கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

பொருளாதார நெருக்கடி குறித்து உலக வங்கி தலைவர் எச்சரிக்கை – உலக வங்கி தலைவர்

roberzoellick.jpg உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் இந்நிலையில், வறிய நாடுகளில் சமுதாயத்திற்காக செலவிடப்படும் தொகைகள் பாதிக்கப்படக்கூடாது என உலக வங்கியின் தலைவர் ராபர்ட் சோலிக் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் நிதி மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சகர்களின் மாநாட்டில் பேசிய அவர், செல்வந்த நாடுகளின் பொருளாதார நெருக்கடியில் கவனத்தை செலுத்துவதை விட்டு, அது வறுமையை எவ்வாறு பாதிக்கும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, சுகாதாரம், கல்வி மற்றும் உணவு போன்றவற்றுக்கு செலவிட வேண்டிய தொகையை முன்பு குறைத்த தவறை மீண்டும் செய்ய கூடாது என அவர் குறிப்பிட்டார்.

பர்மா மீதான ஐரோப்பிய தண்டனைத் தடைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன

ஆங்சான் சூச்சிக்கு ஆதரவாக பர்மியர்களும் சர்வதேச சமூகத்தினரும் குரல்கொடுத்துவருகின்றனர் பர்மாவுக்கு எதிரான தண்டனைத் தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் மேலும் ஒரு ஆண்டு நீடித்திருக்கிறது.

பர்மாவில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் எதிர்கட்சித் தலைவி ஆங்க் சான் சூச்சி உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் கோரியுள்ளனர்.

2006ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருக்கும் இந்த தடைகளை, ஜனநாயகம் தொடர்பில் பர்மாவின் ராணுவ அரசாங்கம் முன்னேற்றத்தை காட்டினால், இந்த தடைகள் தொடர்பில் தாங்கள் மீள்பரிசீலனை செய்யத்தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நடைமுறையில் உள்ள தடைகளின்படி, பர்மாவின் மூத்த அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணம் செய்வதற்கும், பர்மாவுக்கு ஆயுதங்கள் அளிப்பதற்கும், பர்மாவின் தேக்கு, கனிமப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த ஆபரண கற்கள் ஆகியவற்றை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பன்றிக் காய்ச்சல்: சர்வதேச கவலைகள் அதிகரித்துவருகின்றன

mexico_flu_.jpgபன்றிக் காய்ச்சல் மெக்ஸிகோவிலிருந்து மற்ற நாடுகளுக்கு வேகமாக பரவிவருகிறது

மெக்ஸிகோவில் பெருமளவில் பரவியுள்ள பன்றிக் காய்ச்சலின் காரணமாக நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியானது குறித்த சர்வதேச கவலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்தத் தொற்றின் மூலம் ஐரோபபாவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.  மெக்ஸிகோ நாட்டிலிருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்த ஒரு ஆடவருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளதாக ஸ்பெயின் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாட்டில் பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் இந்தத் தொற்று பரவியுள்ள பகுதிகளுக்கு பயணிகள் செல்ல வேண்டாம் என தனிப்பட்ட முறையில் தான் அறிவுறுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார ஆணையர் ஆண்ட்ரௌலா வாஸிலோவ் கூறியுள்ளார்.

இது ஒரு அறிவுரை மட்டுமேயன்றி பயணத்தடை அல்ல என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார். இந்தத் தொற்று கவலையளிக்கக் கூடிய ஒரு விடயம் என்றாலும் இதன் காரணமாக கலக்கமடைய வேண்டியதில்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளளார்.

வன்னி மோதல் பகுதியிலிருந்து தமிழகத்திற்கு இலங்கை அகதிகள்

mullaitheevu.jpgஇலங் கையின் மோதல் வலயத்திலிருந்து தமிழ் அகதிகள் தமிழ்நாட்டுக்கு வருகைதர ஆரம்பித்திருப்பதாக “ரைம்ஸ் ஒவ் இன்டியா’ பத்திரிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இந்த அகதிகளை முகாம்களுக்கு அனுமதிக்க முன்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாக தமிழகப் பொலிஸார் தெரிவித்தனர். தினமும் சராசரியாக மூன்று, நான்கு அகதிகள் தமிழக கரையில் படகு மூலம் வந்து இறங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் அநேகமானோர் மோதல் வலயத்திலிருந்தே வருகின்றனர். ஆனால் காயமடைந்தவர்கள் எவரும் இதுவரை வரவில்லை. 45 – 50 வயதிற்கு இடைப்பட்டவர்களும் 14 வயதிற்கு குறைவான சிறுவர்களுமே வந்துள்ளனர். நாகபட்டினம் பகுதியிலேயே தற்போது அதிகமானோர் வந்திறங்குகின்றனர் என்று சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அகதிகளென்ற போர்வையில் புலி உறுப்பினர்கள் ஊடுருவுவதை தடுக்க தமிழக கரையோர நிர்வாகம் அதிக விழிப்புடன் இருப்பதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு வரும் ஒவ்வொரு அகதியையும் புலனாய்வுப்பிரிவினர் விசாரணை செய்கின்றனர். அந்த அகதிகள் கூறுவது துன்பங்கள் , மரணங்கள் பற்றியதாகவே உள்ளது. சண்டையில் ஏற்படும் துன்பங்களுக்கு அப்பால் அத்தியாவசியப் பொருட்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. உணவோ குடிக்க நீரோ இல்லை என்று அவர்கள் கூறுவதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் தப்பிச் செல்வதைத் தடுக்க இந்தியக் கடற்பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு – இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல்

india.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் தப்பியோடலாம் என்று அந்நாட்டின் உளவுத்துறை வழங்கிய தகவலையடுத்து தமிழ் நாட்டின் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
பிரபாகரன் பாக்கு நீரினையூடாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்லலாம் என்ற தகவலையடுத்து சென்னையிலிருந்து இராமேஸ்வரம் வரையான 650 கிலோ மீற்றர் நீளமுடைய கடற்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கரையோர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக பொலிஸ் அத்தியட்சகர் முகுன் கொட்னிஷ் தலைமையிலான விரைந்து செயற்படும் அதிரடிப் படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இக்கப்பல்கள் சென்னையின் தெற்கில் 300 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள நாகபட்டினம் கரையோர பகுதியிலும் சென்னையில் வலப்பக்கமாக 300 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள ராமேஸ்வரம் கரையோர பகுதியிலும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் இந்தியப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 

அதிகாலையில் திடீர் உண்ணாவிரதம்: தாக்குதல் நிறுத்துவதாக இலங்கை அறிவிப்பாம்?- உண்ணாவிரதத்தை பகலில் முடித்துக் கொண்டார் கருணாநிதி- ஏகாந்தி

27-karuna-fast.jpgஇலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் எற்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.கருணாநிதி கால வரையறையற்ற உண்ணாநிலை போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளார்.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இன்னொரு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையினால் உயிர் நீத்ததாக வரலாறு என்னை பற்றி பேசட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்ச் சகோதரர்களுக்காக தாம் இந்தத் தியாகத்தை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், தமிழர் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் எனவும் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் உடனடியாக தாக்குதலை நிறுத்துவதாக மத்திய அரசிடம் அந்நாடு உறுதிமொழி தந்துள்ளதாம். இதையடுத்து தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முதல்வர் கருணாநிதி முடித்துக் கொண்டார் என இந்திய இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன.

கருணாநிதியின் உண்ணாவிரதத்தையடுத்து இலங்கை அரசிடம் மிகக் கடுமையான பேச்சுவார்த்தையை மத்திய அரசு தொடங்கியதாகவும். போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என நெருக்குதல் தந்ததாகவும். இதையடுத்து இலங்கை பாதுகாப்பு கவுன்சில் கூடி விவாதம் நடத்தி, போரை உடனடியாக நிறுத்துவதாக மத்திய அரசுக்கு உறுதிமொழி தந்ததாகவும் இந்திய இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன.

இத் தகவலை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தொலைபேசி மூலம் முதல்வர் கருணாநிதியிடம் தந்ததையடுத்து தனது முதல்வர் உண்ணாவிரதத்தை நிறுத்துவதாக அறிவித்தார். முன்னதாக இலங்கையில் நிபந்தனையற்ற போர் நிறுத்தம் கோரி அண்ணா சமாதி அருகே இன்று காலை 5 மணிக்கு திடீர் உண்ணாவிரதம் தொடங்கினார்.

வழக்கம்போல் இன்று காலை 4.45 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் வழக்கமான யோகா பயிற்சிக்காக அண்ணா அறிவாலயம் செல்வதாக வீட்டினர் நினைத்திருக்க, காரை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு செலுத்துமாறு கருணாநிதி உத்தரவிட்டார்.

அங்கு சென்றதும் அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு திடீரென ஒரு நிழற் குடையின் கீழ் தனது வீல் சேரிலேயே அமர்ந்து உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு அதிகாரிகளும் உதவியாளர்களும் முதல்வரின் வீட்டினருக்குத் தகவல் தரவே அவர்கள் விரைந்து வந்தனர். அவரது மருத்துவர் கோபாலும் விரைந்து வந்தார்.

டாக்டர்கள் கருணாநிதியின் உடல்நிலையை பரிசோதித்து காலையில் சாப்பிடும் மாத்திரையை சாப்பிடுமாறு கோரினர். ஆனால்,  கருணாநிதி அதை சாப்பிட மறுத்து விட்டார். இதையடுத்து மூத்த அமைச்சர்களுக்கு தகவல் தரப்பட்டு அவர்களும் ஓடி வந்தனர். உண்ணாவிரதம் இருக்க வசதியாக ஏற்பாடுகளை செய்தனர், பந்தல் அமைத்ததோடு, அருகில் கட்டிலும் போடப்பட்டது.

இதற்கிடையே முதல்வர் உண்ணாவிரதத்தை அறிந்து ஏராளமான திமுக தொண்டர்கள் அண்ணா நினைவிடம் முன் குவிந்தனர். இதையடுத்து தொண்டர்கள் அமர பந்தல் மற்றும் நாற்காலிகள் போடப்பட்டன. கருணாநிதியி்ன் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஆகியோரும் உடன் அமர்ந்தனர்.

காலை 9.15 மணிக்கு இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம் தலைமையிலான டாக்டர்கள் குழு கருணாநிதியின் உடல்நிலையை பரிசோதித்து அவரை படுக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து படுத்தபடி அவர் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வந்தார்.

உண்ணாவிரதம் நடக்குமிடத்தில் மத்திய அமைச்சர் பாலு, அமைச்சர் ஆற்காடு வீராசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் இருந்தனர்.

இந் நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மத்திய அமைச்சர் வாசன், முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், குமரி அனந்தன் உள்பட ஏராளமானோர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் மத தலைவர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சிலர் உண்ணாவிரத்ததை கைவிடவும் கோரினர். ஆனால், அதை ஏற்க கருணாநிதி மறுத்துவிட்டார்.

உண்ணாவிரதம் இருந்து வரும் முதல்வர் கருணாநிதியை, நடிகர்கள் சத்யராஜ், ராதாரவி ஆகியோர் சந்தித்து, உடல் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதேபோல நடிகை விஜயகுமாரியும் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

இந் நிலையில் போரை நிறுத்துவதாக மத்திய அரசிடம் இலங்கை உறுதி மொழி தந்துள்ளதாகவும், இனி ராணுவத்தை தாக்குதலுக்கு பயன்படுத்த மாட்டோம், மறுசீரமைப்புக்கும் மற்றும் மக்களை இடம் அமர்த்துவதற்கும் மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் மத்திய அரசிடம் இலங்கை உறுதியளித்துள்ளதாக ப.சிதம்பரம், முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்தார்.இதையடுத்து பகல் 12.30 மணியளவி்ல் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக கருணாநிதி அறிவித்தார்.

உண்ணாவிரதம் உச்சகட்ட நாடகம்: வைகோ

முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதப் போராட்டம் உச்சகட்ட நாடகம் என்று மதிமுக ‌பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஊட்டி அருகே கூடலூரில் ‌செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் கருணாநிதி இதுவரை நடத்திய நாடகங்களில் இந்த உண்ணாவிரதம் தான் உச்சகட்ட நாடகம். கருணாநிதி அவரது குடும்பத்துக்காக காங்கிரசு‌டன் சேர்ந்து தமிழினத்திற்கு துரோகம் இழைத்து விட்டார். போரை நிறுத்த வேண்டும் என இலங்கை அரசுக்கு மத்திய அரசு ஏதாவது உத்தரவு அனுப்பியதற்கான ஆதாரம் ஒன்றை காட்டினாலும், நான் தீவிர அரசியலில் இருந்து விலகி விடுகிறேன்.

கடந்த 5 ஆண்டு காலமாக இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி அளித்து வருகிறது. அதைத் தடுக்க கருணாநிதி என்ன செய்தார். இப்போது ஏன் இந்த திடீர் உண்ணாவிரதம்?.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழக மக்களை உலுக்கிப் போட்டுள்ளது. இதன் காரணமாக திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழகத்தில் மிகப் பெரிய அடி விழும், படு தோல்வியைச் சந்திப்பார்கள்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், திமுக அரசும் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டனர், காக்கத் தவறி விட்டனர் என்ற உணர்வு தமிழக மக்கள் மனதில் விஸ்வரூபம் எடுத்து வியாபித்துள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்கும்.

கடந்த ஆறு மாதங்களாக இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் பெருத்த அமைதி காத்து வருகின்றனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக 14 பேர் இதுவரை உயிர் நீத்தும் கூட அவர்களது மவுனம் கலையவில்லை.

சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்திற்கு எதிராக பிரசாரம் செய்த 50 மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது என்றார் வைகோ.

கனரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாமென இராணுவத்திற்கு அரசு உத்தரவு

கனரக ஆயுதங்கள் மற்றும் விமானங்களை மோதல் களங்களில் பயன்படுத்த வேண்டாமென அரசாங்கம் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது.  மோதல் இடம்பெறும் பகுதிகளில் கனரக அயுதங்கள் பயன்படுத்தப்படின் பொதுமக்களிர்கு உயிர்ச்சேதங்கள் அதிகளவில் ஏற்படும் என்பதால் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில்,” இராணுவ நடவடிக்கைகள் முடியும் தறுவாயில் உள்ளன. பொதுமக்களிற்கு உயிர் சேதங்கள் ஏற்படுத்தும் கனரக துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான் தாக்குதல் ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாமென எனது பாதுகாப்பு படையினரிற்கு அறிவுறுத்தியுல்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைச் சிறார்கள் உட்பட 52 புலி உறுப்பினர்கள் சரண் – பாதுகாப்பு அமைச்சு

Wanni_War_Welfare_Campபடையினரால் கைப்பற்றப்பட்ட பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட வலைஞர்மடம் பகுதியில் வைத்து பாடசாலைச் சிறார்கள் உட்பட 52 புலி உறுப்பினர்கள் நேற்று இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதுபற்றி அமைச்சு மேலும் குறிப்பிடுகையில், சரணடைந்தவர்களுள் யுத்தப் பயிற்சி பெற்றுள்ள 13 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 23 பேர் அடங்கியுள்ளனர். இதுதவிர புலிகளால் அண்மையில் தமது சிறுவர் படைக்கு பலவந்தமாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட 29 சிறுவர்களும் இக்குழுவில் காணப்படுகின்றனர்.

இராணுவத்தினர் தம்மைப் பயங்கரவாதப் பிடியிலிருந்து காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையிலேயே தாங்கள் சரணடைந்ததாகவும்,  தமது பெற்றோரைத் தேடித் தருமாறும் சரணடைந்த புலி உறுப்பினர்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் கேட்டுள்ளனர். தம்மைப்போல இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு புலிப்பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள நுற்றுக்கணக்கானோர் விருப்பம்கொண்டுள்ளதாகவும் சரணடைந்தோர் மேலும் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் உள்ள புலிகளின் இறுதி பதுங்கிடமான வெள்ள முள்ளிவாய்க்கலிலிருந்து சுமார் 6 கிலோ மீற்றர் தொலைவிலேயே வலைஞர்மடம் அமைந்துள்ளது. இராணுவத்தின் 58ஆம் படைப் பிரிவினரே இப்பிரதேசத்தை நேற்று முன்தினம் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தனர். வலைஞர்மடம் பிரதேசம் கைப்பற்றப்பட்டதும் அங்கு தமது நிலைகளைப் பலப்படுத்திய படையினர் அன்றைய தினமே அங்கிருந்த 500 சிவிலியன்களை உடனடியாக விடுவித்தனர் என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

எனது தந்தையின் படுகொலையால் நான் கொதிப்படைந்தேன் – பிரியங்கா

23-priyanka.jpgஎனது தந்தை ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு சில வருடங்கள் வரையில் நான் மிகவும் கொதிப்புடன் இருந்தேன் என்று கூறியுள்ளார் பிரியங்கா காந்தி. இதுதொடர்பாக என்டிடிவிக்கு அவர் அளி்த்துள்ள பேட்டி..

எனது தந்தை கொல்லப்பட்டபோது அதன் பாதிப்பு எனக்குப் புரியவில்லை. ஆனால் அப்போது நான் கோபமடைந்தேன். அந்தக் கோபம் என்னிடம் சில ஆண்டுகள் வரை இருந்தது. நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் கூட கோபமாகவே இருந்தது. நான் இளம் வயதினளாக அப்போது இருந்ததால் அந்தக் கோபம் இருந்திருக்கலாம் என நினைக்கிறன். ஆனால் படிப்படியாக என்னை நான் பக்குவப்படுத்திக் கொண்டேன். கோபமும் படிப்படியாக குறைந்து போனது.

தமிழ் மக்கள் புத்திசாலிகள், கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். அது என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. தமிழ் தேசியவாதத்தை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அதற்கான முறை தவறு. ஒரு மனிதராக, இன்னொருவரை கொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனது பாட்டியும், தந்தையும் அரசியல் காரணங்களால் கொல்லப்பட்டனர். அதேபோல எனது தாயும் கொல்லப்படுவாரோ என்று நான் 2004ம் ஆண்டு பயந்தேன்.

அந்த ஆண்டில் நான் அவருடைய அலுவலகத்திற்குப் போனபோது அவரைச் சுற்றிலும் இருந்தவர்கள், பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என வலியுறுத்திக் கொண்டிருந்தேன். அதே வேகத்தில், எனது சகோதரரின் அறைக்குள் புகுந்து, இவரும் கொல்லப்படப் போகிறார் என்று ஆதங்கத்துடன் கூறினேன். இப்போது நான் நிம்மதியாக இருக்கிறேன். எனது தாயாரைப் பற்றியோ, சகோதரரின் பாதுகாப்பு பற்றியோ தினசரி நான் கவலைப்படத் தேவையில்லை என்றார் பிரியங்கா.

வெள்ளமுள்ளி வாய்க்கால் கடற்பரப்பில் இரு தரப்பினருக்கிடையில் கடும் மோதல் கடற்புலிகளின் 3 படகுகள் அழிப்பு; 12 பேர் பலி

navy.jpgமுல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் கடற்புலிகளுக்கும் கடற்படையினருக்கும் இடையில் நேற்று அதிகாலை ஒருமணியளவில் கடும் சமர் இடம்பெற்றது எனப் படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்தன. முள்ளிவாய்க்கால் கடற்பகுதியூடாக புலிகளின் படகுகள் வருவதை அவதானித்த கடற்படையினர் நடத்திய தாக்குதல் சில மணிநேரம் நீடித்திருந்தது என்றும் படைத் தரப்பில் கூறப்பட்டது.இத்தாக்குலில் கடற்புலிகளின் மூன்று படகுகள் அழிக்கப்பட்டன. அதிலிருந்த கடற்புலிகள் 12 பேர் உயிரிழந்தனர் என்றும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்தன.

எனினும் இந்த மோதல்களில் கடற்படையினருக்கு ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் நேற்று இரவு வரை வெளியிடப்படவில்லை

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் சுமார் 15,000 மக்களே இருக்கிறார்கள் – கோட்டாபய ராஜபக்ஷ

gotabhaya.jpgசர்வதேச சமூகம் தமது அரசிடம் போர் நிறுத்தம் தொடர்பான அழுத்தங்களை கொடுப்பதை விட்டு, விடுதலைப் புலிகளை சரணடையச் சொல்லுமாறு செய்ய வேண்டும் என்றும் கூறிய கோட்டாபய ராஜபக்ஷ இது தொடர்பில் சர்வதேச சமூகம் இரட்டை நிலையை கையாள்வதாகவும் குற்றம் சாட்டினார்.

ஒரு பயங்கரவாத அமைப்பை எதிர்த்து போராடி வரும் தமது அரசு அவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடாது என்பதனை தெளிவு படுத்திய கோட்டாபய ராஜபக்ஷ, வடக்கே போர் நடக்கும் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கான உணவு மற்றும் இதர நிவாரணப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கையை தாம் தடுக்கவில்லை என்றும், மாறாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் உலக உணவுத் திட்டத்தினருக்கு அவ்வாறான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொடர்ந்து வேண்டியுள்ளதாகவும் கூறுகிறார்.

இன்னமும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் சுமார் 15,000 மக்களே இருக்கிறார்கள் என்றும், முல்லைத்தீவு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் தெரிவித்த 1,65,000 எனும் கணக்கீடு தவறானது என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளவை பொய் என்றும் அவர் கூறுகிறார்.

இதனிடையே, இலங்கைக்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின், மனிதாபிமான பணிகளுக்கான துணைத் தலைமைச் செயலர் ஜான் ஹோல்ம்ஸ் அவர்கள் வவுனியாப் பகுதிக்கு சென்று அங்கு தங்கியுள்ள இடம் பெயர்ந்த மக்களை சந்திப்பதற்கான ஒழுங்குகளை செய்து கொடுத்துள்ளதாகவும் கோட்டபைய ராஜபக்ஷ  தெரிவித்தார்.