கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

பிரித்தானியாவில் கொரோனா வைரஸிற்கு பலியானவர்கள் 50,000 யை தாண்டிவிட்டது!

– பழம் பிடுங்கவும் ஆட்களில்லை வைத்தியம் பார்க்கவும் ஆட்களில்லை. சேர்ந்து வாழவும் தயாரில்லை –

பிரித்தானியாவில் கொரோனா வைரஸிற்குப் பலியானவர்கள் அரசு இன்று வெளியிட்டுள்ள எண்ணிக்கையைக் காட்டிலும் இரட்டிப்பானது என்பதே மிகக் கசப்பான உண்மை. இதுவரை அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் இறக்கின்ற போதே கொரோனா வைரஸினால் இறந்தவர்கள் எனப் பதிவு செய்கின்றனர். வயோதிபர் இல்லங்களில் மரணமடைந்தவர்கள் நேற்றுவரை இப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஆனால் இன்று முதல் வயோதிபர் இல்லங்களில் கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைபவர்களும் இப்பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக நேற்றுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 26,097 என்றே அரசு அறிவித்து உள்ளது.

அப்படியானால் 50,000 பேர் என்ற கணிப்பு எப்படி வந்தது என்பது முக்கியம். பதிவு செய்யப்படும் ஒவ்வொரு மரணமும் ஓஎன்எஸ் – Office for National Statistics புள்ளிவிபரத்திற்கு வந்தடையும். அதன்படி கடந்த ஆண்டுகளில் மார்ச் ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட மரணங்களுக்கும் இந்த ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட மரணங்களுக்கும் இடையே உள்ள எண்ணிக்கை வேறுபாடே 50,000 பேர் கோவெட்-19 காரணமாக நிகழ்ந்துள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றது.

அப்படியானால் அரச புள்ளி விபரம் எப்படி இந்த இருட்டடிப்பைச் செய்தது என்ற மற்றுமொரு கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. அரசு ஏற்கனவே வீடுகளிலும் வயோதிபர் பராமரிப்பு இல்லங்களிலும் நிகழும் மரணங்களை கோவிட்-19 எனப் பதிவு செய்வதை தவிர்க்கின்ற வகையில் கடுமையான பதிவுமுறைகளை மேற்கொண்டுள்ளது. அதனால் பொதுமருத்துவர்கள் வயோதிபர்களின் மரணத்தைப் பதிவு செய்கின்ற போது கோவெட்-19 அல்லாத காரணங்களால் (chronic conditions such as heart disease, cancer, stroke, diabetes, and Alzheimer’s disease) மரணம் சம்பவித்ததாக பதிவு செய்கின்றனர். மேலும் கோவெட்-19 ரெஸ்ட் மேற்கொள்ளப்படாத நிலையில் இந்த மரணங்கள் கோவெட்-19 அல்லாத காரணங்களால் நிகழ்ந்ததாகவே பதிவு செய்யப்படுகின்றது.

மற்றுமொரு தொகை மரணங்கள் கோவெட்-19 அல்லாத காரணங்களினால் தூண்டப்படுகின்றது. குறிப்பாக புற்றுநோய், மாரடைப்பு, மற்றும் உயிராபத்து ஏற்படுத்தும் நோய்களைக் கொண்டவர்கள் மருத்துவமனைக்கு செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். மேலும் மருத்துவ வளங்கள் மனிதவளம் உட்பட கோவெட்-19க்கு திசை திருப்பப்பட்டு உள்ள நிலையில் பல அவசர சத்திர சிகிச்சைகள் கூட பிற்போடப்பட்டு உள்ளது. இவைகளும் கூட மரண எண்ணிக்கையை அதிகரிக்கின்றது. அரச அறிவிப்புகளிலேயே 25 வீதமான கூடுதலான மரணங்கள் நிகழ்வதை உறுதிப்படுத்தி உள்ளது.

பத்து ஆண்டுகள் கொன்சவேடிவ் ஆட்சியில் பிரித்தானிய மருத்துவத்துறை மிகப்பலவீனமான நிலையில் இருந்த போதே கோவெட்-19 ஆபாயத்திற்கு முகம் கொடுத்தது. அப்போது 50.000 வெற்றிடங்கள் நிரப்பப்படாத நிலையிலேயே பிரித்தானிய சுகாதார சேவைகள் கோவிட்-19 உடனான தனது போரை ஆரம்பித்தது. தற்போது உலகின் வறிய நாடுகளில் இருந்து மருத்துவ தாதிகளை வரவழைப்பதற்கான கட்டுப்பாடுகளை உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் தளர்த்தி உள்ளார். அவ்வாறான மருத்துவ தாதிகளையும் மருத்துவர்களையும் வரவழைக்க முயற்சிக்கும் உள்துறை அமைச்சர் அவர்களின் குடும்பங்களை அழைத்து வருவதற்கான கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் இறுக்கமாகவே வைத்துள்ளார்.

பழம் பிடுங்கவும் ஆட்களில்லை வைத்தியம் பார்க்கவும் ஆட்களில்லை. ஆனால் மற்றையவர்களோடு சேர்ந்து வாழவும் தயாரில்லை என்ற நிலையில் பிரித்தானிய கொன்வேட்டிவ்கள் செயற்பட்டு வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வீம்போடு வெளியேறியவர்கள் இப்போது எல்லாவற்றுக்கும் மற்றவர் கைகளை எதிர்பார்க்கின்றனர்.

பிரிடிஸ் ஏயர்வெய்ஸ் 12,000 பேரை இன்று வேலைநீக்கம் செய்தது!

பெரும் நிறுவனங்கள் வேலையில் இருந்து வேலைசெய்வோரை நிறுத்த ஆரம்பித்து விட்டன. இன்று பிரிடிஸ் ஏயர்வெய்ஸ் 12,000 பேரை வேலையில் இருந்து நிறுத்தியுள்ளது. கொரோனா வந்த அதிஸ்ரம் பெரும் நிறுவனங்கள் எல்லாம் கொள்ளை இலாபமீட்டும் வகையில் தங்கள் நிறுவன வேலைக்கட்டமைப்புகளை மாற்ற உள்ளன. சோசல் டிஸ்ரன்ஸ் வேர்க்கிங் புறம் ஹோம் எல்லாமே இந்த நிறுவனங்களுக்கு சாதகமாகிப் போய்க் கொண்டிருக்கின்றது. மேலும் சுப்பர்மாக்கற்றுக்கள் ஓட்டோமேட்டட் சிஸ்டத்தை ஏற்கனவே அறிமுகப்படுத்தி விட்டனர்.

இன்னும் பத்து ஆண்டுகளில் இப்போது நடைமுறையில் உள்ள 50 வீதமான வேலைகள் இல்லாமல் போய்விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த கொரோனாவின் வரவால் பத்து ஆண்டுகள் அல்ல இன்னும் சில ஆண்டுகளிலேயே தற்போதுள்ள பல வேலைகள் காணாமல் போய்விடும்.

அப்ப இந்த நுகர்வுப் பொருளாதாரத்துக்கு என்ன ஆகும்? வேலை இல்லாதவனிடம் காசு இல்லை. காசு இல்லாதவன் என்த்தை வாங்குவான். உலக நாடுகள் பொருளாதாரக் கொள்கையை மீள்வரைபு செய்ய நெருக்க வேண்டிய காலகட்டம் இது.

இவர்களில் ஒருவரை நீங்கள் சந்திக்க நேர்ந்தாள் என்ன ஆறுதல் சொல்வீர்கள்?

நேற்று முன் தினம் இடம்பெற்ற குழந்தைகளின் படுகொலையும் தந்தையின் தற்கொலை முயற்சியும் எமது சமூகம் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சினைகளின் கொடுரமான வெளிப்பாடு.

– என் அன்புச் சினேகிதி ஒருத்திக்கு எழுதிய மடலில் இருந்து. –

கனடாவில் சில ஆண்டுகளுக்கு முன் கணவனை இழந்த மூன்று குழந்தைகளின் தாய் – இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் தனது பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த போது காப்பாற்றப்பட்டார். லூசியம் பகுதியில் ஒரு இளம் தாய் தனது மூன்று பிள்ளைகளை கத்தியால் குத்திய பின் தற்கொலை செய்ய முயற்சித்த போது தாயும் ஒரு பிள்ளையும் மட்டும் காப்பாற்றப்பட்டனர். இவ்வாறான ஒரு சம்பவம் ஹரோவிலும் இடம்பெற்றது. இதே போல் அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழரை மணம் முடித்த வியட்நாம் பெண்ணும் பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்ட போது காப்பாற்றப்பட்டார்.

இச்சம்பவங்கள் எல்லாம் கடந்த 10 ஆண்டுகளுக்குள் இடம்பெற்ற நிகழ்வுகள். இவற்றை செய்திகளாக பத்திரிகைகளில் அவர்களின் படங்களோடு பதிவு செய்திருக்கிறேன். லூசியத்தில் நடந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட குழந்தைகளின் இறுதி நிகழ்விலும் கலந்துகொண்டேன்.

நான் இதை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்குக் காரணம் இந்த மனம் தகவல்களைக் கையாள்கின்ற முறை, சிந்தனை, எண்ணங்கள்; அன்பும் அரவணைப்பும் கொண்ட இளம் தாய்மாரை எவ்வளவு மோசமான கொடுமையை, தங்கள் கருவில் உருவான பத்துமாதம் சுமந்த குழந்தைகளுக்கு செய்ய வைத்திருக்கின்றது பார்த்தீர்களா?

இந்தக் கொலைகளைச் செய்த தாய்மாருடைய மனநிலை அவர்கள் தங்கள் குழந்தைக்கு கொடுமை செய்வதாக எண்ணவில்லை. அக்குழந்தைகள் தாங்கள் இல்லாமல் கஸ்டப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே கொலை செய்யப்பட்டனர். இன்றைக்கும் இத்தாய்மார் உயிரோடு சிறையிலும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் உள்ளனர்.

இந்தத் தாய்மாருக்கு எற்பட்டது போஸ்ட் நட்டல் அல்லது போஸ்ட் ரோமற்றிக் டிஸ் ஓடர் – Postnatal Depression / Post Traumatic Depression – என்ற மனநிலை பாதிப்பு. அதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டுகொண்டிருந்தால் இவர்களை மிக இலகுவாக இயல்பு வாழ்க்கைக்கு திருப்பி இருக்க முடியும். அந்த குழந்தைகளும் உயிரிழக்க வேண்டி வந்திராது. தாய்மாருடைய எதிர்காலமும் இவ்வாறு சீரழந்திருக்க மாட்டாது.

எமக்கு துன்பம் அல்லது கஸ்டம் வருகின்ற போது எங்களுடைய மனம் எமக்கு ஏற்பட்ட துன்பமான சம்பவங்கள் அல்லது கஸ்டமான விடயங்களை எல்லாம் ஞாபகத்துக்கு கொண்டு வந்துவிடுகின்றது. அது எங்களை மேலும் மேலும் வேதனைக்கு உட்படுத்தி எங்களை பலவீனப்படுத்திவிடும். இதனை நீங்கள் புரிந்து கொண்டு துன்பங்களையும் கஸ்டங்களையும் மீள மீள அசை போடாமல் கவனத்தை திசை திருப்ப வேண்டும்.
எமது மூளையில் தகவல்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டே சேமிக்கப்படுகிறது. துன்பங்களை கஸ்டங்ளை அசை போட்டால் அது தொடர்பான சம்பவங்கள் ஞாபகத்துக்கு வரும்.. மாறாக மகிழ்ச்சியான பொழுதுகளை நினைவுபடத்தினால் நீங்கள் அனுபவித்த மகிழ்ச்சியான காலங்கள் தொடர்ந்து வரும். இது கிட்டத்தட்ட google search பண்ணுவது போல். நீங்கள் தேடும் சொல்லோடு தொடர்புபட்ட எல்ல விடயங்களையும் தேடிக்கொண்டு வந்து கொட்டுகிறதல்லவா அப்படித்தான் எமது மனமும். அதனால் ‘எனக்குத் தான் எல்லா கஸ்டமும் வருகிறது’ என்று எண்ணி உங்களைப் பலவீனப்படுத்தி விட வேண்டாம்.

எங்கள் உடலில் இதயம் நுரையீரல் குடல் மூளை கை கால் என்றெல்லாம் அங்கங்கள் உறுப்புகள் இருக்கின்றது. ஆனால் எங்கள் உடலில் ‘மனம்’ என்றொரு அங்கம் உறுப்பு இல்லை. மூளையின் நினைவுப் (conscious mind) பகுதியிலும் நினைவுக்கு அப்பாற்பட்ட (unconscious mind) பகுதியிலும் பதிவில் உள்ள தகவல்களைக் கையாள்வதையே நாங்கள் ‘மனம்’ என்கிறோம்.

அன்பு, பாசம், காதல், மகிழ்ச்சி, துயரம், வேதனை, கோபம், விரக்தி எல்லாமே இந்த தகவ்களைக் கையாள்வதாலும் எமது உடலில் உள்ள ஹோர்மோன்களினாலுமே ஏற்படுகின்றது.

மனம் இந்தத் தகவல்களைக் கையாளும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த மனிதர்களால் முடியும். ஆனால் துரதிஸ்டவசமாக பலரும் அதனை முயற்சிப்பதில்லை. நாங்கள் சிந்திக்கின்ற முறையில் அல்லது நாங்கள் புரிந்துகொள்கின்ற முறையில் சிறிய மாற்றங்களை செய்வோமானால் பலரும் தங்கள் துன்பியல் வட்டத்துக்கு வெளியே வந்துவிடலாம். அப்படி வரத்தவறினால் இன்னும் இன்னும் துன்பியலை நோக்கியே அவர்கள் இழுக்கப்படுவார்கள்.

தமிழ் சமூகம் மனநிலை பாதிப்பு என்பதை ‘பைத்தியம்’ ‘சைக்கோ’ என்று மட்டுமே அறிந்து வைத்துள்ளது. சமூகத்தில் இது பற்றிய விழிப்புணர்வு இன்றும் இல்லை என்றே சொல்லலாம். இந்நிலை மாற வேண்டும்.

புத்தர் ஞானம் பெற்றதே இழப்பு தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்த போதே. உறவும் பிரிவும் வாழ்வின் யதார்த்தம். அதனையும் கடந்து – மறந்து அல்ல – வாழ்வு நகர வேண்டும். எம்மீது அன்பும் பாசமும் காதலும் கொண்டவர்கள் பிரிகின்ற போது அவர்கள் நினைவுகளைச் சுமந்து – சோகத்தை அல்ல – மகிழ்ச்சியோடு முன்னேற வேண்டும். அதே போன்றே கொபத்தையும் வஞ்சத்தையும் கடந்து செல்ல வேண்டும்.

ஒருவருடைய பிரச்சினையை இன்னொருவரால் தீர்த்து வைப்பது என்பது மிகக் கடினமானது. அதுவும் குறிப்பாக மனம் சார்ந்த பிரச்சினைகளை இன்னொருவரால் தீர்த்து வைக்க முடியாது. இந்த ஆற்றுப்படுத்துபவர்கள் – counsellors – உங்கள் கவலைகளைக் கேட்டு தெரிந்துகொண்டு; உங்களை நீங்களே புரிந்துகொள்ள வைப்பதன் மூலம்; நீங்களாகவே இந்தத் துன்பியல் சுழற்சியில் இருந்து வெளியே வருவதற்கு உதவுவார்கள். இது ஓரிரு சந்திப்புகளிலும் நடக்கலாம் அல்லது வருடங்களும் ஆகலாம். அது பாதிக்கப்பட்டவருடைய மனநிலை அவர் எவ்வளவுதூரம் ஒத்துழைப்பார் என்பதில் தங்கி உள்ளது. பாதிக்கப்பட்டவர் முன்வருகின்ற போதே பாதித் துன்பியலுக்கு முடிவு வந்துவிடும் மிகுதி விரைவிலேயே காணாமல் போய்விடும்.

ஆனால் துன்பியலுக்குள்ளேயே வாழப் பழகிக் கொண்டால் அதற்குள்ளிருந்து வெளிவருவது மிகக்கடினமானதாகிவிடும்.

“எங்கட சனத்துக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?”

இப்படிக் கேட்டது வேற யாருமல்ல என்னுடைய நண்பர் அதிதரனும் அவருடைய நண்பர் தர்சனும். இருவருமே மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள். அதிதரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி. கருணாவின் பிளவுக்கு முன்னதாகவே இயக்கத்தை விட்டு வெளியேறியவர். அவர்களுடைய கேள்வி யாழ்ப்பாணத்தார் எல்லாம் வெளிநாட்டுக்கு வர உயிரைக் கொடுத்து போராடியது நாங்கள். ஆனால் எங்களுக்கு நீங்கள் தந்த பட்டம் காட்டிக் கொடுத்தவங்கள் என்று. நாங்கள் பிரிந்த பிறகு உங்களால் ஒரு யுத்தத்தை தன்னும் வெல்ல முடிந்ததா? நீங்கள் வெளிநாடுகளுக்கு வந்து உங்கட உங்கட ஊர்களுக்கு செய்கிறியள் “எங்கட சனத்துக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்று என்னைக் கேட்டனர். உண்மையிலேயே என்னிடம் பதில் இல்லை.

கடந்த பத்து வருடங்களாக லிற்றில் எய்ட் கணணிக் கல்வி நிலையம் கிளிநொச்சியில் இயங்குகிறது. கிழக்கில் நாங்கள் குறிப்பாக எதுவும் செய்யவில்லை. மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே. மிகச் சிறிய வீதத்தினரே ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வெளியே செய்வது மிகக் குறைவு. அப்படிச் செய்தாலும் வடக்கைத் தாண்டுவது இன்னும் குறைவு. வடக்கு கிழக்கு இணைய வேண்டும் என்று கூப்பாடு போடும் யாரும் செயலளவில் கிழக்கை புறக்கணித்தே வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களின் வலி மிகக் கொடியது. மௌனம் மட’டுமே பதிலாகிறது.

பொறிஸ்க்கும் முதலாளித்துவத்திற்கும் பாடம் கற்பிக்கும் கொரோனா!

முதலாளித்துவ சிந்தனையின் அடிநாதமாகச் செயற்பட்ட மார்க்கிரட் தட்சர் ‘சமூகம் என்ற ஒன்றில்லை என்றும் ஆண்களும் பெண்களும் அவர்களுடைய குடும்பங்களுமே இருப்பதாகத் தெரிவித்தார். மக்களே தங்களை தாங்கள் முதலில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மூன்று தசாப்தங்களுக்குப் பின் அதே கொன்சவேடிவ் கட்சியில் இருந்து பிரதமரான பொறிஸ் ஜோன்சன், மார்கிரட் தட்சரினதும் கொன்சவேடிவ் கட்சியினதும் ஒட்டுமொத்த முதலாளித்துவத்தினதும் கொள்கைக்கு மாற்றாக “சமூகம் என்ற ஒன்று இருக்கின்றது” எனத் தெரிவித்து இருந்தார். கொரோனா வைரஸ் தாக்கிய நிலையில் சுகாதார சேவையாளர்கள் அடிமட்ட தொழிலாளர்கள் கொரோனாவுக்கு எதிராக தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிக்கொண்டிருக்கையிலேயே பொறிஸ்க்கு இந்த ஞானோதயம் ஏற்பட்டது.

“They are casting their problems at society. And, you know, there’s no such thing as society. There are individual men and women and there are families.” – Margret Thatcher, 1987

“There really is such a thing as society”. – Boris Johnson, 2020

கொறோனா வைரசும் இன்றைய உலகும்: புதிய திசைகள்

கொள்ளை நோயால் மக்கள் கூட்டம் கூட்டமாக அழிந்தார்கள் என்று பண்டைய வரலாற்றில் படித்திருக்கிறோம். இதுவரை வந்த பெரும்பாலான ஆட்கொல்லி நோய்கள் (epidemic) உலகின் ஏதோ ஒரு அல்லது சில பகுதிகளை தாக்கிவிட்டு தணிந்துவிடும் அல்லது அதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்பட்டுவிடும்.

2019 ல் சீனாவின் வுகான் பகுதியில் விலங்குகளிடம் இருந்து மனிதரை தொற்றிக்கொண்டு விட்டதாக கூறப்படும் இந்த கொவிட்-19 என அழைக்கப்படும் கொறோனா வகை வைரஸ் என்பது கண்ணுக்குத்தெரியாத மிகப்பெரிய மனித எதிரியாக பெருந்தொற்றாக (pandemic) மாறியுள்ளது.

உலகமயமாதல் என்பது மக்களை முன்னெப்போதும் இல்லாத அளவு இடநெருக்கமாக வாழவைத்துள்ள இன்றைய உலக சூழலில், உலகின் ஒரு மூலையில் உருவாகும் பிரச்சனை என்பது அதன் வீரியத்தின் அளவை பொறுத்து உலகின் சகல பாகங்களையும் சென்றடைவதற்கும், சமூகங்களுக்குள் சுற்றி சுற்றி விசச்சுழலாக நிலைத்து நின்று அழிவை ஏற்படுத்துவதற்கான சூழல் காணப்படுகிறது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் இந்த கொவிட் 19 வைரஸ் பரவியபோது இது வெறும் சீனர்களின் பிரச்சனையாக உலகு பார்த்தது எதோ உண்மைதான். அது மற்றைய இடங்களுக்கு தீவிரமாக பரவியபொழுது சீன மக்கள் பொதுப்புத்தி மட்டத்தில் இழிவுபடுத்தப்பட்டனர். சீன அரசு இந்த நோயின் தீவிரத்தன்மை தொடர்பான சரியான எச்சரிக்கையை உலகிற்கு அளித்ததா? பாதிக்கப்பட்ட, இறந்த சீன மக்களின் எண்ணிக்கைகள் முறையாக வெளிப்படுத்தப்பட்டனவா? என்னும் கேள்விகள் இன்று பலரிடம் இருக்கத்தான் செய்கிறது.

இந்த நோயை எதிர்கொள்வதில் வேறுபட்ட அணுகுமுறைகளை கையாளும் முகாம்களாக சீனா, இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா என பிரித்து பார்ப்பது இன்றுள்ள நிலைமையை புரிந்து கொள்வதற்கு இலகுவானதாக அமையலாம். ஒரு தொற்றுநோயை எதிர்கொள்வதில் கூட அரசுகளும், வேறுபட்ட சமூக கட்டமைப்புகளும் எப்படி பிரிந்து நிற்கிறன, வேறுபட்ட அணுகுமுறைகளை மேற்கொள்கின்றன என்பது கண்கண்ட சாட்சியாக வெளிப்பட்டு நிற்கிறது.

சீன நாடானது தனது ஒரு மாகாணத்திற்குள்ளேயே நோயை கட்டுப்படுத்தி விட்டதாக கூறிக்கொள்கிறது. மிக இறுக்கமான நிர்வாக முறைகளையும் அதிகாரங்களை மக்கள் மீது பிரயோகிப்பதில் பெரியளவு சவால்களை எதிர்கொள்ளாத சமூகக்கட்டமைப்பையும் தன்னகத்தே கொண்டதன் மூலமாக, மக்கள் அசையமுடியாத கட்டுப்பாடுகளையும் பலமான சிவில், மருத்துவ மற்றும் அதிகார பிரயோகங்களை மிக திட்டமிட்ட முறையில் மேற்கொண்டு நோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியிருப்பதாக தெரிகிறது. அவர்கள் பயன்படுத்தியிருக்கும் நவீன தொழில்நுட்பம் என்பது நோய் தொற்றுக்கு உள்ளானவரின் இரண்டு மூன்றுவார முழு நடவடிக்கைகளையும் கால அடிப்படையில் அவதானிக்க கூடிய வகையில் இருப்பதால் நோய்பரவலை தடுப்பது இலகுவானதாக இருக்கிறது. இது தனிமனித உரிமை மீறல் என்னும் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லை நாட்டில் பரவிவரும் நோயின் தீவிரத்தை குறைத்து எடைபோட்டிருந்த இந்திய அரசு இந்த நோயின் தீவிரம் தொடர்பான எச்சரிக்கையின் பின் தடாலடியாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து நாட்டை முழு ஊரடங்கு வாழ்விற்குள் வாரக்கணக்காக வைத்திருக்கிறது. மிக நெருக்கமான குடியிருப்பு வாழ்முறையை கொண்ட இந்திய மக்களில் குறிப்பிடத்தக்களாவான மக்கள் நெருக்கமான நகர குடியிருப்புகள், சேரிகள் ஏன் வீடற்ற வீதியோர குடிகள் என நோய்தொற்றலுக்கு ஏதுவான சிக்கலான வாழ்முறையை கொண்டிருக்கிறார்கள். நோய் தொற்று ஏற்படும் பட்சத்தில் அதன் பரவல் எல்லைமீறி சென்று பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது

இந்திய சனத்தொகையுடன் ஒப்பிடும்போது அரச மருத்துவமனைகள் மிக குறைந்த மருத்துவ வசதிகளையே கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் தனியார் மயப்படுத்தப்பட்டுள்ள இந்திய மருத்தவத்துறை என்பது மக்கள் பேரவலத்தில் இருக்கும் போது வேடிக்கை பார்க்கும் ஒரு பிரிவாக இருக்கும் சாத்தியப்பாடுதான் இருக்கிறது. இந்த பலவீனத்தின் வெளிப்பாடாகவேதான் இந்திய அரசின் இந்த வாரக்கணக்கான நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவை புரிந்து கொள்ளலாம்.
நோய்தொற்றலை தடுக்கும் நோக்கு என்பதைவிட தற்போதைய அரசின் மீது பழி வந்துவிடக்கூடாது என்பதும் அது அவர்களது அரசியல் எதிர்காலத்தை பாதித்து விடக்கூடாது என்பதிலும் இந்திய, இலங்கை அரசுகள் ஆர்வம் காட்டுவதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. சர்வாதிகார அரசுகளுக்கு நெருக்கடி நிலமைகள் எப்பொழுதும் ஒரு வரப்பிரசாதமாகவே அமைகிறது. மோடி அரசுக்கும் சரி, ராஜபக்ஷ அரசுக்கும் சரி எந்த பிரயத்தனங்களும் இன்றி மக்களின் காவலன்களாக தம்மைக் காட்டிக்கொள்வதற்கு கிடைத்த அரிய சந்தர்ப்பமாகவே பயன்படுத்தப் படுகிறது.

ஊரடங்கு உத்தரவை அதிகார தோரணையில் போட்டுமுடித்த இலங்கை, இந்திய அரசுகள் என்பன, தமது நாட்டு மக்களில் அன்றாடம் உழைத்து வாழும் கிராம, நகர கூலி தொழிலாளர் குடும்பங்களுக்கும், இருப்பதற்கு வீடற்று இருக்கும் மக்களுக்குமான உணவிற்கான தீர்வாக எதை முவைத்திருக்கிறார்கள்? குறைந்த விலையில் சில குறிப்பிட்ட அரச விநியோக நிலையங்களில் அதுவும் வாரத்தில் ஒரிரு தினங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு தான் வழங்கப் படும் நிலை. ஒரு பிரிவு மக்களிடம் பொருள் வாங்க பணம் இல்லை. சிறிதளவு பணம் இருக்கும் மக்களும் பொருள் வாங்குவதற்கான ஒழுங்கான விநியோகம் இல்லை. இனம் புரியாத நோய் தொற்றலின் பயபீதியில் இருக்கும் மக்களுக்கும் சில நேரங்களில் அரசின் இந்த நடவடிக்கைகள் நியாயமாக படுவதில் ஆச்சரியமில்லை. அவகாசமற்ற திடீர் அறிவிப்புகளால் தயாரிப்பற்ற மக்களின் பதட்டங்களுக்கு பொலீசின் ஈவிரக்கமற்ற அடி உதைகள் கூட சமூகத்தால் நியாப்படுத்தப்படும் அநியாயம் கூட நடந்தேறுகிறது.

பிரச்சனை என்றால் மக்களை வீட்டிற்குள் அடைக்கும் வேலையை அதிகாரமுள்ள எந்த முட்டாள் அரசாலும் செய்ய முடியும்; இதற்கு எந்த மதிநுட்பமும் தேவையில்லை. கோவிட்-19 என்னும் வைரசின் பரவல் முறை என்ன? அதற்கு எத்தனை கட்டங்கள் இருக்கிறது? மக்களை முழுமையாக அடைத்து வைப்பதன் மூலம் நீண்டகாலம் நீடிக்கும் ஒரு வைரசின் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முடியுமா? மக்கள் சில வாரங்களில் சாதாரண நிலைக்கு திரும்பும்போது மீண்டும் பரவல் ஏற்பட்டால் அதற்கான முன்னேற்பாடுகள் எவை? நீண்டகால மக்கள் நடமாட்ட தடை என்பது நோயில் இருந்து காத்து பட்டினி சாவிற்கு மக்களை இழுத்துச்செல்லாதா? கூடவே நாட்டை மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்கு இட்டு செல்லாதா? என்பன இன்று மக்களை வீட்டிற்குள் பூட்டி வைத்திருக்கும் அரசுகள் முன் எழும் கேள்விகளாகும்.

இலங்கையில் ஊரடங்கை படிப்படியாக கொண்டுவந்திருக்கும் அரசு, மக்களின் உணவு விநியோகத்தில் அக்கறை கொள்வதாக தெரியவில்லை. மனித நேயம் உள்ள ஊர்மக்கள், புலம்பெயர் மக்கள் என ஒரு மக்கள் கூட்டம் தமது சொந்த மக்களுக்கு உணவளித்து காப்பற்றிக்கொள்கிறது. இதன் அரசியல் பலனை கூட தனதாக்கி அறுவடை செய்வதில் இலங்கை அரசு மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. எவர் உயிர் போனால் என்ன நிலைமை பெரியளவு பாதகம் இல்லாத இன்றைய இலங்கை சூழலில் தேர்தலை நடத்தி வெற்றிவாகை சூடிவிட வேண்டும் என்பதில் ராஜபக்ச சகோதரர்கள் மிகக்குறியாக இருக்கிறார்கள்.

தமது நாட்டை கொரானா வைரஸ் எதுவும் செய்துவிட முடியாது என்று மார்பு தட்டிக்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்பும், அமெரிக்க அரசும் சீனா மீது குற்றம் சுமத்துவதில் குறியாக இருந்தனவே தவிர அமெரிக்க மக்களுக்கு வர இருந்த ஆபத்தை உணர்ந்திருக்கவில்லை. இதன் விளைவாக கண்ணுக்கு அகப்படாத எதிரி இன்று அமெரிக்க மக்களை கொன்றொழித்துக் கொண்டிருக்கிறது. முட்டாள்தனமான தலைமை காரணமாக இன்று மாநில கவர்னர்களுக்கும், அரச அதிபருக்குமான முரண்பாடுகளாக ஒருவகை அரசியல் குழப்பமாக உருவெடுத்துள்ளது. எந்த சீனாவை குற்றம் சுமத்துவதில் குறியாக இருந்த அமெரிக்க அரசு இன்று மருத்துவ தேவைகளுக்கு சீனா போன்ற நாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

உலகின் பெரிய பொருளாதாரங்கள் சிறு தேக்கங்களுக்கும் பெரும் பொருளாதார பாதிப்புகளை அடையும் என்பது சந்தை பொருளாதாரத்தின் யதார்த்தம். இன்று ஏற்பட்டிருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தின் மிகப்பெரிய சரிவு என்பது சராசரியாக நாளுக்கு 2000 மக்களுக்கு மேல் உயிர்களை இழந்துவரும் சூழலிலும், முக்கால் மில்லியன் மக்களுக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையிலும் கூட நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவந்தே தீரவேண்டும் என்னும் அழுத்தத்தை அந்த அரசிற்கு கொடுத்துக்கொண்டிருக்கிறது.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் அணுகுமுறை என்பது, கொரோனாவை வருமுன் காப்போம் என்பதை விட எப்படியும் வரப்போகும் வைரசை எப்படி சமூகமாக கோவிட்-19 இற்கு எதிரான எதிர்ப்பு சக்தியை மக்களிடம் உருவாக்கி (herd immunity) வெற்றி கொள்வது என்னும் அணுகுமுறையில் நகர்வதாகவே உணரமுடிகிறது. அந்த நாடுகளின் சமூக ஓட்டத்தை ஓரளவு அனுமதித்துக் கொண்டு ஒருவகை சுய கட்டுப்பாட்டுடன் மக்களை நகர கோருவதாகவே பெரும்பாலான நாடுகளின் அணுகுமுறை இருக்கிறது.

மேற்கு ஐரோப்பாவின் பிரதான நாடுகளில் ஜேர்மனி தவிர்ந்த மற்றைய நாடுகள் இந்த வைரசை கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளார்களா என்பது அவர்கள் முன் உள்ள பிரதான கேள்வியாகும். ஒரு நோய்த்தொற்று என்பது Epidemic என்னும் பகுதியளவிலான பரவலை கடந்து Pandemic எனும் உலகு ரீதியான பரவல் கட்டத்தை அடையும் போது குறிப்பிட்டளவு உயிரிழப்பை தவிர்க்க முடியாது என்னும் கணக்குடன் இயங்கும் அதேவேளை தமது மருத்துவ வசதிகளை அதிகரித்து முடியுமான அளவிற்கு மக்களை காப்பாற்ற முயற்சிப்பது என்பது பல ஐரோப்பிய நாடுகளின் அணுகுமுறையாக இருப்பதாகவே பார்க்க முடிகிறது.

வயோதிபர்களை அதிகமாக கொண்ட இத்தாலி நாடு மிக அதிகமாக பாதிக்கப்பட்டு பல மரணங்களை சந்திக்க, ஸ்பெயின் நாடு வயோதிப மரணங்களுடன் மருத்துவ பிரிவின் பலவீனங்களால் மருத்துவ பிரிவில் பலரின் மரணங்கள் சம்பவித்த வண்ணம் இருக்கிறது. பிரான்சினதும், பிரித்தானியாவினதும் வைரஸ் நோயாளிகளின் இறப்பு வீதம் அதிகரித்துவர, நோய் தொற்றுள்ளவர்களை பரிசோதிப்பதிலும், தொற்றுக்கு உட்பட்டவர்களை காப்பாற்றுவதிலும் பெரும் சவால்களை இரு நாடுகளும் சந்தித்து வருகின்றன. இராணுவ பொருளாதார பலங்களுடன் இருக்கும் இவ்விரு நாடுகளும் ஒரு நோய்தொற்றில் இருந்து சொந்த நாட்டு மக்களை காப்பதில் பலவீனமாக இருக்கிறார்கள் என்பது இந்நாடுகளின் உண்மையான வளர்ச்சி நிலை தொடர்பான ஆழமான கேள்வியை முன்வைக்கிறது.

ஐரோப்பிய நாடுகள் தமது சொந்த சமூகங்களிடையே கொண்டிருக்கும் ஜனநாயக நடைமுறைகளை அளவிற்கு அதிகமாக மீறுவது பெரும் உள்நாட்டு குழப்பங்களை எதிர்காலத்தில் உருவாக்கும் என்னும் அச்சம், முழு அடைப்பு என்பது மீளமுடியாத பாரிய பொருளாதார சரிவுகளுக்கு இட்டுசெல்லும் என்னும் பாரிய பிரச்சனை, தம்வசம் வைத்திருக்கும் சில விசேட பொருளாதார சந்தை தளங்கள் இடம்மாறிவிடும் எனும் அச்சம், Pandemic என்னும் அளவிலான ஒரு வைரஸ் பரவல் பல கட்டங்களாக கூட வரமுடியும் என்னும் மேற்கு நாடுகளின் கணிப்பு என்பது அவர்களின் நீண்டநாள் சமூக முடக்கம் என்னும் முடிவு என்பதற்கு மாறாக பகுதி அளவிலான சமூக முடக்கம் என்னும் நடைமுறையை பின்பற்றி, மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் படிநிலையை வளர்த்துவிடுவது என்னும் நடைமுறைக்கு இட்டுச்செல்வது என்கின்ற விடயங்கள் தான் இந்த வைரஸ் தொற்று நோக்கிய ஐரோப்பிய அரசுகளின் அணுகுமுறையின் அடிப்படைகளாக இருக்கும் சாத்தியப்பாட்டை உருவாக்குகின்றன.

சீனாவில் இருந்து மற்றைய இடங்களுக்கு பரவியதால் சீன வைரஸ் என உள்நோக்கோடு சில நாடுகள் அழைத்ததும், சீன மக்களின் உணவுமுறைகள் காட்டுமிராண்டித்தனமானதாக பல சமூகங்களால் சித்தரிக்கப்பட்டவையும் அரசியல், சமூக பழிவாங்கல்களாக பார்க்கப்பட முடியும். ரஷ்யா, வடகொரியா,கியூபா போன்ற முன்னைய கொம்யூனிச அரசு ஆட்சியில் இருந்த நாடுகளில் கொரோனாவின் பரவல் மிக குறைவாக இருப்பதென்பதை வைத்துக்கொண்டு ஒருசாரார் இந்தவகை வைரஸ் தொற்று என்பது மேற்குலகம் மற்றும் அமெரிக்கா நோக்கிய சீனாவின் திட்டமிட்ட சதியாக இருக்கும் வாய்ப்புகள் இருக்கிறது என்னும் பொதுப்புத்தி மட்ட பிரச்சாரங்களையும் பரப்பத் தவறவில்லை.

மேற்கு ஐரோப்பாவில் ஜேர்மனி தவிர்ந்த பெரும் பொருளாதார பலம் உள்ள நாடுகள் பலவும் சமீபகாலமாக பொருளாதாரத்தில் வீழ்ச்சியை கண்டுவருகின்றன. குறிப்பாக ஸ்பெயினும், இத்தாலியும் கடும் நெருக்கடிக்குள் இருந்து வந்திருக்கின்றன. கோவிட்-19 தாக்குதல் என்பது இந்த நாடுகளை இன்னும் அதலபாதாளத்திற்குள் தள்ளிவிடப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. இதன் விளைவாக உற்பத்தியும் சந்தையும் வேறு பகுதிகளை நோக்கி நகர்வது நடந்தேறும் வாய்ப்பிருக்கிறது. மலிவான மனித உழைப்புடன் நவீன தொழிநுட்பங்களின் இணைவு என்பது சீனா, இந்தியா, தென்கொரியா, பிரேசில் போன்ற நாடுகளை உலகின் பொருளாதார சந்தையில் மேலே கொண்டுவந்திருக்கிறது. கோவிட்-19 ற்கு பின்னரான உலகத்தில் இது இன்னும் ஐரோப்பாவை விட்டு நகர்ந்து செல்வது தவிர்க்க முடியாததாக இருக்கும்.

வீழ்ந்து வரும் அமெரிக்க பொருளாதாரத்தின் பக்க விழைவுதான் மத்திய கிழக்கில் திட்டமிட்டு உருவாகப்பட்ட யுத்தங்களும் பேரழிவுகளும். சீனாவிடம் பொருளாதார ரீதியாக தோல்வியை சந்தித்துவிடக் கூடாது என பெரும் பிரயத்தனத்துடன் வலம் வரும் அமெரிக்க அரசு என்பது இன்று சீனா தன்னை மீறி செல்வதை பார்த்து சகித்துக்கொள்ள முடியாது சினம் கொண்டிருக்கிறது. கோவிட்-19 க்கு பிந்தய உலகில் அமெரிக்கா பொருளாதார ரீதியில் சீனாவைவிட பின் தங்கிவிடும் என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது. இதன் தாக்கம் என்பது, ஐரோப்பா நோக்கிய அமெரிக்காவின் மென்மை போக்கும், இறுக்கமான கூட்டுக்களும், இந்தியா, பிரேசில், போன்ற நாடுகளுடன் கூட்டை இறுக்கமாக்கும் போக்குகளும் அதிகரிக்க, சீனா நோக்கிய அமெரிக்காவின் கடும் போக்குகள் நகர்ந்து அடங்குவது தவிர்க்கமுடியாததாக இருக்கலாம்.

மனிதனும், வாகனங்களும் அடங்கி விட்டால் உலகம் எப்படி இருக்கும் என்பதை ஒரு மனித பேரவலத்தினூடாக நாம் உணர ஆரம்பித்திருக்கிறோம். எமது காலத்தில் முன்னெப்போதும் இல்லாத இயற்கையான சுற்றாடலும், பறவைகள் மிருகங்களின் நடமாட்டமும் உலகை வியக்க வைக்கிறது. நெருக்கடிகள், அவலங்கள் மக்களை பிணைப்புற வைக்கிறது. போட்டி பொறாமை; ஓட்டமும் நடையுமான வாழ்க்கையில் இருந்து உலகமே ஓய்வு எடுக்கும் போது மதம், போதகர்கள் எதுவும் இன்றி மனிதநேயம் புது வடிவம் பெறுகிறது. அரசியலும் மதமும்,சாதியும், பிரிவினைகளும் இங்கு கோலோச்ச முடிவதில்லை. உண்மையில் மனிதனின் எதிரி எது என்பதை இந்த சூழல் மீண்டும் ஒருமுறை நிரூபித்து விடுகிறது. அதிகாரங்கள், அரசுகள், மத நிறுவனங்கள் இந்த மனித அவலத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுமா என்றால் நிச்சயமாக இல்லை. மக்கள் வாழ்முறையில், இயற்கையை நோக்கிய மக்களின் அணுகுமுறையில், சக மனிதன் பற்றிய கருத்தமைவில் சிறு மாற்றத்தை கொண்டுவருமாக இருந்தால் மட்டுமே இந்த மனித பேரவலத்தில் தமது உயிர்களை இழந்த மக்களுக்கு உலக மக்கள் காட்டும் மரியாதையாக இருக்கும்.

புதிய திசைகள்
23/04/2020

இலங்கையில் மீண்டும் தன்னிறைவுப் பொருளாதாரம்?

கோவிட்-19 உலக அரசியல் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த இருக்கின்றது. இலங்கைளில் மீண்டும் தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கு இது வழிகோலி இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகின்ற தானியங்கள் மரக்கறிகளை குறைப்பதற்கு அரசு முயற்சி எடுத்துள்ளது. இந்த வகையில் 17 தானியங்கள் மரக்கறிகளின் இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டு இருக்கினற்து. மேலும் பரசிட்டமோல் மற்றும் தொற்று மற்றும் தொற்றா நோய்க்கான மருந்துகளின் உங்பத்தியையும் அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கின்றது.

சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களின் பொற்காலமாக கருதப்பட்டது அரசில் ரீதியாக அல்ல பொருளாதார ரீதியில் 1970க்கள். இலங்கையின் தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கைகளால் தமிழ் விவசாயிகள் பெருமளவில் நன்மை அடைந்தனர். அக்காலத்தில் உருவாக்கப்பட்ட விவசாய முயற்சிகளாலேயே வன்னியயை நோக்கி யாழிலிருந்து மக்கள் பெயர்ந்தனர். படித்த வாலிபர் திட்டத்தில் கல்லெறிந்து பிடித்த காணிகளையே கஜேந்திர குமார் பொன்னம்பலம் போன்ற நிலச்சுவந்தர்கள் இன்றும் கிறுக்குப் பிடியில் வைத்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு காணிப்பதிவை கணணி மயப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததும் இதனால் தான். இன்றைன தமிழர் விடுதலைக் கூட்டணியின் சொத்தும் அது தான்.

முடிவெடுக்கத் தெரியாதவர்கள் கையில் அதிகாரம் ஆபத்தானது!

முடிவெடுத்தல் என்பது சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் மிக முக்கியமான அம்சம். துரதிஸ்ட வசமாக சொந்த வாழ்விலும் சரி பொதுவாழ்விலும் சரி முடிவுகள் எடுப்பதில் கவனமும் நேரமும் செலுத்தப்படுவதில்லை. தவறான முடிவுகளுக்கு செலுத்தப்படுகின்ற விலை மிக அதிகமானது பெருமளவு சமயங்களில் ஈடுசெய்ய முடியாதது. முடிவெடுப்பதில் மிக முக்கியமான அம்சம் முடிவெடுக்கப்பட வேண்டிய அம்சம் தொடர்பான நேர்த்தியான தகவல்களைத் திரட்டுவது. இதில் விடப்படுகின்ற தவறுகள் தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் இழப்புகளை ஏற்படுத்தும்.

பிரித்தானியாவும் அமெரிக்காவும் சரியான தகவல்களை குறித்த காலகட்டத்தில் சேகரித்து சரியான முடிவுகளை எடுக்காததால் கொரோனாவில் இருந்து காப்பாற்றப்பட வேண்டிய மக்களை கொரோனாவுக்கு ஆயிரக்கணக்கில் பலி கொடுக்கின்றனர்.

இலங்கையில் 2019 ஈஸ்ரர் ஞாயிறு அன்று யார் குண்டு வைப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் அக்குண்டுகள் எங்கே வைக்கப்பட உள்ளன என்றும் அது யாரால் வைக்கப்பட உள்ளது என்றும் குறிப்பான தகவல்களை வழங்கியும் அப்போதைய மைத்திரி – ரணில் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட்டாட்சி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களைப் பயங்கரவாதிகளின் குண்டுக்குப் பலியாக்கினர்.

1988இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் வட கிழக்கு இணைந்த மாகாண சபையை வழங்கியது. புலிகளுடன் கூத்தடித்த கூட்டமைப்பும் அதனை நிராகரித்தது. 20 வருடங்களுக்குப் பின் எல்லாம் மண் கவ்விய பின் பிரிந்த வடக்கு கிழக்கில் மிச்சம் இருக்கிறதை பிடுங்கிறதுக்கு போட்டி. அதிலும் பத்து ஆண்டுகள் ஓடிவிட்டது. எத்தினை ஆயிரம் உயிர்கள் பலிகொள்ளப்பட்டு விட்டது.

தகவல் ஆயுதம்! தகவல் செல்வம்!! தகவல் அதிகாரம்!!!

மழை பெய்தால் நிலம் நனையும் ….

ஆனால் நிலம் நனைந்திருப்பதால் மழை பெய்தது என்று எழுதுகின்ற சமூகவலைத் தள யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 21ம் நூற்றாண்டை தகவல் தொழில்நுட்ப யுகமாக எதிர்பார்த்தோம். ஆனால் அது தகவல் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கும் என எதிர்பார்க்கவில்லை. தங்போதைய உலகத் தலைவர்களே நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட்டு பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுகின்ற போது இணையத்தள தகவல் காவிகள் / காவாலிகள் அதனை பரப்பிக்கொண்டிருப்பதை எவ்வாறு கட்டுப்படுத்துவது.

தகவலை ஆயுதமாகப் பயன்படுத்தி அதிகாரத்துக்கு வந்து செல்வத்தை திரட்டுபவர்கள் தான் அரசியல்வாதிகளாக இன்று உள்ளனர். டொனாலட் ட்ரம் பொறிஸ் ஜோன்சன் நரேந்திர மோடி …. இந்தப்பட்டியல் மிக நீளமானது.

நாங்கள் தகவல்களைப் பரிமாறுகின்ற போது அது ஏற்படுத்தும் தாக்கங்களை மேம்போக்காக குறித்த நேர சிற்றின்ப பொழுதுபோக்காகச் செய்வது நீண்டகாலத்தில் எவ்வளவு பெரும் தாக்கங்களை ஏற்படுத்தப் போகின்றது என்பது பற்றி கரிசனை கொள்வதில்லை. உண்மையற்ற தகவல்கள் தவறான தகவல்கள் பிழையான தகவல்கள் உண்மையை வலுவிழக்கச் செய்யும் உண்மையை நம்பகமற்றதாக்கும் தவறான முடிவுகளை எடுப்பதற்கு வழிகோலும். அதனால் தகவல்களை அலசி ஆராய்ந்து அதன் நம்பகத் தன்மையை உறதிப்படுத்திய பின் பரிமாறுங்கள்.

டென்மார்க் குளோபல் மெடிகல் எய்ட் உடனான சந்திப்பை முடித்துக் கொண்டு முதலமைச்சர் சந்திரகாந்தன் புறப்பட்டார்.

CM_East_Mathi_K_and_GMA_Hansடென்மார்க்கை தளமாகக் கொண்டு இயங்கும் குளோபல் மெடிக்கல் எய்ட் உடனான சந்திப்புக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்த்திரகாந்தன் மற்றும் அவருடைய செயலாளர் அசாட் மெளலானா ஆகியோர் வந்திருந்தனர். எதியோப்பியாவில் இடம்பெற்ற மாநாட்டுக்குச் சென்றிருந்த முதலமைச்சர் சந்திரகாந்தன் ஐரோப்பிய பயணத்தையும் மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் சந்திரகாந்தன் டென்மார்க் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (Dec 23, 2010) ஹோபன்ஹேகனில் இருந்து  புறப்பட்டார்.

குளோபல் மெடிகல் எய்ட் லிற்றில் எய்ட் உடன் இணைந்து மூன்று மில்லியன் டொலர்களுக்கு அதிகமான மருந்துப் பொருட்களை வடக்கு கிழக்குப் பகுதிகளில் இருந்த மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைத்தது. மேலும் இவ்விநியோகமும் பின்பற்றப்பட்ட நடைமுறைகளும் சர்வதேச தரத்தில் இருந்ததால் தொடர்ந்தும் மருந்துப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப குளோபல் மெடிகல் எய்ட் முன்வந்தது. மருந்துப் பொருட்களின் விநியோகத்தை கிழக்கு மாகாண சபையின் ஆதரவுடனும் அரசாங்கத்தின் உதவியுடனும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வினியோகிப்பதற்கு குளோபல் மெடிகல் எய்ட் தீர்மானித்தது.

குளோபல் மெடிக்கல் ஊடாக பெறப்படும் மருந்துப் பொருட்கள் வடக்கு, கிழக்கில் 30 வருடங்களாக கடுமையான யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களின் சுகாதார மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படும்.

CM_East_with_Sec_Azad_and_GMA_Hansஇந்த மருந்துப் பொருட்களை இலங்கையில் பொறுப்பேற்று கிழக்கு மாகாணத்தில் விநியோகத்தை மேற்கொள்வது தொடர்பான உடன்பாட்டை மேற்கொள்ளவே முதலமைச்சர் சந்திரகாந்தனும் அவரது செயலாளரும் டிசம்பர் 22ந் திகதி டென்மார்க் வந்திருந்தனர். மேற்படி விடயங்களை நிறைவுசெய்த பின்னர் அவரது டென்மார்க்கிலுள்ள ஆதரவாளர்களை சந்தித்த அமைச்சர் கிழக்கு மாகாணத்தின் சம கால அரசியல்நிலை தொடர்பாகவும், கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் அவர்களினது ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டு  தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு  சுவிஸ் புறப்பட்டு சென்றனர்.

முதலமைச்சர் சந்திரகாந்தன் டென்மார்க் வருவது வெளிவந்ததும் அவர்மீது மனித உரிமை மீறல் வழக்குகளைப் பதிவு செய்யப் போவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் எச்சரித்தன. மேலும் முதலமைச்சர் சந்திரகாந்தனை தாக்குவதற்கும் திட்டமிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.