கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

வவுனியா மனிக்பாம் நிவாரண கிராமங்களில் 200 விடுதலைப்புலிகள் சரண்

saran.jpgமோதல் இடம்பெறும் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா மனிக்பாம் நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களிலிருந்து விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என தெரிவிக்கப்படும் 200 பேர் இராணுவத்தினரிடம் சரணடைந்திருப்பதாக பாதுகாப்பு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள இவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படும் என்றும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்தோர் மறுவாழ்வுக்கு உதவ நிதிவளம் இல்லை என்கின்றன உள்ளூர் தொண்டு நிறுவனங்கள்

ngo.bmp
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களின் மறுவாழ்வுக்கு உதவுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் நிராகரித்துள்ளன.  நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களுக்கு உதவி வழங்கக்கூடிய நிதிவளம் தங்களிடம் இல்லை என அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று  தகவல் வெளியிட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கான மறுவாழ்வுத்திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உள்ளூர் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளை அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்தரையாடினார்.

ஒவ்வொரு நிறுவனமும் தம்மாலான உதவிகளை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். என்றும்  நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களிற்கு உதவக்கூடிய வகையில்  நிதிவளம் தங்களிடம் இல்லை என்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கும் சிறிய நிதிகளைக் கொண்டு தாம் சிறு சிறு திட்டங்களை நடை முறைப்படுத்தி வருவதாகவும் உள்ளூர் தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறினர். உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் போதிய நிதி வளங்களுடன் செயற்படக் கூடிய திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தார் என்று கொழும்பு ஊடகம் தனது செய்தியில் விவரித்துள்ளது.

நளினியை பிரியங்கா சந்தித்த பிறகே இலங்கையில் போர் தீவிரமடைந்தது – ஜெயலலிதா

j-j-j.jpgவேலூர் சிறைக்கு வந்து நளினியை பிரியங்கா காந்தி சந்தித்து விட்டுச் சென்ற பின்னர்தான் இலங்கையில் தமிழர்கள் மீதான போர் தீவிரமடைந்துள்ளது. எனவே சிறையில் பிரியங்காவுக்கும், நளினிக்கும் இடையே நடந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பதை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் நேற்று மாலை பிரசாரக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகையில்,

ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வேலூர் சிறைக்கு சென்று ராஜீவ் கொலையாளி நளினியை சந்தித்தன் மர்மம் என்ன?. இந்த சந்திப்பிற்கு யார் அனுமதி கொடுத்தது?. இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள்?. பிரியங்கா-நளினி சந்திப்பிற்கு பிறகு தான் இலங்கை தமிழர்கள் மீதான அந்த நாட்டின் ராணுவ தாக்குதல் தீவிரம் அடைந்திருக்கிறது. எனவே, பிரியங்கா-நளினி சந்திப்பின் போது நடந்தவற்றை பகிரங்கப்படுத்த வேண்டும். இதை முதல்வர் கருணாநிதிதான் செய்ய வேண்டும்.

ஈழத் தமிழர் பிரச்சினையை முதல்வர் கருணாநிதி சரியாக கையாளவில்லை. தேர்தலை மனதில் கொண்டுதான் அவர் செயல்படுகிறார். திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் மக்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். தனி ஈழம் அமைய வேண்டும் என்றால் மக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

மதத்தின் அர்த்தத்தை திரிப்பதை போப் கண்டித்துள்ளார்

pope_afp.jpgமத்திய கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் போப் பெனடிக்ட், மதத்தை அர்த்தம் திரித்து கற்பிப்பதை கண்டித்துள்ளார். ஜோர்டான் தலைநகர் அம்மானில் மசூதி ஒன்றில் முஸ்லிம் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இவ்வாறு அர்த்தத்தை திரிப்பதனால் சமுதாயத்தில் பாகுபாடுகள் மற்றும் வன்முறை ஏற்படுவதாக கூறினார்.

இதற்கிடையே, கடந்த 2006 ஆம் ஆண்டு இஸ்லாம் வன்முறையானது என கிறிஸ்துவ பேரரசர் ஒருவர் கூறியதாக போப் பெனடிக்ட் கூறினார், அதற்கு பின்னர் அவர் வருத்தம் தெரிவித்தார். அவ்வாறு போப் பெனடிக்ட் வருத்தம் தெரிவித்தமைக்கு ஜோர்டன் மன்னரின் மூத்த ஆலோசகர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் முஸ்லிம்கள் வருத்தம் அடைந்ததாகவும், எனினும் அந்த பேரரசரின் கருத்தை போப் பெனடிக்ட் கொண்டிருக்கவில்லை என்பதை முஸ்லிம்கள் ஏற்பதாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவிலிருந்து ஐ.சி.ஆர்.சியின் உதவியுடன் 518 பேர் புல்மோட்டை அழைத்துவரப்பட்டனர்

icrc.jpg
முல்லைத்தீவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் மூலம் நேற்றிரவு மேலும் 518 பேர் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நோயாளர்கள் ,காயமுற்றவர்கள் ,கர்ப்பிணிகள் மற்றும் இவர்களது உதவியாளர்களும் உறவினர்களும் என 518 பேர் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகளின் தகவல்களின் படி கடந்த மார்ச் முதல் இது வரை இப்படி 10 ஆயிரத்து 174 பேர் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

லண்டன் ‘சனல் – 4’ தொலைக்காட்சி ஊடகவியலாளர் மூவர் நேற்று திருமலையில் கைது.

channel-4news.jpg வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுடைய முகாம்களின் நிலைமை தொடர்பான சர்ச்சைக்குரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரித்த பிரித்தானியாவைச் சேர்ந்த ‘சனல் – 4’ தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்கள் திருகோணமலையில் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் இவர்கள் மீதான விசாரணைகள் தொடர்வதாக காவல்துறைப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர நேற்று சனிக்கிழமை இரவு தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதற்காக திருகோணமலை சென்றிருந்த வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். ‘சனல் – 4’ தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான நிருபரான நிக் பட்ரன் வோல்ஸ், அதன் தயாரிப்பாளர் பெசி டூ, படப்பிடிப்பாளர் மற் ஜஸ்பர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் தொடரும் போர் தொடர்பான பல செய்திகளை ‘சனல் – 4’ தொலைக்காட்சி தொடர்ந்தும் ஒளிபரப்பி வந்திருக்கின்றது. இருந்தபோதிலும் கடந்த வாரம் ஒளிபரப்பான வவுனியா முகாம்கள் தொடர்பான தகவல்கள்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதேவேளையில் நிக் பட்ரன் வோல்சின் விசா அனுமதி உடனடியாக இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் பி.பி. அபயக்கோன் அறிவித்திருக்கின்றார்.

இன்று சென்னையில் கருணாநிதியுடன் இணைந்து சோனியா பிரசாரம்

06-sonia.jpgகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை சென்னை வரவுள்ளார். முதல்வர் கருணாநிதியும், அவரும் இணைந்து பிரசாரப் தீவுத் திடலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். இக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகின்றது. சோனியா வருகைக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாலும், போராட்டங்களை அறிவித்துள்ளதாலும், பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

பாக். – அமெரிக்கா கூட்டு இராணுவ நடவடிக்கை

w_news.jpgபாகிஸ்தான் வடமேற்கிலிருந்து 5 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு பாகிஸ்தானின் வடமேற்கில் இருந்து 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளி யேறியுள்ளதாக ஐ. நா. அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெ ரிக்காவும், பாகிஸ்தானும் கூட்டு இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சிவிலியன்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்டுள்ளதாக சீ. என். என். ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நிலைமை எப்படி இருந்தாலும் தலிபான்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடருமென பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் வட மேற்கில் பழங்குடியினர் வாழும் பகுதியில் தலிபான் தீவி ரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள அமெரிக்க இராணுவத்தினர் மீது இவர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இதனால் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும், பாகிஸ்தானும் கூட்டாக சேர்ந்து இராணுவ நடவடிக்கை எடுத்து வருகிறது. தலிபான்கள் மீது அமெ ரிக்க இராணுவம் ஏவுகணைகளை வீசியும் பீரங்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு வசிக்கும் மக்களை கேடயமாக வைத்து தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர்.

கடந்த 2 நாட்களாக வடமேற்கு பாகிஸ்தானில் இராணுவ தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. அதில் 170 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது.

இராணுவ தாக்குதல் காரணமாக வட மேற்கு பகுதியில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர். அவர்கள் அகதிகளாக மலைகளிலும் காடுகளிலும் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். தொடர்ந்து மக்கள் வெளியேறிய வண்ணம் உள்ளனர்.

ஆனால், மக்களை வெளியேற விடாமல் தீவிரவாதிகள் தடுத்து வருகிறார்கள். ஏற்கனவே இராணுவ நடவடிக்கை காரணமாக 2 இலட்சம் மக்கள் வெளியேறி விட்டனர். தற்போது மேலும் 3 இலட்சம் பேர் அங்கிருந்து வெளியேறி வருவதாக ஐ. நா. அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே தலிபான்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை நீடிக்கும் என்று பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி அறிவித்துள்ளார். வடமேற்கு பகுதியில் 45 ஆயிரம் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியையும் பிரதமர் யூசுப் ரசாக் கிலானியையும் குடும்பத்தோடு கொல்லப்போவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். தொலைபேசி மூலம் பேசிய தலிபான்களின் பேச்சாளரொருவர், “முஸ்லிம்கள் என்ற வகையில் போராட்டத்திற்கு உதவுவார்களென எதிர்பார்த்தோம். முடியவில்லை. இவர்களை பழிவாங்கியே தீருவோம்” எனக் கூறியதாக இணையச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனையிலிருந்து கருணாநிதி வீடு திரும்பினார்.

karunanithi.jpgஉடல் நலக்குறைவு காரணமாக கடந்த 3ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் கருணாநிதி உடல் நலம் தேறியதைத் தொடர்ந்து நேற்று இரவு வீடு திரும்பினார். கடந்த 3ம் தேதி முதல்வருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. கூடமே முதுகு வலியும், தொண்டை வலியும் ஏற்படவே அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு முதல்வர் கருணாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இரவு ஒன்பதரை மணியளவில் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

இந்தியாவின் மேற்குக் கரையூடாக நுழைய விடுதலைப்புலிகள் முயற்சிக்கலாம்: தீவிர கண்காணிப்பு.

indiannavyship.jpg இந்தியாவின் மேற்குக் கரை ஊடாக இந்தியாவுக்குள் நுழைவதற்கு புலிகள் முயற் சிப்பதாக இந்தியக் கடற்படையின் தென்பிராந்திய கடற்படைக் கொமடோர் வைஸ் அட் மிரல் எஸ். கே.டம்லே தெரிவித்துள்ளார். அதனால் மேற்குக் கடற்பிராந்தியத்தில் கடும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

இந்திய மேற்குக்கரையின் சகல பகுதிகள் ஊடாகவும் இந்தியாவுக்குள் ஊடுருவ இலங்கையர்களும் விடுதலைப்புலிகளும் முயற்சித்து வருகிறார்கள் என்று பொலிஸ் மற்றும் ஏனைய பாதுகாப்பு முகவர்கள் கடற்படையினருக்குத் தெரியப்படுத்தியிருந்தனர் எப்படி இருந்தாலும் இந்தப் பிரச்சனை இன்று உருவானதல்ல. இந்தியாவுக்குள் ஊடுருவும் சாத்தியங்கள் எப்போதும் இருந்து வருகின்றன.

சட்டவிரோதமாக நுழையும் எந்த ஒரு முயற்சியையும் முறியடிக்கும் விதத்தில் நாங்கள் உயர் எச்சரிக்கையுடன் உள்ளோம். இந்தியக் கடற்பரப்பில் புலிகளின் எந்தவொரு கப்பலையும் நாங்கள் இதுவரை சந்திக்கவில்லை  என்றும் அந்த சிரேஷ்ட கடற்படை அதிகாரி  மேலும் கூறினார்.

இலங்கைக் கடற்படையினர் தங்களது நாட்டின் பாதுகாப்பிற்காக தாங்களாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் தென்பிராந்திய கடற்படைக்கும் இலங்கைக் கடற்படைக்கும் இடையில் நேரடியான இடைத் தொடர்புகள் எதுவும் இல்லை என்றும் எஸ்.கே.டம்லே மேலும் சொன்னார். பனாஜியில் இந்தியக் கடற்படையின் “மண்டோவி” என்ற கப்பலின் வெள்ளோட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே வைஷ்அட்மிரல் டம்லே மேற்கண்டவாறு கூறினார்.