கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

இரானில் அஞ்சலிக் கூட்டம் நடத்த எதிர்கட்சிகளுக்கு அனுமதி மறுப்பு

இரானில் கடந்த மாதம் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலின் முடிவை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் பலியானவர்களுக்கான நினைவு நிகழ்வை எதிர்கட்சியினர் நடத்துவதற்கு அந்நாட்டின் அரசாங்கம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.

இது தொடர்பில் தோல்வியடைந்த வேட்பாளர்களான மிர் ஹுசைன் முசவி மற்றும் மெஹ்டி கரூபி ஆகியோரிடமிருந்து வந்த வேண்டுகோள், தேவையான சட்ட திட்டங்களை பூர்த்தி செய்யவில்லை என்று, உள்துறை அமைச்சகம் ஃபார்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை நடைபெறவுள்ள அந்த நினைவு நிகழ்ச்சியின் போது உரையேதும் நிகழ்த்தப்பட மாட்டாது என்று தோல்வியடைந்துள்ள வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தேர்தலையடுத்து நடைபெற்ற போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாமை மூடும்படி நாட்டின் அதியுயர் மதத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டு : காஷ்மீர் முதல்வர் ராஜினாமா

omar-abdullah.jpgதன் மீது பாலியல் புகார் கூறப்பட்டதையடுத்து ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

2006ஆம் ஆண்டு சோபியான் பாலியல் விவகாரம் வெளியில் வந்தது. இளம் பெண்கள், சிறுமிகள் ஆகியோரை மிரட்டி விபசாரத்தில் தள்ளிய கும்பல், அவர்களைப் பொலிஸார், அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்தனர். இந்த விவகாரம் வெளியில் தெரிந்தவுடன் மாநிலம் முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்தன.

இந்த வழக்கு இப்போது சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்ட இந்த வழக்கு மீண்டும் வேகம் பிடித்துள்ளது. இந்த வழக்கு விவகாரம் காஷ்மீ்ர் சட்டசபையில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு வன்முறை நடந்தது. மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹ்பூபா முப்தி சபாநாயகரின் மைக்கை பறித்து வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந் நிலையில் இன்று சட்டசபையில் மக்கள் ஜனநாயக கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான முஸாபர் பேக் பேசுகையில், முதல்வர் உமர் அப்துல்லா மீது திடுக்கிடும் புகாரைக் கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவர் பேசுகையில்,

“இதைச் சொல்லவே எனக்கு வருத்தமாகத் தான் உள்ளது. ஆனால், காஷ்மீரை உலுக்கிய சோபியான் பாலியல் வழக்கில் முதல்வர் உமர் அப்துல்லாவும் சம்பந்தப்பட்டிருக்கிறார். 102 பேர் கொண்ட குற்றவாளிகள் பட்டியலில் அவருடைய பெயரும் இடம் பெற்றுள்ளது. இது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதனால் அவர் பதவியில் நீடிக்கக் கூடாது. உடனே ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.

இவரது பேச்சு சட்டசபையில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. அப்போது எழுந்த முதல்வர் உமர் அப்துல்லா, “இது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டு. இருந்தாலும் இந்தக் குற்றச்சாட்டு உண்மை அல்ல என்று நிரூபிக்கும் வரை முதல்வர் பதவியில் நீடிக்க நான் விரும்பவில்லை. இது எனது நற்பண்புகளுக்கு ஏற்பட்ட களங்கம்.

நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கும் வரை என்னால் தொடர்ந்து முதல்வராக செயல்பட முடியாது. எனவே முதல்வர் பதவியிலிருந்து நான் விலகுகிறேன். இது போன்ற அசிங்கமான குற்றச்சாட்டுகளை என்னால் தாங்க முடியவில்லை.

நிரபராதி என்று நிரூபிக்கும் வரை பதவி வேண்டாம்

நான் நிரபராதி என்று நிரூபிக்கும் வரை நான் பதவியில் நீடிக்க விரும்பவில்லை. எனவே கவர்னரை சந்தித்து எனது ராஜினாமாவை கொடுக்கப் போகிறேன்” என்று கூறிவிட்டு வெளியேற முற்பட்டார்.

அதிர்ச்சியடைந்த அமைச்சர்களும், அவரது தேசிய மாநாட்டுக் கட்சி எம்எல்ஏக்களும் அவரை எவ்வளவோ தடுத்தும் அவர் அங்கிருந்து வெளியேறினார்.

ஒமர் அப்துல்லா நேராக ஆளுநர் என்.என். வோராவின் இல்லத்துக்குச் சென்று அவரிடம் தனது ராஜினாமா கடிதத்தைத் ஒப்படைத்தார். ராஜினாமாவை ஏற்பதாக வோராவும் அறிவித்துவிட்டார்.

இந்த சம்பவங்களால் காஷ்மீர் சட்டசபையில் பெரும் பரபரப்பு நிலவியது.  இப்போது உமருக்குப் பதில் புதிய ஒருவரை தேசிய மாநாடு- காங்கிரஸ் கூட்டணி தேர்வு செய்ய வேண்டும். இந்த இரு கட்சிகளின் கூட்டணி ஆட்சி தான் காஷ்மீரி்ல் இப்போது நடந்து வருகிறது.

உமரின் ராஜினாமாவையடுத்து அவரது கட்சியினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

ஸ்லோவேனியா டெனிஸ் போட்டி சபீனா சாம்பியன் கிண்ணத்தை வென்றார்

sabeena.jpgரஷ்யாவைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை தினாரா சபீனா இத்தாலி வீராங்கனை சாரா எர்ரானியை 6-7,6-1,7-5 என்ற செட்களில் இறுதிப் போட்டியில் போராடி வீழ்த்தி ஸ்லோவேனியா ஓப்பன் டெனிஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த தொடரின் தரவரிசையில் 5 ஆவது இடத்திலும் உலகத் தரவரிசையில் 38 ஆவது இடத்திலும் உள்ள சாரா எர்ரானி, முதல் செட்டில் டைபிரேக் வரை சென்று 7-6 என்று சபீனாவை வீழ்த்தினார்.

மூன்றாவது செட்டில் சாரா எர்ரானி தனது ஆட்டத்தின் வேகத்தை அதிகரிக்க 54 என்று முன்னிலை வகித்தார். ஆனால், அதற்கு அடுத்த தன் சர்வை சபீனாவிடம் இழக்க தோல்வியடைந்தார்.

சனா 172 நிமிடங்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்

சானியா மிர்சா சாம்பியன் பட்டம் வென்றார்

sania-mirza.jpgஇந்தியா வின் டெனிஸ் தாரகையான சானியா மிர்சா ஐ.டி.எப்,சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவுக்கான  சாம்பியன் பட்டத்தை  வென்றுள்ளார்.

அமெரிக்காவின் லெக்சிங்டன் நகரில் ஐ.டி.எப்.,  சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.  இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில்;  இந்திய வீராங்கனை சானியா மிர்சா, பிரான்சின் ஜூலி காயினைத் தோட்கடித்தார்.

முதல் செட்டை கடுமையான போராட்டத்திற்கு பின்பு சானியா 7-5 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்த சானியா 6-4 என சுலபமாக கைப்பற்றினார். இதையடுத்து சானியா 7-5, 6-4 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். 

முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அபார வெற்றி

cricket1.jpgபங்களா தேஷ் கிரிக்கெட் அணி மே.தீவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரு கிறது. 2 டெஸ்டிலும் வென்று பங்களாதேஷ் அணி தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. இரு அணிகள் மோதிய முதல் நாள் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. “நாணயச் சுழற்சியில் வென்ற மே. தீவு முதலில் பங்களாதேஷை “பேட்டிங்” செய்ய அழைத்தது.

பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 246 ஓட்ட ங்கள் எடுத்தது.  முகம்மது அஸ்ரப் 57 ஓட்டமும், தற்காலிக கப்டன் சகிப் அல்-ஹசன் 54 ஓட்டமும் மகமதுல்லா 42 ஓட்டமும் எடுத்தனர். ரோச் 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய மே.தீவு அப்துல் ரசாக்கின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. அந்த அணி 43.4 ஓவரில் 194 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அபார வெற்றி பெற்றது. மே.தீவில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

மே.தீவு அணியில் சுமித் அதிகபட்சமாக 65 ஓட்டம் எடுத்தார். அப்துல் ரசாக் 39 ஓட்டம் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். அவரே ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார்.இந்த வெற்றி மூலம் 3 போட்டித் தொடரில் பங்களாதேஷ் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. 2 வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.

அவசரமாய் தரையிறங்கிய ஷார்ஜா விமானம்

27-air-arabia-a.jpgசென்னை யிலிருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் மீண்டும் அவசரமாக சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் மிக அவசரமாகத் தரையிறங்கியது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இன்று காலை ஏர் அரேபியா ஏர்வேஸ் விமானம் 128 பயணிகளுடன் ஷார்ஜா புறப்பட்டது. விமானம் பறக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து விமானத்தை உடனடியாக தரையிறக்க அனுமதி கோரினார் விமானி. இதைத் தொடர்ந்து அந்த விமானம் 9.30 மணிக்கு பத்திரமாகத் தரையிறங்கியது.

விமானத்தில் இருந்த 128 பயணிகளும் இறக்கப்பட்டு சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம்

indonesiya.jpgஇந்தோ னேசியாவின் சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இன்று காலை ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தின் அளவு 6.1 ரிக்டராக பதிவாகியுள்ளது. இருப்பினும் இது 6.2 என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.  இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

வனாட்டு தீவிலும்…

ஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் உள்ள வனாட்டுத் தீவிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் இந்த தீவில் இருந்த கட்டடங்கள் அதிர்ந்தன. நில நடுக்கம் ரிக்டர்கோளில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது.

இன்று முஸ்லிம்களுக்குத் தேவையானது அரசியல் அதிகாரமா? உரிமைத்துவ அரசியலா? – எம்.எம்.எம். நூறுல்ஹக்

sri-lankan-muslim00.jpgஅரசியல் அதிகாரம் குவிந்திருக்கும் பக்கம் மக்கள் திரட்டி அணிதிரள்வது இயல்பானது. அதேபோன்று அரசியல் அதிகாரம் இல்லாத இடத்திலிருந்து படிப்படியாக மக்கள் வெளியேறிச் செல்வதும் தவிர்க்க முடியாத ஒரு பண்பாக வளர்ந்து காணப்படுகின்றது.

அபிவிருத்தி கலாசாரம் விருத்தி பெறுவதற்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்கின்ற ஒரு பிழையான கோட்பாட்டுக்குள் நமது மக்களை கட்டி வைத்து அரசியல் செய்கின்ற ஒரு செயற்பாட்டினையும் நமது அரசியல் தலைமைகள் கடைப்பிடித்து வருகின்றனர்.

மேற்படி கூறுகள் அராங்கத்தின் பால் சார்ந்து நின்றால் தான் எதனையும் சாதிக்கலாம் என்கின்ற பதிவை பரவலாக நமக்குள் விதைக்கும் பாதைகளின் திறப்பு பெருகிவரும் ஒரு சூழலும் நமக்குள் வெகுவாக ஆட்சி புரியத் தொடங்கி இருக்கின்றது.

நமது அரசியல் தலைமைகள் காட்டும் பந்தாக்களின் பின்னால் அள்ளுப்பட்டுச் செல்லும் ஒரு சமூகமாக நாமிருக்கும் வரை நமது சமூகத்தள மேம்பாட்டை நோக்கிய நகர்வுகள் கொண்ட ஓர் அரசியல் முறைமை நமக்குள்ளிலிருந்து விடை பெற்றுச் செல்வதும் தவிர்க்க இயலாது.

ஒரு சமூகத்தின் இருப்பில் கட்டிட வளர்ச்சி, பௌதிக வளங்கள், வீதி அபிவிருத்தி போன்ற நலன்கள், தொழிலில்லாப் பிரச்சினை இன்றி இருத்தல் போன்ற பக்கங்கள் முக்கிய பாத்திரத்தைக் கொண்டதாகும்.

ஆனால், இவைகளைப் பார்க்கிலும் அதிக கூடிய முக்கியத்துவம் கொண்ட சில பக்கங்கள் ஒரு சமூகத்தின் இருப்பையும் எழுச்சியையும் வலியுறுத்துவதிலும் நிலைப்படுத்துவதிலும் பங்கு கொள்கின்றன.

அவற்றினை தக்கவைத்துக் கொள்வதில் தான் நமது இருப்பு அசையாது வேரூன்றிக் கொள்ளும். இல்லையேல் ஆட்டம் கொண்ட அத்திவாரமாகவே நமது சமூக கட்டிடம் எழுந்திருக்கும். அது உறுதியான பிடியிலிருந்து அகன்று உருக்குலைவை நோக்கிய நகர்ச்சிக்குள் இலகுவாக அகப்பட்டுவிடக்கூடும்.

உரிமத்துவம், தனித்துவமான செறிவான குடியிருப்பு, ஒற்றுமை போன்ற உயரிய கூறுகளை மிகவும் வலுவாக பற்றிக் கொள்ள வேண்டிய தேவைகள் பெருக்கெடுத்துக் காணப்படும் தருணத்தில் வெறும் அபிவிருத்தி அரசியல் நகர்வே இன்றைய அவசியம் எனப் பிதற்றுவது அர்த்தமுள்ள நகர்வல்ல.

வீதி அபிவிருத்தி, கட்டிட வளங்கள், தொழில் வாய்ப்பு போன்ற விடயங்கள் இயல்பாக நடைபெறும் ஒரு கோணத்தை நமது நாட்டு அரசியல் போக்குகள் நிர்ணயித்து வைத்திருக்கின்றது. ஆதலால் இவைகள் இயல்பாக நடைபெறுவதற்கான ஏதுக்கள் நிறையவே உள்ளன.

சமூக இருப்பு அரசியல் என்பது இயல்பாக நிகழ்ந்து விடக்கூடிய ஒன்றல்ல. அதற்கென்று கடுமையாகப் பாடுபடவேண்டிய சூழலில் தான் தங்கி இருக்கின்றது. ஏனெனில், ஆளுந்தரப்புக்கள் கைக்கொள்ளும் ஆதிக்க வன்முறைகள்தான் பாதிப்புக்களையும், இழப்பீடுகளையும் ஒரு சமூகத்தின் மீது குறிப்பாக்கி பாய்ச்சும் போதே இந்நிலை தொடர்கின்றது அல்லது படிகின்றது.

இங்கு இருந்துதான் ஒரு சமூகத்தின் உரிமத்துவ அரசியல் தொடங்கப்பட காரணமாகின்றது. தனித்துவப் பதிவை அடையாளப்படுத்த வேண்டிய கட்டாயத்தை சுமத்துகின்றது. இதன் வழியில் பயணிக்கும்போது சில துன்பங்களையும் இழப்புகளையும் அனுபவிக்க நேரிடுவது யதார்த்தமானது.

அரசியல் அதிகாரமுடையோர்களுக்கு எதிராகவே உரிமத்துவ அரசியல் கூறுகள் அநேகமாக அமைந்திருக்கின்றன. இவற்றினை கட்டுடைப்பு அல்லது அறுத்தெறிந்து கொள்வதில் தான் நமது உரிமத்துவ அரசியல் போராட்டம் வெற்றியை நோக்கியதாகவும் அதனை அடைந்து கொண்டதாகவும் மாறும்.

இதற்கு சில விலைகளை நாம் செலுத்த நேரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதனைப் பொறுப்பெடுக்க நமது சமூகம் தயார் இல்லையாயின் அரசியல் அதிகார வன்முறைகளுக்கு அடங்கி, கட்டுண்டு வாழ்வது தவிர வேறு வழியிருக்காது.

இதுதான் நமக்குச் சாதகமானது என உறுதியாக நாம் நம்பத் தொடங்கிவிட்டால், நமது பிரச்சினைகள் என்று கதையாட வேண்டிய தேவையிலிருந்து எம்மை விடுதலையாக்குகின்றது. அரசியல் அதிகாரம் இருக்கும் பக்கம் நமது மக்களின் பார்வையும், விருப்பும் ஓட்டத் தொடங்கும்.

இந்த நெருக்கம் நமது பல பிரச்சினைகளில் சிலவற்றுக்குத் தீர்வாக அமையமுடியும். அதேநேரம் அடங்கி வாழ்ந்து சில சலுகைகளைப் பெறும்பேற்றைக் கொண்ட “சலுகை அரசியல் ‘ பண்பின் பின்னால் நமது செல்நெறியை மாற்றிக் கொள்ளவைக்கும். இதனை வேறுவார்த்தையில் செல்வதாயின் அடிமைப்பட்டவர்களாகவும் பாவப்பட்டவர்களாகவும் நமது மக்கள் வாழ்வதை வலியுறுத்தி நிற்கும்.

இன்று நாம் போராட வேண்டிய தேவையைக் கொண்டவர்களாக இல்லை என்கின்ற ஒரு மாயைத் தோற்றத்தினை நிஜமுகமாக நமது அரசியல் தலைமைகள் காட்டும் புள்ளியைத் தொடங்கி இருக்கின்றனர். அது தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்டதன் பின்னர்.

ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டிருக்கின்றது. அதேநேரம் ஆயுதப் போராட்டத்திற்கு உந்துதள்ளிய வடுக்கள் காயங்கள் அனைத்தும் இல்லாமல் போய் இனப்பிரச்சினைகள் யாவும் ஓந்து விட்டனவா என்கின்ற வினாவை எழுப்பினால் அதன் விடை “பிரச்சினைகள் இன்னும் தீர்வுக்குவரவில்லை’ என்றே காணப்படும்.

இவ்வாறான ஒரு நிலையில் சலுகை அரசியல், அபிவிருத்தி அரசியல் என்கிற வட்டங்களுக்குள் நம்மை சிறைப்படுத்தமுனைவது ஆரோக்கியமான பதிவுகளைத் தருமா? என்கின்ற கேள்வி இவ்விடத்தில் முக்கியப்படுகின்றது.

தனிக்கட்சிகளின் ஊடாக எதனையும் சாதிக்கும் வல்லமையைப் பெறமுடியாது என்றும், இனி நமக்கான கட்சிகளின் அவசியமில்லை என்போர்களின் வரவு சற்று கூடிச் செல்லும் பாங்கைப் பெற்றிருக்கின்றது. அதேநேரம் தனிக்கட்சிகள் இனிப்பயனில்லை என்போர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் தனிக்கட்சித் தாயிலிருந்து பிறந்து பிறழ்ந்தவர்களே.

தனிக்கட்சி நமக்கு அவசியமில்லை என்ற கூற்றை ஒரு இயக்கமாக முன்னெடுக்கும் எத்தனங்கள் நிறையவே காணப்படுகின்றது. ஆனால் இதன் பின்னால் நிற்போர்கள் ஏதோ ஒரு சிறிய கட்சியின் தலைமைத்துவத்தின் பின்னாலிருப்பதை அவதானிக்கலாம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறிய அமைச்சர்களான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ், ரிஷாட் பதியுதீன், அமீர் அலி போன்றோர்களும் கட்சிகளை அமைத்து நமக்கு மத்தியில் அரசியல் செய்வது பிரத்தியட்மானது. தனிக் கட்சியினால் இனிப் பயனில்லை எனில் ஏன் இவர்களுக்கு கட்சியும் தலைமைத்துவமும் என்கின்ற பெரும் வினா எழுவது தவிர்க்க முடியாது.

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டு தமிழர், சிங்களவர்களை குறிப்பிட்டளவு அங்கத்துவத்தைக் கொண்டும் கட்சியை அமைத்துவிட்டால் அது தேசிய கட்சி என்ற வரையறைக்குள் ஆகிவிடும் என்கின்ற புதிய ஓர் அரசியல் கலாசாரத்தின் துவக்கமாக இதனைக் கொள்ள வேண்டும் என்கின்ற பாடத்தை சொல்லித்தர இவர்கள் முனைகின்றனரா?

அவ்வாறாயின், இந்நாட்டின் ஆளுங்கட்சிகளாக வரக்கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி ஆகிய பெருங்கட்சிகளுடன் நமது நேரடி அங்கத்துவத்தை வைத்துக்கொள்வது சலுகை அரசியல் அல்லது அதிகார அரசியல் வெதற்கும் கூடிய பயனை நெருங்கி இருந்து பெறுவதற்கும் மிகவும் இலகுவான வழியாகும்.

இதுதான் நமக்கான தனித்துவ அரசியல் கட்சிகளின் தோற்றத்திற்கு முன்னிருந்த நிலையுமாகும். அதற்குள்தான் நாமின்றும் பயணிக்க விரும்புகின்றோம் என்றால், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகளை கலைத்துவிடலாமே? அதனைச் செய்வதற்கு முன்வராத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மட்டும் குறிவைத்து குறைகூறி தேவையற்றது எனச் சாடுவதில் என்ன அர்த்தம் இருக்கின்றது?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலும் தமிழர், சிங்களவர் அங்கத்துவம் குறைவாகவும் முஸ்லிம்களின் பிரசன்னம் அதிகமாகவும் இருக்கின்றது. ஆகவே, இக்கட்சியை இலக்கு வைத்து விமர்சிப்பது முறையற்றதும் விமர்சிக்கத் தகுதியற்றதுமாகும். ஏனெனில், ஏனைய முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட கட்சிகளும் இதன் அங்கத்துவப் பாங்கையே கொண்டிருக்கின்றது.

ஆகவே,  தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தம்மிடமிருக்கும் அமைச்சுப் பதவியை வைத்து உருவாக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அப்படி அல்ல. மக்களின் தேவை குறித்து பேசி அதனை நமது மக்களும் ரிகண்டு பாராளுமன்ற உறுப்புரிமையை உறுதிப்படுத்தி, அதன் ஊடாக அமைச்சுப் பொறுப்புகளைப் பெறுவதற்கும் மக்களே காலாக நின்று உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

பேரம் பேசும் ஆற்றலுடனும் நிபந்தனையுடனும் ஆட்சியமைக்கும் கட்சியோடு கைகோர்த்து சமூகநலன் சார்ந்து உழைப்பதும் பெயரளவில் இணைந்துகொண்டு முழுக்க முழுக்க பெருங்கட்சிக்கு இரையாகிக் கொண்டும் செயற்படுவதும் ஒரே அந்தஸ்து கொண்ட செயற்பாடுகள் அல்ல என்பதைப் புரிந்து கொள்வதில் அதிக சிரமமில்லை.

கட்சியின் தலைமைத்துவம், அங்கத்துவம் போன்ற உரித்தை வைத்துக்கொண்டு தனிக்கட்சி அவசியமில்லை என கர்ஜிப்பது வெறும் காழ்ப்புணர்வுகொண்ட கூப்பாடேயாகும். ஏனெனில், அவர்களின் கட்சி பங்கு பற்றுதலே நமக்கான கட்சியின் அவசியத்தை வலியுறுத்தப்போதுமானது. இன்றைய சூழலிலும் தனிக் கட்சி தேவை அற்றுப் போகவில்லை என்பதையும் இது புலப்படுத்துகின்றது.

அரசியல் அதிகாரத்தின் பக்கம் சாய்ந்து கொள்வதுதான் இன்றைய காலத்திற்கு பொருத்தமானது என்று கொண்டால், அதனைச் செய்ய வேண்டிய பொறுப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குத்தான் அதிகமிருக்கின்றது. ஏனெனில், இன்று நமக்குள் இருக்கும் அனைத்து அரசியல் பிரதிநிதித்துவத்திலும் முஸ்லிம்களின் பெரும்பான்மையான ஆதரவு நல்கப்பட்டது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் பிரதிநிதிகளுக்குமாகும்.

ஆகவே, சமூகத்தளத்தில் நின்று செயற்பட வேண்டிய தேவைகளும் அவசியங்களும் நமக்குள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த முன் நிபந்தனையுமின்றி அரசாங்கத்துடன் சேர வேண்டும் என எதிர்பார்ப்பது உகந்ததல்ல.

இன்றிருக்கும் சூழலில் அராங்கம் சார்ந்த போக்கு நமக்கு சிறந்ததென்று உன்னிப்பாக நோக்கி உணரப்படும் கருத்தாக நம்பப்படுமாயின் அதற்கான ஓர் அரசியல் காநகர்த்தலாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை உபயோகித்துக் கொள்ளும் கையாள்தலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவறவிடுமாயின் அது பாரிய வரலாற்றுத் தவறாக எம்மை நோக்கி பதிவுசெய்யத் தவறாது என்பதையும் கருத்திற்கொண்டு செயற்படுவோமாக!

நன்றி: தினக்குரல் 27.07.2009

ஐ.சி.சி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் சங்கக்கார முதலிடம்

srilanka-cri.jpgசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் துடுப்பாட்டு வீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் தலைவர் சங்கக்கார மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். கொழும்பில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டில் 130 ஓட்டங்கள் குவித்து அணியை காப்பாற்றியதன் மூலம் 3 வது இடத்தில் இருந்த அவர் முதலாம் இடத் துக்கு முன்னேறி இருக்கிறார். சங்கக்கார ஏற்கனவே 2007ம் ஆண்டு இறுதியிலும், 2008ம் ஆண்டிலும் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

10 நாட்கள் முதலிட அரியணையில் உட்கார்ந்திருந்த இந்திய வீரர் கெளதம் கம்பீர் 2வது இடத்துக்கு இறங்கி உள்ளார். கொழும்பு டெஸ்டில் மொத்தம் 21 ஓட் டங்கள் (2, 10) மட்டுமே எடுத்த பாகிஸ் தான் அணித் தலைவர் யூனிஸ்கானுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. 2வது இடத்தில் இருந்த அவர் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். இந்திய வீரர்களில் தெண்டுல்கர் 15வது இடத்திலும், வி. வி. எஸ். லட்சுமண் 17வது இடத்திலும் ஷேவாக் 19வது இடத்திலும் உள்ளனர்.

தரவரிசையில் முதல் 10 இடங்கள் வகிக்கும் வீரர்கள் விவரம் வருமாறு:-

வரிசை வீரர் நாடு புள்ளி
1 சங்கக்கார இலங்கை 862
2 கம்பீர் இந்தியா 847
3 சந்தர்பால் மேற்கிந்தியா 821
4 முகமது யூசுப் பாகிஸ்தான் 818
5 மைக்கேல் கிளார்க் அவுஸ்திரேலியா 802
6 யூனிஸ்கான் பாகிஸ்தான் 801
7 பொண்டிங் அவுஸ்திரேலியா 790
8 சுமித் தென்ஆபிரிக்கா 782
9 ஜெயவர்த்தன இலங்கை 777
10 கல்லீஸ் தென்ஆபிரிக்கா 755

தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும்

election_cast_ballots.jpgயாழ், வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தல்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளன. தபால் மூல வாக்களிப்பிற்கான சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதோடு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

இம்முறை தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க பதுளை மாவட்டத்தில் 16,054 பேரும் மொனராகலை மாவட்டத்தில் 8,899 பேரும் தகுதி பெற்றுள்ளதோடு யாழ்ப்பாணத்தில் 335 பேரும் வவுனியாவில் 183 பேரும் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் கூறினர்.

ஊவா மாகாண சபை மற்றும் யாழ். வவுனியா உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது தெரிந்ததே.