கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

புலிகளின் கட்டளைத் தளம் அழிப்பு

mi24_2601.jpgமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள புலிகளின் பிரதான தொலைத் தொடர்பு நிலையம் மற்றும் புலி முக்கியஸ்தர்களின் கட்டளைத்தளம் ஆகியவற்றை விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

விமானப்படைக்குச் சொந்தமான ஜெட் ரகதாக்குதல் விமானங்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புதுக்குடியிப்புக்கு வடகிழக்கே 1.5 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கட்டளைத் தளம் மற்றும் புதுக்குடியிருப்புச் சந்திக்கு வடக்கே 1.5 கிலோ மீற்றர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த தொலைத் தொடர்புத் தளம் ஆகியவற்றை இலக்குவைத்தே நேற்றுக்காலை 10.10 மணியளவில் இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள புலிகளின் பல்வேறு இலக்குகள் மீது நேற்று முன்தினம் கடுமையான தாக்குதல்களை விமானப்படையினர் நடத்தியுள்ளனர்.13 தடவைகள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் பிடியில் எஞ்சியுள்ள பிரதேசங்களை முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் பல முனைகளில் முன்னேறிவரும் இராணுவத்தின் 58, 59வது படைப் பிரிவினருக்கும், நான்காவது செயலணிக்கும் உதவியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் விமானப் படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்

காதலர் தினத்தை கொண்டாடும் காதலருக்கு கட்டாய திருமணம்

muthalik.jpgபெப்ரவரி 14ஆம் திகதி உலக காதலர் தினமாகும். இந்தியாவில் இந்த காதலர் தினத்தை கொண்டாடும் ஜோடிகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்போம் என்று ராம்சேனா அமைப்பு அறிவித்துள்ளது.

மங்களூர் ஓட்டலில் மது குடித்து, நடனமாடிய இளம்பெண்கள், இளைஞர்கள் மீது ராம்சேனா அமைப்பினர் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்த அமைப்பின் தலைவர் பிரமோத் முதாலிக் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த பிரச்னையால் ராம்சேனா பிரபலமாகி விட்டது.

இந்த நிலையில், பெங்களூரில் முதாலிக் நேற்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் விபரம் வருமாறு:

காதலர் தின கொண்டாட்டம் மேல்நாட்டு கலாசாரம். அதை இந்தியாவில் திணிக்க முயற்சிக்கிறார்கள். அது நமது பாரம்பரியத்தை அழிக்கும் வகையில் உள்ளது. எனவே, காதலர் தின கொண்டாட்டத்துக்கு அரசு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக முதல்வர், ஆளுநரிடம் மனு அளிக்கப்படும். இந்தியாவில் மட்டுமே குடும்ப அமைப்பு மிகவும் வலுவாக உள்ளது. அன்பையும், காதலையும் பகிர்ந்து கொள்வதற்கு அது நல்ல அடித்தளத்தை கொடுத்துள்ளது. அதனால், பொது இடத்தில் காதலை பரிமாறிக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.

எனவே, காதலர் தினமான வரும் 14ம் தேதி ராம்சேனா அமைப்பினர் ரகசிய கேமராவுடன் நகரம் முழுவதும் வலம் வருவார்கள். அப்போது காதல் தினத்தை கொண்டாடும் காதல் ஜோடிகள் கிடைத்தால், அவர்களை அருகில் உள்ள பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து வைப்போம். இவ்வாறு முதாலிக் கூறினார்.

புதுக்குடியிருப்பில் இருந்து இன்னும் ஆழமான யுத்த பகுதிக்குள் மக்கள் நகர்வு – ‘புலிகளின் முக்கிய தலைவர்களுக்கு மன்னிப்பு இல்லை’ கோதபாய : த ஜெயபாலன்

Makeshift Hospitalபுலிகளுடன் சரணடைவது பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை அவர்கள் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் சரணடைய வேண்டும் என இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோதபாய ராஜபக்ச தெரிவித்து உள்ளார். புலிகளின் கீழ் நிலை உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் பிரதான சமூகத்துடன் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று தெரிவித்துள்ள கோதபாய ராஜபக்ச புலிகளின் தலைமை உறுப்பினர்களுக்கு எவ்வித மன்னிப்பும் இல்லை என்று தெரிவித்து உள்ளார். பிபிசி உலகசேவைக்கு இணைத் தலைமைநாடுகளின் வேண்டுகோள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே பாதுகாப்புச் செயலர் இதனைத் தெரிவித்து உள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் சகோதரரான இவரை குறிவைத்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல் தோல்வியடைந்தது தெரிந்ததே. மேலும் தற்போதைய இராணுவத் தளபதி சரத்பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதலும் தோல்வியடைந்தது. அடிபட்ட பாம்புகளின் சீற்றத்தில் புலிகளுக்கு எதிரான இந்த யுத்தம் தற்போது முடக்கி விடப்பட்டு உள்ளது. மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது அவருடைய சகோதரர் கோதபாய ராஜபக்சவே முக்கிய முடிவுகளில் ஆளுமை செலுத்துகிறார் என்று அரசியல் வட்டாரங்கள் நம்புகின்றன.

இலங்கை அரசினால் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்கள் காரணமாக கடந்த சில தினங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் அங்கு இயங்கி வந்த ஒரே மருத்துவ நிலையமும் செயலிழந்து போய் உள்ளது. அங்கு கடமையாற்றிய 15 யுஎன் பணியாளர்களும் அவர்களது 81 குடும்ப உறுப்பினர்களும் மருத்துவமனையை விட்டு வெளியேற் உள்ளதாக கொழும்பில் உள்ள யுஎன் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்து உள்ளார்.

சர்வதேச அழுத்தங்கள் பலமுனைகளில் இருந்து வந்த போதும் புதுக்குடியிருப்பில் உள்ள 250000 மக்களது உயிர்களைப் பணயம் வைத்து இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் தங்கள் இராணுவ நடவடிக்கையைத் தொடர்கின்றனர். உலகின் முக்கிய தலை நகரங்களில் எல்லாம் ஆயிரக் கணக்கில் தமிழர்கள் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பிய போதும் அவை கவனத்திற்கொள்ளபடுவதாக இல்லை.

கடந்த நான்கு நாட்களாக பெப்ப்ரவரியில் மட்டும் 85க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர் ஐசிஆர்சி மருத்துவப் பணியாளர்.
01 பெப் 13 பேர் கொல்லப்பட்டனர்
02 பெப் 9 பேர் கொல்லப்பட்டனர்
03 பெப் 52 பேர் கொல்லப்பட்டனர்
04 பெப் 12 பேர் கொல்லப்பட்டனர்
05 பெப் 7 பேர் கொல்லப்பட்டனர்

மருத்துவமனை மீதான தொடர்ச்சியான தாக்குதலை அடுத்து காயப்பட்டவர்கள் நோயாளர்கள் இன்னும் ஆழமான யுத்த பகுதிகள்  நோக்கி நகர நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளதாக அல்ஜசீரா செய்தி தெரிவிக்கின்றது. கரையோரப் பிரதேசமான அங்கு குடிநிர் வசதிகளே இல்லையென ஐசிஆர்சி பெச்சாளர் சரசி விஜயரட்னே தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் காயப்பட்டவர்களும் நோயாளிகயளும் மருத்துவப் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதற்கு அல்லது யுத்தப் பகுதியில் இருந்து வெளியேறுவதற்கான பாதுகாப்பான வழி ஒன்றை ஏற்படுத்தமாறு அரச படைகளையும் புலிகளையும் கேட்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றும் உடையார்கட்டு மருத்துவமனை மீது பாரதுரமான தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள Office for the Coordination of Humanitarian Affairs (OCHA) உலக உணவுத் திட்டம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான உணவு விநியோகத்தை மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்தும் போச்சு வார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கிறது. நாளை உணவு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்து உள்ளது.

இணைத் தலைமை நாடுகளின் சரணடைவது பற்றிய வேண்டுகோள் தொடர்பாக புலிகள் உத்தியோகபூர்வமாக எதனையும் குறிப்பிவில்லை. குறிப்பாக நோர்வேயும் அந்த வேண்டுகோளில் தன்னையும் இணைத்துக் கொண்டது புலிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்ததாகவே உள்ளது. பேச்சு வாரத்தைகளின் போது நோர்வே விடுதலைப் புலிகளுக்கு சாதகமாகச் செயற்பட்டது என்று குற்றச்சாட்டப்பட்டது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்த யுத்தம் முற்றிலும் இந்தியாவின் அணுசரணையுடன் மேற்கொள்ளப்படுகிறது என்பது இந்தியாவின் நீண்ட மெளனத்தில் இருந்து தெரியவருகிறது. தமிழ்நாட்டை உசுப்பி இந்தாயவைப் பணிய வைக்கும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை. அமெரிக்காவில் பதவியேற்றுள்ள புதிய ஆட்சியாளர்களும் வழமையான கோரிக்கைகள் கண்டனங்களுடன் நிறுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுடன் பிரித்தானியாவும் இணைந்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட புலிகள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் ஒதுக்கப்பட்டு உள்ளனர்.

எவ்வித அரசியல் செயற்பாடுகளையும் கொண்டிராத முற்றிலும் இராணுவ அமைப்பான புலிகள் சக இன மக்களுடன் நல்லுநவைக் கொண்டிராத சக தேசிய சர்வதேசிய விடுதலை அமைப்புகளுடன் உறவுகளைக் கொண்டிராத மக்களை நம்பாது ஆயுதங்களை மட்டுமே நம்பிய புலிகளை அந்த ஆயுதங்கள் இன்று காப்பாற்றவில்லை. 250 000 மக்கள் விரும்பியோ விரும்பாமலோ இன்று தங்களைப் பணயம் வைத்து புலிகளைக் காக்கின்றனர்.

தற்போதைய யுத்தத்தில் சிக்குண்டுள்ள 250 000 மக்களில் கணிசமானவர்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் குடும்பங்கள் அவர்களது அலுவலகங்களில் பணியாற்றியவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இராணுவப் பயிற்சிக்கு உட்பட்டவர்கள். கடந்த இரு தசாப்தங்களாக தங்களது பூரண கட்டுப்பாட்டில் இருந்த மக்களை புலிகள் தங்களது நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி இருப்பார்கள் என்பதும் அதனை அந்த மக்களால் மறுப்பதற்கு வாய்ப்பிருந்திருக்காது என்பதும் யதார்த்தம்.

அந்த வகையில் இலங்கை அரசு அந்த மக்களின் நம்பிக்கையைப் பெறாத வரையில் அவர்கள் ஒரு போதும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழையமாட்டார்கள் என்பது உறுதி. இதற்கிடையே யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வந்த சிலர் கைது செய்யப்பட்டு காணாமல் போகிறார்கள் என்ற செய்திகள் வெளியெ கசிகின்றன. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுபவர்களதும் நிலை மோசமாக உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் பொறுப்பில் பாதுகாப்பு வலயங்களை ஒப்படைக்க வேண்டும். சரணடைய விரும்புபவர்கள் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளிடம் சரணடைவதற்கான வழிவகைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இலங்கை இராணுவத்தை எந்தவொரு வன்னிக் குடிமகனும் குடிமகளும் நம்புவார்கள் என்று அரசோ சர்வதேச சமூகமோ எதிர்பார்க்க முடியாது.

மாற்றுக் கருத்து தளத்தில் செயற்பட்டவர்கள் மாற்றுக் கருத்து என்பது  புலியெதிர்ப்பு என்றளவில் செயற்படாமல் இலங்கை அரசு மீதான தங்களுடைய அழுத்தங்களை பிரயோகிப்பது அவசியம். இந்த வன்னி மக்கள் சந்திக்க உள்ள அவலத்தை தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். பெயருக்கு அறிக்கைவிட்டு தங்கள் கடமை முடிந்துவிட்டது என்றளவில் இல்லாமல் தொடர்ச்சியான அழுத்தங்களை நேரடியாகவும் சர்வதேச சமூகத்திற்கு ஊடாகவும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். புலி எப்ப காலியாகும் நாங்கள் எப்ப போய் குந்தலாம் என்ற எண்ணத்தில் செயற்பட்டால் அது அவர்கள் வன்னி மக்களுக்கு இழைக்கும் பாரிய துரோகச் செயலாக அமையும்.

இன்றைக்கு தமிழ் மக்களுடைய போராட்டங்கள் யுத்தத்தை நிறுத்துவதையும் சர்வதேச சமூகத்தின் பொறுப்பில் பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்படுவதையும் அரசியல் தீர்வு முன் வைக்கப்படுவதையும் மையமாக வைத்து நடத்தப்பட வேண்டும். மாறாக புலிகளின் நலன்கருதி மேற்கொள்ளப்படும் எவ்வித போராட்டமும் பயனற்றதாகவே அமையும். எங்கள் தலைவர் பிரபாகரன் புலிகளின் தடையை நீக்குங்கள் எங்களுக்கு தமிழீழம் வேண்டும் என்ற கோசங்கள் வன்னி மக்களுக்கு எவ்வகையிலும் உதவாது. யதார்தத்தைப் புரிந்து கொண்டு ஏற்படப் போகும் மனித அவலத்தை தடுத்து நிறுத்த போராடுவதே இன்றுள்ள முக்கிய கடமை.

பெயர் குறிப்பிட விரும்பாத ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார் ”நாங்கள் எங்களுடைய வரலாற்றுத் தவறுகளை எழுதப் போனால் புத்தகம் புத்தகமாக எழுதலாம். பாவம் மக்கள். ரொம்பவும் கஸ்டப்படுத்திவிட்டோம்” என்று. அவர் மேலும் கூறுகையில் ”இன்றைக்கு பணயம் வைக்கப்பட்டுள்ள 250 000 மக்களில் 5000 – 10 000 மக்களைப் பலிகொடுத்துத் தான் அரசியல் பேரம் பேச வேண்டி இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

முரளிதரன் ‘ஒரு நாள் போட்டியி’லும் உலகசாதனை

_murali.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவதியவர் என்ற உலக சாதனையை இன்று (05.02.2009) ஏற்படுத்தியுள்ளார்.

இன்று கொழும்பில் இந்தியாவுக்கு எதிரான 4 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது கௌத்தம் கம்பீரின்  விக்கெட்டை கைப்பற்றிய முரளிதரன் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் அவர்களின் சாதனையான 502 விக்கெட்டுகள் என்கிற இலக்கைத் தாண்டி 503  விக்கெட்டுகள் பெற்று  புதிய உலக சாதனை சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

இன்று தனது 328 ஆவது ஒரு நாள் போட்டியில் விளையாடிய போதே முரளிதரன் இந்த உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

உலக அளவில் டெஸ்ட் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள வீரர் என்கிற பெருமையும் முரளிதரனையே சாரும். 125 டெஸ்ட் போட்டிகளில் அவர் 769 விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார்.

Top-Five Bowlers 

Player                  Team          Matches       Wkts 

M Muralitharan      SL                 328                   503 
Wasim Akram         Pak               356                   502 
Waqar Younis         Pak                262                   416 
C Vaas                      SL                  322                   401 
SM Pollock               SA                 302                   391 

ஈரான் தனது முதல் செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவியது

_grab_.jpgஈரானால் தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் ரொக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவப்பட்டுள்ளது.  இச் செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை அந்நாட்டு ஜனாதிபதி மஹ்மூட் அகமதி நிஜாட் தொலைக்காட்சியில் அறிவித்தார்.  தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ஈரான் ஏற்கெனவே செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது செயற்கைக்கோளை செலுத்தும் திறனைப் பெற்றுவிட்டதால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் முயற்சித்து வருகிறது. எனவே ஈரானில் உள்ள அணு உலைகளை சர்வதேச முகாமை மூலம் சோதனையிட அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் அணு சக்தியை அமைதிப் பணிகளுக்கே பயன்படுத்துகிறோம் என்று ஈரான் கூறி வருகிறது.  இந்த நிலையில் ஈரான் செயற்கைக் கோளை செலுத்தும் ரொக்கெட் திறன் பெற்றிருப்பது அமெரிக்காவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏவுகணைகளில் அணு குண்டுகளைப் பொருத்தி நீண்ட தொலைவுக்குத் தாக்க முடியும் என்பதால் ஈரான் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் செயற்கைக்கோள் குறித்து மேற்குலக நாடுகள் கடும் விசனம்
 
ஈரான் தனது முதலாவது செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவியது தொடர்பாக மேற்குலக நாடுகள் அதிக கவலை வெளிப்படுத்தியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படுத்துவதாகக் கூறி ஈரான் தனது முதலாவது செயற்கைக் கோளை விண்ணில் ஏவியுள்ளது.

ஆனால், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனையின் அபிவிருத்திக்காகவே இச் செயற்கைக் கோளைப் பயன்படுத்தப்போவதாக அமெரிக்கா,பிரான்ஸ்,பிரிட்டன் ஆகிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு ஆறு மேற்குலக நாடுகள் திட்டமிட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மேற்குலக நாடுகள் கருதுவதால் ஐ.நா.வின் தடைகளை எதிர்கொள்ளும் நிலையில் ஈரான் உள்ளது. இந்நிலையில் மேற்குலக நாடுகளின் குற்றச் சாட்டை மறுத்துவரும் ஈரான் தமது சக்தித் தேவை கருதியே அணுநிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதாக கூறிவருகின்றது. ஈரான் தன்னுடைய யுரேனியம் செறிவூட்டலை இடைநிறுத்தினால் அதன் அணு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான பேச்சுகளில் ஈடுபட முடியுமென ஜேர்மன், பிரான்ஸ், அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகள் வலியுறுத்துகின்றன.

பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபன்டுடனான பேச்சுக்களைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹிலாரி கிளின்டன்;  ஜேர்மனியின் பிராங்பட் நகரில் பேச்சுகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்கப் பிரதிநிதிகள் ஈரானுடன் பேச்சுகளில் ஈடுபடுவதற்கான அணுகுமுறைகள் தொடர்பான பேச்சுகளிலும் ஈடுபடுவர். சர்வதேச சமூகத்தில் ஈரானும் ஒரு அங்கத்துவ நாடாகுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளமை தெளிவாகவுள்ளது. ஈரானுடன் கைகுலுக்குவதற்கு நாம் தயாராக இருந்தாலும் எமது கொள்கைகளை கைவிடப்போவதில்லையெனத் தெரிவித்தார். இதேவேளை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அபிவிருத்தியில் ஈரான் ஈடுபடுவதற்கு சாத்தியமாக இருந்தாலும் அது குறித்து அதிக கவனம் செலுத்தப்படுமென அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி றொபேட் வூட் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஈரானின் செயற்கைக்கோள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படுமென பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எரிக் செவாலியர் தெரிவித்தார்.

இலங்கை பிரச்சனை-நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் – விஜயகாந்த் : புறக்கணிக்க மாட்டோம் – தா.பாண்டியன்

vijayakanth.jpgஇலங்கையில் நடைபெறும் தமிழின படுகொலையை மத்திய அரசு தடுக்க தவறினால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று முடிவு எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை தமிழர் பிரச்சினை எதிர்பாராத வகையில் ஒரு பெரிய நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளது. சிங்கள அரசின் முப்படைகளும், தமிழர் பகுதிகளை தாக்கியதன் விளைவாக இன்று முல்லைத்தீவின் ஒரு சிறிய பகுதியில் சுமார் 2   1/2 லட்சம் தமிழர்கள் போரில் சிக்கியுள்ளனர். எந்த நேரத்திலும் அவர்களுக்கு எதுவும் நேரலாம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. சிங்கள அரசோ பாதுகாப்பு மண்டல பகுதிகள் என்று ஒரு சில பகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், போர் முனையில் சிக்கியுள்ள தமிழர்கள் அந்த பகுதிகளில் வந்து பாதுகாப்பாக தங்கிக்கொள்ளலாமென்றும் அறிவித்துள்ளது.

சிங்கள அரசின் பாதுகாப்பு மண்டல பகுதிக்கு தமிழர்கள் சென்றால், வயதானவர்கள், குழந்தைகள் தவிர, மீண்டும் தீவிரவாதிகள் உருவாக கூடாது என்று சொல்லி சிங்கள போர் படையினர் தமிழ் வாலிபர்களை கொன்று விடுகின்றனர். பெண்களையும் மானபங்கப்படுத்தி அழித்து விடுகின்றனர். சிங்கள அரசின் பாதுகாப்பு மண்டலங்கள் என்பது தமிழர்களின் மரணப்படுகுழிகள் தான் என்பதை சிங்கள அரசு வேண்டுமென்றே மறைத்து வருகிறது. சிங்கள அரசின் இத்தகைய போக்கின் காரணமாக அங்குள்ள தமிழர்கள் சிங்களர்கள் கையில் சிக்கி சாவதை விட அவர்களை எதிர்த்து போராடி செத்து மடிவதே மேல் என்ற நிலைக்கு ஆளாகி விட்டனர். இந்த சூழ்நிலையில் சிங்கள அரசு போரை மேலும் நீடித்தால் பல லட்சக்கணக்கான தமிழர்கள் பேரழிவையே சந்திக்க வேண்டியிருக்கும். இதை அனுமதிப்பது நாகரீக உலகிற்கு எவ்விதத்திலும் சரியல்ல.

போன உயிர்களை மீண்டும் தருவது யாராலும் முடியாது. ஆகவே உயிர்கள் போவதை தடுக்க மனிதாபிமானமுள்ள உலகம் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இத்தகைய மனிதகுலப் பேரழிவு ஏற்படும் அபாயக்கட்டத்தில், உலகில் பல்வேறு நாடுகளில் ஐ.நா.மன்றம் தலையிட்டுள்ளது. அது போல ஐ.நா.மன்றம் இந்த பிரச்சினையிலும் தலையிட்டு உடனடியாக போர் நிறுத்தம் செய்யவும், அதை கண்காணிக்கவும், உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருள்களை வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழினப் பேரழிவை தடுக்க ஐ.நா.மன்றத்தில் எழுப்ப இந்திய அரசால் தான் முடியும். அண்டை நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட முடியாது என்று சொல்வது சரியல்ல. மனிதாபிமான அடிப்படையிலும், அண்டை நாட்டில் ஏற்படும் பிரச்சினையால் தங்கள் நாட்டின் அமைதிக்கு பங்கம் எற்படுமென்றாலும் நிச்சயமாக ஒரு அரசு தலையிட கடமைப்பட்டுள்ளது. இந்திய அரசு தமிழினப்படுகொலை தடுக்க தவறுமானால், தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் தேசிய அரசில் பங்கு பெறுவதில் அர்த்தமில்லை. ஆகவே வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சியினரும் போட்டியிட போவதில்லை என்று முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சாதாரணமாக தங்கள் ஊரில் உள்ள குறைகளை செய்து கொடுக்காததற்கே அந்த ஊர் மக்கள் தேர்தலை புறக்கணிக்கிறார்கள் என்றால், அரசு ஓடோ டி சென்று அந்த மக்களின் குறைகளை தீர்க்க உறுதி கொடுத்து அவர்களை தேர்தலில் ஈடுபட வைக்கிறது. அப்படியிருக்க இலங்கையில் தமிழினமே படுகொலைக்கு ஆளாகும் சூழ்நிலையில், தமிழ்நாடு பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்தால் அப்பொழுதாவது இந்திய அரசு தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காதா என்பதே நம்முடைய எதிர்பார்ப்பு.

தேர்தல் புறக்கணிப்பு முடிவு எடுக்கப்படுமானால், தே.மு.தி.க.வை பொறுத்தவரை முதலாவதாக இடம் பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். சிங்களராணுவத்தின் அநீதியை தடுத்து நிறுத்த தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், மக்களும் ஒருமித்த கருத்தோடு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க ஒன்றுப்பட வேண்டும் என்பதே என் வேண்டுகோள். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

புறக்கணிக்க மாட்டோம்:

இதுபற்றி கருத்து கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன்,

இலங்கைப் பிரச்சனைக்காக வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைப் பிரச்சனையை முன் வைக்க மாட்டோம் என்றும் கூறினார்.
அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் விரைவில் சேர உள்ளன. தேர்தலை சந்திப்பது குறித்து கூட்டணி கட்சிகள் அனைத்தும் விரைவில் கூடி ஆலோசனை நடத்துவோம். அதிமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி பந்த் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை

cennai.jpgதமிழகத்தில் நேற்று நடந்த பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்று தலைமை செயலாளர் ஸ்ரீபதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று பந்த் அறிவிக்கப்பட்டது. 85 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாநிலம் முழுவதும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பஸ், ரயில்கள் வழக்கம் போல் ஓடின. அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்வதில் எந்த பாதிப்பும் இல்லை. விமான போக்குவரத்திலும் பாதிப்பில்லை. பள்ளிகள் திறந்திருந்தன. சென்னையில்  பெரும்பாலான இடங்களில் கடைகள் திறந்திருந்தது. புறநகரில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பாமக, விடுதலை சிறுத்தைகள் ஆதரவாளர்கள் அதிகம் உள்ள காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர் மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வேலூர், கோவை, ஓசூர், சிவகங்கை, மானாமதுரை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், பழனி ஆகிய இடங்களில் பஸ்கள் கல் வீசி தாக்கப்பட்டன.

தர்மபுரியில் எல்ஐசி அலுவலகம், டாஸ்மாக் அலுவலகம் தாக்கப்பட்டது, வேலூரில் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் அலுவலகம் மீது கல்வீசப்பட்டது. அதைத் தவிர அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.

தமிழக பந்த் குறித்து  தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கூறியதாவது:

பந்த் காரணமாக தமிழ்நாட்டில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. சில இடங்களில் கல் வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்தன. பஸ், ரயில், விமான போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. கடலூரில் ஆட்டோ ரிக்ஷா போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. கடைகள் பெருமளவில் திறந்திருந்தன.கோவை, விழுப்புரம், நாகை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடைகள் ஓரளவு அடைக்கப்பட்டிருந்தன. மற்ற மாவட்டங்களில் 80 சதவீத கடைகள் திறந்திருந்தன. தொழிற்சாலைகள் வழங்கம்போல இயங்கின. அரசு ஊழியர்கள் 99 சதவீதம் பேர் வருகை தந்திருந்தனர். இவ்வாறு ஸ்ரீபதி கூறினார்.

டிஜிபி ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டம் ஒழுங்கு பராமரிக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் காவல்துறையினர் செய்திருந்தனர்.

திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ உலகநாதன் தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 50 பேரும், மாநிலத்தில் சில இடங்களில் கடைகள், பள்ளிகளை மூட வற்புறுத்தியவர்கள் மற்றும் பேருந்துகள் மீது கற்கள் வீசி சேதப்படுத்தியவர்கள் 99 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரபாகரனின் உருவில் இன்னுமொருவர்

praba.jpgகடந்த வாரம் வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் தங்கியிருந்ததாகக் கருதப்படும் சொகுசு பதுங்குக் குழியொன்றை கண்டுபிடித்துள்ளதாக படைத் தரப்பினர் அறிவித்திருந்தமை தெரிந்ததே. அப்பதுங்குழியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட புகைப்படங்களுள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒத்த இன்னுமொருவருடன் பிரபாகரன் எடுத்துள்ள புகைப்படமொன்றினையும் படைத் தரப்பு வெளியிட்டுள்ளது.

இப்படத்திலுள்ளவர் பிரபாகரனை ஒத்த உருவம் கொண்டவர். இவருக்கு பிரபாகரனுக்குக் காணப்படுவதைப் போல மேல் மீசை காணப்படுவதில்லை என்றும், இவர் பிரபாகரனைவிட சுமார் 6 அங்குலங்கள் உயரமுள்ளவராக இருப்பாரென்றும் படைத் தரப்பு தெரிவிக்கின்றது.  

praba.jpg

மும்பைத் தாக்குதல் சம்பவம்: -120 பேர் மீது வழக்குத் தொடர பாகிஸ்தான் முடிவு

mumbai.jpgமும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறி 120 பேர் மீது வழக்குத் தொடர பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த 120 பேரில் இந்தியா சுட்டிக்காட்டியுள்ள முக்கிய தீவிரவாதிகள் யாரும் இல்லை என்று தெரிகிறது.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆல் உருவாக்கப்பட்டு வளர்த்துவிடப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பது இதுவே முதல் முறை. மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தானில் இருந்து செல்போன், ஈ-மெயில் மூலம் தொடர்புகொண்டு பேசியவர்கள் மீது சைபர் குற்றப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு உள்ளது என்று இந்தியா குற்றம் சாட்டியது. அதற்கான ஆதாரங்களை பாகிஸ்தான் வசம் ஒப்படைத்தது. பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவும் பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றது. ஆதாரங்கள் எதையும் இந்தியா கொடுக்கவில்லை.

வெறும் தகவல்களைத் தான் கொடுத்தது என்று முதலில் பிடிவாதம் செய்த பாகிஸ்தான், வேறு வழியுமில்லாமல் மும்பை தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க ஒப்புக்கொண்டது. இந்த விசாரணையின் அடிப்படையில் தற்போது 120 பேர் வழக்குத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜமாத்-யுத்-தவா அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

வன்னியிலிருந்து நோயாளிகளைக் கொண்டுவரும் முகமாக சில மணிநேரம் போர் நிறுத்தம்

injured.jpgஇலங்கையின் வடக்கே நடைபெறும் மோதல்களில் காயமடைந்துள்ளவர்களையும், நோயாளிகளையும் மேலதிக சிகிச்சைக்காக வவுனியாவுக்கு கொண்டுவர வழிசெய்யும் வகையில் நாளை (இன்று) சுமார் ஆறு மணி நேர போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிபிசியிடம் தகவல் வெளியிட்ட,  இலங்கை அரசின் சுகாதார சேவைகளின் தலைமை இயக்குநர் டாக்டர் அஜித் மெண்டிஸ், இந்த போர் நிறுத்தமானது ஆறு மணி நேரத்துக்கு இருக்கும் என்று சுகாதார சேவைகள் துறையின் செயலர் தம்மிடம் தெரிவித்ததாக பிபிசி செய்திச்சேவையிடம் கூறியுள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் வன்னிப் பகுதியிலுள்ள நோயாளிகளும் காயமடைந்தவர்களும் வவுனியாவுக்கு கொண்டுவரப்படுவார்கள் என்றும் டாக்டர் அஜித் மெண்டிஸ் தெரிவித்தார்.  இவ்வாறு வன்னியிலிருந்து சிகிச்சைக்காக வவுனியாவுக்கு கொண்டுவரப்படும் நோயாளிகளை கவனிப்பதற்கென்று, வவுனியா மருத்துவமனையில் தனிப் பிரிவு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அங்கு அறுவை சிகிச்சை வல்லுநர்கள், சிறப்பு மருத்துவர்கள், இரத்தம் மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த முடிவை பாதுகாப்பு அமைச்சகத்துடன் சேர்ந்து சுகாதார அமைச்சகம் எடுத்துள்ளது என்றும், இந்தத் தகவல் இராணுவத்துக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர் அஜித் மெண்டிஸ் பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.