ஞாயிறு 23/10/2021 யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் லண்டன் ஹரோவில் மாலை மூன்று மணிக்கு கூடுகின்றனர். இந்தச் சந்திப்பில் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் மட்டுமல்ல ஏனைய கல்லூரிகளின் பழைய மாணவர்களும் மதுவுக்கும் போதைவஸ்துக்கும் அடிமையான தங்கள் நண்பர்களை மீட்பதற்கான கூட்டுத் திட்டம் ஒன்றை முன் வைக்க வேண்டும். இந்தப் பழைய மாணவர்களின் குடியும் போதைப் பொருள் பாவனையும் நூற்றுக்கணக்கான குடும்பங்களைச் சீரழித்து வருகின்றது. இதனால் மற்றுமொரு தலைமுறைச் சிறார்கள் மோசமான பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இந்த பழைய மாணவர் சங்கங்கள் தலையீடுகள் மற்றும் இவர்களின் நிதி உதவியில் யாழ்ப்பாணத்தினதோ வடக்கினதோ கல்விநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இலங்கையில் கல்வியில் பின் தங்கிய மாகாணமாகவோ மாவட்டமாகவும் தமிழ் பிரதேசங்களே உள்ளன. இந்த பழைய மாணவர் சங்கங்கள் பாடசாலை அதிபர்களை சோம்பேறிகளாகவும் அவர்களை மோசடி செய்யத் தூண்டுபவர்களாகவுமே உள்ளனர். இந்த பழைய மாணவர்கள் ஊருக்குப் போகும் போது கிலுகிலுப்பு காட்டி வருவதைவிட அங்கு பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை. இவ்வாறான அரசு செய்ய வேண்டிய வேலைகளை பழைய மாணவர் சங்கங்கள் செய்ய வேண்டிய தேவையில்லை என முன்னாள் கல்விச்செயலாளர் ரவீந்திரன் லண்டன் வந்திருந்த போது மிகத் தெளிவாகவே சுட்டிக்காட்டி இருந்தார்.
இன்று யாழ் இந்துவின் மைந்தர்கள் மட்டுமல்ல மானிப்பாய் இந்துக் கல்லூரி, சென்ஜோன்ஸ், சென்ரல் கொலீஜ், மகாஜனாக் கொலீஜ் என்று பழைய மாணவர் சங்கம் நடத்துபவர்கள் இங்குள்ள தங்கள் உறுப்பினர்களுக்கு ‘டிரொக்ஸ் புரோகிராம்’ செய்ய வேண்டும். மேற்குறிப்பிட்ட பாடசாலைகளைச் சேர்ந்த பல பழைய மாணவர்கள் மதுவுக்கும் போதைப் பொருட்களுக்கும் அடிமையாகி பல பெண்களின் வாழ்வைச் சீரழிக்கின்றனர். இவர்கள் மதுவுக்கும் போதைப் பொருட்களுக்கும் அடிமையானதால் இவர்களின் பிள்ளைகளின் வாழ்வும் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றது. இந்த இந்துக் கல்லூரிகளினதும் கிறிஸ்தவ கல்லூரிகளினதும் மைந்தர்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு டிரொக்ஸ் புரோகிராம் ஒன்றை முன்வைத்து செயற்பட்டால் அழிந்துகொண்டிருக்கின்ற பலரின் வாழ்வைச் சீர்செய்ய முடியும். கோட்டும் ரையும் கட்டி கனவான்களாக வலம் வருவதைவிட்டுவிட்டு முதலில் எம் பெண்கள் சமூகத்தை, குழந்தைகளை இந்த குடிக்கு அடிமையானவர்களிடம் இருந்து காக்க முயற்சிக்கவும்.
கற்க கசடறக் கற்ககற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக!
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!
அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 09 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.
பாகம் 09
தேசம்: 83 ஜூலை முதலான சம்பவங்கள் பற்றித்தான் கதைத்துக் கொண்டு இருக்கின்றோம். அதுலயும், உங்களுடைய குடும்ப விஷயங்கள் பற்றிக் கூடுதலாக கதைத்தோம். அதில் ஒரு விஷயம், உங்களுடைய சகோதரர் பற்றியது. பொதுவாக எங்களுடைய தமிழ்ச் சூழலில் தற்கொலைகள் சம்பந்தமான விடயங்கள் இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கிறது. இதே மாதிரி ஒரு அனுபவம் உங்களுடைய குடும்பத்திலும் ஏற்பட்டிருக்கு. கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான் இருந்தாலும், அதைப்பற்றி ஒருக்கா கதைக்க முடியுமா? ஏனென்றால், தமிழ்ச்சூழலில் இது பொதுவான விஷயமா காணப்படுது. ஏன் அது அப்படி? உங்களுடைய சகோதரனுடைய அனுபவத்தை நீங்கள் முதல் சொல்லுங்கள்
அசோக்: எனக்கு அவர் மூன்றாவது சகோதரர். பெயர் தியாகராஜா. அவர்தான் பெரியாரிஸ்ட்டாக இருந்தவர். ஒரு முற்போக்கான சிந்தனை உள்ள ஒருத்தர்.
தேசம்: சொல்லப்போனால் நீங்கள் அரசியலுக்குள் வாறத்துக்கு அவர் ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கிறார்.
அசோக்: அவர் அந்த நேரத்திலேயே இந்த கையெழுத்துப் பிரதிகள், பத்திரிகைகள் எல்லாம் வெளியிட்டுக்கொண்டிருந்தவர், அவரும் நண்பர்களும் சேர்ந்து.
தேசம்: அது ஒரு முக்கியமான காலகட்டம் என்று நினைக்கிறேன். கூடுதலாக அந்த நேரம் கையெழுத்து பிரதிகள் இருந்திருக்கு. உங்க குடும்பத்தில நிறைய பேர் இலக்கிய ஆர்வம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்…
அசோக்: ஓம் மூத்த அண்ணா கூட ‘உதயதாரகை’ என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார். தியாகராஜா அண்ணா வெளியிட்ட அந்த கையெழுத்து சஞ்சிகை பெரியார் திராவிட இயக்க கோட்பாட்டோடதான் வந்தது. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு அந்த சம்பவம். அட்வான்ஸ் லெவல் எழுதிக் கொண்டிருந்தவர் . அட்வான்ஸ் லெவலில் பெயில் என்று சொல்லித்தான் தற்கொலை செய்தார் என்று கதைத்து கொண்டாங்க. அட்வான்ஸ் லெவல் பெயில் என்று ஆளுக்கு ஒரு தாக்கம் இருந்திருக்கு போல. ஆனால், வெளியில் காட்டிக்கொள்ளவே இல்லை.
அன்றைக்கு பாண்டிருப்பு திரௌபதி அம்மன் கோவில் திருவிழா. அதற்கு போறதுக்கான முயற்சியில அம்மாக்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த டைம்ல இவர், எங்கட வீட்டு வளவு 4 ஏக்கர் பெரிய காணி. வீடு ஒரு பக்கம் இருக்கும் . இவர் தனிய தங்களுக்கான காரியாலயம் ஒன்றை உருவாக்கி அங்கேதான் படிப்பது , நித்திரை கொள்வது எல்லாம். சாப்பிட மட்டும் தான் வருவார். அதுக்குள்ளதான் பிரண்ட்ஸ் வாரது கதைக்கிறது. கையெழுத்து சஞ்சிகை வெளியிடுவதெல்லாம் அங்கேதான். அப்ப இவரை கூப்பிட்டு சாப்பாடு கொடுப்பதற்காக வீட்டிலிருந்த ஒரு ஆளை அனுப்பி இருக்காங்க… அங்க போனா ஆள் வந்து சம்பவத்தை சொல்லி இருக்கிறார்.
எங்கட வீட்ட துப்பாக்கி இருந்தது. விவசாயம் சம்பந்தப்பட்ட ஆட்கள் என்றபடியால், எங்களுக்கு லைசன்ஸ் துப்பாக்கி இருந்தது. அதைக் கொண்டுபோய் அவர் என்ன செய்தவர் என்று கேட்டால், அதை படுக்கிற ஃபெட்டின் மேல், வீட்டு முகட்டு கூறையில் கயிற்றில் கட்டி தொங்க விட்டு, நெஞ்சில் துப்பாக்கியின் குழாயை வைத்து, காலால டிக்கரை அமத்தியிருக்கிறார். ஸ்பாட்டிலேயே ஆள் போயிருப்பார் என்று நினைக்கிறேன். பிறகு பார்த்தால், உடனடியாக திடீர் முடிவுகளினால் நடந்த தற்கொலை அல்ல இது என தெரியவந்திருக்கின்றது. ஏனென்றால், கடிதங்கள் எல்லாம் எழுதி வைத்திருக்கிறார். போலீஸ் அதிகாரிக்கு ஒரு கடிதம், அடுத்தது மரண விசாரணை அதிகாரிக்கு ஒரு கடிதம், அடுத்து, வள்ளி அக்காவுக்கு கலியாணம் ஆகி மகன் பிறந்தால் அவருக்கு அவர் வாசிக்க ஒரு கடிதம். அது தமிழில். மற்ற இரண்டும் ஆங்கிலத்தில்.
தேசம்: அப்ப அந்த நேரமே அவருக்கு ஆங்கில தேர்ச்சி இருந்திருக்கிறது?
அசோக்: ஓம் பெரிய கெட்டிக்காற ஆள் என்று வீட்டில் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறன்.
தேசம்: அந்த நேரம் ஆங்கிலத்தில் தான் படிச்சவரோ…
அசோக்: ஆங்கிலத்தில அந்த நேரம் படிக்கக் கூடிய சாத்தியம் எனக்கு தெரியல.
வீட்டில யாரும் எதிர்பார்க்கல்ல . ஏனென்றால் அவ்வாறான மனநிலையை எங்கேயும் அவர் காட்டிக்கொள்ளவில்லை. சோகமாகவோ, விரக்தியாகவோ இருந்தில்லை. தற்கொலைக்கான காரணம் எதுவுமே தெரியல. அது அப்பா, அம்மா, வீட்டுக்காரர் எல்லாருக்கும் பெரிய தாக்கமா இருந்தது.
தேசம்: அந்த இழப்பு தான் உங்களுக்கு குடும்பத்தில் முதலாவது இழப்பு?
அசோக்: ஓம் முதலாவது இழப்பு. அடுத்தது நிறைய ப்ரண்ட்ஸ் அவருக்கு. எக்கச்சக்கமான ஃப்ரெண்ட்ஷிப் இருந்தது. எல்லாருக்கும் பெரிய அதிர்ச்சி. ஏனென்றால், யாருமே எதிர்பார்க்கவில்லை இப்படியொரு தற்கொலையை.
நீண்ட காலம் இது, எங்க வீட்டில தாக்கத்தை கொடுத்திருக்கிறது.
தேசம்: இன்றைக்கும் தற்கொலைகள் நடந்துகொண்டிருக்குது. பாரம்பரியத்தோடு ஜெனட்டிக்கோட தொடர்புபட்ட விடயமா என்று தெரியவில்லை. ஒரு காலகட்டத்தில் ஜப்பான் தற்கொலைகள் நடப்பதில் கூடிய நாடு. அதுமாதிரி தமிழர்கள் மத்தியிலும் தற்கொலைகள் அதிகமாக இருக்கிறது. என்ன பின்னணி என்பதே தெரியவில்லை. இது ஒரு மன வருத்தத்துக்குரிய விஷயம் தான். இதே போக்குகள் தான் ஒரு காலகட்டத்தில் பரீட்சையில் சித்தி அடையாதவர்கள் அல்லது பரீட்சையில் தோல்வியடைந்தவர்கள், இயக்கங்களில் போய் சேருகின்ற முறையும். அதை நீங்கள் அறியக்கூடியதாக இருந்ததா?
அசோக்: தற்கொலைகளுக்கு பல்வேறு மன அழுத்தம், உளவியல் உயிரியல், சார்ந்த மற்ற சமூக புறநிலைக் காரணிகளும் காரணங்களாக இருக்கலாம். குடும்பத்தில் தொடர்ச்சியாக தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள் நடந்தா நீங்க சொல்வதுபோல் ஜெனட்டிக் தொடர்பான காரணங்களும் இருக்கக்கூடும். ஆனால், அனேகமான தற்கொலைகள் உடனடி உணர்ச்சிகளால், கோபங்களால்தான், திடீர் முடிவுகளினால்தான் ஏற்படுகின்றன. திட்டமிட்ட, நீண்டகாலம் திட்டமிட்ட தற்கொலைகள் மிகக் குறைவு.
திட்டமிட்ட தற்கொலையை தடுப்பது சுலபம் தற்கொலை செய்வதற்கான எண்ணங்கள் அறிகுறிகள் தெரியவரும்போது அவங்களோட மனம் விட்டு கதைக்கனும். எனக்கு இந்த அனுபவம் இருக்கு. என் நண்பர் ஒருவரை காப்பாற்றி இருக்கிறன்.
விவசாயக் கிராமங்களில் தற்கொலை அதிகம் இடம்பெறுவதற்கான காரணம் என்னவென்று கேட்டால் பிரச்சனை என்று வந்தால் வீட்டில், தோட்டத்தில் பயிர்களுக்கு பயன்படுத்தும் நச்சு மருந்து இருக்கும். குடும்பத்தோட சண்டைபோட்டு என்ன செய்வாங்க என்றால், நச்சு மருந்தையோ, அரலிக்காயையோ சாப்பிட்டுவிடுவாங்க.
உடனடியாக பக்கத்திலேயே தற்கொலை செய்வதற்கான பொருட்கள் இல்லையென்றால் தற்கொலை முயற்சிக்க மாட்டார்கள்.
தேசம்: நீங்கள் சொல்வது சரி. ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபனம் ஒன்று விவசாய மருந்துகளை வீடுகளில் வைப்பதற்கு, விவசாயிகளின் இறக்குமதிக்கு தடை செய்யப்பட்டது என்று நினைக்கிறேன் அந்த காலகட்டத்தில்…
அசோக்: ஓம், அடுத்து பரீட்சையில் சித்தி அடையாதவர்கள் அல்லது பரீட்சையில் தோல்வியடைந்தவர்கள் இயக்கங்களில் போய் சேர்ந்தார்கள் என்ற விமர்சனம். விடுதலை போராட்டத்துக்கு எதிராக போராட்டத்தை கொச்சை படுத்துவதற்கு சிலர் வைக்கிற குற்றச்சாட்டு இது.
ஓரளவு இருந்திருக்கலாம், வீட்டில் உள்ளவர்களின் பயத்தின் காரணமாக போயிருக்கலாம். இந்த விமர்சனத்தை முன்வைக்கிற ஆட்களைப் பார்ததோமென்றால் இவர்கள் பக்கா சுயநலவாதிகளாக, அந்த நேரத்தில இருந்தவங்கதான். தங்களை நியாயப்படுத்த, இப்படியான காரணங்களை கண்டுபிடிப்பாங்க.
அசோக்: பயம் ஒன்று இருக்கும்தானே. அப்பா மற்றும் வீட்டார் தொடர்பாக. எதிர்காலம் தொடர்பாக. . போராட்ட காலத்தில் பரீட்சை எடுத்து என்ன செய்யப்போறம் என்ற எண்ணம் பலருக்கு இருந்திருக்கு. இந்தப் பரீட்சை தங்களின் வாழ்க்கைக்கு பிரயோசனம் அற்றது என்ற வெறுப்பு நிலையும் இருந்திருக்கு. அடுத்தது சிலருக்கு கல்வித்திட்டங்கள் மீதான வெறுப்பும் இருந்திருக்கு. மிகத் திறமையான என்னுடைய நண்பர்கள், பரீட்சையில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மிகத் திறமையானவர்கள்… இவ்வாறனவர்களை நீங்கள் அவதானித்தால், இவங்க அரசியல் சமூக அக்கறை கொண்டவங்களாக, மாற்றுச் சிந்தனை கொண்டவர்களாக இருப்பாங்க. பாடசாலை அமைப்பு வடிவம், அதன்ற செயற்பாடு, அதிகாரம் தொடர்பான விமர்சனங்கள் அவங்களுக்கு இருக்கும். எனக்கு இது கடுமையாக இருந்தது.
ஒருதடவை அம்மாவின்ற கவலை காரணமாக படிக்க எண்ணி, சம்மாந்துறை ரெக்கினிக் கொலிச்சில் ராஷ்மேன் கோசில் சேந்திருந்தன். முதல் வாரத்தியே லெச்சரோடு எனக்கு பிரச்சனை வந்து விட்டது . சில காரணங்களை பொதுமைப்படுத்த ஏலாது.
தேசம்: நிச்சயமாக. உங்களுடைய சகோதரரை எடுத்துக் கொண்டால்கூட, பரீட்சை என்பது திறமையை பரிசோதிப்பதற்கு சாதனமே இல்லை. சிலவேளை பரீட்சையில் தோல்வி அடைந்த எத்தனையோ பேர் கெட்டிக்காரர்களாக வந்திருக்கிறார்கள், திறமையாளர்களாக வந்திருக்கிறார்கள். சராசரி நபர்கள் தான் இந்த சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.
அசோக்: கல்வி சார்ந்த அறிவு எப்பவுமே சமூக மாற்றத்திற்கு விடுதலைக்கோ உதவுவதில்லை தானே.
தேசம்: ஆனால் தற்கொலைகளை இல்லாமல் பண்ணுவதற்கு திட்டங்கள் அன்றைக்கும் இருக்கேல, இன்றைக்கும் இருக்கேல.
அசோக்: தமிழ் சமூகத்தை எடுத்துக்கொண்டால், உளவியல் சார்ந்த பிரச்சனைக்கு டாக்டரை அணுகுவது கௌரவ குறைச்சலாக தானே பார்க்கப்படுகிறது. எங்கட ஊர் மந்திரங்களுக்கும், சடங்குகளுக்கும் பேர்போன இடம். ரகசியமாக மந்திரவாதியை அணுகுவார்கள். ஒரு பெண்ணுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டால், அதற்கான உளவியல் காரணங்கள் ஆராயப்படுவதில்லை. பேய் பிடித்து விட்டது என்றுதான் சொல்வார்கள் ஆண்களுக்கு பிரச்சனை என்று வந்தால், மந்திரவாதியிட்ட கூட போகமாட்டாங்க.
ஆண்களுடைய உளவியல், பிரச்சினைக்கு, மனச்சிக்கல்களுக்கு ஒன்றும் செய்ய இயலாது. வைத்தியமுறை தெரிந்த மந்திரவாதியால ஓரளவு தீர்ப்பதற்குரிய சாத்தியம், பெண்களுக்கு இருக்கு. ஆண்களுக்கு மனச்சிக்கல் ஏற்பட்டால், அதற்கான தீர்வுக்கான சாத்தியமில்லை. கிராமங்களில் பார்த்தால், ஆண்களுக்கு பேய் பிடிக்காது. பெண்களின் உளவியல் சிக்கல்களை, அவர்கள் பேய் பிடித்தல் என்ற வெளிப்பாட்டால காட்டமுடியும். ஆண்களுக்கு அது ஒரு கௌரவ பிரச்சனை. மன உளைச்சலோடு அவங்க தற்கொலைக்கு தான் போக வேண்டும். அந்த நேரம் டாக்டர்ஸ் இருந்திருப்பார்கள். உளவியல் சார்ந்த படிப்பு இருந்தது தானே. யாரும் நாடினது இல்லை. இப்ப கூட இல்லை. ஐரோப்பிய நாடுகளில் கூட தமிழர்கள் மத்தியில் அதற்கான சாத்தியம் இல்லை.
தேசம்: நான் நினைக்கிறேன் சில மாதங்களுக்கு முன்னர் கூட பாரிசில் இரண்டு பெண்கள்…
அசோக்: இரண்டு பெண்கள். அதுவும் மிகவும் திறமையாக படித்த இங்கேயே பிறந்து வளர்ந்த பெண்கள்.
தேசம்: தமிழ் சூழல் நிச்சயமாக இது சம்பந்தமாக ஆராய்ந்து, இதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அசோக்: தமிழ்ச்சமூகம் மாத்திரமல்ல, நிலவுடைமை சமூகம் சார்ந்த இடங்களில் அந்தப் பண்புகள் அப்படித்தான் இருக்கும். இங்க ஐரோப்பா சூழலில தற்கொலைகளை, உளவியல் பிரச்சனைகளை மன அழுத்தங்களை தீர்ப்பதற்கான வழிமுறைகள் நிறைய இருக்கு. தற்கொலை நடப்பது குறைவு. நம்ம தமிழ்ச் சமூகம் நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்களை கொண்ட மூடுண்ட சமூகம் தானே. மனம்திறந்து பேசுவதற்கான சாத்தியங்கள் இல்லை. முதலாளித்துவ சமூகத்தில் தந்தை, தாய் குழந்தைகளுக்கு இடையிலான உறவு, ஒரளவு சுதந்திரமாக இருக்கும். ஒரு ஜனநாயகபடுத்தப்பட்ட உறவு இருக்கும். ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்க. தாயோட கதைக்கலாம் தந்தையோடு கதைக்கலாம். அந்த உறவு உறவு குறைந்தபட்சமாவது ஜனநாயகத் தன்மையோட இருக்கும். எங்கட்ட அப்படி இல்லை. ஒரு பிரச்சனை வந்தால் தந்தையோடையும் கதைக்கேளாது, தாயோடையும் கதைக்கேளாது. மனதுக்குள்ளேயே குறுகிக் குறுகி கடைசியாக தற்கொலைக்கு தான் போவாங்க அல்லது பைத்தியமாவாங்க.
தேசம்: ஒன்று தற்கொலை அடுத்தது இப்ப நடக்கிற சம்பவங்களை பார்த்தீர்களென்றால் தாய்மார் பிள்ளைகளை கொலை செய்வது. அது உண்மையா கொலை என்று நாங்கள் பார்க்க இயலாது அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இது நடக்கிறது. மனநிலை சம்பந்தமான பிரச்சனைகள் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அந்த நேரம் நீங்கள் வாழ்ந்த சூழலிலும் பெரிய பிரச்சனையா இருந்தது. ஆனால் அந்த நேரம் இந்த விடயம், பெரிசா அணுகப்படவில்லை என்று நினைக்கிறேன்.
அசோக்: அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை கொலை செய்வதற்கு பின்னால் ஆயிரம் சோகக்கதைகளும், மன அழுத்தங்களும் இருக்கும். அந்த நேரத்தில இப்படி சம்பவங்கள் மிகமிக்குறைவு. எங்க போராட்டம், யுத்த சூழல் தந்த நெருக்கடிகள் பொருளாதாரச் சிக்கல்கள் வறுமை ஆதரவற்ற நிலை இன்றைக்கு தாய்மார்களை கடுமையாக பாதிக்கிறது. உண்மையில தமிழ்ச் சமூகம் நினைத்தால் இப்படியான பிரச்சனைகளுக்கு தீர்வகாணமுடியும். அதற்கு தயாரில்லை. புலிகளின்ற முன்னாள் போராளிகளின்ற குடும்பங்கள் எவ்வளவு வறுமைக்குள், மன உழைச்சல்களோடு வாழ்கிறாங்க. பணப்புலிகள் இதைப்பற்றி சிந்திக்கல்ல. நாங்கதான் இதைப்பற்றி யோசிக்கிறம். மனம் வைத்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும். அதற்கு யாரும் தயாரில்லை.
தேசம்: செல்வியினுடைய சினேகிதி சிவரமணியினுடைய இறப்பும் தற்கொலை அல்லவா? பலாத்காரப்படுத்தப்பட்ட தற்கொலை…
அசோக்: சிவரமணியினுடைய தற்கொலையும் ஒரு உணர்ச்சிவசப்பட்ட உடனடி தற்கொலை என்று சொல்ல ஏலாது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்திருக்கு. அன்றைய அரசியல், சமூகச் சூழல். குறிப்பா விடுதலைப்புலிகளின் அரசியல். அவர்கள் கொடுத்த நெருக்கடி கண்காணிப்பு நிர்ப்பந்தம்
தேசம்: அது ஞாபகம் இருக்கா உங்களுக்கு…
அசோக்: எனக்கு சிவரமணியை நேரடியாக தெரியாது. செல்வி முலம் அறிந்திருந்தேன். இந்தியாவுக்கு வந்தபோதுதான் நேரடியாக சந்திக்க முடிந்தது. இந்தியாவுக்கு செல்வியோட ஒரு பயிற்சி திட்டத்துக்கு யுனிவர்சிட்டியால அனுப்பப்பட்டவங்க. அப்போதுதான் சிவரமணியை சந்திச்சது. அதுக்குப்பிறகு ஒரு வருடத்திற்கு பிறகுதான் அவர் தற்கொலை செய்தவர் என்று நினைக்கிறேன்
தேசம்: பர்மாவில ஆங் சாங் சூகி க்கு கிடைத்த விருது கிடைத்தது என்று நினைக்கிறேன். அது செல்விக்கா சிவரமணிக்கா …
அசோக்: செல்விக்கு Internatioal PEN Award கிடைத்ததது தெரியும். இது தெரியல்ல. சிவரமணி மிகத் திறமையானவர். அரசியல், சமூக அக்கறைகளை கொண்டவர். பூரணி பெண்கள் இல்லம், பெண்கள் ஆய்வு வட்டம், அன்னையர் முண்னணி என்று பலவற்றிலும் பங்கு கொண்டவர். ஆளுமையான ஆள். பிலிப்பைன்ஸில் எல்லாம் பெண்ணுரிமை தொடர்பான மாநாடுகளில கலந்து கொண்டவர். நிறைய வாசிப்பு. ஆங்கிலத்தில் மிக தேர்ச்சி கொண்டவர். சிவரமணியின் தற்கொலை எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சி
தேசம்: என்ன சம்பவங்கள் அவரை தற்கொலைக்கு இட்டுச் சென்றது
அசோக்: அந்த சூழல் இதுக்குத்தானே அரசியல் சூழல்.
ஒரு சுதந்திரமான மனிதனுக்கு அவங்களின்ற சிந்தனைகளுக்கு, செயற்பாடுகளுக்கு நெருக்கடிகளை நீங்கள் கொடுத்தீர்கள் என்றால் அது சிறைதான். புலிகளாலும் கடும் பிரச்சனை. வீட்டிலயும் சிக்கல்கள் நடந்திருக்கலாம். எனக்கு எந்தளவு உண்மை என்று தெரியாது. அவவுக்கு ஒரு காதல் இருந்தது. எங்களுடைய பிரண்ட் தான் தில்லைநாதன். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் படித்து ஆசிரியராக இருந்தவர். அவருக்கும் சிவரமணிக்கும் காதல் உறவு ஒன்று இருந்ததாகவும், வீட்டில் கொஞ்சம் நெருக்கடி கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது. எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனா பெரிய கொடுமையானது புலிகளின்ற நெருக்கடிகள்தான்.
தேசம்: விடுதலைப்புலிகளால அவருக்கு நேரடியாக தொந்தரவு இருந்ததா…
அசோக்: நேரடியாக தொந்தரவு இல்லை. உளவியல் சார்ந்த தொந்தரவு செல்விக்கும், சிவரமணிக்கும், நிறையபேருக்கு இருந்திருக்கு. மறைமுக வெருட்டல்கள், கண்காணிப்புக்கள் என்று. உடல் சார்ந்த நெருக்கடி அல்ல. ஒரு உளவியல் சார்ந்த நெருக்கடிகள், பல்வேறு வகைகளிலும் கொடுக்கப்பட்டிருக்கு. கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டாலே, அது பெரிய நெருக்கடிதானே
தேசம்: சிவரமணி தற்கொலை செய்யும் போது போது தன்னுடைய கவிதைகளையும் சேர்த்து எரித்திட்டா…
அசோக்: ஓம் முழுக் கவிதைகளையும் எரித்திட்டா. மிஞ்சின கவிதைகள் தானே சிவரமணி கவிதைத் தொகுப்பாக வந்தது. நிறைய கவிதைகள் எழுதி எல்லாத்தையும் எரித்துட்டாங்க. உணர்ச்சிவசப்பட்ட தற்கொலை இல்லைத் தானே. சிவரமணியின் தற்கொலை என்பது புலிகளின்ற ஒடுக்குமுறைகளுக்கு , சமூக கொடூரங்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கைதானே. இது உண்மையிலே தற்கொலை அல்ல. புலிகள் செய்த கொலைதான். அகநெருக்கடிகளையும், புற நெருக்கடிகளையும் கொடுத்து தற்கொலைக்கு தூண்டி தங்கட எண்ணத்தை நிறைவேற்றும் புலிகளின் ஒரு பாசிச உளவியல் செயற்பாடுதான் இது. சிவரமணியின்ற தற்கொலை, பாசிச மன நிலை கொண்ட புலிகள் பற்றி, எங்கட தமிழ் சமூகத்திற்கு சொன்ன ஒரு செய்தி என்றே நான் பார்க்கிறன்.
தேசம்: அதே மாதிரியான சம்பவம்தான் நான் நினைக்கிறேன், சாதி முரண்பாடு, பிரதேச முரண்பாடு காரணமாக கிளிநொச்சியில் இருவர் ஆணும் பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம். நான் நினைக்கிறேன் நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றது
அசோக்: தாங்கள் நம்பிய குடும்பமும், உறவுகளும், சமூ கமும் கைவிடும்போது இந்த கொடுமைகளுக்கு எதிரான எதிர்வினையை அவர்கள் அப்படித்தான் காட்ட முடியும்…
தேசம்: அப்படி பார்க்கின்றபோது இந்த விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த பிற்பகுதியில், இந்த 40 வருட காலத்தில் சமூகத்தில் பெரியதொரு சிந்தனை மாற்றங்கள் நிகழ்ந்ததாக தெரியவில்லை. ஏனென்றால், அன்றைக்கு நடந்த அதே சம்பவங்கள் இன்றைக்கும் மீள நடக்கிற மாதிரி தான் உணர முடியுது.
அசோக்: தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் முற்போக்கு சக்திகளால், இடதுசாரிகளால் தலைமை ஏற்று வழிநடத்தப்பட்டிருந்தால் மாற்றங்கள் நடந்திருக்கும். அப்படியில்லையே. விடுதலை இயக்கங்களின் தலைமைகளை நீங்கள் எடுத்துப்பார்த்தால், எங்களுடைய அரசியல் கோட்பாடுகள், சிந்தனைகளின் கொள்ளளவு தெரியும் உங்களுக்கு. நீங்கள் ஒரு சர்வதேச விடுதலைப் போராட்ட வரலாற்றில இயக்க தலைமைகளை எடுத்துப்பார்த்தால் அவர்கள் குறைந்தபட்சமாவது கோட்பாட்டு ரீதியான கொள்கைகளின் வழியாக பேச்சுக்கள் எழுத்துக்கள் எல்லாம் வரும்.
எங்கட சமூகத்தில் விடுதலைப் போராட்ட தலைவர்கள் ஒருவராவது ஒரு அறிக்கை கூட சொந்தமாக எழுதற ஆட்களாக இருந்ததில்லை. உமா மகேஸ்வரன் கொஞ்சம் பரவாயில்ல. பிரபாகரன் பற்றி சொல்ல வேண்டியதில்லை. மற்றப்படி இரண்டாம் நிலை தலைவர்கள்தான் கோட்பாட்டு ரீதியாக சித்தாந்த ரீதியாக வளர்ந்தார்களேயொழிய, தலைமைகள் அதி தீவிரமான தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகள்தான் அவர்களை தலைவர்களாக்கியது. சித்தாந்த ரீதியாக வளர்ந்தவங்க இல்லை இவங்க.
பிரபாகரனோ, உமா மகேஸ்வரனோ, ஸ்ரீ சபாரத்தினமோ வந்து கோட்பாட்டு ரீதியாக சித்தாந்த ரீதியாக தலைவர்கள் ஆக்கப்பட்டவர்கள், அநீதிக்கு எதிராக போராடியவர்கள் அல்ல. அவர்களை பார்த்தீர்களென்றால் தனிநபர் பயங்கரவாதத்துக்கு ஊடாகத்தான், ஹீரோசியத்துக்கு ஊடாகத்தான் தலைமைக்கு வாராங்கள். ஈரோஸ் பாலகுமார், பத்மநாபா கூட சித்தாந்த வளர்ச்சி கொண்ட தலைவர்கள் இல்லை. என்றாலும், பத்மநாபா ஓரளவு முற்போக்கு எண்ணங்கள் கொண்ட ஜனநாயகவாதியாக இருந்தார். மற்ற இயக்கங்களின் தலைமை, எத்தனை கொலை செய்தால் தலைவராகலாம், துப்பாக்கி மிக அழகாக சுடுறான் அதுதான் இப்பவும் இருக்குது. இப்ப தமிழ் சினிமாவில் கதாநாயகர்களின் பிம்பங்கள் எப்படி சித்தரிக்கப்படுது எங்களுக்கு . அதே மாதிரித்தான் எங்க தலைவர்மாருடைய விம்பங்களும் எங்களிட்ட கட்டமைக்கப்பட்டன.
தேசம்: என்றைக்கு யாழ்ப்பாணத்தில் இந்த வன்முறைக் கும்பல்கள் கூட இயக்கப் பாணியில்தான் அவர்களும் செயற்பட பார்க்கின்றன.
அசோக்: எங்கட விடுதலை இயக்கங்களுக்கும் மாபியா குழுக்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. விடுதலை அமைப்புக்கான கட்டமைப்பு என்பது, அரசியல் சித்தாந்த நெறிமுறைகளையும் செயற்பாடுகளையும் கொண்டது. ஜனநாயகப் பண்பும், சித்தாந்த ரீதியான கட்டமைப்பும் இல்லை என்றால், அதற்கு பேர் விடுதலை இயக்கம் அல்ல. அது மாபியா குருப்புத்தான். எங்கட இயக்கங்களுக்கும், மாபியா குழுக்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கல்ல.
தேசம்: இன்றைக்கு இலங்கையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஆவா குழு, லண்டனில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் வன்முறைக் கும்பல்களோ பெரும்பாலும் அவர்கள் இந்த விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவர்களாகத்தான் தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள்.
அசோக்: அவங்கள் சில கோட்பாடுகளை வைத்திருப்பார்களாக இருந்தால், அவங்களும் விடுதலை இயக்கம் தான். ஆவா குரூப் தாங்களும் ஏதாவது கோரிக்கையை முன்வைத்து போராடுகிறோம் என்று கேட்டால் அவங்களும் அரசியல் இயக்கமாக போய்விடுவார்கள்.
நீங்கள் தமிழீழ விடுதலை இயக்கங்களின் தோற்றங்களைப் பார்த்தீர்களென்றால் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல் கோட்பாட்டு சிந்தனையிலிருந்து அமைப்புகள் உருவாக்கப்படவில்லைத்தானே. ஆரம்பத்தில் விடுதலை இயக்கத்தில் யார் உள்வாங்கப்பட்டது? சண்டியர்களும், ரவுடிகளும் தானே. புலிகளின்ற ஆரம்ப தொடகக்கத்திலிருந்து இயக்க வரலாறுகளை பார்த்தால் இது தெரியும். புளொட்டில் உமா மகேஸ்வரனை சுற்றி இருந்த நபர்களை பார்த்தால் இது விளங்கும். டெலோவில இது மிகமிக மோசம்.
தேசம்: ஒவ்வொரு இயக்கத்திலும் அந்த ஊரில் உள்ள சண்டியர் இருந்திருப்பர்…
அசோக்: எதிரிகளை தாக்குவதற்கு சண்டியர்கள் தேவைப்பட்டார்கள். ஆரம்பத்தில் எல்லா இயக்கங்களின் ஆரம்பகால நபர்களாக இருந்தது சமூக விரோதிகள் ஆகவும் சண்டியர்களாகவும் தான் இருந்தார்கள். அதுல தப்பின ஒரு இயக்கம் ஈபிஆர்எல்எஃப் தானென்று நான் நினைக்கிறேன். ஈரோஸிலையும் அந்தத் தன்மை இருந்திருக்கு. ஏனென்றால் மற்ற எல்லா இயக்கங்களும் விடுதலைப் புலிகளில் இருந்து தானே உருவாகின்றது.
அமெரிக்கா – சீனா சண்டை இப்ப நம்மட தவறணைக் கோஸ்டியளின் சண்டை லெவலுக்கு வந்திட்டுது. ஹூவாய் நிறுவனத்தின் பிரதான நிதிப் பொறுப்பாளர் அந்நிறுவனத்தின் உரிமையாளரின் மெங் வன்சூ மூன்று ஆண்டுகளுக்கு முன் கனடாவில் அவருடைய இல்லத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அமெரிக்க அரசின் தடையுத்தரவை மீறி ஈரானுடன் நிதிப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பதிலுக்கு சீனா இரு கனேடிய ராஜதந்திரிகளை தன்நாட்டு இராணுவ இரகசியங்களைக் கடத்தியதாகக் குற்றம்சாட்டி சிறையில் அடைத்து பதிலடி கொடுத்தது.
இப்போது அமெரிக்கா மெங் வன்சூ குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று சொல்லி அவரை விடுதலை செய்ததை அடுத்து சீனாவும் தான் சிறை வைத்த இரு ராஜதந்திரிகளான மைக்கல் கோவ்றிக் மற்றும் மைக்கல் ஸ்பாவ்வோர் இருவரையும் விடுதலை செய்துள்ளது.
இதுவரை உலக பொலிஸ்காரனாக உலா வந்த அமெரிக்காவிற்கும் அதன் வாலாகத் திரிந்த பிரித்தானியாவிற்கும் இனி இந்த பொலிஸ்காரன் விளையாட்டுச் சரிவராது. 2019இல் பிரித்தானிய கடற்படை ஈரானிய பெற்றோல் சுப்பர் ராங்கர் ஒன்றை கில்பிராட் கடற்பகுதியில் வைத்து, ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட சிரியாவுக்கு பெற்றோல் அனுப்பப்படுகின்றது என்று கூறி பிரித்தானிய கடற்படை ஈரானிய ராங்கரைக் கைப்பற்றியது. அதனையடுத்து ஈரான் பதிலடியாக பிரித்தானிய ராங்கரை வளைகுடாப் பகுதியில் கைப்பற்றியது. அதன் பின் இரு தரப்புமே உடன்பாட்டுக்கு வந்து ஈரான் தான் கைப்பற்றிய பிரித்தானியாவின் ராங்கரை விடுவிக்கு ஈரானின் ராங்கரை விடுவிக்கும் நீதிமன்ற உத்தரவைப் பெற்று பிரித்தானியா தான் கைப்பற்றிய ஈரானிய ராங்கரை விடுவித்தது.
சட்டம், ஒழுங்கு, நீதி, நியாயம் எல்லாம் வறுமைப்பட்டவர்களுக்கும் வலுவில்லாதவர்களுக்கும் மட்டுமே. சட்டம்இ ஒழுங்குஇ நீதிஇ நியாயம் எல்லாம் வலுவானவர்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் சாதகமாகவே வேலை செய்யும். இது தனிப்பட்டவர்கள் சார்ந்தது மட்டுமல்ல நாடுகள் மட்டத்திலும் இதுவே நடைபெறுகின்றது. வலுவான நாடுகள் வலுவற்ற நாடுகளை ஆட்டிப்படைப்பதும் இதன் அடிப்படையில் தான்.
டார்வினின் ‘தி சர்வைவல் ஒப் தி பிற்றஸ்ட் – The survival of the fittest’ காடுகளுக்குள் உள்ள விலங்குகளுக்கு மட்டுமல்ல நாட்டுக்குள்ளும் நாடுகளுக்கு இடையேயும் வீடுகளுக்குள்ளும் வீடுகளுக்கு இடையேயும் இதுவே பொதுவிதி.
இப்போது என்னமோ சுத்தமான சுவாமிப்பிள்ளைகளாக சட்டம், ஒழுங்கு, நீதி, நியாயமாக நடக்கும் தங்களை சீனா குறுக்கு வழியில் மடக்கிவிட்டதாக மேற்குநாட்டு ராஜதந்திரிகள் புலம்புகின்றனர். பிடல் கஸ்ரோவை கொல்வதற்கு 600க்கும் மேற்பட்ட தடவைகள் முயற்சி செய்த போது எந்தச் சட்டம், ஒழுங்கு, நீதி, நியாயத்தை கடைப்பிடித்தார்கள்? ருவின் ரவரை தாக்கி அழித்தவர்கள் சவுதிய அரேபியர்கள் ஆனால் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி ஈராக் மீது படையெடுத்து அந்நாட்டில் மனித அழிவுக் கணக்கெடுப்பின்படி உத்தியோகபூர்வ எண்ணிக்கை 200,000. உண்மையான எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகம்.
ஈராக் மட்டுமா, இந்த மேற்குலகம் தலையீடு செய்த அப்கானிஸ்தான், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் இன்றும் உயிரழிவுகள் நடந்தவண்ணமே உள்ளது. ஆனால் சீனா, ரஸ்யா, வடகொரியா போன்ற நாடுகள் வலுச்சமநலையை வைத்திருப்பதால் மட்டுமே இன்று உலகில் ஓரளவு சமாதானம் நிலவுகின்றது. முதலில் யாரும் அணு ஆயுதத்தை பயன்படுத்துவதில்லை என்ற ஒப்பந்தமே இதுவரை சமாதானத்தை நிலைநிறுத்தி வைத்திருக்கின்றது.
குடும்பம் என்பது சிறிய அரசியல். அரசியல் என்பது பெரிய குடும்பம். எதிலும் டார்வினின் கூர்ப்புக்கொள்கையே இன்றும் நிலைக்கின்றது. அதாவது ‘தி சர்வைவல் ஒப் தி பிற்றஸ்ட்’. ஆகவே மனிதன் நாகரிகமடைந்துவிட்டான் என்பது வெறும் ஆடை, ஆபரணங்கள், சார்ந்தது என்றால் அதில் ஓரளவு உண்மையுள்ளது. ஆனால் நாகரீகம் சிந்தனை சார்ந்தது என்றால் அது பற்றி மீளச் சிந்திக்க வேண்டும். எளியவனை வலியவன் மிதிக்கின்ற சமூகம் நாகரீகமான சமூகமாக கருதப்பட முடியாது.
பிரித்தானியாவின் பண வீக்கம் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. யூலையில் 2 வீதமாக இருந்த பணவீக்கம் ஓகஸ்ட்டில் 3.2 வீதமாக உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக பொருட்களுக்கு உள்ள தட்டுப்பாடு அது கோவிட்-19 இனால் ஏற்பட்ட முடக்கத்தை அடுத்து எழுந்த தாக்கம். அதைவிடவும் நீண்ட முடக்கத்தின் பின் பொருளாதாரம் விரைந்து நகர ஆரம்பித்ததும் பொருட்களுக்கான தேவையும் கேள்வியும் அதிகரிக்க மூலப்பொருட்களின் விலை சந்தையில் அதிகரித்துள்ளது. அது மட்டுமல்லாமல் பொருளாதாரம் இயங்க ஆரம்பித்ததும் எரிபொருளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. அதனால் எரிபொருளின் விலை உயர ஆரம்பித்துள்ளது. அதனால் விநியோகச் செலவு அதிகரிக்கும். மூலப்பொருட்களினதும் எரிபொருட்களினதும் விலை உயர்ந்தால் அது பொருட்களின் உற்பத்திச் செலவை அதிகரிக்கும்.
மூன்று குழந்தைகளின் தாயார் தேசம்நெற் க்கு தெரிவிக்கையில் தான் வாராவாரம் சொப்பிங் செய்வதாகவும் இன்று ஐஸ்லண்ட் சுப்பர் மார்க்ற்றில் சொப்பிங் செய்யச் சென்ற போது பொருட்களின் விலை வித்தியாசத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிவித்தார். ஐந்து மாஸ்க் ஒரு பவுண்டுக்கு விற்றவர்கள் இப்போது ஒரு மாஸ்க் இரு பவுண்டுக்கும் மூன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்றும் விற்பதாகத் தெரிவித்தார். இவ்வாறு பல பொருட்கள் விலையேற்றப்பட்டுள்ளது அல்லது பொருட்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
பிரித்தானியாவில் பண வீக்கத்தை 2 வீதத்திற்குள் வைத்திருப்பதே அரசின் செயற்திட்டமாக இருந்த போதிலும் அண்மைய நாட்களில் ஏற்பட்டுள்ள எரிசகத்தியின் விலையதிகரிப்புகள் பொருட்களின் விலையை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கலாம். மேலும் நீண்ட விநியோக லொறிகளின் சாரதிகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டினால் விநியோக வலைப்பின்னலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதை அடுத்து கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்கள் பெருமளவிலானோர் பிரித்தானியாவை விட்டு வெளியேறிவிட்டனர். அதனாலும் சாரதிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. சில பெற்றோல் நிலையங்களே இன்று விநியோக நெருக்கடி காரணமாக பெற்றோல் முடிந்த நிலையில் மூடப்பட்டு உள்ளது. பிரித்தானியாவில் பழம் பிடுங்குவதற்னே ரூமேனியாவில் இருந்து ஆட்கள் தருவிக்கப்பட்டனர். மேலும் உணவகங்கள் ஹொட்டல்கள் போன்ற வரவேற்புச் சேவை வேண்டிய இடங்களில் வேலையாட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கணணித் தொழில்நுட்பத்துறையில் துறைசார்ந்த அறிவுடையவர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. இதன் காரணமாக சம்பளத்தை உயர்த்தியே வேலைக்கு பணியாளர்களைத் தேட வேண்டியேற்பட்டுள்ளது.
இவற்றின் பின்னணியிலேயே பாங்க் ஒப் இங்லண்ட் இன் தலைவர் அன்ரூ பெய்லி பிரித்தானியாவின் நிதியமைச்சர் ரிஸ்சி சுனாக்கிற்கு கொள்வனவாளர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட விலை அதிகரிப்பைச் சுட்டிக்காட்டி இருந்தார். வழமைக்கு மாறாக அதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் அரசின் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி அரசு தற்போது பண வீக்கத்தை 2 வீதத்திற்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதையும் சுட்டிக்காட்டி இருந்தார்.
பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் நுகர்வோர் கலாச்சாரத்தை வளர்த்து தேவையற்ற பொருட்களை பெரும் நிறுவனங்கள் எம்மை வாங்க வைக்கின்றன. தேவையும் கேள்வியும் இல்லாதவிடத்து தேவையை உருவாக்கி கேள்வியை அதிகரிக்க வைப்பதே நவீன சந்தைப்படுத்தல் முறையாக வந்துகொண்டுள்ளது. இந்த உற்பத்திக்காக வளங்கள் விரயமாக்கப்பட்டு சுற்றாடல் மாசுபடுத்தப்படுகின்றது. மக்கள் இந்த பெரும் நிறுவனங்களின் வலையில் வீழ்ந்து நுகர்வோர் கலாச்சாரத்தின் அடிமைகளாகாமல் ஒரு பொருளை வாங்கினால் அதிலிருந்து உச்சபட்ச பலனை பெறவேண்டும். நமது முன்னோர் குறிப்பிட்டது போல் கந்தையானாலும் கசக்கிக் கட்டவும். தூக்கி எறிந்துவிட்டு புதிது புதிதாக வாங்கிக் குவிப்பது கொழுத்த நிறுவனங்கள் லாபமீட்டுவதற்கே வழிவகுக்கும்.
இன்று செப்ரம்பர் 11 இன்றைய உலகின் அரசியல் வரலாற்றையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றையும் புரட்டிப்போட்ட நாள். ஆம், 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலினால் 2977 பொதுமக்களும் 17 தற்கொலையாளிகளுமாக 2996 பேர் கொல்லப்பட்டனர் 6000 பேருக்கு மேல் காயப்பட்டனர். விடுதலைப் போராட்டங்களும் கூட பயங்கரவாதமாகப் பார்க்கப்பட வைக்கப்பட்ட நாள். எமது மண்ணில் நடந்தது விடுதலைப் போராட்டமா இல்லையா என்று எதிரும் புதிருமான கருத்துநிலைக்கு இன்னும் விடையில்லை. விடை கிடைக்கப்போவதும் இல்லை. அவரவர் தம் தம் கருத்துநிலைகளில் உறைந்துபோயுள்ளனர்.
ஆனால் எமது மண்ணில் நடந்த யுத்த வேள்வியில் வகைதொகையின்றி நல்ல மனிதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அரசியல் முரண்பாடுகள் பல்வேறு இயக்கங்கள் அரசியல் கட்சிகள் என விதிவிலக்கில்லாமல் பல நூற்றுக்கணக்கான பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிக்கப்பட்டது. மனிதவளம் பற்றி எவ்வித சிந்தனையும் இல்லாதவர்களால் வழிநடத்தப்பட்ட விடுதலை இயக்கங்கள் மனித உயிர்களை துவசம் செய்து ‘விடுதலை’ காணலாம் என்று எண்ணிய காலம் அது.
அப்படிப்பட்ட காலத்தில் 2001 செப்ரம்பர் 11 க்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் நியூயோர்க்கின் இரட்டைக் கோபுரங்களுக்கு பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்த யாழ்ப்பாணத்தில் வழமைபோல் குண்டு வெடிப்பும் உயிரிழப்பும் நடந்தது. எம்என்எம் அனஸின் ‘பிணம் செய்யும் தேசம்’ ஆக இருந்த அன்றைய யாழ்ப்பாணத்தில் யாழ் மாநகர்சபை மேயர் பொன் சிவபாலன், யாழ் நகர இராணுவத் தளபதி பிரிகேடியர் சுசந்த மெண்டிஸ், சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் சந்திரா பெர்னாண்டோ, உதவிப் காவற்துறை அத்தியட்சகர் சந்திரமோகன், உதவிப் காவற்துறை அத்தியட்சகர் சரத் பெர்னாண்டோ, யாழ். தலைமையககாவற்துறை இன்ஸ்பெக்டர் மோகனதாஸ், யாழ் நகர பிரிகேட் மேஜர் கப்டன் ராமநாயக்க, காவற்துறை கான்ஸ்டபிள் ஜெராட், யாழ் மாநகர சபை உதவி ஆணையாளர் பத்மநாதன், வேலைப்பகுதிப் பொறியியலாளர் ஈஸ்வரன், கட்டட வரைபடக் கலைஞர் திருமதி மல்லிகா இராஜரட்ணம், தட்டெழுத்தாளர் பத்மராஜா ஆகியோர் அடங்கிய பன்னிரண்டுபேர் கொல்லப்பட்டனர்.
மேயர் பொன் சிவபாலன் என் நண்பன் பொன் சிவகுமாரனின் சகோதரன். எங்கள் இரு குடும்பங்களும் ஒரு பிள்ளையை சகோதரணை இழந்தது. இன்று இவர்களைப் பற்றி விமர்சிப்பவர்கள் தொடர் எழுதுபவர்கள் பலர் இந்த ‘விடுதலை போராட்டம்’ என்ற பெயரில் தங்களை வளர்த்து அந்த வரலாற்றை தங்களுக்கு ஏற்ப புனைந்து அதில் குளிர்காய்கின்றனர். நேற்று நண்பன் சிவகுமாரனுடன் பேசிய போது தன்னுடைய அண்ணனை காப்பாற்றியிருக்க வாய்ப்பு இருந்தது ஆனால் முடியவில்லை என்று அன்றைய சூழலை மீண்டும் ஒரு முறை மீட்டுக்கொண்டான். இன்று வரலாற்றுத் தொடர்கள் எழுதி வரலாற்றைப் புனைபவர்களும் அவற்றைக் கொண்டாடுபவர்களும் குண்டுச் சத்தத்தை காதால் கூட கேட்டறியாதவர்கள். தங்கள் முன் நடத்தப்பட்ட அத்தனை படுகொலைகளுக்கும் துணை போனவர்கள். இழப்பின் வலியை அறியாமல் அதனை கொண்டாடியவர்கள்.
பொன் சிவபாலன் ஒரு சிறந்த பேச்சாளர். அவருடைய கவிநயம் கொண்ட பேச்சால் பலரையும் வசீகரித்தவர். இன்று கட்சிக்குள் தலைமைப் போட்டிக்கு ‘ஐயா எப்ப போவார், கதிரை எப்ப காலியாகும்’ என்ற நிலை அன்றில்லை. பொன் சிவபாலன் கட்சியால் – தமிழர் விடுதலைக் கூட்டணியால் எவ்விதத்திலும் பயனடையவில்லை. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அவரால் பயன் கிடைத்தது. பொன் சிவபாலனின் பேச்சுத் திறமை அவருடைய நேர்மையால் கட்சிக்கு ஒரு வாக்கு வங்கி இருந்தது. அவருக்குப் பின் கட்சி காலாவதியாகிப் போய்விட்டது. கட்சிக்கும் மக்களுக்கும் தொடர்பற்றுப் போய்விட்டது.
பொன் சிவபாலன் போன்ற நேர்மைகொண்ட பலரை இந்த சமூகம் இன்று இழந்துவிட்டது. என் அண்ணனைப் போல் விடுதலைக்குப் போன பல ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் யுவதிகள் – இந்த மனிதவளங்கள் வீணடிக்கப்பட்டு விட்டது. இன்று சுயநலம் மிக்க கயமைகொண்ட பலர் வரலாற்றை சூறையாடலாம் என நினைக்கின்றனர். ஆனால் உண்மைகள் நிரந்தரமாக உறங்கிவிடுவதில்லை. அவை தட்டி எழுப்பப்படும். அனைவரது தியாகங்களையும் வரலாறு விடுதலை செய்யும். கலீலியோ கலீலியை வரலாறு விடுவித்தது. திருச்சபையை வரலாறு அம்பலப்படுத்தியது. அதுபோல் உளவாளிகளையும் முகவர்களையும் சந்தர்ப்பவாதிகளையும் வரலாற்றைப் புனைபவர்களையும் வரலாறு அம்பலப்படுத்திவிடும். அவர்கள் இப்போதும் நிம்மதியாகத் தூங்குவதில்லை. சுடுகாட்டிலும் அவர்கள் நிம்மதியாக தூங்க முடியாது ஜிம்மி சவேல் மற்றும் எட்வேர்ட் கொல்ஸ்ரன் போல்.
அமெரிக்க மக்களை ஏமாற்றி உலக நாட்டு மக்களை ஏமாற்றி முஸ்லீம் பயங்கரவாதத்தை உருவாக்கி பின்லாடனை வளர்த்துவிட்ட அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலும் அம்மணமாகும்.
சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்க ஆதரவுடன் பிரசவித்து… பாலூட்டி… தாலாட்டி…. பாகிஸ்தானால் வளர்க்கப்பட்ட தீவிரவாதம் முஹாஜிதீன் என்று ஆரம்பித்து தலிபான் என்ற இணைப்பாக பெரு விருட்சமாக வளர்ந்து கோலோச்சி ஆட்சியும் அமைத்தது ஆப்கானிஸ்தானில் இது சோவியத் படைகளின் விலகலுக்கு முந்தைய, பிந்தய காலகட்ட வரலாறு.
தலிபான்கள் நம்பும் மத அடிப்படைவாதம்தான் அவர்களின் ஆட்சி மொழியாக இருந்தன….. இனியும் இருக்கும்…. இந்நிலையில் தன் விருப்பமான சொல் கேட்காது வளர்ந்துவிட்ட இந்த தீவிரவாதத்தை தறிக்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்காவிற்கு 911 என அறியப்பட்ட செப்ரம்பர் 11, 2001 அமெரிக்க இரட்டைக் கோபுரம் மீதான தாக்குதல் ஒரு காரணமாயிற்று.
தனது நாட்டிற்குள் வந்து தாக்குதல் நடாத்தியது கடும் சினத்தை மட்டும் அல்ல கௌரவப் பிரச்சனையும் ஆகியது அமெரிக்காவிற்கு. உண்மையில் இத் தாக்குதலின் பின்னணி என்ன…? யார்…? என்பது இன்றுவரை அவிளாத முடிசாக இருப்பதுவும் அதனைத் தவிர்த்து இங்கு கடந்து செல்லவும் முடியாது.
இதன் அடிப்படையில் ஒரு கல்லில் பல மாங்காய் என்று ஈராக், ஆப்கானிஸ்தான் என்று தனது கழுகுக் கால்களை விரித்துக் கொண்டது அமெரிக்கா. இதற்கு அதன் நேட்டோ கூட்டாளிகளும் ஒத்து பிடில் வாசித்தனர். இதற்குள் லிபியாவையும் இணைத்துக் கொண்டனர்.
அக்டோபர் 2001 இல், செப்டம்பர் 11 தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்று கூறிக் கொண்டு ஒசமா பின் லாடன் மற்றும் அவரது அல்-காய்தா இன் உறுப்பினர்களை அவர்கள் தலிபான்களின் விருந்தினர்கள் என்ற வகையில் தம்மிடம் ஒப்படைக்க மறுத்ததால் தலிபான் ஆட்சியில் உள்ள ஆப்கானிஸ்தானை அமெரிக்கா ஆக்கிரமித்தது.
இவர்களுடன் அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடுகளும் இணைந்து கொண்டன. ஆரம்ப படையெடுப்பின் போது, அமெரிக்க மற்றும் இங்கிலாந்து படைகள் அல்-காய்தா பயிற்சி முகாம்கள் மீது குண்டு வீசின, பின்னர் ஆப்கானிஸ்தானில் செயற்பட்ட வடக்கு கூட்டணியுடன் இணைந்து செயற்பட்டு தலிபான் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
மேலும் அமெரிக்காவும் நேட்டோ நட்பு நாடுகளும் உலகின் பல நாடுகளிலும் மனிதாபிமான செயற்பாட்டை செய்தல்…. ஜனநாயகத்தை மீட்டல்… தீவிரவாதத்தை இல்லாமல் செய்வதில் தாங்களே உலகப் பொலிஸ்காரர்கள் வழிகாட்டிகள் என்பது போன்ற செயற்பாட்டில் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியாவில் தமது ஆக்கிரமிப்பிற்கு நியாயங்களை காட்டி நின்றனர்.
முதலில் போரை தொடுப்பதற்காக நியாயங்கள் உள்ளது போன்ற பிரச்சாரங்களை தமக்கு சாதகமான பிரபல்ய ஊடகங்கள் மூலம் ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கு முன்பு மிக நேர்த்தியாக செய்ய ஆரம்பிப்பர்.
அமெரிக்க மக்களை ஏன் உலக மக்களை இது ஆக்கிரமிப்பு யுத்தம் அல்ல ஜனநாயகத்தை மீட்பதற்காக யுத்தம்… மனிதாபிமான யுத்தம்…. என்று எண்ணும் படியான கருத்தியலை ஓரளவிற்கு ஏற்படுத்துவதில் அமெரிக்கா ‘வெற்றிகரமாக’ செயற்பட்டனர் என்றே கூறவேண்டும்.
இதன் பின்பு அவர்களுக்கு சார்பான அந்தந்த நாடுகளின் உள்ளுர் தீவிரவாதிகளுக்கு பணம், ஆயுதம், ஆலோசனையை வழங்குதல்…. பின்பு போரைத் தொடங்குதல்… என்று ஆரம்பிப்பதே அமெரிக்க ‘மனிதாபிமான’ யுத்தங்கள் ஆகும்.
இதில் அதிகம் தரை மார்க்கமாக அமெரிக்க படைகள் நகருதலை சோமாலியாவில் அவர்களுக்கு கிடைத்து பாரிய இழப்பும்… அனுபவங்களும் கூடவே அமெரிக்க மக்களிடம் தமது பிள்ளைகள் அநியாயமாக சாகடிக்கப்படுகின்றார்கள் என்ற எதிர்ப்பு நிலையை சமாளிக்கும் முகமாக ஆகாய மார்க்கமாக தாக்குதலை அதிகம் செய்தல் மூலம் நாடுகளுக்கு எதிரான யுத்தங்களை செயற்படுத்தினர். இம்முறையையே ஆப்கானிஸ்தானிலும் 2001 அக்ரோபரில் நடைமுறைப்படுத்தினர்.
இங்கும் ஆகாயத் தாக்குதல் என்ற வார்த்தையை தவிர்த்து ஆகாய மார்க்க பிரச்சாராம் (Air campaign) என்பது போன்ற சொல்லாடலைப் பாவிப்பது என்பதுமாக ஆப்கானிஸ்தான் அமெரிக்க கூட்டமைப்பு படைகளிடம் 2001 இறுதியில் இல் வீழ்ந்து.
தலிபான்களின் முக்கிய தலைவர்கள் பாதுகாப்பான இடங்களில் மறைந்தும் கொண்டனர். இதற்கு பாகிஸ்தான் ஆப்கானிதானில் எல்லை பூராக தரையால் இணைக்கப்பட்டிருந்ததும் பெரும் உதவியாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து தமக்கு சார்பான ஒரு அரசை அங்கு நிறுவுவதற்கான தேர்தலை நடாத்துவது…. அமையும் பொம்மை அரசை தமது விருப்பத்திற்கு ஏற்ப நடாத்துவது என்ற ‘ஜனநாயக’ வழி முறையைத்தான் ஆப்பானிஸ்தானில் நடாத்தினர் அமெரிக்க கூட்டமைப்பினர்.
இதில் உள்ளுர் ஆப்கானிஸ்தான் அரசியல் தலைவர்கள், பணியாளர்கள் தமது நாட்டின் செயற்பாட்டில் பொதுப் போக்கில ஈடுபட்டனர். இவ்வாறு அரசு அமைப்பதுவும் நிர்வாகத்தில் பங்கு பற்றுவதற்கும் எதிர் நிலையாக அமெரிக்காவின் படையிடம் தமது ஆட்சியை இழந்த தலிபான்கள் துரோகிகளின் செயற்பாடாகவே கருதினர். அமெரிக்க படைகளின் பிரசன்ன காலமாகிய கடந்த 20 வருடங்களும் நிலமை இவ்வாறுதான் நகர்ந்தது.
தொடர் ஆயுத மோதல்களாக நகர்ந்த இருபது வருடங்களில் மற்றைய எந்த நாடுகளையும் விட ஆப்கானிஸ்தானின் புவியியல் அமைப்பு தலிபான தீவிரவாதிகளின் மறைவிடங்களை முழுமையாக எந்த நவீன ரக ஆயுதங்களைக் கொண்டு அடக்க, அழிக்க முடியவில்லை.
கூடவே அருகில் எல்லைகள் முழுவதும் பரந்திருக்கும் பாகிஸ்தானின் தரையால் உள்ள இணைப்பு இந்த தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானை தமது மறைவிடமாக பாவிப்பதற்கு இருந்து ஏதுவான ‘தட்ப வெப்ப’ நிலமையும் இந்தத் தீவிரவாதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் பாகிஸ்தானில் ஆட்சியை தொடருதல் ஏன் உயிர்வாழுதல் என்பது கடினமானது என்ற ‘ஜனநாயகத்தை’ பாகிஸ்தான் கொண்டிருந்ததும் தலிபான்கள் ஆப்கனிஸ்தானில் நிலைத்து நிற்பதற்கு முக்கிய காரணமாகியது.
கூடவே தலிபான் தரப்பிலும் அமெரிக்க கூட்டமைப்பு படைகள் ஆப்கானிஸ்தான் அரசு என்று முத்தரப்பிலும் போதைவஸ்தில் உலக சந்தையில் பெருந்தொகை பணமீட்டல் என்பது இங்கு இந்த போர் தொடர வேண்டும் என்று முத்தரப்பினரும் விருப்பத்துடன் இருந்த துர்ப்பாக்கிய நிலமையை நாம் புறம் தள்ளிவிட முடியாது.
அமெரிக்க கூட்டமைப்பு படைகளின் பொது மக்களுக்கு எதிரான தாக்குதல், பெண்களுக்கு எதிரான செயற்பாடுகள் மக்களின் வாழ்வை மேம்படுத்த முடியாத ஆப்கான அரசின் செயற்பாடுகள் என்பன பொது மக்களை தலிபான், ஏனைய தீவிரவாத அமைப்புக்கள் பக்கம் சாய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியது.
உலக நவீன ஆயுதங்கள், பல லட்சம் பயிற்சி அளிக்கப்பட்ட ஆப்கான அரசு படைகள் என்று யாராலும் வெல்லப்பட முடியாத அதே வேளை அமெரிக்க அதன் கூட்டமைப்பு நாடுகளின் டாலர்களை தின்று கொண்டிருந்த அவமானகரமான யுத்தமாக அமெரிக்க அரசினால் உணரப்பட்டது. ஆனாலும் உலகப் பொலிஸ்காரனாக செயற்படும் அமெரிக்காவின் கௌரவ பின்வாங்கல் அவர்களால் செய்ய முடியவில்லை. ஆனால் டொனால் ட்றம் போன்ற ஒரு ‘வித்தியாசமான’ அமெரிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானமே ஒரு கௌரவமான பின்வாங்கலை ஜோ பைடன் செய்வதற்கு வாய்ப்பை ஏற்படுதியது.
சில வருடங்களுக்கு முன்பு தலிபான் சீனா இடையில் ஏற்பட்ட தொடர்பும் அதனைத் தொடர்ந்து சீனாவை தலிபான்களிடம் கோர்த்துவிட்டுக் கழட்டிக் கொள்ள நினைத்த அமெரிக்காவின் முயற்சிகளில் சீனா இராணுவ ரீதியில் சிக்கிக் கொள்ளாமல் ‘வெற்றி” கண்டது உலக செய்தி ஊடகங்களில் அதிகம் பேசப்படாவிட்டாலும் வரலாற்று உண்மைகள் இவை.
அமெரிக்கா ஆப்கானில் தங்கியிருந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் மிகக் குறைந்த அளவிலான மக்களே தேர்தலில் பங்குபற்றினர் என்பதற்கு உருவாகப் போகும் ஜனநாயக அரசியல் மக்களுக்கு இருந்த நம்பிக்கையீனங்களும் கூடவே தேர்தலில் பங்கு பற்றினால் தலிபான்களின் துப்பாக்கிக் கோவத்திற்கு ஆளாகலாம் எ ன்பதால் அதனைத் தவிர்த்த செயற்பாடுகள் என்பன காரணங்களாக அமைந்தன.
இது ஒரு பொதுவான போக்குத்தான். நாம் இதனை 1989 ல் இந்தியப் படைகளின் பிரசன்ன காலத்தில் இலங்கையில் சிறப்பாக வடக்கு கிழக்கு மகாணங்களில் அன்றைய காலகட்டத்தில் நடைபெற்ற தேர்தல்களிலும் கண்டோம்.
அமெரிக்க படைகளின் பிரசன்ன காலத்தில் ஹமீத் கர்சாய் 2001 முதல் 2014 வரை நாட்டின் தலைவராக இருந்தார். டிசம்பர் 2001 இல், தாலிபான் அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பிறகு, ஹமீத் கர்சாயின் கீழ் ஆப்கான் இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட்டது. கர்சாய் நிர்வாகத்திற்கு உதவுவதற்கும் அடிப்படை பாதுகாப்பை வழங்குவதற்கும் சர்வதேச பாதுகாப்பு உதவிப் படை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலால் நிறுவப்பட்டது.
2001 இற்கு முன்பு இரண்டு தசாப்த கால யுத்தம் மற்றும் கடுமையான பஞ்சத்திற்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் உலகின் மிக உயர்ந்த குழந்தை மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதங்களில் ஒன்றாக காணப்பட்டது.
குறைந்த ஆயுட்காலத்துடன் பெரும்பாலான மக்கள் பசியுடன் இருந்தனர், மற்றும் உள்கட்டமைப்புகள் யுத்தங்களால் இடிபாடுகளின் நடுவேயே காணப்பட்டன. பல வெளிநாட்டு நன்கொடையாளர்கள் போரால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஆளணி உதவி மற்றும் பொருட்கள் உதவிகளை வழங்கத் தொடங்கினர். இதற்கு பின்னாலும் தகவலறியும் ஒரு உள்நோக்கங்களும் இருந்திருக்கும் என்பதில் வியப்பேதும் இல்லை.
இதற்கிடையில், தலிபான் படைகள் பாகிஸ்தானுக்குள் மீண்டும் ஒருங்கிணைக்கத் தொடங்கின, மேலும் அமெரிக்க கூட்டணிப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து புனரமைப்பு செயல்முறைக்கு உதவின. ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை மீட்க தலிபான் கிளர்ச்சியை தொடங்கியது.
அடுத்த தசாப்தத்தில், சர்வதேச பாதுகாப்பு உதவிப் படை மற்றும் ஆப்கான் துருப்புக்கள் தலிபான்களுக்கு எதிராக பல தாக்குதல்களை நடத்தின, ஆனால் அவற்றை முழுமையாக தோற்கடிக்க முடியவில்லை. வெளிநாட்டு முதலீடு இல்லாதது, அரசாங்க ஊழல் மற்றும் தலிபான் கிளர்ச்சி காரணமாக ஆப்கானிஸ்தான் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக பயணப்பட்டது.
இதற்கிடையில், கர்சாய் நாட்டின் மக்களை ஒன்றிணைக்க முயன்றார், மற்றும் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் சில ஜனநாயக கட்டமைப்புகளை உருவாக்க முடிந்தது, 2004 இல் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசு என்ற பெயரில் ஒரு அரசியலமைப்பை உருவாக்கியது.
நாட்டின் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் பெரும்பாலும் வெளிநாட்டு நன்கொடை நாடுகளின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டன. சர்வதேச பாதுகாப்பு உதவிப் படைகள் ஆப்கான் தேசிய பாதுகாப்புப் படைகளுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கின.
2002 ஐத் தொடர்ந்து, கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானுக்கு வெளியில் அகதிகளாக இருந்த ஐந்து மில்லியன் ஆப்கானியர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்த நேட்டோ படைகளின் எண்ணிக்கை 2011 இல் 140,000 ஆக உயர்ந்தது, 2018 இல் சுமார் 16,000 ஆக குறைந்தது.
செப்டம்பர் 2014 இல் அஷ்ரப் கானி 2014 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு ஜனாதிபதியானார். ஆப்கானிஸ்தானின் வரலாற்றில் முதன்முறையாக அதிகாரம் ஜனநாயக ரீதியாக மாற்றப்பட்டது.
தொடர்ந்து 28 டிசம்பர் 2014 அன்று, நேட்டோ ஆப்கானிஸ்தானில் சர்வதேச பாதுகாப்பு உதவிப் படைகள் போர் நடவடிக்கைகளை முறையாக முடித்து, ஆப்கான் அரசு நாட்டின் முழு பாதுகாப்புப் பொறுப்பை பொறுப்பேற்றுக் கொண்டது.
ஆனால் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தான் மண்ணில் நிலை கொண்டு இருந்தன. ஆயிரக்கணக்கான நேட்டோ துருப்புக்கள் ஆப்கானிய அரசாங்கப் படைகளுக்கு பயிற்சி அளிப்பதற்கும் ஆலோசனை வழங்குவதிலும் ஈடுபட்டனர்.
2015 இல் மதிப்பீட்டின்படி ஆப்கானிஸ்தான் போரில் 2001 முதல் சுமார் 147,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 38,000 க்கும் அதிகமானோர் பொதுமக்கள். ‘பாடி கவுன்ட்’ என்ற தலைப்பில், ஆப்கானிஸ்தானில் நடந்த மோதலில் 106,000 தொடக்கம் 170,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையிலும் தலிபான்கள் அமெரிக்க விருப்பு அரசுக்கு எதிரான செயற்பாடுகளை எஞ்சிய நிலையில் தங்கியருந்த நேட்டோ படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்தன.
தலிபான்களை தம்மால் வெற்றி கொள்ள முடியாது என்பதுவும் ஏழு ட்றில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான கனிம வளங்களில் மிகச் சிறிய பகுதியையேனும் தம்மால் வறுக முடியவில்லை என்பதுவும் ஆனால் தினம் தினம் பணம் உயிர் விரயமாவதை உணர்ந்து நேட்டோ படைகள் ஒவ்வொன்றாக கழர தொடங்க அமெரிக்கா ‘மாயநிலை'(Virtual)யில் தனிமைப்படுத்தப்பட்ட நிலைமையை உணர்ந்தது.
தோல்விகரமாக பின்வாங்குதல் என்பதில் இருந்து…. தம்மை விடுவித்துக் கொள்ளுதல் என்பதை தாம் ஆப்கானிஸ்தானுக்கு சென்ற ஜனநாயக மீட்பு மனிதாபிமான செயற்பாடுகள் முடிவடைந்து விட்டன. ஆப்கானிஸ்தான் அரசை காத்துக் கொள்ள மூன்று இலட்சம் படைகள் தம்மால் பயிற்றுவிற்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர் என்று கூறி கொண்டு 2021 ஆகஸ்ட் மாதம் 31 இற்குள் தமது முழுமையான விலகலை செய்வது என்று தலிபானுடன் ஏலவே நடைபெற்ற நீண்ட சந்திப்புகள் பேச்சு வார்ததைகள் உடன்பாடுகள் அடிப்படையில் ஆகஸ்ட் 15, 2021 ல் படை விலகலை ஆரம்பித்தனர்.
“கல்யாணம் கட்டின ஒரு பெண் பக்கத்து வீட்டு ஆணையும் அல்லது இன்னும் ஒரு ஆணையோ காதலிப்பது சாதாரணமாக நடக்குது. ஆனால் அது மறைக்கப்படலாம் அல்ல தெரியாமல் இருக்கும். இது வீட்டுக்கு வீடு வாசல்படி.” பாரதி சிவராஜா
இலங்கையின் இடதுசாரி அமைப்பான புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி மற்றும் இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழர்களால் பிரித்தானியாவில் அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் சொலிடாரிட்டி என்ற இரு கட்சிகளையும் ஆண் – பெண் உறவு, காதல், திருமணம் என்ற விடயம் சிக்கலுக்குள் தள்ளிவிட்டிருந்தது தெரிந்ததே. இதன் காரணமாக புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி உறுப்பினர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இவ்வாறான நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த சிலர் தங்களை கட்சியில் இருந்து விலகி நிற்கின்றனர். லண்டனில் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் உறுப்பினர் ஒருவர் நீண்டகாலம் காதலித்த பெண்ணுடன் உறவு முறிவு ஏற்பட்டு பின்னர் வேறொருவரை காதலித்து மணம் முடித்தது தொடர்பில் கையெழுத்துப்போராட்டம் ஒன்றும் முடுக்கிவிடப்பட்டு தங்களை முற்போக்காளர்கள் என கூறிக்கொள்ளும் 20 பேர் கையெழுத்திட்டு இருந்தனர். ஆயினும் தமிழ் சொலிடாரிட்டி கையெழுத்திட்டவர்கள் சமூக விரோத அரசியலை முன்னெடுத்தவர்கள் என்றும் கட்சியயை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வக்கற்றவர்கள் என்றும் சாடியிருந்தது.
கையெழுத்துப் போராட்டத்தில் கையெழுத்திட்ட பாராதி சிவராஜா, கையெழுத்திடுவதற்கு முன் ஆண் – பெண் உறவு, காதல், திருமணம் பற்றி மேற்கொண்ட உரையாடல் இது. “கல்யாணம் கட்டின ஒரு பெண் பக்கத்து வீட்டு ஆணையும் அல்லது இன்னும் ஒரு ஆணையோ காதலிப்பது சாதாரணமாக நடக்குது. ஆனால் அது மறைக்கப்படலாம் அல்ல தெரியாமல் இருக்கும். இது வீட்டுக்கு வீடு வாசல்படி.” கையெழுத்திட்ட ஏனைய 19 மார்க்சிய பெண்ணியலாளர்கள் இவ்வுரையாடலை எந்தப் பார்வையில் பார்ப்பார்கள் என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.
‘காதலை திருமணமாகச் சுருக்கும் சமூகப் புரிதல் பற்றிய மார்க்சிய பெண்ணியப் பார்வை’ என்ற இந்த உரையாடல் காதலர் தினத்தை முன்னிட்டு 2018 பெப்ரவரி 10ம் திகதி அவுஸ்திரேலியாவில் இருந்து வலைத்தளமூடாக ஒலி பரப்பாகும் இன்பத் தமிழ் வானொலியின் கருத்துக்களம்’ நிகழ்ச்சிக்காக பதிவு செய்யப்பட்டது. பாரதி சிவராஜா வட்ஸ்அப் ஊடாக பலருக்கும் அனுப்பிய இப்பதிவு தேசம்நெற்றையும் அடைந்தது. இப்பதிவின் முக்கிய பகுதி சுருக்கித் தரப்பட்டுள்ளது.
இதன் எழுத்துவடிவம்:
பாரதி: காதல் என்பது ஒரு பீல் தான். காதல் ஒருக்கா தான் வரும் என்டதில எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. காதல் கட்டாயமா வரும். வரலாம். காதல் என்கிறது ஒரு தேடல் தான். அது மனிதர்களிடம் உணர்வு இருப்பது வரைக்கும் அது வந்துகொண்டு இருக்கும். 18 வயசில தான் வரும் 16 வயசில தான் வரும் 60 வயசில வராது என்கிறதெல்லாம் பச்சைப் பொய்யான விஷயம். எந்த வயசிலயும் காதல் வரலாம். எத்தனை தடவையும் வரலாம்.
வானொலிக் கலைஞர்: காதல் என்பதை திருமணம் என்ற வரையறைக்கு அப்பால் தான் தமிழர்கள் வைத்திருக்கிறார்கள். அதற்கு முன்னால் இருக்கக்கூடிய காதல் என்பது எமது சமூகத்தால் எச்சரிக்கை உணர்வுடனேயே அங்கீகரிக்கப்படுகிறது என்பது என்னுடைய குற்றச்சாட்டு. அதை ஒருத்தரும் அதை ஏற்றுக் கொள்வதில்லை. அதை திருமணம் என்கின்ற ஒரு மார்ஜினுக்குள் வைத்த பிறகு தான் உங்களுடைய காதல் அங்கீகரிக்கப்படுமே தவிர…
பாரதி: காதலைத் திருமணம் என்டுறத்தோடு கொண்டு போனாலே அது காதல் இல்லை என்பது தான் என்னுடைய வாதம். எல்லாரும் சொல்லுவாங்க காதல் கல்யாணத்துல முடிக்கிறது தான் வெற்றி என்டு. ஆனால் கலியாணத்தில் முடிந்தால் அது தோல்வி. நீங்க அங்க ஒரு புளொக் போட்டிடுவீங்க. நீ என்னும் ஒருத்தரை காதலிக்க ஏலாது என்டு.
வா.கலைஞர்: காதலை நீங்கள் திருமணத்துக்கு கொண்டு வந்து வைத்தால் காதல் முடிந்தது அது தோல்வி என்று நீங்கள் சொன்னீர்கள். ஏன்? நமது பண்பாடு என்ன சொல்லுகிறது, காதல் வந்து திருமணத்தில் முடிந்து, ஒன்றாக இணைந்து, ஒரு ஜென்மம் பூராகவும் வாழ்ந்து போவதுதான் காதல். அப்படி இல்லாட்டி அது நெறி தவறிய வாழ்க்கை என்றுதானே தமிழ் பண்பாடு சொல்கிறது?
பாரதி: தமிழ் பண்பாடு என்று சொல்லாதீர்கள். தமிழ் கலாச்சாரம். கலாச்சாரம் மாறும் பண்பாட்டில் எங்கயுமே அப்படி சொல்லவில்லை. ஒருத்தரோட வாழ்ந்து, ஒருத்தரோட சாகுறது தான் பண்பாடு என்று தமிழ் பண்பாட்டில் இல்லை. காதல் போய் கலியாணத்தில தான் முடியும் என்டா, நீங்க கலியாணம் முடிச்சிட்டு இன்னும் ஒருத்தரையும் லவ் பண்ணக்கூடிய ஒரு செட்டப் இருக்குமென்றால் அது பிரச்னை இல்லை. ஆனால் கலியாணம் என்டுறது அப்பிடியே முடிச்சுவிடுறீங்க. காதல் என்டுறது ஒரு பீலிங் தான், நீங்க அது முடியும் முடியாது என்டதெல்லாம் இல்லை. அது எவ்வளவு தூரம் உங்களோட ரவல் பண்ணுது என்டத தான் நீங்க பார்க்கனும்.
நீங்க ஒராளோட இருக்கிறீங்க. ஒராள் உங்களோட பாசமா இருக்கிறார். அதை லவ் என்டு பீல் பண்ணுறீங்க. ஒராளோட பழகுறீங்க அவங்க மேல ஈர்ப்பு வருது. அது தான் லவ்.. அது லவ் இல்லை. இது தான் லவ் என்டு யார் தீர்மானிக்கிறது?
எங்கட ஆட்களை எல்லாம் பாருங்க. நீங்க என்ன கள்ள வேலை செய்து காசு சம்பாதிச்சாலும் மனிசி ஒன்டும் சொல்ல மாட்டா. சந்தோஷமா இருப்பா. ஆனா மனுஷன் வேற ஒரு பிள்ளைய பார்த்தவுடன கள்ளக் காதல் என்டுவா. அப்ப இவ்வளவு காலம் உழைச்சது கள்ள காசு தானே? அது என்ன அந்த ரெண்டு மனநிலை எங்க இருந்து வந்தது?
இதில என்னும் முக்கியமான விசயத்தை நான் சொல்ல வேணும் என்னென்றால் மதங்களை நீங்க பார்த்தீங்க என்றால் ஆண்கள் பல காதல் செய்யலாம். பல திருமணம் செய்யலாம். ஆனா பெண்கள் ஒரு காதல் தான் செய்யனும். ஒரியினலா இருக்க வேணும். அப்படி போனாலும் உடன்கட்டை ஏறிடனும்; அல்லாட்டி வெள்ளைப் புடவையை கட்டிட்டு இருக்க வேணும்; பொட்டை அழிச்சிட்டு இருக்கனும்; கலர் அஸ்திரம் கட்டக்கூடாது ஏதோ எல்லாம் சொல்லிட்டு இருப்பாங்க. ஆனா முருகனுக்கு ரெண்டு பொண்டாட்டி இருக்கும் கிருஷ்ணணுக்கு ஆயிரமாயிரம் அது எவ்வளவு என்டு தெரியா. நபி என்றவர் எத்தனையோ கல்யாணம் முடித்து இருப்பர். மதங்களுக்கு ஆண்கள் நாலு கல்யாணம் முடிக்கலாம்.
வா.கலைஞர்: அப்போ ஆணுடைய காதல் வேறு பெண்னுடைய காதல் வேறு அப்படியா
பாரதி: மனிதர்கள் என்பது இயற்கையான ஒரு படைப்பு. அதில் ஆண்பால் பெண்பால் இரண்டும் தான் இருக்கு. அதில் எப்படி இன்னொருத்தனுக்கு சட்டம். இன்னொருத்திக்கு ஒரு சட்டம்.
வா.கலைஞர்: இங்குதானே நீங்கள் சொல்கிற கலாச்சாரமும் பண்பாடும் என்பது உதைக்கிறது. ஏனென்றால் ஒருவனுக்கு ஒருத்தி என்பது விதிக்கப்பட்ட விதி? இங்க விதிக்கப்பட்ட நெறிமுறை?
பாரதி: அது நாங்கள் உருவாக்கிக் கொண்டது.
வா.கலைஞர்: உருவாக்கினது என்னவோ அதைத்தானே. அப்படி இருப்பவனை தானே நல்லவன்; நல்ல குடும்பம் என்று சொல்கிறார்கள்; பல்கலைக்கழகம் என்று சொல்கிறார்கள். நீங்க சொன்ன மாதிரி ஒரு உணர்வை இங்கே எப்படி பார்ப்பார்கள் என்றால், கொச்சைப்படுத்தி தான் பார்ப்பார்களேயொழிய, அது அவருடைய ஃபீலிங் என்று யாரும் பார்ப்பது கிடையாது.
பாரதி: சமூகத்தில் மாற்றி செய்யப்படுகிற டைம்ல சமூகத்தில் அது பிரச்சினையான விஷயமாகத்தான் இருக்கு. சமூகத்திலிருந்து நாங்கள் ஒன்றை மாறி செய்யும்போது பிரச்சினையாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையாகவே நீங்கள் பார்க்கும்போது அது தான் சரியாக இருக்கும். அதற்கு நாங்கள் சொல்கிறோம், அறிவு ரீதியாக நாங்கள் பார்க்காத எந்த ஒரு விஷயமும் பிழையாகத் தான் இருக்கும்.
வா.கலைஞர்: அப்படியானால் உங்களிடம் கேட்டால் தமிழ் பெண்களிடம் காதல் பற்றிய பார்வை என்பது வித்தியாசமாக மாறிவிட்டதா? அதாவது தமிழ் பெண்களும் ஒன்றுக்கு மேற்பட்ட காதலுக்கு அவர்கள் தங்களைத் தயார்படுத்திவிட்டார்கள் என்பதே உங்களுடைய வாதம் அப்படியா?
பாரதி: நான் வாதமே செய்யத் தேவையில்லை. இங்கே வேண்டாம். எங்கட நாட்டுக்கே போய் பாருங்கோ. எத்தனையோ வீடுகளில் கல்யாணம் கட்டின ஒரு பெண் பக்கத்து வீட்டு ஆணையும் அல்லது இன்னும் ஒரு ஆணையோ காதலிப்பது சாதாரணமாக நடக்குது. ஆனால் அது மறைக்கப்படலாம் அல்ல தெரியாமல் இருக்கும். இது வீட்டுக்கு வீடு வாசல்படி. அப்ப இது இயற்கையான விஷயம் இது.
ரொம்ப கலாச்சாரமான தலிபான் இருக்கிற இடங்களிலேயே பெண்கள் வெளியில் வர இயலாது. பெண்கள் முகத்தை மூடிக்கொண்டு அங்கே இப்படியான விஷயங்கள் நடக்கிறது. இதுதான் உண்மை எந்த மதம், எந்த கலாச்சாரம் ஒன்றும் செய்ய இயலாது. அவங்களுக்கு வெளிப்படையாக செய்வதற்கு நீங்கள் அனுமதிக்கவில்லையானால் அவர்கள் மறைமுகமாக செய்வார்கள். இதுதான் இயற்கையான விஷயம்.
என் செல்வராஜா ஒரு நூலகம்! தற்போது தெற்கில் அவரின் பெயரில் ஒரு நூலகம் உருவாகின்றது!
இலங்கையர்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் பற்றி பத்திரிகைகளில் வெளிவந்து மறைந்த போதும் இலைமறை காயாக சில உறவுகள் தமிழ் – சிங்கள மக்கள் மத்தியில் மலர்ந்து நறுமணம் கமழ்கின்றது. 1981 மே 31 இரவு யாழ் நூலகம் எரிக்கப்பட்ட துன்பியல் நிகழ்வினால் தெற்கில் இன்றும் பலர் மனவேதனையிலும் வெப்பிகாரத்திலும் இருப்பதை நாம் புறந்தள்ளிவிட முடியாது. அப்படிப்பட்டவர்கள் இணைந்து நூலகவியலாளர் என் செல்வராஜாவின் வாழ்நாள் சேவையை கௌரவிக்கும் வகையில் அவருடைய பெயரில் தெற்கில் ஒரு சிறு நூலகம் அமைக்க முன்முயற்சிகள் எடுக்கப்படுகின்றனர். நூலகவியலாளர் என் செல்வராஜா பற்றி சந்தரெசி சுதுசிங்ஹ The Colombo Post என்ற இணையத்தில் வெளியிட்ட பதிவின் தமிழாக்கம் தேசம்நெற் இல் பிரசுரிக்கப்படுகின்றது.
._._._._._.
தெற்கில் நூல்களை வாரி வழங்கும் தமிழ் நேசகன்!
இந்தியா மீதுள்ள எனது பற்றை தகர்த்து என்னை தன் வசப்படுத்தி இந்திய நட்பை காட்டிலும் யாழ்ப்பாண உறவு பாலத்தை கட்ட வேண்டும் என்று மனதுக்குள் ஒலிக்கிறது. அந்த உறவை நினைக்கையில் விட்டுக்கொடுக்க முடியாத உணர்வு ஏற்படுகிறது. எனது உண்மையான உணர்வை மறைத்து மனதை அடக்கி வைக்க எனக்கு இஷ்டம் இல்லை. எனக்கு அவர் மீது காதல் தோன்றுகிறது? எவ்விடத்திலும் துணிச்சலுடன் அதை எடுத்துக்கூற தயங்கமாட்டேன். உறவு என்பது காதலை தவிர வேறு என்ன? அப்படிப்பட்ட நேசத்திற்குரிய மனிதரைப் பற்றிய பாசக் கதைதான்.
இக்கதையின் நாயகனை பற்றி கலாநிதி உருத்திரமூர்த்தி சேரன் என்னிடம் கூறினார். இடைவிடாது கேட்கும் கேள்விகளுக்கு பதில்களை கூறுவதும் அப்பதில்கள் உயிரோட்டம் கொண்டிருப்பதும் அவரது தனித்துமே. அப்படி ஒரு விடைக்காக அறிமுகப்படுத்திய மனிதர் தான் பல்லாயிரம் கேள்வி கனைகளுக்கு பதிலாக
இருப்பவர் தான் நடராஜா செல்வராஜா அவர்கள்.
செல்வராஜா என்பவர் இலங்கையில் மட்டுமல்லாமல் உலக நூலக வரலாற்றில் மிளிரும் தாரகை. அறிவு, மனிதநேயம் நிறைந்த படைப்பே இத்தாரகை. அவ்வப்போது எனக்கு தேவையான தகவல்களை இந்த பதில் கூறும் மனிதரிடம் பெற்றுக்கொண்டேன். இவர் இலங்கை திருநாட்டுக்கு மட்டுமல்லாது முழு ஆசிய பிராந்தியத்திற்குமே பெருமைக்குரிய சின்னமாக விளங்குகிறார். பிரித்தானிய வழங்கும் IPRA (பொதுமக்கள் தொடர்புக்கான விருது) என்ற விருதை பெற்ற முதலாவது இலங்கையாராகவும் ஆசிய இனமாகவும் இவர் கொண்டாடப்படுவதே இதற்கு காரணம். இவர் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நூல்களின் பட்டியலை தயாரித்தவரும் மனிதநேயம் கொண்ட மனிதர்களுக்கு முற்போக்கான பதிலும் இவரே.
நடராஜா செல்வராஜா:
அண்மை காலத்தில் இவர் வடக்கிலும் தெற்கிலும் நூலகங்களின் தொடர்பினை ஏற்படுத்தி கொடுத்த இவர் தன் தலையாய கடமையாக அதனைச் செய்தார். ‘வெள்ளவத்தையில் இந்த நூலகத்திற்குச் செல்லுங்கள், இதோ அந்த நிறுவனத்தின் தொலைபேசி இலக்கம், யாழ்ப்பாணத்தில் இதோ இந்த இடத்தில் தகவல்களை பெறலாம்’ என்று தங்கையை போல என்னை வழிநடத்திய இவர் யாழ்ப்பாண காதலின் இன்னுமொரு மைல்கல்லாக நிற்கின்றார்.
அண்மையில் நான் ‘புத்தகமும் நானும்’ என்ற நிகழ்ச்சியின் நெறியாளர் மஹிந்த தசநாயக்க பற்றி ஒரு குறிப்பை எழுதினேன். அதை பார்த்துவிட்டு அண்ணன் செல்வராஜா என்னையும் மஹிந்த அண்ணாவையும் அழைத்து சுவாரசியமான ஒரு கதையைச் சொன்னார்.
‘நான் உங்களுக்கு புத்தகங்களை தருகிறேன். ஆனால் அவற்றை வடக்கிலோ மலையகத்திலோ இருக்கும் தமிழ பிள்ளைகளுக்கு கொடுப்பதற்கு அல்ல. இங்குள்ள சிங்கள பிள்ளைகளுக்குத் தான் நான் அவற்றை கொடுக்கின்றேன் என்றார்’. அந்த பதில் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் ஆணித்தனமாக அதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். எங்கள் கேள்வி ஏக்கங்களுக்கு இவ்வாறு விளக்கம் கொடுத்தார்.
‘இதுதான் விஷயம். நான் “Book Abroad” நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு பெரும் எண்ணிக்கையான நூல்களை அனுப்புகிறேன். கொல்களன் கணக்கில் அனுப்புகிறேன். நாங்கள் வடக்கில் பிள்ளைகளுக்கு அவற்றை பகிர்ந்தளிக்கின்றோம். அதேபோல மலையகச் சிறுவர்களுக்கும் அனுப்புகிறோம். ஆனால் ஒன்றை மறந்துவிட்டோம் அதுதான், வடக்கிலுள்ள பிள்ளைகளுக்கு வெளிநாட்டிலிருந்து கொடையாளர்களிடமிருந்தும் இன்னும் பல வழிகளிலும் இப்படி புத்தகங்கள் கிடைத்தாலும் சிங்கள பிள்ளைகளுக்கு அரசாங்கமோ வேறு நிறுவனங்களோ இப்படி புத்தகங்களை வழங்குவதில்லை என்ற விடயம். அதனால் தான் சொல்கிறேன், இப்புத்தகங்களை பின்தங்கிய கிராம புறங்களைச் சேர்ந்த சிங்கள பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டுமென்று. நான் அனுப்புகின்ற புத்தகங்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் இருக்கின்றன. அவற்றை நான் தருகிறேன். அதேபோல ஆங்கில புத்தங்களுக்கு மேலதிகமாக சிங்கள புத்தகங்களை வாங்க நான் பணம் தருகின்றேன்’. இப்படி கூறிய அவரை கௌரவிக்கும் முகமாக நாங்கள் பின்தங்கிய கிராமங்களை தேடிச் சென்று புத்தகங்களை பெற்றுக்கொடுக்க பணியாற்றுவோம்.
நாங்கள் எப்போதும் நூலக வசதிகளே இல்லாத பாடசாலையைத் தேடிப் பிடித்து நூலகமொன்றை உருவாக்குவதற்கு முயற்சிப்போம். நன்றியுணர்வை வெளிப்படுத்துவதற்காக அவரது பெயரை ‘நடராஜா செல்வராஜா’ அந்நூலகத்திற்கு சூட்ட முடியுமென்றால் அதுவே இச்சமூகத்திற்கு சிறந்த ஒரு செய்தியாக அமையக்கூடும். வடக்கில் நூலகங்களுக்கு தீ வைத்த இருண்ட நினைவுகள் இருக்கும் தருவாயில், வடக்கிலிருந்து தெற்கிலுள்ள சிங்கள பிள்ளைகளுக்காக இதுபோன்ற கருணை காட்டுவதன் மூலம் வெளிப்படுத்தப்படுவது என்னவெனில், அவர்களுக்கும் எமக்கும் எவ்வித இடைவெளியும் இல்லை என்பதையும், எம்மிடையே பிரிவினை, மோதல் இருப்பதாக கூறிவரும் பலருக்கு அது தவறான புரிதல் என்பதை உணர்த்தும். தற்போது நாம் அதற்காக உழைக்கின்றோம்.
நன்றாக சிங்களத்தில் உரையாற்றும் இவருக்கு தென்னிலங்ககையில் பலர் இருக்கின்றார்கள். நீர்கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்தில் (இன்றைய விஜயரத்தினம் மகா வித்தியாலயம்) கல்வி பயின்ற இவர் இலங்கை நூலக விஞ்ஞான சங்கத்தில் டிப்ளோமா பெற்றவராவார். ‘தங்கை, நம் இரு சமூககங்களுக்கும் இடையில் எந்த பிரச்சினையும் கிடையாது சிங்கள, தமிழ் என்று அரசியல் வாதிகளுக்குத் தான் பிரச்சினை உள்ளது’ அப்படித்தான் அவர் சுருக்கமாக கூறுவார். எனது யாழ்ப்பாண மக்கள் நமக்கும் தென்னிலங்கை மக்களுக்கும் இடையில் குரோதம் இருப்பதாக என்னிடம் ஒருபோதும் கூறியதில்லை.
‘தங்கை தாங்கள் என் மூத்த மகளை விட ஒரு வயது இளையவர்.. உங்களை போன்றவர்கள் இந்த நிலத்திற்கு பெறுமதிமிக்கவர்கள்’. அவர்களது அன்பில் நாம் எம்மை காணுகிறோம். செல்வராஜா என்ற மனிதர் இந்நாட்டில் வடக்கு தெற்கு பிரிவினையை மறந்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து வாசிக்க கூடிய ஒரு புத்தகம் போன்றவர். நாங்கள் அப்புத்தகத்தை வாசிக்கின்றோம். இப்புத்தகம் நாட்டின் தமிழ் சிங்கள அனைவராலும் அன்போடு நேசிக்கும் புத்தகமாக அமையுமென நம்புகின்றோம்.
நான் யாழ்ப்பாண நேசகி,
சந்தரெசி சுதுசிங்ஹ
மாத்தறையிலிருந்து
sandaraseepriyathma@gmail.com
ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலமையை மேலும் புரிந்து கொள்ளவதற்கு 1970 களில் நிலவிய பூகோள அரசியலை எமது நாடு இலங்கையுடன் இணைத்து பார்போம்…
வல்லரசுகள் ஆசியாவிற்கான நுளை வாயிலாக மத்திய ஆசிய நாடான ஆப்கானிஸ்தானை பாவிக்க முற்பட்ட சம காலத்தில் ஆசியாவின் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையில் அமெரிக்கா தனது செல்வாக்கை நிறுவ முயன்ற நிகழ்வும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அதற்கு ஏதுவாக அன்றைய ஜேஆர் இன் தேர்தல் வெற்றியும் அவரின் அமெரிக்க நலன் சார்ந்த ஆட்சியும் அமைந்தன. இதன் முக்கிய அம்சம் திறந்த பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்தியதும் ஆகும்.
ஜேஆர் அமெரிக்காவிற்கான செய்தித் தொடர்பு நிலையம் ஒன்றை சிலாபத்தில் அமைக்க அனுமதி வழங்க முற்பட்ட நிலையில் இதற்கு இந்தியாவின் பிரதம மந்திரி இந்திரா காந்தி தனது ஆட்சேபனையை தெரிவித்தார். இதனையும் மீறி இலங்கையில் அமெரிக்காவின் பிரசன்னத்திற்கு பச்சை கொடி காட்டிய ஜேஆர் இற்கு பாடம் கற்பிக்க முயன்றார் இந்திரா காந்தி.
சோசலிச சோவியத் முகாமுடன் நெருங்கிய உறவை கொண்டிருந்த இந்திரா காந்தியின் செயற்பாடுகளை ‘இந்திரா காந்தியின் சோசலிச செயற்பாடுகள்” என்று பேசும் அளவிற்கு நிலமைகள் இருந்தன அன்று. அந்த அளவிற்கு சோவித்த யூனியனுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நெருக்கமும் பரஸ்பர இராணுவ பொருளாதார பரிமாற்றங்களும் இருந்தன. இந்தியாவை மீறி இலங்கை விடயத்தில் யாரும் தலையிடுவதை அனுமதிக்காத செல்வாக்கு பலமும் அன்று இந்தியாவிடம் இருந்தது.
இலங்கையில் இன ஒடுக்கு முறையிற்கு உள்ளாகியிருந்த சிறுபான்மை தமிழ் பேசும் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுதல் என்ற முடிவிற்குள் தம்மை தகவமைத்து செயற்பாட்டை தொடங்கியிருந்து 1970 களின் பிற்கூற்று நிலமைகளை இந்திரா காந்தி ஜேஆருக்கு பாடம் கற்பிப்பதற்கு தனக்கு சாதகமாக பாவிக்க முற்பட்டார். இதன் தொடர்ச்சியாக நடைபெற்றவைதான் ஈழவிடுதலை அமைப்புகளுக்கான ஆதரவும் இந்தியாவின் பயிற்சிகளும் ஆகும்.
சற்று ஆழமாக பார்த்தால் புரியும் ஆசியாவிற்கு தமது காலடியை வைக்க மத்திய ஆசியா ஊடாக ஆப்கானிஸ்தானிலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையையும் அமெரிக்கா, சோவியத் யூனியன் என்ற இரு முரண்பட்ட முகாங்களின் வல்லரசுகளும் முனைந்ததன் வெளிப்பாடுகள் 1970 களின் நடுப்பகுதியில் கரு கொண்டிருந்தன. அதற்கான செயற்பாடுகள் இவ்விரு நாடுகளிலும் நடைபெற்றன.
சோவியத் யூனியன் இலங்கையை தனது நட்பு நாடான இந்தியா ஊடாகவும் ஆப்கானிஸ்தானை தனது எல்லை நாடாகவும் பாவித்தது. அமெரிக்கா இலங்கையை தனது வலதுசாரிக் கூட்டாளி ஜேஆர் ஊடாகவும் ஆப்கானிஸ்தானை தனது இராணுவக் கூட்டாளி பாகிஸ்தான் ஊடாகவும் கையாண்டன.
இந்தியாவுடனான பகையை கடன் தீர்க்க பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் முஸ்லீம் அடிப்படைவாத தீவிரவாதத்தை தனக்கு சாதமாக அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் பாவித்தது. கூடவே அமெரிக்காவும் இந்திய சோவியத் நட்பிற்கு பாடம் கற்பிக்க இதனையே பயன்படுத்தியது.
இதன் வெளிபாடுகளும் அமெரிக்காவின் சோவியத்திற்கும் சோசலிசத்திற்கும் எதிரான செயற்பாடுகளை செயற்படுத்த ஆப்கானிஸ்தானின் நஜிபுல்லாவின் அரசை அழிக்க உருவாக்கப்பட்டவைதான் ஆப்கானிஸ்தான் முஹாஜிதீன்களும் அதனைத் தொடர்ந்து உருமாற்றம் அடைந்த தலிபான்களும் ஆகும். இதற்கான முழுப் பொறுப்பும் அமெரிக்கா அதன் கூட்டாளி நாடுகள் நேட்டோவையும் சாரும். இந்த சர்வ தேச பின்னணியின் அடிப்படையிலேயே ஆப்கானின் பிரச்சனையை நாம் பார்க்க வேண்டியுள்ளது.
ஈழவிடுதலை அமைப்புகளில் ஒரு பிரிவினர் இடதுசாரிக் கருத்தியலை தமது அடிநாதமாக கொண்ட செயற்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கு கரம் கொடுப்பது போன்று தனது சொல் கேளாத அமெரிக்காவின் பிரசன்னத்தை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உருவாக முயன்ற இலங்கை அரசிற்கு பாடம் புகட்ட ஆயுதப் பயிற்சியும் ஆதரவும் வழங்கிய நிகழ்வுகளைப் போல் 1970 களின் பிற்பகுதியில் ஆப்கானிஸ்தானில் நடைபெற்றன.
ஆப்கானிஸ்தானில் முழு ஆப்கானித்தானும் முஸ்லீம்கள் என்ற அடிப்படைவாதத்தை முன்னிறுத்தி போராட்டத்தை தகவமைத்தாக பொது பார்வையில் பார்க்கப்பட்டாலும் இங்கும் பஷ்தூன் மக்களின் பெருபான்மை நலன்களை முன்னிறுத்திய போராட்டமாக அது இன்றுவரை பெரும்பாலும் கருக்கொண்டு செயற்பட்டு வருவது கவனத்தில் எடுகப்பட வேண்டிய விடயம்.
பாகிஸ்தான் மதராசா பள்ளியில் கற்ற மாணவர்களின் பிரசன்னம் அதிகம் உள்ள தலிபான்களின் அடிநாதமாக விளங்குவதும் இதுதான். அதுதான் தலிபான்களைத் தவிர்த்து வேறு விடுதலை அமைப்புக்களும் உருவாகி செயற்படுவதற்கான காரணமும் ஆகும்.
இலங்கையில் பெரும்பான்மை பௌத்த சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான சிறுபான்மை மக்களின் போராட்டமாக ஈழவிடுதலைப் போராட்டம் கருக் கொண்டிருந்தது. இங்கு பிரிவினைவாதம் முன் நிறுதப்பட்டதால் தனி நாடு என்று கோரிக்கை சார்ந்த போராட்டம் ஒரளவிற்கு மேல் சோவியத் இந்திய ஆதரவுச் செயற்பாடுகள் க(ம)ட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருந்தன.
1970 களில் தாம் சீனச் சார்பான இடதுசாரிக் கருத்தியலாளர்கள் என்ற வடிவத்தில் தமிழ் பேசும் மக்களை இணைத்துக் கொள்ளாமல் முழு இலங்கையிற்குமான புரட்சி என்று போதுமான அளவு தயாரிப்புகளில் ஈடுபடாத ஜேவிபின் இலங்கையின் அரசை கைப்பற்றும் புரட்சி இந்திய இராணுவத்தின் உதவியுடன் தோற்கடிக்கப்பட்டதன் பின்னணியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் பேசும் மக்களையும் இணைத்துக் கொண்டு போதிய தயாரிப்புகளுடன் சோவியத் சார்பு நிலைப்பாட்டுடன் புரட்சி ஒன்றை இலங்கையில் நடாத்தியிருந்தால்…. ஜேவிபின் இலங்கை அரசைக் கைப்பற்றுதல் வெற்றி பெற்றிருக்குமோ என்ற கருதுகோளை புறந்தள்ள முடியவில்லை.
அன்றை அமெரிக்க சோவியத் இந்தியா சீனாவின் அரசியல் ஒழுங்குகள் இதற்கான வாய்புக்களை அதிகம் கொண்டிருந்தன.
இங்கு ஜேவிபி பிழையான தந்திரோபாய அடிப்படையிலும் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்து ஆனால் கிட்டத்தட்ட சம காலத்தில் ஆப்கானிஸ்தானில் ஆப்கானிய கம்யூனிஸ்ட்களின் மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றியும் இடதுசாரி ஆட்சியும் அமைந்ததற்கான வாய்புகளையும் நாம் இவ்வாறுதான் இலங்கை நிலமையில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.
இந்த சமாகால பூகோள, பிராந்திய, ஆசிய, இந்து சமுத்திரச் சூழலை அடிப்படையாக கொண்டுதான் ஆப்கானிஸ்தான் வரலாறு. நஜிபுல்லாவின் கொலையும் அதனைத் தொடர்ந்த உள்ள நாட்டுப் போரின் இறுதியில்தான் 1996 ல் தலிபான்களின் முதல் தவணை ஆட்சி ஆப்கானில் உருவானது.
இது முஹாஜீதீன்கள் பஷ்தூன்களை பெருபான்மையாக கொண்ட பழங்குடி மக்கள் பாகிஸ்தான் மதராசில் கல்வி கற்ற மாணவர்களை கொண்டு உருவானவர்களால் தலிபான என்ற அமைப்புதான் அது. இதற்கான தலமைப் பொறுப்பை முஹாஜீதின் தலமைப் பொறுப்பில் இருந்த முகமது உமர் நியமிக்கப்பட்டார்.
இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை அடி நாதமாக கொண்டு உருவான அரசு பல வகையிலும் அந்த மக்களுக்கான சரியான ஆட்சியை வழங்கவில்லை. ஆப்கானிஸ்தானில் வாழும் பலவேறு இனக்குழுக்ளை ஒருங்கிணைத்து சமமாக கையாளுதல் ஆண் பெண் சத்துவம் குறிப்பாக பெண்களுக்கான கல்வி உரிமை உட்பட்ட சகலதையும் மறுத்த நிலமை ஆட்சியில் கோலோச்சியது.
போதை பொருட்களை உலக சந்தையில் அதிகம் ஊக்கிவித்த உற்பத்திச் செயற்பாடுகள்… பாகிஸ்தானின் இஸ்லாமிய மத அடிப்படைவாத தீவிரவாத்தை ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல்…. இதில் அனேகம் அமெரிக்காவின் வேண்டுதலை பாகிஸ்தான் ஊடாக செயற்படுத்தியவை அடங்கும இந்தியா மீதான இஸ்லாமிய மத அடிப்படைவாதத் தாக்குதல்கள் என்று பலதையும் செயற்படுத்தும் ஒரு தளமாக ஆப்கானிஸ்தானும் அதன் தலிபான் அரசும் செயற்பட்டன.
மாறாக பல வருடங்களாக யுத்தம், வல்லரசுகளினால் உருவான ஸ்திரமற்ற அரசு என்று சின்னா பின்னப்பட்டுப் போன நாட்டை கட்டியமைக்க அவர்களால் முடியவில்லை. கூடவே அவர்களுக்கு நேரடி ஆதரவுக்கரமான பாகிஸ்தானின் விருப்பமும் அதுவாக இருக்கவில்லை.
மதத் தீவிரவாதத்தின் தீவிரவாதிகளின் முகாங்களை அமைக்க உதவும் ஒரு நிலமாக மலைப் பிரதேசமாக அதிகம் ஆப்கானிஸ்தான் பாவிக்கப்பட்டது.
ஒரு ஜனநாயக முற்போக்கு மக்கள் நலன்சார்ந்த அரசை செயற்பாட்டை தலிபான்கள் முன்னெடுக்கவில்லை. இதனை மாற்றயமைக்கும் வல்லமையும் மக்களிடம் இருக்கவில்லை. தலிபான்களுக்கு எதிராக செயற்பட்ட ஏனைய சிறுபான்மை மக்களை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்திய வடக்கு கூட்டணியும் இதனை செய்து முடிக்க முடியவில்லை.
இந்நிலையில் 9/11 என்று அறியப்பட்ட அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலும் இதனைச் செயற்படுத்தியதாக உரிமை கோரிய அல்கைதாவின் இருப்பிடம் ஆப்கானிஸ்தான் என்றும் அமெரிக்காவினால் கூறப்பட்டு பின் லாடனை தம்மிடம் ஒப்படைக்குமாறு தலிபான்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு பின்னால் வளங்களை திருடுவதற்கான சந்தர்பங்களைப் பார்த்திருந்தி அமெரிக்க அரேபிய எண்ணையும் ஆப்கானிஸ்தான் மலைகளில் செறிந்திருக்கும் 7 ட்ரிலியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலான வளங்களையும் திருடுவதற்கு இரட்டைக் கோபுரத் தாக்குதலின் சூத்திரதாரி ஒசமா பின் லாடன் ஆப்கானிஸ்தரின் மறைந்திருப்பதாக கூறிக் கொண்ட ஆப்கானிஸ்தானிலும்… அபாயகரமாக இரசாயன ஆயுதங்களை வைத்திருக்கின்றார், சதாம் குசைன் என்று ஈராக் மீதும் படையெடுத்து.
இத்தனைக்கு வரலாற்றுப் போக்கில் ஒசமா பின் லாடன் சவூதியரேபிய பிரஜை மேலும் அவர் கொல்லப்பட்டது அமெரிக்காவின் உற்ற இராணுவத் தோழன் பாகிஸ்தானில். இவ்விரு நாடுகளுடனும் இன்று வரை அமெரிக்கா நல்ல நண்பன் என்ற உறவிலேயே இருக்கின்றது என்பது வேடிக்கையான விடயம். மனித குலம் அமெரிக்காவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டியது இந்தக் குற்றங்களின் அடிப்படையில் என்பதுதான் இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயம்.
என்னென்ன காரணங்களுக்காக அமெரிக்கா தனது படைகளை அனுப்பி ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் லிபியாவை கைபற்றியேதா அவை ஏதும் உண்மை இல்லை என்றாகிவிட்ட நிலையில் ஐ.நா.வின் மனித உரிமை சபையில் இந்த குற்றங்களை புரிந்தமையிற்காக அமெரிக்க ஐரோப்பிய நேட்டோ கூட்டமைப்பை நிறுத்தப் போவது யார்…?
இவ்வாறான பூகோள அரசியல் நிலமையில் இலங்கை மக்கள் சிறப்பாக தமிழ் பேசும் மக்கள் தமக்கான அரசியல் தீர்வை இதே அமெரிக்கா அதன் நட்பு சக்திகள் பெற்றுக் கொடுக்கும் என்று இலவுகாத்தி கிளியாக இருப்பது ஆப்கானிஸ்தான் பாடங்களை நாம் புரியாதவர்கள் என்றே ஆகிவிடும்.
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!
அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!
தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 03 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.
பாகம் 3
தேசம்: இளந்தளிர் வாசகர் வட்டம் தொடர்பில் கதைத்திருந்தோம். அந்த நேரம் உங்களுக்கு கிட்டத்தட்ட 15 வயது வந்திருக்கும். அந்த காலகட்டத்தில் உங்களுடைய தந்தையார் இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அப்போது எத்தனை வயது உங்களுக்கு?
அசோக்: அப்பா இறக்கும் போது, எனக்கு பத்து வயது இருக்கும் என்று நினைக்கிறன்.
தேசம்: அது ஞாபகம் இருக்கா உங்களுக்கு…
அசோக்: பெரிதாக ஞாபகம் இல்ல. கொஞ்சம் ஞாபகம் இருக்குது. அப்பாக்கு தொடர்ந்து அஸ்மா தான். மட்டக்களப்பில் செல்லையா டாக்டர் என்று ஒருத்தர் இருந்தார். டிசம்பர் மாத காலத்தில், அப்பா எங்கட வீட்டில் இருக்கிறேல. Paying ward என்டு காசுக்கட்டி, செல்லையா டாக்டரிட வார்டில அப்பா அட்மிட் ஆகிடுவார். அந்தக் காலம் அங்கதான் அப்பா இருப்பார். ஏனென்றால் மார்கழி மாதக்குளிரில் அப்பாவுக்கு வருத்தும் கூட.
தேசம்: அந்த காலகட்டத்தில அப்பா ஓய்வு பெற்றுவிட்டாரா?
அசோக்: ஆம். அப்பா ஓய்வு பெற்றிட்டார். செல்லையா டாக்டரிட வாட்டிலதான் அப்பா இறந்தார். அம்மாவின் மடியில்தான் அப்பா இறந்தாக, அம்மா சொல்ல கேள்விப்பட்டுள்ளேன். நான் கடைசி ஆள் என்றபடியால், நான்தான் கிரியை செய்ய வேண்டும். அப்ப மொட்டையடித்து கொள்ளி வைத்தது அதெல்லாம் ஞாபகம் இருக்கு.
தேசம்: அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையிலான உறவு நிலையை எப்படிப் பார்க்கின்றீர்கள்? அவர்கள் விரும்பித் தான் செய்தவை. அவர்களுக்குள் சமத்துவம் இருந்ததா?
அசோக் : அப்ப தெரியல. ஆனால் இப்ப பார்க்கேக்கை, அப்பாட்ட ஒரு அதிகாரத்தனம் இருந்தது. தலைமை ஆசிரியரும் தானே அப்பா. அரசியல் ரீதியாக அப்பா ஒரு தமிழ்த் தேசியவாதியாகவும், பெரியாரிஸ்டாக இருந்தாலும், கூட வீட்டில ஒரு சட்டம்பியாகத்தான் இருந்தார். எனக்கு தெரிய படங்கள் எல்லாம் அவர் சொல்ற படங்கள் தான் அக்காக்கள் பார்க்க வேண்டும்.
தேசம்: பெண்களை பாதுகாக்கிற ஒரு எண்ணம்…
அசோக்: ஓம், சிவாஜி படங்கள் தான் பார்க்க வேண்டும். வேறு யாருடைய படங்களையும் பார்க்க கூடாது.
தேசம்: தன்னுடைய விருப்பங்கள் சார்ந்து செய்றார்.
அசோக் : சத்தியாகிரக போராட்டத்தில் அம்மா திருகோணமலைக்கு ஊர்வலமாக போனார் என்பது எங்களுக்கு முற்போக்காக பட்டாலும் கூட அது, அப்பாவினுடைய அபிலாஷையாகத்தான் இருக்க முடியும் என்று நான் நினைக்கிறன். அம்மா விரும்பி இருக்கலாம். ஆனால், அம்மாவுக்கு பெரிய ஒரு சுதந்திர வெளி இருந்ததாக தெரியவில்லை. ஆனால், அதற்காக அடக்குமுறை அடிப்பது அதுகள் இல்லை. ஆனா ஒரு ஆணாதிக்க தனம்தான் அப்பாவிடம் இருந்தது. அதிகார சட்டம்பித்தனந்தான் குடும்பத்தில் இருந்தது.
தேசம்: பெரும்பாலான முற்போக்கு பேசுபவர்களின் குடும்பங்களிலும் அதுதானே இன்றும் நிலைமை. அது அம்மாவை பாதிக்கும் விதமாக இருக்கவில்லை…
அசோக்: அப்படி இருக்கவில்லை. இதைவிட பெரிய பிரச்சினை கொடுக்கக்கூடிய ஆளாக நான் தான் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். என்னொரு விடயம் என்னென்றால், எங்கள் வீட்டில் அண்ணாக்கள் எல்லாருடையதும் காதல் திருமணம். அண்ணிமாரைத் திருமணம் செய்து அவங்கள்தான் அனைத்து பொறுப்பையும் பார்க்குற ஆட்களா இருந்தார்கள். அந்நேரம் அப்பா எதிர்ப்பு காட்டினாலும் கூட, காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஆளாக மாறிட்டார்.
தேசம்: திருமணத்தை தடுத்து நிறுத்தக்கூடிய அளவுக்கு எல்லாம் போகேலை
அசோக்: இல்லை
தேசம்: அப்பா இல்லாத காலத்தில் அந்தக் கால சமூகத்தில் ஆண் இல்லாமல் குடும்பத்தை கொண்டு நடத்துவது அல்லது முன்னுக்கு கொண்டுவருவது என்பது மிக கஷ்டமாக இருந்திருக்கும். நீங்கள் ஏழு வயதாக இருக்கும் போதே அப்பா இறந்துட்டார். அதற்குப் பிறகான உங்களை வளர்த்தெடுப்பதில் அம்மாவின் உடைய பங்கு எப்படி?
அசோக்: 7 வயதில்லை. எனக்கு அப்போது 10 வயது இருக்கும். அப்பா இறக்கும் போது அண்ணாக்கள் ஓரளவு வளர்ந்துட்டாங்க . ஆனா யாருக்கும் உத்தியோகம் இல்லை. அப்பாவினுடைய பென்ஷன் இருந்தது. காணிகள் வருமானங்கள் இருந்தது. அப்பா இறந்ததற்கு பிறகு என்ன நடந்தது என்றால் அப்பா அரசியல் நடவடிக்கைகள் சார்ந்து நிறைய கடன் பட்டிருந்தார். அப்பா நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார்.
எங்களுக்கு காணி, பூமி நிறைய இருந்ததால் அதை வைத்துதான் காலப்போக்கில் கடன்கள் எல்லாம் அடைத்தோம்.
78 ல் மட்டக்களப்பில் சூறாவளி வரும் வரைக்கும் தென்னந்தோப்பால் பெரிய வருமானம் இருந்தது. பொருளாதார ரீதியாக பெரிய பிரச்சனை இருக்கவில்லை. அம்மாவுக்கு நான் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற விருப்பம் நிறைய இருந்தது. 5ம் வகுப்பு கொலர்சிப்பில் பாஸ் பண்ணும் அளவுக்கு திறமை இருந்தது. ஆரம்ப இளம்வயதில் விளையாட்டுத்தனம் இருந்தாலும் இடைக்காலத்தில் நல்ல மாணவனாக நான் இருந்தேன். கிருஸ்ணபிள்ளை சேர், இவர் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்தவர். என்னில் பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். இப்படித்தான் அம்மாவும்.
என் சிந்தனைகளும், போக்கும் அவங்களுக்கு நிறைய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என இப்ப நினைக்கிறன்.
தேசம் : அந்த நேரம் அப்பா தமிழரசுக்கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்திருக்கின்றார். அந்த காலகட்டத்தில் அப்பாவின் இழப்பு தமிழரசுக்கட்சி க்கு எப்படி இருந்தது?
அசோக்: தமிழரசுக் கட்சிக்கு அப்பாவினுடைய இழப்பு பெரிய ஒரு இழப்பாக இருக்கவில்லை. ஏனென்றால் அதை ஈடு செய்வதற்கு அவர்கள் இன்னொருவரை தேர்ந்தெடுத்து இருப்பார்கள்.
தேசம் : அவருக்கான கௌரவத்தை கொடுத்ததாக இல்லை?
அசோக் : இல்லை அப்பா தமிழரசுக்கட்சியை நேசித்தாரேயொழிய, தமிழரசுக்கட்சி அப்பாவை பயன்படுத்தியது. அது எனக்கு காலப்போக்கில் தெரியவந்தது. எனக்னொரு அத்தான் இருந்தார். இரா. பத்மநாதன் என்று பேர். சுதந்திரன் பத்திரிகையில் எஸ் .டி. சிவநாயகம் ஆசிரியராக இருந்த காலத்தில் அத்தான் அதன் துணை ஆசிரியராக இருந்தார். மட்டக்களப்பு எம்பியாக இருந்த இராஜ துரையின் வகுப்புத் தோழன். மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்காக மிகக் கடுமையாக உழைத்தவர். அத்தான், அப்பா போன்றவர்கள் பயன்படுத்தப்பட்டார்களே தவிர, எந்த கௌரவமும் அவர்களுக்கு கிடைக்கல்ல.
தேசம் : அதை எப்படி பார்க்குறீர்கள்? ஏன் அந்த உணர்வு உங்களுக்கு வருகிறது? நீங்கள் எந்த காலத்திலும் தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து வேலை செய்யவில்லை?
அசோக் : இல்லை. அண்ணாக்கள் தமிழரசுக் கட்சியுடன் மிகத் தீவிரமாக இருந்தவர்கள். ஒரு அண்ணன் இருக்கிறார் அவர் இப்போதும் தீவிரமான தமிழரசுக் கட்சிதான். எங்க குடும்பம் தமிழரசுக் கட்சி குடும்பமாக தான் எப்பவும் இருக்கிறது. எனக்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவங்களின்ர காலத்தில் இருந்த அரசியல் நோக்கமும், போராட்ட உணர்வும் தமிழரசுக் கட்சியிடம் இல்லாமல் போய் விட்டது. அவர் உண்மையாகவே தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும், மலையக மக்களுக்குமான தீர்வை விரும்பினார். முதன் முதலில் முஸ்லிம் மக்களுக்காக தனிஅலகுக் கோரிக்கையை முன்வைத்தவர் அவர்தானே. முஸ்லிம் தமிழ் உறவை வளர்த்தவர். ஆனா, என்ன செய்வது வேறு தேர்வுகள் இல்லை. தமிழ் அரசுக் கட்சிதான் இருக்கிற திருடர்களில் நல்ல திருடனாக இருக்கிறது.
தேசம்: இந்த இளந்தளிர் வாசகர் வட்டம் தான் உங்களுடைய அரசியலின் அரும்பு நிலை என்று நினைக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் எப்படியான அரசியலை நீங்கள் தேர்வு செய்கின்றீகள்?
அசோக்: இளந்தளிர் வாசகர் வட்டத்துக்குள் இருக்கும்போது அப்ப 71 ஆம் ஆண்டு ஜனதா விமுக்திப் பெரமுன ஜே.வி.பி யின் ஆயுதப் புரட்சி நடக்குது.
தேசம்: அது தொடர்பாக உங்களுக்கு ஏதும் ஞாபகம் இருக்கின்றதா?
அசோக்: அது ஞாபகம் இருக்குது. அம்பாறையில் சென்றல் கேம் என்ற இடத்தில் ஒரு சிறைச்சாலை உருவாக்கி அங்கு அட்களை கொண்டு போனார்கள். அது மட்டக்களப்பிலிருந்து எங்கட ரோட்டாலதான் போனது. அப்பா சின்ன வயசுல நாங்க ….. கொண்டு போறாங்க என்று ஆட்கள் போய் பார்த்தவங்க. அந்த ஞாபகம் இருக்கு.
தேசம்: ஜே.வி.பி தொடர்பான பிரமிப்பு ஒன்று அந்த நேரம் இருந்திருக்கு…
அசோக் : அதுக்குப் பிறகு என்ன நடந்தது என்றால். 1977 ம் ஆண்டு இது நடக்குது. ஆறு வருஷத்தால ஜே.வி.பி வெகுஜன இயக்கமாக. ஜனநாயக முறைக்குத் திரும்புவதாக அறிவித்து அவங்கள் தங்களை பிரகடனப்படுத்துறாங்கள்.
78ஆம் ஆண்டு அவங்களுடைய கொள்கைப் பிரகடனம் தமிழில் வருது. இந்தப் பிரகடனத்தை படிக்கிறம் நாங்கள். ரஷ்யப் புத்தகங்களைப் படித்தது. கியுபா புரட்சி, வியட்நாம் போராட்டம் சேகுவேரா, பெடல் கஸ்ரோ, மார்க்சீய சித்தாந்தம் தொடர்பில் எங்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்ததுதானே. அந்தக் கொள்கை பிரகடனம் எங்களை கவர்ந்தது.
இலங்கையில் ஒரு வர்க்கப் போராட்டத்தை கொண்டு வரலாம் ஒரு முழுமையான புரட்சி என்ற சிந்தனை எங்களுக்கு இருந்தது.
தேசம்: கிட்டத்தட்ட 77 ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே உங்கட பார்வை ஒரு இடதுசாரி பார்வையாக வந்திட்டுது.
அசோக்: ஆம் ஏனென்றால் மாக்சிச புத்தகங்கள், ரஷ்யா நாவல்கள்: தாய், வீரம் விளைந்தது எல்லாம் படிக்கத் தொடங்கிவிட்டோம். லைபிறரில இந்த புத்தகங்கள் எல்லாம் வாரது தானே. அதால ஓரளவு இடதுசாரி அரசியல் எங்களுக்குள் உருவாகிவிட்டது. அதால தான் நாங்கள் அந்த கொள்கை பிரகடனத்தை படித்தவுடனேயே அதிலும் இலங்கையில் வர்க்கப் போராட்டம், தொழிலாளர் புரட்சி என பல்வேறு விடயங்கள் கதைக்க பட்டிருந்தது.
அப்ப நான் என்ன செய்தேன் என்றால் அந்த புத்தகத்தைப் படித்துவிட்டு, லயனல் பொபேகேவுக்கு கடிதம் எழுதுறன். அதுல ஒரு அட்ரஸ் போட்டிருந்தது. உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகின்றோம் என அனுப்பிட்டன். அனுப்பி ஒரு பதினைந்து இருபது நாள் போக அந்த கடிதத்தோடு தோழர் முபாரக் என்றவர் வீட்டில் வந்து என்னை சந்திக்க வாரார். நீங்கள் தோழருக்கு கடிதம் எழுதி இருந்தீங்க. உங்களோட கதைக்க வந்துள்ளேன் என்றார். அப்பதான் ஜனதா விமுக்திப் பெரமுனவுக்கும் எனக்கும் தொடர்பு ஏற்படுகிறது. பிறகு நாங்கள் தோழருடன் எல்லா நண்பர்களும் சந்தித்து வகுப்பெடுத்து…
தேசம்: நீங்கள் சொல்வது தனிப்பட்ட முறையிலா அல்லது இளந்தளிர் வாசகர் வட்டமாகவா?
அசோக்: இளந்தளிர் வாசகர் வட்டம்தான். நாங்கள் அவங்களுடைய கொள்கைப் பிரகடன த்தை படித்துவிட்டு தொடர்பு கொள்ளலாம் என்று முடிவெடுத்த பின்பு நான்தான் அந்த கடிதத்தை எழுதுறன். அவர் வந்து எங்களை சந்தித்த பிறகு கேள்விகள் கேட்கிறம். அந்தக் கேள்விக்கு எல்லாம் அவர் பதில் அளித்த பிறகு எங்களுக்கு சேர்ந்து வேலை செய்யலாம் என்று நம்பிக்கை வருது. எங்களுடைய முதல் வேலை போஸ்டர் ஒட்டுறது. துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது.
தேசம்: நீங்கள் சொல்லுகின்ற இதே காலகட்டத்தில் நீங்கள் ஜேவிபி சார்பாக போறீங்க அதே நேரம் உங்கட குடும்பம் வந்து தமிழரசு கட்சியுடன் தமிழ்தேசியத்தோட ஐக்கியமாகி இருக்கு. இதே காலகட்டத்தில் தான் வடக்கில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பாக நீங்கள் அந்த காலத்தில் ஏதும் அறிந்திருந்தீர்களா?
அசோக்: அப்பா சுதந்திரன் பத்திரிகை தொடர்ச்சியாக எடுக்கிறவர். அப்பா இறந்த பின்பும் சுதந்திரன் பத்திரிகை வீட்டுக்கு வாரது. அதற்கூடாக நாங்கள் அறிந்திருக்கிறோம்.
தேசம்: அறிந்திருந்தும் தான் நீங்கள் அங்கு செல்கிறீர்கள்?
அசோக்: ஓம். எனக்கு தமிழரசு கட்சியின் மீதான வெறுப்பு நிலை இருக்குதானே. இப்போ நினைத்துப் பாத்தா தமிழரசுக் கட்சி மீதான வெறுப்பு நிலையை விட அது கட்சி சார்ந்த எம் பிக்களின் போக்குகள் நடத்தைகள் காரணமாக வந்திருக்கும் எண்ணுகிறன்.
தேசம்: நீங்கள் ஒரு தமிழ் தேசிய அரசியல் குடும்பத்தில் இருந்து கொண்டு இடதுசாரி அரசியலை எடுக்கிறீர்கள். அதேநேரம் இடதுசாரி அரசியலை படிச்சுப்போட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பா தமிழ்த்தேசிய அரசியலுக்க போனவர்கள் இருக்கிறார்கள் தானே. இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
அசோக்: அவர்கள் உண்மையான இடதுசாரி கருத்துக் கொண்டவர்களாக இருந்திருக்கெலாது. இருந்திருந்தால் புலி அரசியலுக்குள் போய் இருக்க முடியாது. இயக்கங்களை தேர்ந்தெடுத்து அங்கு போனதற்கு ஒவ்வொருவருக்கும் அரசியல் காரணங்கள் இருக்கு. அவங்ளின்ர அரசியல் வர்க்க நிலையும் இத தீர்மானிக்கும்தானே.
தேசம்: உங்களுக்கு ஜேவிபியோட இருக்கிற அரசியல் உறவிலிருந்து எப்படி நீங்கள் விடுபட்டீர்கள் பிறகு?
அசோக் : ஜே.வி.பியோட நாங்கள் தீவிரமாக வேலை செய்திருக்கிறோம். பாசறைக்கெல்லாம் போய் இருக்கின்றோம். படுவான்கரையில் ஒரு கிராமத்துல வீடெடுத்தனாங்கள். நாங்க ஒரு பதினைந்து இருபது தோழர்கள் போய் அங்கேயே தங்கி ஒரு வாரம் நின்று வகுப்பெடுத்து மிகத் தீவிரமாக இருந்தனாங்கள்.
அந்தக் காலகட்டத்தில் எங்களுக்கு முபாரக், உதுமாலெப்பை என்ற ஒரு தோழர் அவர் வந்து கொழும்பு மாவட்டத்தில் ஜேவிபினுடைய மாவட்ட சபை உறுப்பினராக இருந்தவர் என்று நினைக்கிறன். வகுப்பெடுத்தார்கள். முஸ்லிம் தோழர்கள் நிறைய பேர் ஜே.வி.பியில இருந்ததாங்க… அதுதான் மிகவும் ஆச்சரியமான விடயம். எங்களுக்கு வகுப்பெடுத்த 3 – 4 தோழர்கள் முஸ்லிம்கள். ஒரு தமிழ் தெரிந்த சிங்களத் தோழர். சிங்கள தோழர்கள் எடுக்கிறதை இவர்கள் மொழிபெயர்ப்பார்கள்.
தேசம்: மட்டக்களப்பில் தமிழ், சிங்களம், முஸ்லிம் சமூகமும் இருந்தபடியால் தான் ஜே.வி.பியினுடைய ஆதிக்கம் அங்கு வருதா? வடக்கில் நான் நினைக்கல இப்படியொரு ஆதிக்கம் இருந்தது என்று.
அசோக்: வடக்கில் இடதுசாரி கட்சிகள், இயக்கங்கள் இருந்தபடியால் அந்த இடத்தை ஜே.வி.பியால் நிரப்ப முடியவில்லை.
எங்களுக்குள்ள இடதுசாரித் தாக்கம் ஒன்று இருந்தபடியால் எங்களுக்கான இடம் வந்து ஜே.வி.பியாத்தான் இருந்தது. யாழ்ப்பாணத்தில இருந்த கம்யூனிஸ்ட் பார்ட்டி வேற ஏதும் வந்திருந்தால் நாங்கள் அவர்களுடன் சேர்ந்து இருப்போம்.
இடதுசாரி இயக்கம் வந்து, வர்க்கப் போராட்டம் என்று வந்திருந்தால், நாங்கள் அதற்குத்தான் போயிருப்போம். ஆனால் கிடைத்தது ஜே.வி.பி தான். பிறகு என்ன நடந்தது என்றால் அனுராதபுரத்தில் இனக்கலவரம் நடந்தது. அதற்குப் பின்னால் ஜே.வி.பி முக்கிய பங்கு வகித்தது என்ற ஒரு கதை வந்தது. அந்த கதை தொடர்பான உரையாடல்தான் எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் முரண்பாடு வந்தது. பிறகு நாங்கள் அவர்கள் ஒரு இனவாதக் கட்சி தான் என்ற முடிவுக்கு வாறம். அதுல இருந்து நாங்க ஒதுங்குறம்.
தேசம்: ஜேவிபியினுடைய நீங்கள் சொன்ன ஐந்து பாடத்திட்டத்தில் ஒன்று இந்திய எதிர்ப்பு என்று நினைக்கிறேன்
அசோக்: அது எங்களுக்கு எடுக்கப்படவில்லை இந்திய விஸ்தரிப்புவாதம் என்ற அந்த வகுப்பு எங்களுக்கு இல்லை.
தேசம்: தமிழ் மக்களுக்கு எதிரான அந்த பகுதியே எடுத்துட்டாங்க
அசோக்: எடுத்திட்டாங்கள். வகுப்பில வந்து வந்து சுயநிர்ணய உரிமை பற்றி. தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் சம உரிமை, சமத்துவம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம்… சோசலிசம் இப்படி அரசியல் வகுப்புக்கள் இருக்கும். அவர்கள் எங்களுக்கு எடுக்காமல் விட்ட இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற வகுப்பு, மலையக மக்களுக்கு எதிரான இனவாதம் கொண்டது என்பதை அவர்களை விட்டு வந்த பிறகு அறிந்து கொண்டோம். ஜே.வி.பி இடது சாரி போலிமுகம் கொண்ட மோசமான இனவாதக்கட்சி.
தேசம் : கிட்டத்தட்ட 77ஆம் ஆண்டு காலகட்டம் என்றால் நீங்கள் ஜி.சி.இ எடுக்கிற காலகட்டம் என்று நினைக்கிறன்.
அசோக்: ஆம். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. சனி ஞாயிறு தான் எங்கடை சந்திப்புகள் எல்லாம் நடக்கும். ஒரு பாடசாலை விடுமுறை காலத்தில் தான் நாங்க பாசறைக்கு போனோம்.
தேசம்: பாசறை எங்க நடந்தது என்று சொன்னீர்கள்?
அசோக்: அது படுவான்கரையில் விவசாய நெல் காணியில் ஒரு வீடு எடுத்து, அங்கேயே தங்கி சமைச்சு சாப்பிட்டு அங்குதான் வகுப்பு நடந்தது.
தேசம்: இப்ப இந்த ஜே.வி.பியின் பிரச்சனைக்குப் பிறகு உங்களுக்கு இடைவெளி ஒன்று வரப்போகுது…
அசோக்: நாங்கள் என்ன செய்த என்றால் வெளியேறிவிட்டு, இளந்தளிர் வாசகர் வட்டம் , விளையாட்டுகள் என்று திரியிறம். இக் காலங்களில தேசிய இளைஞர் சேவை மன்றத்தோடும் நாங்க இருக்கம். அப்ப மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகஸ்தராக செட்டிபாளையத்தைச் சேர்ந்த செல்வநாயகம் அண்ணர் பொறுப்பாக இருந்தார். அவர் எங்களுக்கு நிறைய உதவிகள் செய்தார். அவர்கள் நடாத்தும் விளையாட்டு முகாம், தலைமைத்துவ பயிற்சி நெறி, சிரமதானம் என்று இதிலையும் ஈடுபடுகின்றோம். இந்த டைமில தான் 77 கலவரம் முடிந்து 78 என்று நினைக்கிறேன் காந்திய வேலைத்திட்டங்கள் அங்க மட்டக்களப்பு பிரதேசங்களில தொடங்குது.
தேசம்: 77 கலவரம் என்ன மாதிரி உங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது? அதுல கொஞ்சம் நீங்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?
அசோக்: அதை ஒரு இனவாதமாகத்தான் நாங்கள் பார்த்தனாங்கள். அதுல வந்து ஜே.வி.பி பெரிய ஈடுபாடு கொண்டிருந்தது என்பது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இடதுசாரி இயக்கமே அதுல பின்னணியாக இருந்தது என்பது பெரிய தாக்கமாக ஏமாற்றமாக இருந்தது. அது தாக்கத்தை கொடுத்தபடியால்த்தான் நாங்கள் காந்தியத்தோட வேலை செய்யத் தொடங்கினாங்கள். மக்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களோடு வேலை செய்ய வேண்டும். அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வு இருந்தது.
தேசம்: அப்பவும் தமிழ்தேசியத்தோடு அதற்கு போவதற்கு நீங்கள் விரும்பவில்லை?
அசோக் : இனவாதம், தேசிய இனப்பிரச்சனை, புறக்கணிப்புக்கள், தமிழர் மேலான வன்முறைகள், உரிமை மறுப்பு, கொடுமைகள் தொடர்பாய் எங்களுக்கு பார்வைகள் எண்ணங்கள் இருந்தன. திட்டமிட்ட சிங்கள குடியேற்ற திட்டங்களான கல்லோயா, கந்தளாய் பற்றியெல்லாம் அப்ப அறிந்திருந்தோம். தனிநாட்டுக் கோரிக்கை தொடர்பாக எங்களுக்கு அந்த ஐடியா இருக்கவில்லை. காசி ஆனந்தனின் பேச்சுக்கள் உணர்ச்சியூட்டக்கூடிய பேச்சுக்கள் எல்லாம் எனக்கு அந்த நேரமே அலர்ஜியாகத்தான் இருந்தது. அமிர்தலிங்கம் மங்கையர்கரசியின் பேச்சுக்களெல்லாம்… எப்பவுமே நான் இந்தக் கூட்டங்களில் ஆர்வம் காட்டியதில்லை.
தேசம்: அது முக்கியம் ஏனென்றால் அந்தப் பதின்ம வயதில் பெரிய அரசியல் விழிப்புணர்வு ஒன்று இருந்திருக்காது. இருந்தும், அது ஒரு சலிப்புத் தாற, உண்மைக்குப் புறம்பான விடயமாகத் தான் நீங்கள் பார்க்கிறீர்கள்?
அசோக்: காசி ஆனந்தனின் பாட்டெல்லாம் இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை கொடுத்தது ஆனால் எனக்கு எவ்வித தாக்கத்தையும் கொடுக்கவில்லை. இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை இலங்கைத் தொழிலாளர்களின் வறுமைப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது தமிழரசுக் கட்சியால் முடியாது என்பது அந்த வயதில் இந்த எண்ணம் எங்களிடம் இருந்தது. எங்க கிராமத்தில் தமிழரசுக் கட்சிக்கு செல்வாக்கு இருந்தது. எங்கள் மத்தியில் அது பெரிய தாக்கத்தை கொடுத்ததாக தெரியவில்லை. எனக்கு தெரிய மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி எம்பி மார்களின் குடும்பம் ஊழல் கொண்டதாகவே இருந்தது.பணம் ஒன்றே அவர்களின் குறிக்கோளாக இருந்தது.