கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

புலிகளின் தற்கொலைப் படகு முல்லைக் கடலில் தாக்கி அழிப்பு

sl_navy.jpgபுலிகளின் தற்கொலைப் படகு ஒன்றை கடற்படை படகுகள் நேற்றுக் காலை தாக்கியழித்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார். முல்லைத்தீவுக்கு வடக்கே கரையோரத்தை அண்மித்த பிரதேசத்தில் நேற்று அதி காலை 3.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடற்படையின் கடுமையான தாக்குதல்களில் புலிகளின் தற்கொலைப் படகு வெடித்துச் சிதறி நிர்மூலமாக்கப்பட்டுள்ளதுடன் அந்த படகிலிருந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். முல்லைத்தீவு வடக்கு கரையோரத்தை அண்மித்த கடற்பரப்பில் புலிகளின் தற்கொலைப் படகு ஒன்று செல்வதை கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கடற்படையினர் அவதானித்து கடற்படையின் அதிவேக தாக்குதல் மற்றும் டோரா படகுகளைப் பயன்படுத்தி கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

தற்பொழுது அந்தப் பிரதேசத்தில் கடற்படையினர் பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, புலிகளின் விநியோகங்களையும், புலிகள் தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் வடக்குக் கரையோர பிரதேசம் மற்றும் கடற்பரப்பில் கடற்படையினர் நான்கு தடை வலயங்களை ஏற்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்த கடற்படைப் பேச்சாளர், முதலாவது, இரண்டாவது தடை வலயங்களில் கடற்படையின் துரித செயலணி, விசேட படகு அணி, அதிவேக தாக்குதல் படகுகளும், மூன்றாம், நான்காம் தடை வலயங்களில் பீரங்கி படகுகளும், கரையோர காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முத்துக்குமார் உடலை அடக்கம் செய்வதை எதிர்த்து மாணவர்கள் போர்க்கொடி

muthukumar-30011.jpgமுத்துக்குமாரின் குறிக்கோள் நிறைவேறும்வரை அவரது உடலை அடக்கம் செய்ய விடமாட்டோம் என மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இன்று காலை 10 மணிக்கு முத்துக்குமாரின் உடல் அடக்கம் செய்யப்படுவதாய் இருந்தது. ஆனால் தமிழகமெங்கிலும் இருந்து மருத்துவ,சட்டக்கல்லூரி, கலைக்கல்லூரி மாணவர்கள் வந்து முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்துவதால் இன்று மாலை உடல் அடக்கம் செய்யலாம் என்று முடிவெடுத்தனர் அரசியல்வாதிகள்.

முத்துக்குமார் தனது கடைசிக்கடிதத்தில், ‘என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அதனால் சீக்கிரத்தில் உடல் அடக்கம் செய்ய மாட்டோம் என்று மாணவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும்,முத்துக்குமார் உடல் அடக்கம் செய்வதை பொறுத்தவரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அரசியல்வாதிகள் தலையிடாதீர்கள் என்று சொல்லி வருகின்றனர். இதனால் முத்துக்குமாரின் உடல் அடக்கம் வரும் ஞாயிற்றுக் கிழமைதான் நடக்கும் என்று தெரிகிறது.

முத்துக்குமார் குடும்பத்துக்கு ரூ. 2லட்சம் நிதியுதவி

muthukumar.jpgஇலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க கோரி தீக்குளித்து உயர் நீத்த இளைஞர் முத்துக்குமாரின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டசபையில் இதற்கான அறிவிப்பை இன்று அவர் வெளியிட்டார். இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது மு.க.ஸ்டாலின் பேசுகையில், முத்துக்குமார் என்ற வாலிபர் தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.

தீக்குளித்து இறப்பதை யாராலும் ஏற்க முடியாது. இது உணர்ச்சி வசப்பட்டு எடுக்கக் கூடிய செயல். முத்துக்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு முதல்வர் ஒப்புதலுடன் ரூ. 2 லட்சம் இழப்பீட்டுத் தொகை, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து அளிக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தமிழகத்தில் “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ உதயம்

tamilar-phathukappu.jpgஇந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கொழும்புப் பயணத்தால் எந்தவொரு பயனும் இலங்கைத் தமிழர் தொடர்பாக ஏற்படவில்லையென அதிருப்தியடைந்திருக்கும் தமிழகக் கட்சிகள், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக மும்முரமாக ஆராய்ந்து வரும் நிலையில், “தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுங்கட்சியான தி.மு.க.பெப்ரவரி 3இல் செயற் குழுவை கூட்டி முக்கிய தீர்மானம் எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

அதேசமயம், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா புலிகளின் ஆதரவைத் தவிர இலங்கைத் தமிழர் தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் தனது கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்குமென தனது கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு புதன்கிழமை உறுதியளித்திருக்கிறார். இதனால் உற்சாகமடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உடனடியாக இரவு ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். அக்கூட்டத்தில் பா.ம.க.நிறுவுநர் ராமதாஸ், வைகோ, பழ.நெடுமாறன் உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ உதயமாகியுள்ளது. உடனடியாகவே (இன்று) வெள்ளிக்கிழமை இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக சென்னையில் மௌனவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது. இலங்கை யுத்தத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் பலியாவதையடுத்து இப்பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒவ்வொரு கட்சியுமே தினமும் போராட்டம் என்று அறிவித்து சுறுசுறுப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன

ஈராக்கில் 440 மாகாண ஆசனங்களை தெரிவு செய்யும் முக்கிய தேர்தல் நாளை

iraq-elections.jpgஈராக்கில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இத் தேர்தலை வெற்றிகரமாக நடாத்துவதன் மூலம் ஈராக் அரசும் இராணுவமும் உறுதியான நிலைப்பாட்டிலுள்ளதை உலகுக்கு எடுத்துக்காட்டவுள்ளது.

இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதுடன், அனைவரையும் வாக்களிப்பில் பங்கேற்கத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சிறைக் கைதிகள், வைத்தியசாலைகளில் உள்ளோர் வாக்களிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் இவர்கள் கடந்த புதன்கிழமை வாக்களித்தனர். வைத்தியசாலைகளிலுள்ளோர், கர்ப்பிணித் தாய்மார்கள், சிறைக்கைதிகள் ஆகியோரிடம் வாக்குச் சீட்டுகள் அவர்களது காலடிக்கு கொண்டு செல்லப்பட்டன. சுதந்திரமான ஈராக்கைத் தெரிவு செய்யவும் பங்கரவாதத்துக்கு அடிபணிய மாட்டோம் என்பதை வெளிப்படுத்தவும் நாங்கள் வாக்களித்ததாக அவர்கள் கூறினர்.

பின்னர் வாக்குப் பெட் டிகள் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட் டன. இரண்டாம் கட்ட வாக்களிப்பு நாளை நடை பெறவுள்ளது. ஈராக்கில் மொத்தமாகவுள்ள 18 மாகாணங்களில் 14 மாகாணங்களுக்கு நாளை தேர்தல் இடம்பெறுகிறது. இதுவரை ஆபத்தான தாக்குதல்கள் எதுவும் இடம் பெறவில்லை என்பது ஈராக் அரசுக்குக் கிடைத்த வெற்றியாகும். வீதியோரக் குண்டுத் தாக்குதல்களைத் தவிர்க்க பெரும்பாலான வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன் விமான நிலலயங்களும் இன்றும், நாளையும் மூடப்பட்டுள்ளது. ஈராக் பிரதமர் தலைமையிலான ஷியா அரசுக்குச் சவாலாக உள்ள ஈராக் கெளன்ஸில் குர்தீஷ்க ளைப் பெரும்பான்மை யாகக் கொண்ட சுயாட்சியை வட ஈராக்கில் கோருகின்றது.

ஈரான் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவைப் பேணும் ஈராக் கொன் ஸிலின் இக் கோரிக்கையை அமெரிக்காவும், ஈராக்கும் நிராகரித்துள்ளன. மாகாண ரதியான அதிகாரங்களைக் கைப்பற்றுவதனூடாக தங்களது இன அடையாளங்களை ஓங்கச் செய்ய ஷியா, சுன்னி, குர்தீஷ் இனங்கள் கடும் பிரயத்தனங்களில் இறங்கியுள்ளன. ஈராக்கில் தற்போதுள்ள மத்திய அரசு ஷியாக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. ஈராக்கில் நடைபெறும் 14 மாகாணங்களுக்கான தேர்தல்களில் மொத்தம் 14 ஆயிரத்து நானூறு வேட் பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் மூவாயிரத்து தொளாயிரம் பேர் பெண்களாவர். 440 மாகா ண சபை ஆசனங்களுக்கு இத் தேர்தல் நடைபெறு கின்றது. ஈராக் அரசின் நாகரிக சர்வாதிகாரம் இது வென இஸ்லாமிய அமைப்பு விமர்சனம் செய்துள்ளது

வன்னி மக்கள் விடுவிக்கப்பட வேண்டும்!! யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்!!! – ஜனவரி 31 லண்டனில் ஆர்ப்பாட்டப் பேரணி : ரி சோதிலிங்கம்

Jan31_London_Protestவன்னியில் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் அகப்பட்டு ஒருசிறிய பிரதேசத்தில் மிகப் பெருந்தொகையான மக்கள் தவிக்கும் இக்காலத்தில் இம் மக்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடாத்த லண்டனில் ஒழுங்கு செய்ய்பட்டடுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை பிரித்தானிய தமிழர் ஒன்றியம் (BTF) ஒழுங்கு செய்துள்ள போதிலும் இதில் தமிழ் மக்களின் தர்மீக போராட்டத்தை ஆதரிக்கும் பெரும்பாலான மக்களும் அமைப்புக்களும், இயக்கங்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கடந்த காலங்களில் லண்டனில் நடைபெற்ற பல பொதுவான தமிழ்ரகள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் தமிழர்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்று கூடும்படி கேட்டுக் கொண்டபோதும் இறுதியில் ஆர்ப்பாட்டங்கள் புலிகளின் ஆதரவு ஆர்ப்பாட்டங்களகவும் புலிகள் மட்டும் தனித்த ஏகபோக தலைமை என்ற அங்கீகாரம் கேட்கும் கூட்டங்களாகவே அமைந்திருந்தது. அப்படி ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களினால் எந்தவித பலாபலனும் கிடைக்காமல் போனதும் புலம் பெயர்வாழ்வின் வரலாறாகிவிட்டதை நாம் மறந்துவிட முடியாது.

குறைந்தபட்சம் 40 பேர் கூடும் ஆர்ப்பாட்டங்களை BBC – ITV பெரிய செய்திகளாக்கி தேசிய தொலைக்காட்சில் வெளிப்படுத்தி கொடுக்கும் ஆதரவின் ஒரு துளியைக் கூட 50,000 தமிழ் மக்கள் பங்கேடுத்து நடாத்தும் போராட்டங்களுக்கு கொடுக்காததின் உண்மையை விளங்க முன்வர வேண்டும்.

இப்டியான ஆர்ப்பாட்டங்களில் ஒன்று மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிராக கடந்த ஆண்டு யூனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம். இதன் போது எல்லோரும் வருகை தாருங்கள், பழையதை மறவுங்கள், தமிழர்கள் ஒன்று என்பதை மட்டும் நினைவில் கொண்டு வாருங்கள் என்றெல்லாம் அழைப்புக்கள் விடுக்கப்பட்ட போதிலும் ஆர்ப்பாட்டத்தில் நடந்த பல சம்பவங்களினால் அதன் பலாபலனை சரியாக வெளிக் கொணர முடியாது போனதும் நாம் தெரிந்து கொண்டதொன்றே. இப்படியான சம்பவங்களக்கு BTF தரும் விளக்கங்களும் வழமைபோல யாரோ வாறாங்கள், என்னவோ செய்யிறாங்கள் அதற்கும் எமக்கும் தொடர்பில்லை என்ற பொறுப்பற்ற பதிலாகும்.

ஏதிர் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்ட ஊர்வலம் அப்படியான சம்பவங்களை எதிர்பார்துள்ள போதிலும் தமது சுதந்திரமின்றி அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள நிர்ப்பந்தத்திலிருந்து அம் மக்கள் வெளியே அனுமதிக்கும் படியான நிர்ப்பந்தத்தை அடக்குபவர்கள் மீது செலத்தும் நிகழ்வாகவும் அக்கோரிக்கையில் அம்மக்கள் வெற்றி கொள்ளும் படியாகவும் அமைய வேண்டும்.

போர்ச் சூழலில் வன்னி மக்கள் மிகக் குறைந்த பிரதேசத்தில் மிகப் பெருந்தொகையாக மிகசெறிவாக வாழ்வது மரணங்களையும் அதிகரிக்வே செய்யும். இந்த மக்களை விடுவிக்கக் கோருவதும் யுத்தத்தை நிறுத்தக் கோருவதும் மிகவும் முக்கியமான விடயம். இன்று வன்னியில் ஏற்ப்பட்டுள்ள மிக இக்கட்டான சூழநிலைகளைப் பயன்படுத்தி புலிகள் தமது ஏகபோக பிரதிதநிதித்துவம் பெறுவதற்கு இவற்றை பயன்படுத்தக் கூடாது. இந்த விடயத்தில் எல்லா தமிழர்க்கும் பொதுவானதாகச் செயற்படுவதாகக் கூறும் பிரிட்டிஸ் தமிழ் போரம் (BTF) இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கடந்த சில நாட்களாக வன்னி மக்களுக்காக நடைபெற்ற இப்படியான ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் இந்த மக்களின் பிரதிபலிப்புக்கு மேலாக அந்த அந்த ஆர்ப்பாட்டங்களில் பறக்கவிடப்படும் புலிகளின் கொடிகளும் படங்களும் புலிகளுக்கு அங்கீகாரம் தேடும் மற்றும் புலிகளே  ஏகபோக பிரதிநிதித்துவம் பெறும் நிகழ்வாக நடைபெறுவது அவதானிக்கப்படுகிறது. வன்னி மக்களின் பரிதாபகரமான நிலையில் அவர்களின் பரிதாபத்தில் அவர்களின் துன்பத்தில் அவர்களின் உதவிகளற்ற மரண அனுதாபத்தை புலிகளின் தேவைகளுக்கு பாவித்துவிடக் கூடாது. இப்படி செய்யப்படுவதன் மூலம் பெறவேண்டிய பலனை இந்த நிகழ்வு பெறாது போய்விடும்.

புலிகளுக்கு அங்கீகாரம் பெறும் அல்லது புலிகளுக்கு ஏகபோக பிரநிதித்துவம் பெற தனிப்பட்ட தனியான ஆர்ப்பாட்டங்கள் நடாத்துவதே சாலப் பொருத்தமானதும் அதற்குரிய பலனை பெறக் கூடியதும் ஆகும்.

யாழ்பாணத்தை விட்டு மக்கள் வெளியேறியபோதும் இதே போன்றதொரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஏற்பபாடு செய்து விட்டு ஏற்பாட்டாளர்கள் புலிகளின் கொடியையும் படங்களையும் வைத்து ஆர்ப்பாட்டத்தை நடாத்தியது நினைவிருக்கலாம். அந்த ஆர்பாட்டம் மிகச்சிறிய சலசலப்பைக் கூட ஜரோப்பிய நாடுகளில் ஏற்பபடுத்தாது போனதும் நினைவிருக்கலாம்.

கடந்த காலத்தில் போராட்ட அணுகு முறைகளிலும் மனிதாபிமான நடத்தைகளிலும் எற்ப்பட்ட தவறுகளே இன்று தமிழ் மக்களின் அரசியற் தீர்விற்கான பாதையற்றுப் போன காரணங்களாகும். இப்படியான தவறுகளை தொடர்ந்தும் ஏற்படுத்தாது இருக்க வேண்டும்.

நாளை (ஜனவரி 31) நடைபெறும் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் அந்த வன்னி மக்களின் சுதந்திர நடமாட்டத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக இருத்தல் வேண்டுமே ஒழிய புலிகளின் பிரதி நிதித்துவத்திற்கு அங்கீகாரம் கேட்பதாக இருக்கமாயின் அந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் நோக்கத்தை அடைய முடியாத போய்விடும். இதுவும் கடந்த காலங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் போலவே பிரயோசனம் அற்றதாகிவிடும்.

இந்த வாரம் வெளிவந்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின், ஜக்கிய நாடுகளின் மன்றத்தின் அறிக்கைகள் யாவும் இதுவரையில் விடுதலைப் புலிகள் முக்கியமாகவும், இலங்கை அரசும் மக்களின் நடமாட்டத்திற்கு தடையாக இருப்பதாகவும், காயமடைந்த குழந்தைகள், வயோதிபர்களின் மக்களின் வெளியேற்றத்திற்கு தடையாக இருப்பதாயும் தெரிவிக்கின்றன. இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலமும் இந்த இருதரப்பினரையும் (விடுதலைப் புலிகளையும் இலங்கை அரசையும்) வன்னி மக்கள் மீதுள்ள தடைகளை நீக்க கோரும் ஆர்ப்பாட்டமாக நடைபெற வேண்டும் அம் மக்கள் பலன்பெற வேண்டும்.

யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு வன்னி மக்களை சுதந்திரமாக செயற்ப்பட புலிகளும் அரசும் அனுமதிக்க வேண்டும்.

.
ஜனவரி 31 லண்டன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் பற்றிய விபரம்:

STOP SRI LANKA’S GENOCIDE OF TAMILS
      MASS PROTEST MARCH
on
SATURDAY, 31st JANUARY 2009

in
Central London
Begins 1:00 PM at MILLBANK
(Nearest station Vauxhall or Pimlico)

பென்டகனுக்கு பராக் ஒபாமா முதல் விஜயம்: ஈராக், ஆப்கானிஸ்தான் குறித்து சிக்கலான முடிவுகள்

obama-pandagan.jpgஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, உப ஜனாதிபதி ஜோன்பைடன், பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ், முப்படை தளபதி மைகல் முல்லான் ஆகியோர் இராணுவத் தலைமையகமான பெண்டகனில் முக்கிய கூட்டமொன்றில் பங்கேற்றனர். ஈராக், ஆப்கானிஸ்தான் சம்பந்தமாக மிகச் சிக்கலான முடிவுகளை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் முதன் முறையாக பராக் ஒபாமா பாதுகாப்பு தலை மையகமான பென்டகனுக்கு வந்தார்.

உப ஜனாதிபதி ஜோன் பைடன், பாதுகாப்பு அமைச்சர் றொபேர்ட் கேட்ஸ், முப்படைத் தளபதி மைக்கல் முல்லான் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒபாமா சுமார் ஒரு மணி நேரம் பேசினார். ஆப்கானிஸ்தான், ஈராக் விடயங்கள் பற்றியே முக்கிய கவனமெடுக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானுக்கு மேலதிகப் படைகள் அனுப்பப்பட வேண்டியதன் அவசியத்தை மைக்கல் முல்லான் ஜனாதிபதி பராக் ஓபாமாவிடம் எடுத்து விளக்கினார். இதற்குத் தீர்வாக ஈராக்கில் உள்ள அமெரிக்கப்படைகளை மீளப்பெறுவதென்ற தீர்மானத்துக்கு பராக் ஒபாமா வந்தார். படைகளை 16 மாத காலத்துக்குள் ஈராக்கிலிருந்து வெளியேற்றுவது என்ற ஒபாமாவின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அவர் கவனமாக உள்ளபோதும் அமெரிக்காவின் நலன்களை முன்னிறுத்தியே படை விலக்கல்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஈராக்கிலிருந்து படைகளை முற்றாக வெளியேற்றுவதா அல்லது கட்டம் கட்டமாக அழைப்பதா என்பதில் இன்னும் முடிவில்லை. எனினும் மிகக் குறுகிய காலத்துள் படைகள் விலக்கப்படவுள்ளன. சுமார் 36 ஆயிரம் படைகள் விலக்கப்பட்டு அவை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படலாம் என ஒபாமாவின் பேச்சாளர் சொன்னார். உலகெங்கும் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள் மனச்சோர்வடைந்துள்ளது எமக்குத் தெரியும். பொதுமக்கள் அமெரிக்க இராணுவத்தின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் படை விலகல்கள் அமையவுள்ளன.

அது எம்மையும் எமது தாய்நாட்டையும் பாதுகாக்க வேண்டுமென்பதே தனது எதிர்பார்ப்பென பராக் ஒபாமா சொன்னார். அத்துடன் அமெரிக்காவின் அதிகாரங்களை நிலை நிறுத்தவும் அமெரிக்காவுக்கு களங்கம் உண்டுபண்ணவும் இராணுவப் பலமே தூண்டுகோலாகவுள்ளமை தனக்குத் தெரியும் எனவும் ஒபாமா சொன்னார்.

நேட்டோப் படைகளின் சில செயற்பாடுகளால் பொதுமக்கள் பலியாவதும், கற்பழிக்கப்படுவதும் அமெரிக்காவுக்கு கெட்ட பெயர் உண்டு பண்ணியதையும், சில நாடுகளில் படைகள் விலக்கப்பட்டால் தீவிரவாதம் பலமடைவதையும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் வகையில் ஜனாதிபதியின் பேச்சு அமைந்திருந்தது.

ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோப் படைகளின் தளபதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கப் படை அதிகாரிகளுடன் பராக் ஒபாமா கடந்தவாரம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். ஈராக்கில் உள்ள படைகளை மிக விரைவாக வாபஸ் பெறவேண்டுமென்ற எண்ணத்தில் ஜனாதிபதி பராக் ஒபாமா செயற்பட்டார்.

ஆனால் அங்குள்ள படை அதிகாரிகள் தற்போது வழங்கிய தகவல்களால் சற்று ஆழ்ந்து யோசனை செய்வதாக அவரது உரையிலிருந்து புலனாகின்றது. 2008ம் ஆண்டுடன் அமெரிக்கப்படைகளின் வெளியேற்றம் ஆரம்பிக்கப்பட வேண்டுமென பக்தாத் – வாஷிங்டன் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளபோதும் பின்னர் 2011ம் ஆண்டுவரை பணியாற்றும் வகையில் ஒப்பந்தம் திருத்தப்பட்டமை தெரிந்ததே.  இதனால் ஈராக்கில் உள்ள படைகளை அவசரமாக வெளியேற்ற வேண்டுமென்ற அழுத்தத்தை ஒபாமா வழங்கவில்லை.

விடுதலைப் புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவலாம்

_bort.jpgஇலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடக்கும் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விடுதலைப் புலிகள்  தமிழகத்திற்குள் ஊடுருவலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து கடலோரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால், விடுதலை புலிகள் அங்கிருந்து கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது. இதையடுத்து தமிழக கடலோர பகுதிகளில் தீவிரமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள டிஜிபி ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்பட 11 மாவட்டங்களில் கடலோர காவல் நிலையங்கள் உள்ளன. ஏற்கனவே இங்கு பாதுகாப்பை தீவிரப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.தற்போது உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து 24 மணி நேரமும் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

படுகாயமடைந்தோருக்கான போக்குவரத்தை ஐ.நா.வும் சர்வதேச அமைப்புகளும் செய்ய வேண்டும்- நடேசன் கோரிக்கை

hospital.jpgவன்னியில் இடம்பெறும் ஷெல் தாக்குதல்களில் படுகாயமடைந்தவர்களுக்கான போக்குவரத்துகளை ஒழுங்கு செய்ய ஐ.நா.உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுமென்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடேசன் கூறியதாக “புதினம்’ இணையத்தளம் தெரிவித்துள்ளதாவது;

இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயங்களுக்கு ஐ.நா.மற்றும் இதர சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள மக்களின் கருத்துகளை சுயாதீனமாக கேட்டறிய வேண்டும். வவுனியாவுக்கு செல்லும் நோயாளிகளை விடுதலைப் புலிகள் தடுத்து வைத்திருக்கவில்லை. வவுனியாவுக்கு நேற்று வியாழக்கிழமை மட்டும் 200 நோயாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருந்துவ, போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்களுக்கான மருத்துவ தேவைகளுக்கான போக்குவரத்துகளுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா.உள்ளிட்ட அனைத்து சர்வதேச அமைப்புகளும் ஏற்பாடு செய்ய வேண்டும். சர்வதேச மற்றும் ஐ.நா.விதிகளின் படி, படுகாயமடைந்த பொதுமக்களுக்கான சிகிச்சைகளுக்குரிய போக்குவரத்துகளை அரசு அனுமதிக்காமலிருப்பது பாரிய மீறலாகும்.

தங்களது குடும்பங்களுடன் இணைந்து கொள்ள விரும்புவோரையும் கூட படைத்தரப்பு அனுமதிக்க மறுத்து வருகிறது. மோதல் பகுதியிலிருந்து வெளியேற விரும்புவது தனிநபரின் உரிமை என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். எந்த ஒரு தனிநபருக்கு எதிராகவும் எந்த தடையும் விதிக்கவில்லை. சர்வதேச சமூகத்தினர் இதனையும் பொதுமக்களின் உரிமையையும் புரிந்துகொள்ள வேண்டும்.

படையினரின் கரங்களில் சிக்கிக் கொள்ள விரும்பாத தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் பாதுகாப்பார்கள். பொதுமக்களை படுகொலை செய்யும் நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 

புலிகளின் சிறியரக நீர்மூழ்கிப் படகு கண்டுபிடிப்பு

sub-marine-01.jpgதற்போது முல்லைத்தீவை நோக்கி முன்னேறி வரும் படையினர் முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி,  மூன்று சிறிய தற்கொலைத் தாக்குதல் படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.  நேற்று வியாழக்கிழமை காலை உடையார்கட்டுக்குளம் பகுதியில் தேடுதல் நடத்திய விஷேடப் படையணி 3 இவற்றைக் கண்டுபிடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வன்னியில் படையினர் இதுவரை காலமும் நடத்திய தாக்குதலின் போது மேற்கொண்ட மிக முக்கியமான கண்டுபிடிப்பு இவையெனவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.  கட்டுமானப்பணிகள் பூர்த்தியடையாத நிலையிலுள்ள இந்த நீர்மூழ்கி 35 அடி நீளமானதும் கவசத் தகட்டினால் உருவாக்கப்பட்டு வருவதுமாகும்.

இதைவிட இந்த நீர்மூழ்கியைத் தாங்குவதற்கும் அதனை இடத்திற்கிடம் நகர்த்துவதற்குமான சக்கரங்கள் பூட்டப்பட்ட “ரெயிலர்’, கவசத்தகடுகள், ஒட்டுவேலைக்கு பயன்படுத்தப்படும் பாரிய சிலிண்டர்கள், ஒவ்வொன்றும் 20 அடி நீளமான 30 கவசத்தகடுகள், மிதித்துச் செல்லக்கூடிய வகையை சேர்ந்த மூன்று தற்கொலைத்தாக்குதல் படகுகள், டோறா வகையைச் சேர்ந்த வேகத்தாக்குதல் படகொன்றும் பெருமளவு நீரிறைக்கும் கருவிகள் (வாட்டர்பம்), இரு லொறிகள், இரு பஸ்கள், ஒரு ட்ரக், அதிசக்தி வாய்ந்த ஒரு ஜெனரேற்றர், வாட்டபவுசர், இழுவை வண்டி, ஒரு பவுசர், மண்ணெண்ணெய், இரு பெரிய லேத்மெசின்கள், சக்தி வாய்ந்த இரு கொம்புறசர்கள், ஓட்டும் இயந்திரம், ஒரு தொகுதி மின்சார மோட்டார்கள், மிகப்பெரியதொரு உயர்த்தி (ஜய்க்), பலபடகுகள், வாகன இயந்திரங்கள், மிகப்பெரியதொரு கட்டிடம், குளிரூட்டப்பட்ட சிறியரக வீடுகள் 15 என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் நீருக்கடியிலான ஆயுத வகைகளைத் தயாரிப்பதில் ஈடுபட்ட முதலாவது அமைப்பாக விடுதலைப் புலிகளே இருப்பது தெரியவந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

sub-marine-03.jpg

sub-marine-04jpg.jpg

sub-marine-01.jpg