன்ற அரசியல் அபிப்பிராயத்தை உருவாக்கும் வன்மை படைத்தவர் என்று சொல்லப்படுகின்றது. (கோலெற் அவர்கள்,  அவுஸ்திரேலியாவுக்கு மூட்டை முடிச்சோடு சென்ற பின்னரே அமைச்சர் ஹமீத் அவர்கள்,  அரசியல் வானில் சுடர்விடத் தொடங்கினார்கள்) கோலெற் அவர்களிடம் இலவசக் கல்வியின் தந்தையாகிய கலாநிதி சி.டபிள்யு. கன்னங்கரா அவர்கள், கொண்டிருந்த தீராத விரோத உணர்வினால் (அக்காலத்தில் ரோயல் கல்லூரியின் ஆசிரியராக இருந்த) கோலெற் அவர்கள் தூரிகையைக் கீழே வைக்க வேண்டும். அல்லது அரசாங்க சேவையிலிருந்த விலகிக் கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டபோது கோலெற் அவர்கள் ஆசிரியத் தொழிலைத் துறந்து,  முழுநேரக் கேலிச்சித்திரக்காரராக உழைக்கத் தீர்மானித்தார், இலங்கையின் செய்தித்தாள் வாசக நேயர்களுக்கு திறமைவாய்நத கேலிச்சித்திரக் கலைஞர் ஒருவரை,  கன்னங்கரா அவர்கள் தன்னையறியாமலே வழங்குவதற்குக் காரணமானார். கோலெற் அவர்களை வெளியேற்ற கன்னங்கரா அவர்கள் காரணமாக இருந்தது போன்று,  கோலெற் அவர்களும் கலாநிதி கன்னங்கராவை அரசியலிலிருந்து வெளியேற்றுவதற்குக் காரணமாக விளங்கினார்கள். (இதில் படிப்பினை ஒன்று எங்கோ புதைந்து கிடக்கிறது)

“ஊதியத்துக்குத் தக்க உழைப்பாளியான கேலிச்சித்திரக் கலைஞர் ஒருவர்,  குரல் எழுப்பவியலாத பலரின் பிரதிநிதியான சாதாரண மனிதனுக்காகக் குரல் கொடுக்கும் பாங்கிலேயே செயற்படுகிறார். அவர்,  தான் உழைக்கும் தாபனத்தை உயர்த்தும் நோக்கில் சாதாரண மனிதனுக்குச் சேவையாற்றுவதில்லை. அமைச்சர் ஹமீத் அவர்கள் தாபனத்தின் ஓர் அங்கமானவர்,  அதில் அவர் போன்று இன்னும் பலரும் அங்கம் வகிக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்” என்று அமித அபயசேகரா தெரிவித்த கருத்தையும் இவ்விடத்தில் சிந்திப்பது பயனள்ளதாக இருக்கும்.   

யு.எஸ், ஓபன் டென்னிஸ் தொடரிற்கு தகுதி

saniya.jpgயு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாட, இந்தியாவின் சானியா மிர்சா தகுதிபெற்றார். யு.எஸ், ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று துவங்குகிறது. இதில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் சில நாட்களாக நடந்தது.

கிரிக்கெட் சூதாட்டம்! பாக். ஜனாதிபதி பிரதமர் அதிருப்தி

cricket.jpgபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கர்கள் சூதாட்டத்தில்  ஈடுபட்டு இருப்பது தொடர்பாக பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி பிரதமர் கிலாணி இருவரும் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.

இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அந்நாட்டுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. லோர்ட்ஸ் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மஜீத் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில் இதில் பாகிஸ்தான் வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறியிருந்தார். இதுகுறித்து விசாரனை நடைபெற்று வருகிறது.

பிரதமர் கிலாணி கூறுகையில் பாகிஸ்தான் வீரர்கள் நாட்டிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டனர். இதுதொடர்பாக விசாரனை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு உத்தரவூ இடப்பட்டுள்ளது. வீரர்கள் மீதான புகாரில் உண்மையாகும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

‘மழை நதி கடல்’ கவிதைநூல் ஓர் அறிமுகம் – சாமஸ்ரீ : எஸ்.எல். மன்சூர் (கல்விமாணி) – அட்டாளைச்சேனை.

Iniyavan_Isarudeenநூலின் பெயர் : மழை நதி கடல் (கவிதை)
நூல் ஆசிரியர் : இனியவன் இஸாறுதீன்.
உரிமை : முஃப்லிஹா இஸாறுதீன்
வெளியீடு : எழுவான் வெளியீட்டகம்.
விலை : 400ரூபாய்

இயற்கையுடன் இரண்டறக்கலந்ததுதான் மனிதவாழ்க்கை. அந்த இயற்கையை மனிதன் ஆக்கத்திற்கும் அழிவுக்கும் பயன்படுத்திக் கொண்டேயிருக்கின்றான். இவ்வாறான இயற்கையின் இன்பதுன்பங்களை வாழ்வின் நெருக்கத்தோடு கவிஞர்கள் தங்களது ஞானதிருஷ்டியினால் செய்யுள்களாக வடிப்பர். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுடன் கவிஞர்கள் தங்களது கண்ணுக்குள் தெரியும் இயற்கையின் உள்ளக்கிடங்கினை இவ்வாறு நயத்துடன் வடிக்கின்றபோது அவை மனித உள்ளங்களுக்கு சற்று ஆறுதலை அழிப்பதுடன் கவிஞனும் இயற்கைக்கு உதவுமாற்றலை பெறுகின்றான். அந்தவகையில் இலங்கையில் தென்கிழக்கு வட்டாரத்திலிலுள்ள அட்டாளைச்சேனையிலிருந்து “இனியவன் இஸாறுதீன்” என்றொரு இளைய கவிஞன் புதுக்கவிதைகளை வரைந்து “மழை நதி கடல்” என்கின்ற பெயரில் எழுவான் வெளியீட்டகத்தின் துணைகொண்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளமை நவீன இலக்கியத்தின் மீதுள்ள இயற்கையின் பற்றை பறைசாற்றி நிற்கின்றது.

‘இரசிகமானவன் நீ
என்னைத் தாங்கும் உன் வேர்கள்
எங்கெங்கு உண்டென்று என் கிளைகளுக்கும் தெரியாது
என் இலைகளுக்கும் தெரியாது’

என்றொரு கவிதையை ‘இறைவா உன்னிடம்’ எனும் தலைப்பில் இயற்கையின் அருட்கொடைக்கு ஒப்புவிப்பதானது அற்புதமானதோர் பரவசத்தை ஏற்படுத்திவிடுகின்றது. இதேபோன்று இந்நூல் வாயிலாக 91 கவிதைகளை 318 பக்கங்களில் வடித்துள்ளார் கவிஞர். தனது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்பட்;ட நெழிவு சுழிவுகளையும், இயற்கையின் நடத்தைக்கோலத்தையும் நன்கு இரசித்து, புசித்து, அனுபவித்து யாத்துள்ள இக்கவி முத்துக்களை அழகுற வடிவமைத்துள்ள பாணியோ எவரையும் படிக்கத் தூண்டும் கவிதைப்புனல்களாகவே காணப்படுவதுடன், ஏட்டிக்குப் போட்டியாக ஒவ்வொரு கவிதைகளின் உள்ளார்ந்தமான கருத்துக்களை ஆழமாக அறிகிறபோது இப்படியொரு கவிஞன் எம்மத்தியில் இருக்கின்றானா? என்பதையே சிந்திக்க வைக்கின்றன.

MAZHAI_NATHI_KADAL_BookCoverவிசேடமாக கூறப்போனால் ‘மணமங்கைக்கு, காதலித்துப்பார், காமத்திடம் பேசும் காதல்’ போன்ற காதல் கவிதைகளும், உறவுகளான ‘உம்மா, தாய், தமிழாசிரியருக்கு எழுதிய கவிதைகளும்’, இயற்கையின் எழிலுக்கு மெருகூட்டக் காரணமான உயிர் ஜென்மமான ‘மண்புழுக்களே, சுமைதாங்கி, சிலந்தியுடன் ஒரு செவ்வி, எறும்புகள் ராச்சியம்’ போன்ற கவிதைகளும், ‘மரம், பூக்கள், வேர்கள், முட்கள், மூங்கில்கள், மவுனம், புல்வெளி’ போன்ற இயற்கைத் தாவரப்பகுதிகளுடனும், ‘மேகமே மேகமே, விடியல், தண்ணீர், மழை, நதி, கடல், காற்று, நட்சத்திர பயணம்’ போன்ற இயற்கையின் அருட்கொடைகளுடனும் தனது கவிநடையைப் புனைந்து யுத்தத்திற்கு சாவுமணியடிக்கும் துப்பாக்கிக்கும், சமாதானத்திற்கு சாந்தமாய் தேசத்திற்கொரு தூது விட்டு, இறுதியில் ‘ஈழம்? | என்றொரு தலைப்பில் “வளமான நிலம் – அழகான பூவனம் – அருமையான நூல்கள் – அற்புதமான பள்ளிக்கூடங்கள் – அறிவுஜீவிகள் – ஆயுதம் சுமக்கும் அராஜவாதிகள்” என்று தொடர்கின்ற கவிதை சொல்லும் பாடம் மனிதநேயத்தில் எம்மைப் புல்லரிக்க வைக்கின்றது.

“எல்லாத்தீயிலும் என் ஆன்மா” என்றொரு தலைப்பில் வருகின்ற கவிதையில் கவிஞரோ ஆத்மாவுடன் இவ்வாறு பேசுகின்றார். “ஆதிக்கத்தீயில் எரிந்தேன் அது என்னை கருகிய தகரம்போல் துருவேற்றி விட்டது, ஆணவத்தீயில் எரிந்தேன் அது என்னை உருகிய ஈயம்போல் உருக்குலைத்து விட்டது, பசித்தீயில் எரிந்தேன் அது என்னை பழுத்த இரும்புபோல் வளைத்தெடுத்து விட்டது, பொறாமைத் தீயில் எரிந்தேன் அது என்னை புகைந்த சிகரெட்போல் பொசிக்கி விட்டது, காமத்தீயில் எரிந்தேன் அது என்னை ருசியில்லாத வெறும் கறியாக்கி விட்டது” என்று இன்னும் எரிக்க என்னில் என்ன இருக்கிறது’ என்று வெற்றுடல் கேட்பதுபோல் வரும் இக்கவிதை ஒவ்வொரு மனிதனையும் ஆத்மார்த்தமாக சிந்திக்க வைக்கிறது.

‘கலீல் ஜிப்ரானே’ என்றொரு தலைப்பில் வரும் உலமகா கவிஞனின் “முறிந்த சிறகுகள்” கவிதையிலிருந்து பிறந்த ஒரு கவிதையாக “உன் முறிந்த சிறகுகளைப் படித்த பிறகுதான் எனக்குச் சிறகிருப்பதே என் சிந்தைக்கு வந்தது” என்று கூறி “பூவிதழில் பனித்துளியால் எழுதிய படிமக்காரனே” என்றும் கலீல் ஜிப்ரானை வர்ணிக்கும் கவிதைகளோ அபாரம். ‘அழைப்பு’ என்றொரு தலைப்பில் ‘மகாகவி பாரதிக்கு’ இப்படி புகழாரம் சூட்டுகின்றார் இனியவன் இஸாறுதீன். “புரட்சிப்புய மேந்தி எழுச்சிப் பாக்களால் போராடிய உயர்ந்த ஆத்மாவே, உன்னைப் பின்பற்றவும், உயர் ஜென்மம் எய்தவும் இங்கே சிலர் நாங்கள் இன்னும் உனக்காகக் காத்திருக்கிறோம், மானுடம் காக்க நீ மறுபடியும் வருவாயா?’ எனக் கேட்கிறார் நமது கவிஞர் பாரதியை பார்த்து. உண்மையில் இதுபோன்ற பல கவிதைகள் சிந்தையைத் தூண்டி படிக்க சுவைக்கவும்  மேலும் வடிவமைப்பில் பார்த்hதல் ருசிக்க வைகசவும் தூண்டுகிறது இந்த ‘மழை நதி கடல்’ கவிதைநூல்.

இக்கவிதைகளுக்காக அணிந்துரையை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள். “மவுனத்தின் காதலன்” என்ற தலைப்பில் இவருக்கும் நூலுக்கும் ஒரு பொன்னாடையாக அணிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் இவ்வாறு கூறுகின்றார் கவிக்கோ. “கவிஞர்கள் மௌனத்தின் காதலர்கள் அதனால்தான் கவிஞர் இனியவன் இஸாறுதீன் மௌனத்தை பூக்கள் பேசும் பிரபஞ்ச பொதுமொழி” என்று அழகாகப் பாராட்டுகிறார். அதுமட்டுமல்ல இன்னோரிடத்தில் அவர் “இந்த இருளிலும் ஒளியின் நம்பிக்கை இவரிடம் இருக்கிறது இன்னமும் நம்பிக்கை விதையை நெஞ்சினில் விதைத்து காலத்தின் தீர்ப்புக்கு காத்திருக்கிறேன் நான்’ என்கிற இனியவன் மட்டுமல்ல நாமும் காத்திருக்கிறோம்” என்று கூறிய அவர் ‘எனது கவிதைகள் இவரை மீட்டியிருக்கின்றன என்று தெரிகிறது இது விரலுக்பும் பெருமை வீணைக்கும் பெருமை’ என்று வாழ்த்தித் தன் பெருமிதத்தைத் தெரிவித்திருக்கிறார்.

‘இயற்கைக்கு இறக்கை கட்டிய இனியவன்’ எனும் தலைப்பில் மதிப்புரை எழுதியுள்ள ஆசுகவி அன்புடீன் அவர்கள் இக்கவிஞனை இவ்வாறாக அறிமுகம் செய்கிறாhர். அதாவது “நவீன கவிதைப் பிரவேசம் பெற்ற புதிய தலைமுறைக் கவிஞர்களுக்குத் தலைப்பாகையாக அடையாளம் காணப்படுபவர் இனியவன் இஸாறதீன். 1980களில் அட்டாளைச்சேனையில் உருவான தினகரன் வாசகர் வட்டம், நிலவிலே பேசுவோம், கலை கலாச்சார மேடை நிகழ்வுகளில் அறிமுகமாகியவர் இக்கவிஞர்” என்று ‘இறக்கைக்கவி’ கட்டுகிறார் ‘ஆசுகவி’ அவர்கள். அன்னாருக்கு ஒரு சபாஷ்! நூல் வெளியீட்டாளரான எழுவான் பிரதம ஆசிரியர் பௌசுர் றகுமான் “ஆன்மாவுக்குள் ஓர் ஸ்பரிச உணர்வு” எனும் தலைப்பில் “இந்நூல் மூலமாக தனது வெளியீட்டுப்பணியினை எழுவான் ஆரம்பிக்கிறது” என்கிறார் எழுவான் ஆசிரியர். மேலும், “இதயத்தின் அடிஆழத்தில்” எனும் தலைப்பில் அற்புதமானதோர் முன்னுரையை முன்வைக்கிறார்; இனியவன் இஸாறுதீன் அவர்கள்.

‘மழை நதி கடல்’ என்கிற மூன்று சொற்களுக்கும் நீண்டதோர் விளக்கம் தரும் கவிஞர் ஒரு கட்டத்தில்
‘என்தாய் மண்தான் என் கவிதைகளின் மூலம்
அந்தக்கிராமம்தான் என் கற்பனைகளின் மையம்’  என்று குறிப்பிட்டு
மனித நேயத்தையும் – மாறாத மனிதாபிமானத்தையும் – வாழ்க்கையை நேசிக்கும் வைராக்கியத்தையும் –
கலைக்கண் கொண்டு பார்க்கிறது என் கவிதைமனம்’ என்று கூறுகின்றார். மேலும் இன்னோரிடத்தில்;
‘இயற்கை என் தாய், இயற்கை என் ஆசான், இயற்கை என் சுவாசம்’ என்று இயற்கைக்கே முன்னுரிமை வழங்கியுள்ள இனியவன் அவர்கள் நூலின் தலைப்பிற்கு இவ்வாறு விளக்கம் தருகின்றார்.

“மழை என்பது வாழ்வின் தொடக்கம்
நதி என்பது வாழ்வின் ஓட்டம்:
கடல் என்பது வாழ்வின் முழுமை என்ற
வாழ்க்கை வரலாற்றுக்கு
வரைவிலக்கணம் வகுத்த பெயராய் இருப்பது என்பதே மூலகாரணம்.” என்கின்றார். உண்மையிலேயே இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் மனித வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படுகின்ற அனைத்துவிடயங்களிலும் அவ்வப்போது வெளிப்படுத்திக் கவிதைகளில் மனிதநேயத்தைக் காட்டிப் பின்னரான காலத்தில் நினைவுறுத்துகின்றபோது அக்கால நினைவலைகளும் எம் ஆத்மாவுக்கு நிழலாய் வரும் என்பதை இக்கவிஞர் தனக்கே உரிய இலகு மொழியில் யாவரும் வாசித்து விளங்கும் வகையில் அற்புதமாக இதைப் படைத்துள்ளார். படைப்பாளியின் கற்பனை இயற்கையின் மீது பற்றுவைத்து வாசிப்பவர் யாவரையும் பற்றுள்ளதாக்கிவிடும் இனியவனின் மழை நதி கடல் என்பது மிகையானதல்ல.

‘தாய்க்கும் தந்தைக்கும்’ அர்ப்பணம் செய்திருக்கும் இக்கவிநூல், அழகிய முறையில் அச்சிடப்பட்டு கவரிடப்பட்டும் உள்ளது.  முன் அட்டையில் மனித முகத்தின் இருகண்ணும் பின்புலத்தில் அந்திமேகமாய் உலகைப்பார்த்தும், மழைபெய்தால் அங்கே நதியாகி இறுதியில் கடலில் சங்கமிக்கின்றவாறு அற்புதமான ஒரு ஓவியத்தையும் பதிந்துள்ள ஓவியர் “அஹ்மத் அல் ஹவாரி” அவர்களின் கற்பனையோ அபாரம்;. பின் அட்டையில் கவிஞர் இனியவன் உயிர்ப்பாய் இருந்து எம்மோடு புன்னகைக்கும் நிலையில் படம்பொறித்து அருகில் கவிக்கோவின் அற்புத வரிகளும் வரையப்பட்டுள்ளன. அது இவ்வாறு செல்கிறது.

“இதோ இந்த புல்லாங்குழலோசை
இனியவன் இஸாறுதீன் உடையது
இந்த இசையின் அழகில்
இரசனையும் மானுட நேயமும் ததும்புகின்றன.

இந்த மழை நதி கடல் என்ற
மொழிப்பொழிவில்
அழகிய கவிதைகள்
ஆங்காங்கே நட்சத்திரங்களாய்ப்
பிரகாசிக்கின்றன”  என்றவாறு தொடர்ந்து செல்கின்ற இயற்கையின் வரிகளாக இனியவனின் முயற்சிக்கு பாராட்டும் தெரிவிக்கின்றார் கவிக்கோ அவர்கள். அண்மைக்காலத்தில் வெளியாகிய கவிதை நூல்களுள் மிகவும் கூடிய கனமிக்க கவிதைகளையும், பக்கங்களையும் தாங்கிக் பாத்திரமாக வெளிவந்துள்ள இக்கவிப்புனல் நாளைய உலகில் பார்ப்போரை பரவசப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என்று நம்பிக்கையுடன் கூறலாம்.

சாமஸ்ரீ : S L மன்சூர் (கல்விமாணி),
அட்டாளைச்சேனை.

இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி

malinga.jpgஇலங்கை, இந்தியா, நியூஸிலாந்து ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்ற முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த முத்தரப்பு ஒரு நாள் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று தம்புள்ளையில் இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் சங்கக்கார துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக தில்சானும், ஜயவர்தனவும் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை பிரவீன் குமார் வீசினார்.

முதல் ஓவரில் 3 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன. 3 ஆவது ஓவரில் தில்சான் 2 பவுண்டரி விளாசினார். அதன் பின் இருவரும் அடித்து விளையாடினார்கள். இதனால் இலங்கை
அணியின் புள்ளிகள் மளமளவென உயர்ந்தன. 9.1 ஓவரில் இலங்கை அணி 50 ஓட்டங்களை தொட்டது. சிறப்பாக விளையாடிய தில்சான் அரை சதம் அடித்தார். அவர் 36 பந்தில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் இந்த ஓட்டங்களை எடுத்தார். 15.4 ஓவரில் இலங்கை அணி 100 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி 20.2 ஓவரில் 121 ஓட்டங்கள் எடுத்திருக்கும் போது முதல் விக்கெட்டை இழந்தது. ஜயவர்தன 39 ஓட்டங்களில் இசாந்த் சர்மா பந்தில் தி. கார்த்திக்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தரங்க 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சங்கக்கார களம் இறங்கினார். சிறப்பாக விளையாடிய தில்சான் அதிக பட்சமாக 115 பந்துகளில் 110 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 12 பவுண்டரிகளும் ஒரு சிக்கஸரும் அடங்கும். சங்கக்கார 62 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 71 ஓட்டங்கள் எடுத்தார். பந்து வீச்சில் இசாந்த் சர்மா, முனாப் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்களை எடுத்தது.

இந்தப் போட்டியில் அதிக பட்சமாக தில்சான் சதம் அடித்தார். அவர் 115 பந்துகளில் 110 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 12 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். சங்கக்கார 62 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 71 ஓட்டங்களை எடுத்தார்.

பந்து வீச்சில் இசாந்த் சர்மா, முனாப் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை எடுத்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 46.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களை எடுத்தது.

9000 ஓட்டங்களை கடந்த 3 வது வீரர் மகேல ஜெயவர்த்தன

mahela.jpgசர்வதேச ஒரு நாள்போட்டியில் 9000 ஓட்டங்களைக் கடந்த 3வது வீரர் என்ற பெருமையை மகேல ஜெயவர்த்தன பெற்றுக்கொண்டார்.  இன்று இடம் பெற்றுக்கொண்டிருக்கும் இந்தியாவிற்கு எதிரான போட்டியிலே மகேல ஜெயவர்த்தன இச் சாதனையை நிலை நாட்டினார். ஏற்கெனவே சனத், அரவிந்த இந்த இலக்கைத் கடந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டத்தில் வெல்ல கூடுதல் முயற்சி தேவை – சங்ககரா

பொதுவாக இறுதி ஆட்டங்களின் போது  இந்திய அணியினர் எங்களை விட சிறப்பாக செயல்பட்டு கோப்பை வென்று விடுவர். இது பலமுறை நடந்துள்ளது. இம்முறை சற்று கூடுதல் முயற்சி எடுத்து ஐந்தாவது முறையாக கோப்பை வெல்வதை தடுப்போம். சேவக் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. இவரை விரைவில் அவுட்டாக்கினால் எங்களுக்கு நல்லது என இலங்கை அணித்தலைவர் தெரிவித்தார்.

தோனி தலைமையில் இந்திய அணி, இலங்கையில் தொடர்ந்து நான்கு ஒருநாள் தொடர்களில் கோப்பை வென்றுள்ளது. கடந்த 2008 (3-2), 2009 (4-1) ல் நடந்த ஒருநாள் தொடர்கள் 2009 முத்தரப்பு தொடர், சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை என மொத்தம் நான்கு முறை சாதித்துள்ளது. இன்றும் வெல்லும் பட்சத்தில் ஐந்தாவது முறையாக கோப்பை வென்று சாதிக்லாம்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து துடுப்பெடுத்தாடி வருகிறது. இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையில் எதுவித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.