கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ஒற்றுமை ஏன் எதற்காக? : அழகி

Pongu Thamil Kudaiஎமது தமிழ் தொலைக்காட்சிகளைத் திறந்தாலே அங்கே பேசப்படுவது தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை, அதனால்தான் எமது போராட்டம் இவ்வளவு அழிவுகளையும் சந்தித்து தோற்றுக் கொண்டு இருக்கிறது என்பதேயாகும். பல நேரடி நிகழ்சிகளிலும் கூட பல தமிழர்கள் தொலைபேசியூடாக வந்து ஒற்றுமையில்லை – தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கிறார்கள் – ஒட்டுக்குழுக்கள் பணத்திற்காக எதையும் செய்வார்கள் – எமது ஊர்வலங்களிலும் பார்த்த முகங்களையே காணக்கூடியதாக இருந்தது – எமது தலைவர் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளுவார் என இப்படியே மாரடிக்கும், அரசியல் அறிவைப் பெறாமல் இவ்வளவு காலமும் இந்த தொலைக்காட்சிகள் ஊடாக பிதற்றி வந்திருக்கிறார்கள்.

1986 ம் ஆண்டே ரெலோ போராளிகளை ரயர் போட்டு கொளுத்தி எந்த தார்மீகங்களுக்கும் மதிப்பழிக்காது கொன்று குவித்த அன்றே தமிழர் போராட்டம் பகிரங்கமாக இந்த உலகிற்கு காட்டிக் கொடுக்கப்பட்டு விட்டது என்பதை ஒற்றுமை இல்லை எனப் புலம்பும் இந்த பிரகிருதிகளுக்கு ஒரு போதும் உறைக்கவில்லை.

இதைவிட மேலும் நகைப்பிற்குரிய விடயம் இவர்கள் எல்லாம் உலக அரசியல் பேசுவதுதான். அமெரிக்க அரசியல், இங்கிலாந்து அரசியல் இந்திய அரசியல், உலக ராணுவ அரசியல் எல்லாவற்றையும் தண்ணீர்பட்ட பாடாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் பேசிய தமிழ் ஈழ அரசியல் புலி அரசியல் தலைவர் அரசியல் – எங்கட தலைவர் அரசியல் எல்லாம் வேரோடு பிடுங்கப்பட்டு புதை குழி தோண்டிப் புதைக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக கரைத்து இவர்களுடைய சாம்பலையும் கடலிலே வீசி விட்டார்கள். இவர்களுக்கு நடந்தது முன்னமே பல தடவைகள் வரலாற்றில் நிகழ்ந்தவைதான். ஆனால் எல்லா அரசியலும் பேசிய இவர்களுக்கும் அதே வரலாறு ஏன் நிகழ்ந்தது?

ஏன் இவர்களுடைய அரசியல் இப்படி பரிதாபமாகரமான நிலைக்கு சென்றது? எதற்காக? எமது அப்பாவி தமிழினத்தின் உயிர்களோடும் உடமைகளோடும் பெண்களோடும் குழந்தைகளோடும் விளையாடினார்கள்? இவர்கள் விடை சொல்லியே ஆக வேண்டும். எமது மக்களை இந்த இழிநிலைக்கு கூண்டோடு கொண்டு சென்றது ஏன்? தமிழினம் தமது வரலாற்றில் ஒரு நேர உணவுக்கும், குடி நீருக்கும், உடுபுடவைக்கும் ஏங்கும் நிலைக்கு ஏன் கொண்டு வந்து விட்டார்கள்?

தியாகம் என்பது என்ன? மற்றவர்கள் துன்பப்படும் போது அந்த துன்பத்தை போக்கி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து அவர்களுடைய முகங்களிலே மகிழ்ச்சியை உருவாக்கி தானும் மகிழ்ச்சியடைபவனே தியாகி. ஆனால் எமது போராட்டத்திற்குள் வந்தவர்கள் (ஒரு சிலரை தவிர) இப்படி நடந்தார்களா? ஈழ மக்களின் குருதியை குடித்தார்கள். அவர்களின் உழைப்பையெல்லாம் தட்டிப் பறித்தார்கள். ரௌடித்தனத்தாலும், கொலைகளாலும், பாலியல் வன்புணர்வுகளாலும் வாழ்க்கையின் சுக போகங்களை அடைவதற்கெனவே இயக்கங்களுக்கு சேர்ந்தவர்கள் பலர். இவர்களால் மக்களுக்கு விடிவை ஏற்படுத்தி விட முடியுமா?

புலம்பெயர் தமிழர்களை நோக்கினாலோ அவர்கள் பல வகையினர். 1986 ம் ஆண்டு ஈழப் போராட்டம் உச்சத்தில் இருந்த நேரம். போராட்டத்தை மாற்று இயக்கங்கள் மீது புலிகள் படுகொலைகளைப் புரிந்து காட்டிக் கொடுத்தபோது இதில் இருந்து தப்பி வந்தவர்கள். இவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1) உண்மையான போராளிகள்.
2) இயக்கப் பணத்தைக் கொள்ளையடித்து வெளிநாடு வந்தவர்கள்.
3) இவர்கள் எப்போதும் சுயநலம் மிக்கவர்கள்.

இயக்கப் பணத்தைக் கொள்ளையடித்தவர்களும் சுயநலம் மிக்கவர்களும் இங்கு ஒன்று சேர்ந்தார்கள். எந்த அரசியல் நோக்கும் இல்லாமல் தங்களை மேலும் வளர்த்துக் கொள்வதற்காக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டும் கொலைகள் செய்தும் கப்பம் வாங்கியும் எமது போராட்டததை வலுவிழக்கச் செய்து விட்டார்கள். மக்கள் எல்லோரையும் புலிகள் ஈழத்திலே கொன்றொழிக்க உறுதுணையாக இணையம் மூலமும், வானொலி, தொலைக்காட்சி, ஊர்வலங்கள், பொதுக் கூட்டஙகள், கொண்டாட்டங்கள், கோயில்கள், தமிழ் பாடசாலைகள், பொது அமைப்புக்கள், நிதி சேகரிப்பு, வியாபார நிறுவனங்கள் என சமூகத்தின மூலை முடுக்கெல்லாம் நுழைந்து செயற்பட்டுள்ளார்கள். இவற்றையெல்லாம் புலம்பெயர் மக்கள் சிந்திக்க தவறி விட்டார்கள்.

ஆனால் இன்று ஒற்றுமை இல்லை, தோற்று விட்டோம் என நேரலைகளில் வந்து கூப்பாடு போடுகிறார்கள்!

இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? முதலில் விடப்பட்ட தவறுகள் என்ன என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். தவறு விட்டவர்கள் தமது தவறுகளை மனந்துணிந்து அதே தொலைக்காட்சிகள் ஊடாக மன்னிப்பு கோர வேண்டும். புலம்பெயர் தமிழர்களை மிகவும் தவறாக வழிநடத்திய தீபம், தினேஸ், அனாஸ், டாக்டர் மூர்த்தி, இராஜமனோகரன், குமார் போன்ற முன்னணியில் நின்றவர்களும் இவர்களுக்கு பின்னணியில் நின்றவர்களும் அரசியலைக் கரைத்துக் குடித்த இவர்களைப் போன்றவர்கள் முரண்டு பிடிக்காமல் அரசியலில் இருந்து பேசாமல் ஒதுங்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் சேர்க்கப்பட்ட பணம் முழுவதும் அந்தந்த நாட்டு முகவர்கள் ஊடாக திருப்பி வழங்கப்பட வேண்டும். இவர்கள் விட்ட தவறுகளுக்கு மனம் வருந்த வேண்டும். புலம்பெயர் நாடுகளில் வீதி வீதியாக கத்திக் குழறி, உண்ணாவிரதம் இருந்து மிரட்டி, பாதைகளை மறித்து ஆட்டம் போட்டும் முள்ளிவாய்க்காலில் தலைவரோடு, ஆயிரக்கணக்கான மக்களையும் சேர்த்து பலியிட்டதற்கு, ஏன் அப்படி நடந்தது என்பதற்கு, இன்னமும் தொலைக்காட்சிகளில் ஒன்றும் தெரியாதவர்கள் மாதிரி ஆய்வுகளும் காரணங்களும் தேடிக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும்.

இதை விடுத்து ஒற்றுமை இல்லை, ஒற்றுமை இல்லை என திரும்ப திரும்ப சொல்லக் கூடாது. தமிழ் மக்களின் ஐக்கியத்தை தாங்களே ஒட்டுக்குழு துரோகிகள் என பிரித்து விட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். ஒற்றுமை என்றால் என்ன? தம் தவறுகளை உணர்ந்து திருந்தி மன்னிப்புக் கேட்டு மனிதர்களாக செயற்பட வேண்டும். நல்ல காரியங்கள் நல்ல மனிதர்களால் முன்னெடுக்கப்பட வேண்டும். பெரும்பான்மையான மக்களால் அவர்களின் விருப்புக்களோடு 100 வீதம் செயற்பட வேண்டும். எமது சமூகம் நற்சிந்தனைகளால் வளர்க்கப்பட வேண்டும். ஒருவன் இன்னொருவனை ஏமாற்றினால் ஒவ்வொருவனும் தலைகுனிய வேண்டும். ஏமாற்றுபவனைத் திருத்த முற்பட வேண்டும். ஏமாற்ற நினைப்பவனுக்கு ஊக்கம் கொடுத்து தங்கள் நலன்களை வளர்த்துக் கொண்டதால் ஒரு இனமே இன்று கண்முன் அழிந்து கொண்டிருக்கிறது.

நாம் ஓரளவிற்கேனும் ஜனநாயகம் இருக்கும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கிறோம். இந்த நாடுகளில் இருந்து நல்லவற்றைக் கற்றுக் கொண்டே ஆக வேண்டும். பொது விடயங்களில் எப்படி நடக்க வேண்டும், பொதுப் பணத்தை எப்படி கையாள வேண்டும் (கையாட அல்ல) என்பவற்றைக் கற்றுக் கொண்டாலே எமது மக்களுக்கு நல்லது செய்ய முடியும்.

விடுதலை என்ற பெயரில் தமிழ் மக்களை கொன்றொழித்த பிரபாகரனுக்கு பின்னால் அணிதிரளுங்கள் என்று சொன்னதும் – சொல்வதும் மிகவும் வேதனையான விடயமே. ஏழை, எளிய மக்களின் பிள்ளைகளுக்கு தற்கொலைக் குண்டுகளைக் கட்டி விட்டு; தமது பிள்ளைகளை அரச பரம்பரை மாதிரி வளர்த்ததற்கு பெயர் போராட்டமா?

இறுதியாக ஒற்றுமை ஒற்றுமை என போலியாக கூக்குரல் இடுபவர்கள் தமது உள்ளங்கiளில் கை வைத்து சொல்லட்டும் – என்னத்திற்கு ஒற்றுமை வேண்டும்? இப்பொழுதாவது தமிழ் மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும். சுயமாக சிந்திக்க வேண்டும். எமது சமூகத்தை சுயநலமற்ற தமது வாழ்க்கைக்கு பொதுப் பணத்தை கையாடாத நல்லவர்களை முன்னிறித்தி சரியான சிந்தனைகளோடு எமது போராட்டத்தை முன்னெடுத்து செல்லலாம். இப்பொழுதும் நாம் சிந்திக்கவில்லையென்றால் இப்போதிருந்து எமது ஈழத்தில் எமக்கான நிலம் இல்லாமலே போய்விடும். தயை செய்து புலம் பெயர் தமிழர்கள் விழித்து செயற்படுங்கள்.

சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் International Lefthanders Day – புன்னியாமீன்

lefthandersday.jpgசர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் 1976ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும்  ஆகஸ்ட் 13ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. சர்வதேச இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம் இத்தினத்தை அனுஸ்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

உலகளாவிய ரீதியில் நோக்குமிடத்து அதிகமானோர் தமது அன்றாட பிரதான தேவைகளை வலக்கையாலேயே நிறைவேற்றுவர். குறிப்பாக எழுதுவது, முக்கியமான வேலைகளை செய்வது போன்றவற்றில் வலக்கையே பிரதானப்படுத்தப்படும். அதேநேரம்,  வலக்கையால் செய்யப்படும் சில வேலைகளை சிலர் இடது கையால் செய்து வருகின்றனர். குறிப்பாக எழுதுவதற்கு பயன்படுத்தப்படும் கை இடது கையாக அமைந்து காணப்படும். உலகளாவிய ரீதியில் நோக்கும்போது மொத்த சனத்தொகையில் 7 – 10 வீதத்தினரே இடது கை பழக்கமுள்ளவர்கள் என கணிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.

எனவே, ஒப்பீட்டு ரீதியாக இந்த இடதுகை பழக்கமுடையவர்கள் சிறுபான்மையாளராக இருப்பதனால் சமூகத்தில் பல்வேறு பட்ட அவஸ்தைகளை எதிர் நோக்க வேண்டி ஏற்படுகின்றது. எந்த ஒரு பொருளும் வலதுகை பழக்கம் உடையவர்களுக்கு மட்டுமே தயாராகிறது,  இடது கை பழக்கம் உள்ளவர்களை மனதில் வைத்துத் தயாரிக்கப்படுவதில்லை.

இந்த அடிப்படையில் இடது கை பழக்கம் உடையவர்கள் உபயோகிக்க கஷ்டப்படும் சில பொருட்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். கத்தரிகோல்,  ஹாக்கி மட்டை,  கிடார், மண்டபங்களில்  இருக்கையுடன் அமர்ந்து இணைக்கப்பட்டு இருக்கும் மேசை,  இது இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு என்று கிடைப்பது அரிது. உணவு மேசையில் ஏற்கனவே பரிமாறப்பட்டு இருக்கும் உணவு வலது கை பழக்கம் உள்ளவர்களுக்காகவே இருக்கும். நவீன காலத்தில் கணனி கூட வலக்கை பாவனைக்கேற்ற முறையிலேயே அதன் மவுஸ் பிரயோகத்திற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதைக் காண்கின்றோம். இது மாத்திரமன்றி கதவுகளைத் திறக்கும்போது,  குழாய்த் தண்ணீர் திறக்கும்போது வலக்கை பாவனைக்கேற்ற முறையிலேயே அவை செய்யப்பட்டுள்ளன. இவை மட்டுமன்றி பொதுவாக நாம் பயன்படுத்தும் அநேக பொருட்களில் இதனை நாம் காண்கின்றோம்.

இது கைப் பழக்கம் பிறப்பிலே சில மனிதர்களுக்கு ஏற்படுகின்றது. நமது மூளை மூளையம், மூளி சிறுமூளை மற்றும் நீள்வளைய மையவிழையம் என மூன்று பகுதிகளை கொண்டுள்ளது. இதில் மூளையம் (பெருமூளை) இரண்டு அரைக்கோள வடிவில் உள்ளது. இடதுபக்க அரைக்கோளம் உடலின் வலதுப்பக்க உறுப்புகளையும்,  வலதுப்பக்க அரைக்கோளம் உடலின் இடப்பக்க உறுப்புகளையும் இயக்குகின்றன. இதில் பெரும்பாலானோருக்கு இடப்பக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வலப்பக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால் ஒரு சிலருக்கு வலப்பக்க அரைக்கோளம் மேலோங்கி செயல்படுவதால் இடது கை பழக்கம் ஏற்படுகிறது.

 இடக்கைப் பழக்கமுள்ள குழந்தைகளை சில பெற்றோர்கள் குழந்தைப் பருவத்திலேயே வலக்கைக்கு மாற்றுவதற்கான பிரயத்தனங்களை மேற்கொள்வர். தற்போது கிராமிய மட்டங்களில் இடக்கைப் பழக்கமென்பது ஒரு வெறுக்கத்தக்க பழக்கமாக காணப்படுகின்றது. இந்தப் பழக்கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும்,  பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல்.

ஆனால்,  நவீன கால விஞ்ஞான விளக்கங்களின்படி இடக்கைப் பழக்கமுள்ளோர் விவேகத்திறன் கூடியவர்கள் என்று கூறப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள ஒபாமா இடது கை பழக்கம் உள்ளவர். இடது கையால் கையெழுத்திட்டே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இவர் தவிர அமெரிக்க ஜனாதிபதியாகப்  பதவி வகித்த ஜோர்ஜ் புஷ் (சீனியர்),  பில் கிளிண்டன், ஜெரால்ட் ஃபோர்ட்,  ஜேம்ஸ் கார்ஃபில்ட்,  தொமஸ் ஜெபர்சன்,  ரொனால்ட் ரீகன்,  ஹாரி ட்ரூமேன் ஆகியோரும்,  அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருந்த நெல்சன் ராக்ஃபெல்லர் , ஹென்றி வாலேஸ் ஆகியோரும் இடது கைப்பழக்கம் உடையவர்கள்தான். இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி,  நெப்போலியன் போனாபர்ட்,  அவரது மனைவி ஜோசப்பின்,  ஜூலியஸ் சீசர்,  மாவீரன் அலெக்ஸாண்டர்,  தத்துவமேதை அரிஸ்டாட்டில்,  பிரிட்டன் பிரதமராக இருந்த வின்சென்ட் சர்ச்சில்,  சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த  பேடன்பாவெல் ,  கியூபா அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோ,  விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டீன்,  ஃபோர்டு கார் தயாரிப்பு ஆலையைத் தோற்றுவித்த ஹென்றி ஃபோர்டு,  இங்கிலாந்து மன்னர்களாக இருந்த 3-வது,  8-வது எட்வர்ட்,  2-வது,  4-வது,  6-வது ஜார்ஜ் ஆகியோர் உள்பட வரலாறு படைத்த பலர் இடது கைப்பழக்கம் உடையவர்களே.

இவ்வாறு பல பிரபல்யங்களைக் குறிக்கலாம். பொதுவாக சாதாரண ஒரு மனிதனின் பழக்கவழக்கத்திற்கும்,  குணாதிசயங்களுக்கும் இந்த கைப்பழக்கங்கள் வெகுவாக பாதிப்பை செலுத்துவதில்லை. எவ்வாறாயினும் அண்மைக்கால கட்டங்களில் வலது கை பழக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டுவரும் பொருட்களை இடக்கைப் பழக்கமுள்ளோருக்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கப்பட்டு வருவதையும் நாம் அவதானிக்க முடியும்.

இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் பற்றி அண்மையில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு  நடத்தப்பட்டது. இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர் ஸ்டான்லி கோரன்,  இடது கைப் பழக்கம் உள்ள நூற்றுக் கணக்கானவர்களைச் சந்தித்தும்  இடது கைப் பழக்கம் கொண்ட இறந்தவர்கள் பற்றியும் ஆராய்ந்தும் தமது முடிவில்   இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு சில குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்தார். இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் வலதுகைப் பழக்கம் கொண்ட வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து வாழும்போது மிகவும் சிரமப்படுகிறார்களாம். தவிர,  வலது கைப் பழக்கம் கொண்டவர்களை விட இவர்களுக்கு சராசரியாக 9 வருடம் ஆயுள் குறைவாக இருப்பதாகவும் முடிவு வெளியிட்டார்.

இதற்கு முக்கியக்காரணம் இவர்கள் அதிக அளவில் விபத்துக்களில் சிக்கிக் கொள்வதுதான். ஏனெனில் உலகம் முழுவதும் வலதுகை பழக்கம் கொண்டவர்களுக்காகவே இயந்திரங்கள், தொழில் உபகரணங்கள்,  வாகனங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதால் அதை இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் கையாளும்போது அவர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

சிலர் விதி விலக்காக இரண்டு கைகளாலும் சமனாக வேலை செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவர்களும் உளர்.  கலப்பு கை பழக்கம் (Mixed Handedness) அல்லது கலப்பு ஆதிக்கம் (Cross-Dominance)என்பது சில வேலைகளுக்கு ஒரு கையையும் பிற வேலைகளுக்கு மறு கையையும் மாறி மாறி பயன்படுத்தும் ஒரு வகையான தசை இயக்க வெளிப்பாடு ஆகும். எடுத்துக்காட்டுக்கு,  கலப்புக் கை பழக்கம் உடையோர் வலது கையில் எழுதினாலும் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு இடது கையைப் பயன்படுத்த இயலும். இது போல வெவ்வேறு செயல்களுக்கு வெவ்வேறு கைகளை பயன்படுத்துவர். இரு கை பழக்கம் (Ambidexterity) என்பது இந்த கலப்பு ஆதிக்கத்தின் ஒரு வகையாகும். இரு கை பழக்கமுடையோர் தனது இரு கைகளையும் சரி சமமாகப் பயன்படுத்துவர். எனினும் கலப்பு கை பழக்கம் உடையோர் குறிப்பிட்ட செயல்களுக்கு ஒரு கை பழக்கமுடையவராக இருப்பர். எனவே பிறர் அவரை குறிப்பிட்டு நோக்காதிருந்தால் அவரது பெரும்பான்மையான கை பழக்கத்தை கொண்டு இடது கை பழக்கமுடையவராகவோ வலது கை பழக்கமுடையவராகவோ தவறாக கண்டு கொள்வர்.

இந்த கலப்பு ஆதிக்கம் கண்,  காது,  கால்கள் போன்ற இட-வல வேறுபாடுகள் உடைய அனைத்து உடற்பாகங்களுக்கும் பொருந்தும். எனினும் இந்த கலப்பு ஆதிக்கம் குறி பார்க்கும் செயல்களில் சில நேரங்களில் தடுமாற்றத்தை ஏற்படுத்தலாம்

இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் வலது கைப் பழக்கம் உள்ளவர்களை விட விரைவாக சிந்திக்கிறார்கள் என்பது அவுஸ்திரேலிய விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவாகும். இடது கைப்பழக்கம் உள்ளவர்களால் மூளையின் இரண்டு பாகங்களையும் பயன்படுத்த முடிவதாகவும்,  விரைவாக தகவல்களை மூளைக்கு அனுப்பிப் பெற முடிவதாகவும் அவர்களுடைய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள்,  மூளையின் இரண்டு பாகத்துக்கும் தகவல்களை விரைவில் பரிமாறிக்கொள்ள இடது கைப் பழக்கம் உடையவர்களால் முடிகிறது என்றும் அதனால் நுட்பமான பணிகளையும்,  விளையாட்டு போன்ற துறைகளையும் அவர்களால் ஆக்கிரமிக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர். பார்வைக்குத் தேர்வு வைக்கும் பல விஷயங்களில் இடது கைப்பழக்கம் உடையவர்கள் மிகவும் சாமர்த்தியசாலிகளாய் இருப்பதாகவும் இவர்கள் ஆராய்ச்சியில் கூறியிருக்கிறார்கள்.

தனித்துவமான போக்கினைக் கொண்ட இடக்கைப் பழக்கமுள்ளோரின் செயற்பாடுகளை கௌரவிக்கவும் மானசீகமான தாக்கங்கள் ஏற்படாமல் காப்பதற்கும் இத்தினம் விசேடமாக அனுஸ்டிக்கப்படுகின்றது. குறிப்பாக இவர்கள் மத்தியில் போட்டி நிகழ்ச்சிகளை நடாத்துவதும்,  கருத்தரங்குகள்,  கூட்டங்கள் நடாத்துவது என்பன இத்தினத்தில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகின்றன. இத்தினத்தை அனுஸ்டிப்பதில் ஊடகங்களும் வெகுவாக அனுசரணைகளை வழங்கி வருவதை அவதானிக்க முடிகின்றது.

ஆங் சாங் சுயியை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு ஐ. நா., ஐரோப்பிய யூனியன் கடும் அழுத்தம்

miyanmar_s.pngமியன்மார் ஜனநாயகக் கட்சியின் தலைவி ஆங் சாங்சுயி மீதான நீதிமன்றத் தீர்ப்பை அநீதியானதெனக் குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவரை உடனடியாக எவ் வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யுமாறு கோரியுள்ளார்.

மியன்மார் இராணுவ அரசு தொடர்ந்தும் ஜனநாயக விரோதச் செயல்களை முன்னெடுப்பதை ஐ. நா. செயலாளர் பான் கீ மூன் கண்டித்துள்ளதுடன் ஐரோப்பியன் யூனியன் மியன்மார் மீது அவசரத் தடைகளைக் கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.

மியன்மார் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆங்சாங்சுயி (64) மேலும் 18 மாதங்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட வேண்டுமென நேற்று முன் தினம் மியன்மார் நீதி மன்றம் உத்தரவிட்டது.

தடுப்புக் காவலில் இருந்த வேளை தனது வீட்டுக்குள் அமெரிக்கர் ஒருவரை வைத்திருந்ததாகக் கூறியே இந்தப் புதிய தீர்ப்பை மியன்மார் நீதிமன்றம் வெளியிட்டது. சுமார் இருபது வருட அரசியல் வாழ்க்கையில் 14 வருடங்களை ஆங் சாங் சுயி சிறையிலும், வீட்டுக் காவலிலும் கடத்தி வருகின்றார்.

மியன்மாரில் 2010 ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஆங் சாங்சுயியை போட்டியிடாமல் தடுக்கும் நோக்குடனே மியன்மார் இராணுவ அரசு இத் தீர்ப்பை வெளியிட்டுள்ளதாக உலக நாடுகள் விமர்சித்துள்ளன.  மியன்மார் மீதான கண்டனங்கள் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா இது குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளது.

ஏழு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்கரையும் விடுதலை செய்யும்படி பராக் ஒபாமா கோரிக்கை விடுத்துள்ளார்.  மியன்மார் இராணுவ அரசின் மிலேச்சத்தனமான இந்நடவடிக்கைகளைக் கண்டித்து உலகத் தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். நேற்று முன்தினம் இத் தீர்ப்பு வெளியானதையடுத்து ஐ. நா. செயலாளர் பான் கீ மூன் மியன்மார் அதிகாரிகளுடன் அவசரமாகத் தொடர்பு கொண்டு நீதி மன்றத் தீர்ப்பை நிராகரித்தார்.

பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் இத் தீர்ப்பைக் கேள்வியுற்றதும் தான் திடீரெனக் கோபமடைந்ததாகக் கூறினார்.  இவ்வாறான நிலைமையில் மியன்மார் மீது புதிய தடைகள், அழுத்தங்களைக் கொண்டு வர ஐ. நா., ஐரோப்பிய யூனியன் என்பன ஆலோசித்து வருகின்றன.  சீனா இவ்விடயத்தில் மியன்மாரின் பக்கம் சாய்ந்துள்ளமை அதன் நடவடிக்கைகளிலிருந்து தெரிய வருகிறது.

இலங்கையுடனான 20க்கு 20 போட்டியில் பாகிஸ்தான் 52 ஓட்டங்களால் வெற்றி

afridi.jpgபாகிஸ் தானுடனான முதல் 20க்கு 20 போட்டியில் 52 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது இலங்கை அணி. இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் 20க்கு 20 போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் இரவுப் போட்டியாக நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றியிட்டிய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணிக்கு சஹிட் அப்ரிடி தலைமை தாங்கினார் அவர் தலைமை தாங்கிய முதல் 20க்கு 20 போட்டியில் 37 பந்துகளை எதிர்கொண்டு 50 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இதேவேளை இம்ரான் 28 பந்துகளை எதிர் கொண்டு 40 ஓட்டங்களையும் பெற்றார். இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய உமர் அக்மல் 20 பந்துகளை எதிர் கொண்டு 30 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணியின் பந்து வீச்சைப் பொறுத்தவரையில் துஷாரா 2 விக்கெட்டையும், குல சேகர, மெத்திவ், மலிங்க தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பாகிஸ்தான் அணி 6.1 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி 100 ஓட்டங்களை 12.1 பந்துகளில் பெற்றது. இதேவேளை 4வது விக்கெட் இணைப்பாட்டமாக 50 ஓட்டங்கள் பெறப்பட்டது. அப்போது அப்ரிடி 21 ஓட்டங்களையும், உமல் அக்மல் 28 ஓட்டங்களையும் உதிரியாக ஒரு ஓட்டமும் பெறப்பட்டிருந்தது.பாகிஸ்தான் அணி 150 ஓட்டங்களை 17.5 பந்து களில் பெற்றது. 20 ஓவர் முடிவில் 172 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்தது.

173 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனப் பதிலெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக அணித் தலைவர் சங்கக்கார 38 ஓட்டங்களையும் ஜயசூரிய 23 ஓட்டங்களையும் பெற்றனர். எனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர்.

பந்து வீச்சில் நவிட் 3 விக்கெட்டையும் அஜ்மல் 3 விக்கெட்டையும் அப்ரிடி, ஆமிர், அன்ஜும் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதேவேளை பாகிஸ்தான் அணி நாங்கள் தான் 20க்கு 20 உலக சம்பியன் என்பதை மிண்டும் நிரூபித்துவிட்டது மட்டுமல்லாமல் இப்போட்டியில் வெற்றியீட்டி கிண்ணத்தைக் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக அப்ரிடி தெரிவானார்.

இங்கிலாந்து மக்கள் உலக மகா சோம்பேறிகள்

சமீபத்திய சர்வே ஒன்று உலக மகா சோம்பேறிகள் பட்டத்தை இங்கிலாந்து மக்களுக்கு வழங்கியுள்ளது. இங்கிலாந்து மக்கள் சுமார் 2 ஆயிரம் பேரிடம் லேசி லீக் டேபிள் என்ற நலநிதி அமைப்பு சர்வே ஒன்றை நடத்தியது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அதன் முடிவு இங்கிலாந்து மக்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அது இங்கிலாந்து மக்கள் உலக சோம்பேறிகள் என தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து மக்களில் 6ல் ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் இல்லாத சூழ்நிலையில் எழுந்து சென்று டிவியை மாற்றமாட்டார்கள். சோம்பேறித்தனம் காரணமாக அதே சேனலை பார்த்து கொண்டிருப்பார்கள், 59 சதவீதம் பேர் முதல் மாடிக்கு கூட லிப்டில் தான் செல்வார்கள் என தெரிவித்துள்ளது. அவர்களில் 75 சதவீதம் பேர் தாங்கள் ஜிம் பக்கம் போனதே கிடையாது என கூறியுள்ளனர். சிலர் சோம்பேறித்தனத்தால் சில சமயம் செக்சுக்கு கூட நோ சொல்லிவிடுவதாக தெரிவித்துள்ளனர். அலுவலகத்தில் வேளை கொஞ்சம் அதிகம் இருந்தால் இளசுகள் கூட மன்மத கலையை மறந்துவிடுகிறார்களாம்.

மேலும், 64 சதவீதம் பேர் குழந்தைகளுடன் விளையாடுவதற்கு சோம்பேறித்தனமாக தடையாக இருப்பதை ஒப்பு கொண்டுள்ளனர். இது குறித்து நப்பீல்டு ஹெல்த் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் சாரா டவுன்சி கூறுகையில், ரெடிமேட் உணவு, ரிமோட் கண்ட்ரோல், இன்டர்நெட் ஷாப்பிங் ஆகியவை மக்களை சோம்பேறிகள் ஆக்கிவிட்டது. இங்கிலாந்து மக்களை இந்த மோசமான சோம்பேறித்தனத்தில் இருந்து காப்பாற்ற வேண்டியது அவசியம் என்றார்.

சோம்பேறித்தனம் காரணமாக அதிகம் குண்டாகி வரும் இங்கிலாந்து மக்களில் 9 ஆயிரம் பேர் ஆண்டுதோறும் தங்களது வாழ்நாளை விரைவிலே இழந்துவிடுகின்றனர். 58 சதவீதம் பேருக்கு சக்கரை நோயும், 21 சதவீதம் பேருக்கு இதய கோளாறும் ஏற்படும் வாய்ப்பு வெகுவாக அதிகரித்துள்ளது. மேலும், மக்களின் வாழ்நாள் 9 ஆண்டுகள் குறைந்துவிடும் என கூறப்படுகிறது.

இங்கிலாந்து மக்கள் தொகையில் 2050ம் ஆண்டு வாக்கில் பெரியவர்களில் 10ல் 9 பங்கினரும், குழந்தைகளி்ல் 3ல் 2 பங்கினரும் அதிகம் குண்டாக இருப்பார்கள என கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து இங்கிலாந்து அரசு அடுத்த மூன்று ஆண்டுகளில் உடல் பருமன் தொடர்பான பிரச்சனைகளுக்காக மட்டும் ரூ. 600 கோடி செலவழிக்கும் என கூறப்படுகிறது.

ஆங் சான் சூசீக்கு மேலும் 18 மாதம் வீட்டுக் காவல் தண்டனை!

miyanmar_s.pngபர்மாவில் ஜனநாயக ஆதரவு இயக்கத் தலைவி ஆங் சான் சூசீ நாட்டின் பாதுகாப்பு சட்டங்களை மீறினார் என்று தீர்பளித்துள்ள ரங்கூன் நீதிமன்றம் அவருக்கும் மேலும் 18 மாத வீட்டுக்காவல் தண்டனையை விதித்துள்ளது.

இந்தத் தீர்ப்பின் விளைவாக அடுத்த வருடம் நடக்கவிருக்கும் பலகட்சித் தேர்தலில் அவர் கலந்து கொள்ள முடியாமல் இருக்கும். ஏரிக்கரையிலுள்ள அவரது இல்லத்துக்கு அழைப்பு இல்லாமல்,  கடந்த மே மாதத்தில் நீந்திக் கடந்து வந்த அமெரிக்கர் ஒருவரை, தங்க அனுமதித்த்து மூலம் சூசீ வீட்டுக் காவல் விதிமுறைகளை மீறியிருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றம் விதித்த மூன்றாண்டு கால கடுங்காவல் சிறை தண்டனையை, இராணுவ ஆட்சியாளர்கள் பாதியாக குறைத்ததோடு அந்த தண்டனையை வீட்டிலேயே கழிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்கள் கடந்த 20 வருட காலத்தில் 14 ஆண்டுகளாக ஆங் சான் சூசீ வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஆசியாவில் ஐம்பது மில்லியன் பெண்களுக்கு எய்ட்ஸ் தொற்றும் அபாயம்

ஆசிய கண்டத்து நாடுகளில், கணவன்மார் அல்லது காதலர்கள் பாதுகாப்பற்ற பாலியல் நடத்தையில் ஈடுபடுவதால் ஐம்பது மில்லியன் ஆசியப் பெண்களுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றும் பேரபாயம் இருப்பதாக எய்ட்ஸ் பரவல் பற்றிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
இந்தோனீசிய நாட்டின் பாலி நகரில் நடந்த எச் ஐ வி- எய்ட்ஸ் மாநாட்டில் சமர்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின்படி ஆசிய கண்டத்து நாடுகளில்,  எச் ஐ வி கிருமிகளினால் பீடிக்கப்பட்ட 17 லட்சம் பெண்களில் 90 சதவீதமானவர்கள் அந்த நோயை தமது நீண்ட கால துணைவர்களிடமிருந்து தான் பெற்றார்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பெண்களின் பலவீனத்துக்கு காரணமான சமுதாய நடத்தை, கொள்கை ஆகியன மாற வேண்டும் என்று ஐ நா மன்றத்தின் பெண்கள் எய்ட்ஸ் பிரிவின் பிராந்திய இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரச்சினை பற்றி இனிமேலும் அலட்சியம் காட்ட முடியாது என்றும் ஐ நா வின் எய்ட்ஸ் திட்ட அதிகாரி டாக்டர் பிரசாத் ராவ் கருத்து வெளியிட்டுள்ளார்.

நானே வெளிவிவகார அமைச்சர் கிளின்டன் அல்ல; ஹிலாரி சீற்றம்

hillary-clinton.jpgஆபிரிக்கா வுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அவரது கணவரும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியுமான பில் கிளின்டன் தொடர்பான கேள்வியொன்றுக்கு கோபமாகப் பதிலளித்துள்ளார். கொங்கோ தலைநகர் கின்ஷாசாவில் பொதுவான கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்டிருந்த ஹிலாரியிடம் பல்கலைக்கழக மாணவரொருவர் கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட பல பில்லியன் டொலர்கள் மதிப்பு வாய்ந்த வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் கிளின்டன் என்ன கருதுகிறார் எனக் கேள்வியெழுப்பினார். இக் கேள்வியை எதிர்பார்க்காத ஹிலாரி அந்த மாணவனை நோக்கி;

எனது கணவர் என்ன நினைக்கிறார் என்பதை நான் உமக்குக் கூற வேண்டுமென விரும்புகிறீர். நான் தான் வெளிவிவகார அமைச்சரே தவிர கிளின்டன் அல்ல எனக் கடும் கோபமாகப் பதிலளித்துள்ளார்.

இந்தப் பதிலால் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் சில நிமிட நேர அமைதி நிலவியது. தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஹிலாரி நீங்கள் எனது கருத்தைக் கேட்டால் அதனை நான் கூறுவேன். எனது கணவரின் தூதுவராக நான் செயற்படப் போவதில்லையெனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பிய ஹிலாரி வேறு விவகாரங்களை நோக்கிப் பேச்சைத் திசை திருப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னர் இக் கேள்வியை எழுப்பிய மாணவன் ஹிலாரியை அணுகித் தனது கேள்வி தவறாக மொழிமாற்றம் செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் சீனாவின் உடன்படிக்கை குறித்து ஜனாதிபதி பராக் ஒபாமா என்ன நினைக்கிறார் என்பதற்குப் பதிலாக கிளின்டன் என்ன நினைக்கிறார் எனத் தவறாகக் கேட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பில் கவலையடைய வேண்டாமென அம் மாணவனிடம் ஹிலாரி கூறியதாக அவரது நெருங்கிய உதவியாளர் தெரிவித்துள்ளார்.

2001 இல் பதவி விலகியதைத் தொடர்ந்து சர்வதேச மனிதாபிமான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் கிளின்டன் கடந்த வாரம் வடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு அமெரிக்க ஊடகவியலாளர்களின் விடுதலை தொடர்பான விவகாரத்திலும் முக்கிய பங்காற்றியிருந்தாரென்பதும் குறிப்பிடத்தக்கது

சர்வதேச இளைஞர் தினம் International Youth Day (IYD) – புன்னியாமீன்

youth.pngஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரப் பிரகாரம் சர்வதேச இளைஞர் தினம் International Youth Day (IYD) ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி கொண்டாப்படுகின்றது. இளைஞர்கள் ஒரு நாட்டின் நிர்ணய சந்ததிகள். இளைஞர்களை ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தலாம். அதேநேரம், அழிவுபூர்வமாகவும் பயன்படுத்தலாம். பொதுவாக ஒரு நாட்டின் சொத்துக்களாகக் கருதப்படும் இளைஞர்களை நெறிப்படுத்தி அவர்களை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி சௌபாக்கியமான எதிர்காலமொன்றுக்கு வழிகாட்டுவதும் அவர்களது உணர்வுகளை சிறந்த முறையில் நெறிப்படுத்துவதும், நம்பிக்கை உணர்வினையும், வெற்றி மனப்பாங்கினையும் ஏற்படுத்துவதுடன், இளைஞர்களின் செயற்பாடுகளை கௌரவித்து மதிப்பளிப்பதும் இத்தினத்தின் முக்கிய நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது.

1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை லிஸ்பன் நகரில் நடைபெற்ற உலக நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் குழு சர்வதேச ரீதியில் இளைஞர்களின் பிரச்சினைகளையும், இளைஞர்களின் செயல்பாடுகளையும் கவனத்திற் கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கான சர்வதேச தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என சிபாரிசு செய்தது. இதன்படி 1999 டிசம்பர் 17ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 54/120/ ( resolution 54/120) இலக்க பிரேரனைப்படி சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12ம் திகதி கொண்டாடப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய 2000ஆம் ஆண்டு முதல் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

உலக இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பிரதானமாக கவனத்தில் ஈர்க்கும் முகமாக உலகளாவிய ரீதியில் அரசுகள், அரச நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் செயல்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறாக ஆகஸ்ட் 12ஆம் திகதி சர்வதேச ரீதியில் இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டாலும்கூட, சர்வதேச தினம் என்பதை விட ஒவ்வொரு நாடுகளும் தேசிய ரீதியில் இத்தினத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவதை அவதானிக்கலாம். உதாரணமாக இந்தியாவில் விவேகானந்த அடிகளாரின் பிறந்த தினத்தை மையமாகக் கொண்டு 1985ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜனவரி 12ம் திகதி தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்படுகின்றது. எவ்வாறாயினும் சர்வதேச ரீதியிலும் சரி, தேசிய ரீதியிலும் சரி, பிரதேச ரீதியிலும் சரி  இவ்வாறு கொண்டாடப்படும் விழாக்கள் ஒரே அடிப்படையினைக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.

நமது வாழ்க்கையை உடலியல் அடிப்படையில் குழந்தைப் பருவம், இளமை, முதுமை என மூன்று பிரதானப் பிரிவுகளாக வகுக்கலாம். குழந்தைப் பருவத்தில் உடலாலும் மனதாலும் நமது தேவைகளை நிறைவு செய்ய மற்றவர்களைச் சார்ந்துள்ளோம். இந்தப் பருவம் ஒவ்வொருவரின் எதிர்கால வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. நல்ல பழக்கங்கள், துணிச்சல் தன்னம்பிக்கை ஆகியன ஆழ்மனதுக்குள் செலுத்தப்பட வேண்டிய பருவம். சொந்த அனுபவங்கள் இல்லாத பருவம். பாகுபாடு காணத் தெரியாத உழைக்க முடியாத பருவம்.

விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்டமாகும். இப் பருவத்துக்கான வயதெல்லை எல்லாப் பண்பாடுகளிலும் ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை. பல காலமாகவே பருவமடைதல் என்பது விடலைப் பருவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுவந்துள்ளது. அண்மைக் காலங்களில் பருவமடைதல் காலம் விடலைப் பருவத்துக்கு முன்னதாகவே தொடங்கி விடலைப் பருவத்துக்கு அப்பாலும் போவதைக் காணக்கூடியதாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் விடலைப் பருவத்தை 10 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட காலம் என வரையறை செய்துள்ளது.

விடலைப் பருவத்துக்கு பின்னர் வரும் பருவம் இளமை ஆகும். பொதுவாக 18 – 24 அல்லது 29 வயதுவரை இளமைப் பருவம் எனப்படுகிறது. இவர்களை இளையோர் அல்லது வாலிபர் என்பர். பிற பருவத்தினருடன் ஒப்பிடுகையில் இளயோரிடம் குறிப்பிடத்தக்க சில பண்பியல்புகள் உண்டு. இளைய பருவம் மாற்றத்தை இலகுவில் ஏற்று தன்னை மாற்றியமைத்துக்கொள்ள கூடியது, துணிவுமிக்கது, செயற்பாட்டை முதன்மைப்படுத்துவது. இப்பருவத்தில் பாலியல் கவர்ச்சியும் ஈடுபாடும் அதிகம் இருக்கும். இளையோரை பெரும் சதவீதமாக கொண்ட ஒரு சமூகம் வன்முறைப் போக்கு எடுப்பதற்கு கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு என்றும் கூறப்படுகின்றது. அனேக நாடுகளில் இளையோரே அதிகம் வேலையற்றோராக இருக்கின்றார்கள்.

முதுமை என்பதை 60க்கு மேல் எனக் கூறுவதே பொருத்தமாய் இருக்கும். பெரும்பாலும் 60 வருடம் என்பது பணி நிறைவுக்கான வயது. அதன்பின் ஓய்வு என்பது நடைமுறையிலுள்ள அரசு விதி, முதுமையில் பணிபுரிவதில் சக்தியின்மை இருந்தாலும் வாழ்க்கை அனுபவத்தால் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் வாய்ப்பு உண்டு.

சுவாமி விவேகானந்தர், “இளைஞர்கள் 100 பேரை என்னிடம் கொடுங்கள்; இந்திய நாட்டையே நல்ல நாடாக மாற்றிக் காட்டுகிறேன்” என்று கூறியது இளைஞர் தம் சிறப்பு. உத்வேகம், அர்ப்பணிப்பு, நாட்டுப்பற்று மிக்க இளைஞர்களை வழிநடத்திச் செல்லக் கூடிய இளமை, துடிப்பு, சுயநலமில்லாது பாடுபடும் அர்ப்பணிப்பு, ஞானம் மிகுந்த விவேகானந்தரைப் போல் ஒரு வழிகாட்டியைக் கண்டுகொள்வதுதான் இன்றையச் சூழலின் தேவையாகிறது.

இன்று உலகின் எல்லா நாடுகளிலும் இளைஞர்கள் தம் திறமையை வெளிப்படுத்தி அந்த நாடுகளின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக உள்ளனர். கடும் குளிர், மிகுந்த வெப்பம் என எந்தவிதமான நிலையிலும் பணிபுரியும் தகுதியுள்ளவர்கள். உடல் ஆற்றலுடன் அறிவாற்றலில் சிறந்து விளங்குபவர்கள் நம் நாட்டு இளைஞர்கள். உலகின் பல முன்னோடி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளைத் தம் தகுதியால் அலங்கரித்து வருபவர்கள். பணிபுரிய சுய கௌரவம் பார்க்காமல் குடும்பப் பொறுப்புடன் செயல்படும் இளைஞர் பட்டாளம் நம்மிடையே உள்ளது. சிக்கலான கல்வி கற்பதிலே முன்னணியில் நிற்பவர்கள் நம் இளைஞர்கள். தமக்கென தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, அதில் திறமையுடனும், துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் பயணிப்பவர்கள்தான் நம் இளைஞர்கள்.

இவ்விடத்தில் சோக்ரடீஸின் வரலாற்றுடன் இணைந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. ஓர் இளைஞன் சோக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான். அதற்கு சோக்ரடீஸ்  மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். சோக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார். கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார். அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார். சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான். சோக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்?” என்று கேட்டார். அந்த இளைஞன் “காற்று” என்று பதிலளித்தான். சோக்ரடீஸ்,  “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்” என்று சொன்னார். இதைத் தவிர வேறு எந்த இரகசியமும் இல்லை. இந்த உதாரணம் இளைஞர்களின் உணர்வுக்களிக்கப்படும் முக்கியத்துவத்தை படிப்பினையுடன் கூடி எடுத்துக் காட்டுகின்றது. ஒவ்வொரு இளைஞனும் தன்னம்பிக்கையுடன் தனது பணியினை முன்னெடுக்கக் கடமைப்பட்டுள்ளான்.

இன்றைய இளைஞர்கள் ஒருவரைப் பின்பற்றும்போது முழுக்க முழுக்க அவராகவே மாறிவிடக்கூடாது. மாறாக, நல்ல குணங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை விவேகானந்தர் அழகாகக் கூறுகிறார். ‘ஒரு விதையை நிலத்தில் போடுகிறோம். அதன் வளர்ச்சிக்குத் தேவையான எரு, தண்ணீர் ஆகியவற்றை அளிக்கிறோம். அவ்விதை எருவாகவோ, தண்ணீராகவோ மாறாமல் தன் இயல்பிலேயே எடுத்துக்கொண்டு பிரம்மாண்ட மரமாகிறது’. அது போல, ‘கற்றுக்கொள்ள வேண்டியதை மட்டும் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வழி சொல்கிறார்.‘அளவற்ற தன்னம்பிக்கை உடையவர்களாக இருங்கள். நான் இளமையில் அத்தகைய நம்பிக்கை உடையவனாக இருந்தேன். அதுதான் இப்பெரிய காரியங்களைச் செய்யக்கூடிய சக்தியை எனக்களித்து இருக்கிறது. இளமையும், சக்தியும், நம்பிக்கையும் இருக்கும் காலத்தில்தான் உங்கள் எதிர்கால இலட்சியத்தை நீங்கள் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி தன்னம்பிக்கை ஊட்டுகிறார்.

உங்களின் மீதும் உங்கள் திறமைகளின் மீதும் உங்களுக்கு உள்ள ஆழமான நம்பிக்கைதான் உங்கள் கனவுகளை நிறைவேற்றும். உங்கள் கனவைச் சொல்லும்போது, உங்கள் வார்த்தைகளில் உயிர் துடிப்பு இருக்க வேண்டும். உங்களின் ஆர்வம் கேட்போரைத் தொட வேண்டும். உங்கள் கனவு எதுவாக இருந்தாலும் அதை சாத்தியமில்லாது என்று ஒதுக்க வேண்டாம். “சாத்தியமில்லாதது” என்று எதுவுமேயில்லை.

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது. தன்னம்பிக்கையோடு திட்டமிட்டு, விடாமுயற்சியோடு செயல்வடிவம் கொடுக்க வேண்டும். “Never, neer, neer give up’  என்று வின்ஸ்டன் சர்ச்சில் சொல்வதுண்டு. வீட்டில் சன்னலருகே வைக்கப்பட்டுள்ள செடியானது வெளிச்சம் தேடி வெளியே வளைந்து செல்வதைப் போல, விடா முயற்சியுடையவர்கள் புதிய பாதைகளைத் தேடிக்கொண்டு தொடர்ந்து முன்னேறுவர்.

வெற்றி பெற்றவர்கள் அனைவரும் மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது தாங்கள் மட்டும் விழித்திருந்து உழைத்தவர்களே. சலிப்புக்கு இடங்கொடாமல் கடும் உழைப்பை உணவாக உட்கொண்டவர்கள், “ஒளி படைத்த கண், உறுதிகொண்ட நெஞ்சம், களிபடைத்த மொழி, கடுமை கொண்ட தோள், தெளிவு பெற்றமதி” என்றெல்லாம் முகமன் கூறிய பாரதியின் வார்த்தைகளை இளையபாரதம் மெய்ப்பிக்க வேண்டும். குறுகிய சிந்தனையில் வாழ்வைக் குலைத்துக்கொள்ளாமல் சமுதாய நோக்கில் சிந்தித்து செயல்பட்டால் இளைஞர்களுக்கு வெற்றி நிச்சயம்.

சர்வதேச இளைஞர் தினம் கலைவிழாக்கள், போட்டி நிகழ்ச்சிகள், இளைஞர் பாசறைகள், கலாசார நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களினூடாக முன்னெடுக்கப்படுகின்றன. 2000ஆம் ஆண்டில் முதலாவது சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்பட்ட போது இத்தினத்தை முறைப்படி கடைபிடிப்பதற்கு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

2001ஆம் ஆண்டில் வேலையின்மை, சுகாதாரம் ஆகியவற்றில் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், 2002ஆம் ஆண்டில் நிகழ்க்காலத்திலும், எதிர்காலத்திலும் அபிவிருத்தி செயற்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப்புகள் குறித்தும், 2003ஆம் ஆண்டில் இளைஞர்களுக்கு பண்புமிக்கதும், உற்பத்தித் திறனுடையதுமான தொழில் வாய்ப்புக்களை தேடிக் கொடுப்பது பற்றியும், 2004ஆம் ஆண்டில் சமூக அபிவிருத்தியில் இளைஞர்களின் பங்கு பற்றியும், 2005ஆம் ஆண்டில் இளைஞர்களின் பணிகள் பற்றியும், 2006ஆம் ஆண்டில் வறுமை ஒழிப்பில் இளைஞர்களின் பங்கு பற்றியும், 2007ஆம் ஆண்டில் அபிவிருத்திப் பணிகளில் இளைஞர்களின் கடப்பாடு பற்றியும், 2008ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம், நேரமுகாமைத்துவம் ஆகியவற்றில் இளைஞர்களின் பங்களிப்பு பற்றியும், 2009ஆம் ஆண்டில் அபிவிருத்தி, உற்பத்தி செயற்பாடுகளில் இளைஞர்களின் சவால்களும், எதிர்காலம் பற்றியும் கருப்பொருளாகக் கொள்ளப்பட்டன. குறிப்பாக சூழல், சமூகம், பொருளாதாரம் ஆகிய செயற்பாடுகளில் இளைஞர்களின் மனோநிலை விருத்தியை வளர்ப்பது குறித்தும், இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வது குறித்தும் இத்தினத்தில் விசேடமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்றன.

இளைஞர் தினத்தின் தொணிபொருள்களை பின்வருமாறு ஒரு பார்வையில் நோக்கலாம்.

2009 – SUSTAINABILITY: OUR CHALLENGE. OUR FUTURE.
2008 – Youth and Climate Change: Time for Action
2007 – Be seen, Be heard: Youth participation for development
2006 – Tackling Poverty Together
2005 – WPAY+10: Making Commitments Matter
2004 – Youth in an Intergenerational Society
2003 – Finding decent and productive work for young people everywhere
2002 – Now and for the Future: Youth Action for Sustainable Development
2001 – Addressing Health and Unemployment

இலங்கை பாகிஸ்தான் இருபது 20 போட்டி இன்று

0308mahela.jpgஇலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபது 20 சர்வதேச போட்டி ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.  இதில் பாகிஸ்தான் அணிக்கு அதிரடி ஆட்டக்காரர் ஷஹீட் அப்ரிடி தலைவராக செயல்படவுள்ளார்.

அத்துடன் அண்மையில் நடந்த இருபது20 உலகக் கிண்ணத்தில் சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணி, கடைசியக நடந்த இலங்கையுடனான ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளிலும் இலகு வெற்றியீட்டியது. எனவே, இன்றைய தினம் பாகிஸ்தான் அணி இலங்கைக்கு கடும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறத்தில் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த பழியை தீர்ப்பதற்கு இன்று முயற்சிக்கும்.  நடந்து முடிந்த பாகிஸ்தானுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை கைப்பற்றிய இலங்கை அணி இருபது20 போட்டியையும் இலகுவில் விட்டுக்கொடுக்காது என்பது நிச்சயம்.

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இதுவரை 5 இருபது 20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் இலங்கை 2 போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளன.

சனத் ஜயசூரியவுடன் ஆரம்ப துடுப்பட்ட வீரராக மஹேல உடவத்த களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரே இருபது20 போட்டியாக நடைபெறும் ஆட்டம் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.